வியாழன், 4 மார்ச், 2010

உத்தப்புரத்தின் உந்துசக்தியே கோவை வெற்றி

உத்தப்புரத்தின் தீண்டாமைச்சுவரை அகற்றியதில் பெற்ற உந்துசக்தியால்தான் கோவை தீண்டாமைச் சுவரும் உடனடியாக அகற்றப்பட்டு வெற்றி கிட்டியது என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறினார்.
கோவை தந்தை பெரியார் நகர் மக்களின் சார்பில் நடந்த நன்றி பாராட்டு விழாவில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:
இங்கு பேசிய இரவிக்குமார் தீண்டாமைச்சுவர் உடனடியாக அகற்றப்பட்டது என்றார். இது சும்மா நடக்கவில்லை. மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் இருந்த தீண்டாமைச் சுவரை அகற்றியதால் பெற்ற உந்து சக்தியால்தான் இது நடந்தது. உத்தப்புர தீண்டாமைச் சுவரை அகற்றுவதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நெடிய போராட்டமும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதும், உத்தப்புரம் மக்களின் பல நாள் சிறைவாசமும் காரணமாக இருந்தன. உத்தப்புரம் ஒரு கிராமம். ஆனால் கோவை நகர்ப்புறம். கடந்த காலத்தில் இதை கவனிக்கவில்லை. தெரியவந்தவுடன் அதிரடி நடவடிக்கையில் இறங்கினோம்.
இவ்வாறு பி.ஆர்.நடராஜன் பேசினார்.
விழாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் யு.கே.வெள்ளிங்கிரி, மாநிலக்குழு உறுப்பினர் கே.சி.கருணாகரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், சிபிஎம் சிங்கை நகரச் செயலாளர் கே.மனோகரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனர்.