திங்கள், 14 டிசம்பர், 2009

அருந்ததியர் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்தது செங்கொடி இயக்கம் - என். வரதராஜன் பெருமிதம்




திண்டுக்கல் ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில், ரெட்டியார்பட்டி காலனி, நீலமலைக்கோட்டை காலனி, ரெட்டியார் சத்திரம் காலனி அருந்ததிய மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் என்.வரதராஜன் நேரில் சந்தித்து, குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் அருந்ததியர் மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

அருந்ததியர் மக்களோடு இன்று நேற்றல்ல, ஆண்டாண்டு காலமாக அவர்களோடு இரண்டறக் கலந்த இயக்கம் செங்கொடி இயக்கம். திண்டுக்கல் நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி ஆற்றிய பங்கை அவ்வளவு குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களது பஞ்சப்படிக்காக, உடைக்காக, சமூக மேம்பாட்டிற்காக எண்ணற்ற போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.

இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் ஆகி என்ன பயன்? இன்றும் கூட மனித மலத்தை சுமக்கும் அவலத்தை அருந்ததிய மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். குடியிருக்க வீடு இல்லை. குடியிருக்கும் வீட்டுக்குப் பட்டா இல்லை. ரேசன் கடையில் நல்ல அரிசி போடவில்லை. பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்க முடியவில்லை. 2 ஏக்கர் திட்டம் என்கிறார்கள். அந்தத் திட்டத்தின்படி யாருக்கும் நிலம் கிடைக்கவில்லை. மயானம் இல்லை, மயானம் இருந்தால் அதற்குப் பாதை இல்லை. தொகுப்பு வீடு கட்டித்தரப்படவில்லை என்று ஏராளமான புகார்களை நீங்கள் என்னிடம் கூறி உள்ளீர்கள்.

100 பேருக்கு அரசின் வேலைவாய்ப்பு கிடைத்தால், அதில் தலித் மக்கள் 18 பேருக்கு வேலை தர வேண்டும். ஆனால், அந்த 18 தலித் இளைஞர்களில் ஒரு அருந்ததியருக்குக்கூட வேலை கிடைப்பதில்லை. அந்த அளவிற்கு கல்வியில், வேலைவாய்ப்பில் அருந்ததிய மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். எனவே தான் அருந்ததிய மக்களின் சமூக விடுதலைக்காக சென்னையில் பிரம்மாண்டமான பேரணியை நடத்தினோம். ஆர்ப்பரித்தோம். தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடாக 6 சதவீதம் வேண்டும் என மாநில அரசிடம் கோரிக்கை வைத்தோம். முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினோம். மகஜர் கொடுத்தோம். ஆனால் அரசு 3 சதவீதம்தான் தந்தது. உள்ஒதுக்கீட்டில் 6 சதவீதம் பெறுவதற்கான போராட்டத்தை நாம் தொடர்ந்து நடத்த வேண்டியுள்ளது. தீண்டாமை எனும் கொடுந்தீயில் அருந்ததிய மக்கள் வெந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளுக்கு ஒரே தீர்வு போராட்டம் தான்.

நகர் மற்றும் கிராமப்புறங்களில் இறந்த மனிதனை எரிப்பது, புதைப்பது, தப்படிப்பது போன்ற பணி யை அருந்ததியர் செய்கிறார்கள். நமது தலைமையில் அருந்ததியர் அமைப்புக்கள் எழுப்பிய முழக்கத்தின் எதிரொலியாகத்தான் சென்னையில் மட்டும் 175 பேருக்கு மயான உதவியாளர் பணி வழங்கப்பட்டது. ஏன் அரசு அதனை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தக் கூடாது? தொடர்ந்து நமது போராட் டங்களில் வலியுறுத்துவோம். பொருளாதார நெருக்கடியிலிருந்தும், சமூக நெருக்கடியிலிருந்தும் ஒட்டு மொத்தமாக அருந்ததியர்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தருவோம்.

இவ்வாறு என்.வரதராஜன் பேசினார்.

என்.வரதராஜனுக்கு ஆரத்தி எடுத்து அருந்ததிய பெண்கள் உற்சாக வரவேற்பு





ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் உள்ள ரெட்டியார்பட்டி காலனி, நீலமலைக்கோட்டை காலனி, ரெட்டியார்சத்திரம் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள அருந்ததியர் மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் திங்களன்று மாலை (7.12.09)சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது வரதராஜனுக்கு, அருந்ததியர் பெண்கள் ஆரத்தி எடுத்தும், வெடிமுழக்கங் களுடனும், கொட்டு மேளத்துடனும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருந்ததியர் மக்கள், தங்களது பகுதியில் நிலவும் அவலங்கள் குறித்து பேசினர். மனுக்கள் கொடுத்தனர்.

பெரும்பாலான மக்கள் தாங்கள் கழிப்பறையின்றி தவிப்பதாக கூறினர். வெளியூர்க்காரர்கள் இங்கு வந்தால், கழிப்பறை இன்றி இருப்பது கண்டு, இதெல்லாம் ஒரு ஊரா என்று திட்டுகிறார்கள் என்றும் தெரிவித்தார். இன்னொருவர் கூறும் போது, இந்த பகுதி மக்களில் இதுவரை யாருக்கும்ம் முதியோர் பென்சன் கிடைத்ததில்லை என்ற தகவலை வெளியிட்டார். எங்களது மக்கள் குறைந்தது 5 முறை யாவது மனு செய்திருப்பார்கள். ஆனாலும் யாருக்கும் முதியோர் பென்சன் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். மேலும் செருப்பு தைக்க வங்கியில் கடன் பெற்றோம். அந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டும், கடனைக் கட்டுமாறு வங்கியாளர்கள் மிரட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல ரெட்டியார்சத்திரம் காலனியைச் சேர்ந்த மாணவர்கள் ஒருவருக்கு கூட இதுவரை கல்விக் கடன் வழங்கப்படவில்லை. தொகுப்பு வீடுகளும் கட்டித்தரப்படவில்லை என்று பலரும் முறையிட்டனர்.

நீலமலைக்கோட்டை மற்றும் ரெட்டியார் சத்திரம் காலனி பகுதி மக்களும் இதேபோன்ற குறைகளைத் தெரிவித்தனர். நீலமலைக்கோட்டை காலனியில் ஒரு பி.காம் படித்த மாணவர் பல ஆண்டுகளாகியும் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்று என்.வரதராஜனிடம் மனுக் கொடுத்தார்.

ரேசன் கடைக்குச் சென்றால் அருந்ததியர் என்ற காரணத்திற்காக ரேசன் அரிசி போட மறுக்கிறார்கள். இந்த கடைகளில் உள்ள நல்ல ரேசன் அரிசியை மற்ற கடைகளுக்குக் கொடுத்து விடுகிறார்கள். அல்லது விற்றுவிடுகிறார்கள். எங்களுக்கு நாற்றம் பிடித்த அரிசியை போடுகிறார்கள். அந்த அரிசியை நாங்கள் சமைத்துச் சாப்பிட முடியவில்லை. இதனை சாப்பிட்டால் குழந்தைகள் வாந்தி எடுத்து விடுகின்றன. உடல் நிலை சரியில்லாமல் போய் விடுகிறது. அதனால் அந்த அரிசி எங்கள் வீடுகளில் அடுக்குப்பானைகளில்தான் கிடக்கிறது. காலனி வீடுகள் கட்டி 30 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவை இடிந்து விழும் நிலையில் உள்ளன. 100 நாள் வேலைத் திட்டத்தில் எங்களுக்கு ரூ. 60-தான் சம்பளம் தருகி றார்கள். எதிர்த்துக் கேட்டால் வேலை தர மறுத்துவிடுகிறார்கள்.

இந்த புகார் சம்பந்தமாக உரிய நடவடிக்கையை எடுப்போம் என்றும், இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் சட்டமன்றத்திலும் எதிரொலிக்கும் என்றும் என்.வரதராஜன் வாக்குறுதி அளித்தார்.