செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

தலித் மக்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி - `அம்மி’ வலியுறுத்தல்

தீண்டாமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம் தேனியில் நடைபெற்றது. அருந்ததியர் மக்கள் முன்னேற்ற இயக்க மாவட்ட அமைப்பாளர் எம்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். இயக்க ஆலோசகர் டி.வி.முருகேசன் முன்னிலை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில நிர்வாகி கே.சாமுவேல்ராஜ் சிறப்புரையாற்றினார்.

விழுதுகள் அமைப்பாளர் எம்.தங்கவேல், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கப் பொறுப்பாளர் சண்முகவேல், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தேனி மாவட்ட அமைப்பாளர் டி.வெங்கடேசன், அம்மி திட்ட இயக்குநர் ராஜரத்தினம், பி.முருகேசன், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் பேசினர். மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் சிறப்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில், அருந்ததியர் மக்கள் முன்னேற்ற இயக்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அருந்ததியர் மீதான எதிர்வழக்குகளை காவல்துறை திரும்பப் பெற வேண்டுமென தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், அருந்ததியர் மக்கள் முன்னேற்ற இயக்கமும் (அம்மி) வலியுறுத்தின.