செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

தமிழக அரசின் நடவடிக்கைக்கு பி.சம்பத் வரவேற்பு

கோவையில் தீண்டாமைச்சுவரை அகற்ற தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் வரவேற்று அறிக்கை விடுத்தார்.

அந்த அறிக்கை வருமாறு:

கோவையில் கட்டப்பட்டிருந்த தீண்டாமைச்சுவர் தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, கோவை மாநகராட்சி ஆணையரிடமும் ஜனவரி 29 அன்று மகஜர் அளித்தனர். இதனைத்தொடர்ந்து அரசு நிர்வாகம் தந்தை பெரியார் நகரில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச்சுவரை அப்புறப்படுத்தியுள்ளது. சாலையின் முழுமையான பயன்பாட்டிற்காக, நடுவே உள்ள விநாயகர் கோயிலை வேறு இடத்திற்கு மாற்றுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மாற்று இடம் தருவதற்கான ஏற்பாடும் நடந்து வருகிறது.

தமிழ்நாடு அரசு கோவை, பெரியார் நகர் தீண்டாமைச் சுவரை அகற்ற எடுத்த நடவடிக்கைகளை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு வரவேற்கிறது. இதோடு மாற்று இடத்தில் விநாயகர் கோவில் அமைக்க ஏற்பாடு செய்து அச்சாலையை தலித் மக்கள் சுதந்திரமாகப் பயன்படுத்த நடவடிக்கையை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பிற்கான முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அனைத்துப் பகுதி மக்களையும், ஜனநாயக இயக்கங்களையும் கேட்டுக் கொள்வதோடு தமிழக அரசு அதற்கான முயற்சிகளை முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகிறோம்.

பிள்ளையார் சிலையை வைத்து

இந்து மக்கள் கட்சியினர் அடாவடி
தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்ட போது அங்கு வந்த இந்து மக்கள் கட்சியின் சிவபிரகாசம், இந்து முன்னணியின் ஸ்டோன் சரவணன் உள்ளிட்டோர் தீண்டாமை சுவரின் உட்புற மாட்டு தொழுவத்தில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையை அகற்றக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காவல்துறை அதிகாரிகளுடன் சுவரை இடித்தது தப்பு எப்படி இடிக்கலாம் என வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் இந்து மக்கள் கட்சியின் கொடியினை கொண்டு வந்து தீண்டாமை சுவரோடு இருந்த பிள்ளையார் சிலை இருக்கும் பகுதியில் கட்ட முயன்றனர். அதனை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

அப்போது இந்து மக்கள் கட்சியினர், அருந்ததிய மக்களை தரக்குறைவாக பேசினர். அப்போது இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. காவல்துறையினர் அப்பகு தியில் இருந்து அனைவரையும் செல்லுமாறு விரட்டினர்.

இதனால் சுவர் இடிக்கப்பட்டாலும் நடுவழியை மறைத்து இருக்கும் மாட்டு தொழுவ பிள்ளையார் சிலையால் அருந்த தியர் மக்களுக்கு முழுமையாக வழி பிறக்க வில்லை. அதிகாரிகள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரிடம் பிள்ளையார் சிலைக்கு மாற்று இடம் பார்த்த உடனே இந்த சிலை அகற்றப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

ஆட்சியர் உறுதி
பின்னர் மாலை 3 மணியளவில் தீண்டாமை சுவர் இடிக்கப்பட்ட இடத்தை கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் பு.உமாநாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அருந்ததியர் மக்கள், கடவுளின் பெயரால் மறுபடியும் எங்களுக்கான வழியை மறித்து இருப்பது எப்படி நியாயம்? தாங்கள் சுவரை இடிக்க நடவடிக்கை எடுத்தது போல், முழுமையாக வழி கிடைக்க இந்த மாட்டுத் தொழுவத்தையும் அதன் உள்ளே இருக்கும் பிள்ளையார் சிலையையும் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கூறினார்.