புதன், 24 மார்ச், 2010

ஆதிதிராவிட மாணவிகளுக்கு விடுதி: ஜி.லதா எம்எல்ஏ கோரிக்கை ஏற்பு

வேலூர் மாநகரத்தில் ஊரிஸ், முத்துரங்கம், டி.கே.எம், ஆக்சீலியம் மற்றும் கல்லூரிகளில் ரெகுலர், மாலை நேர கல்லூரிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பும், பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்பும் படித்து வருகின்றனர்.
இதில் ஆயிரக்கணக்கான ஆதிதிராவிட மாணவர்களுக்கு விடுதி வசதி கிடையாது. இவர்கள் தங்களுக்கு அரசு விடுதி துவங்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இதுபற்றி குடியாத்தம் எம்.எல்.ஏ., ஜி.லதா, சட்டமன்றத்திலும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சரிடமும் கோரிக்கை விடுத்து இருந்தார். இக்கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, வேலூர்  மாநகரில் கல்லூரி மாணவிகளுக்கு விடுதி அமைக்க இடம் தேர்வு செய்தது.
பல இடங்களில் பார்வையிட்டும் இடம் இல்லாததால் வேலூர் முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் இடம் உள்ளது எனவும் தஞ்சாவூர் அரசு கல்லூரியிலும், கரூர் அரசு கல்லூரியிலும் மற்றும் வாலாஜா அரசு கல்லூரியிலும் மாணவிகளுக்கான விடுதி உள்ளதைபோல் வேலூரிலும் விடுதி அமைக்க வேண்டுமென ஜி.லதா எம்எல்ஏ, மாவட்ட ஆதிதிராவிட அலுவலரிடம் எடுத்துக் கூறினார்.
இக்கோரிக்கையை ஏற்று முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கு விடுதி தேர்வு செய்ய மாவட்ட வருவாய் அலுவலர் சரவண வேல்ராஜ், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் சொர்ணலதா, வேலூர் தாசில்தார் அருண் ஆகியோர், ஜி.லதா எம்எல்ஏ-வுடன் சென்று, முத்துரங்கம் அரசு கல்லூரி வளாகத்தில் 1 ஏக்கர் 10 சென்ட் இடத்தை தேர்வு செய்தனர். இதில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் உடன் இருந்தார்.