திங்கள், 18 ஜனவரி, 2010

கண்பார்வையற்ற அருந்ததிய இளைஞர் மீது தாக்குதல் - குடும்பத்தையும் ஊரைவிட்டு ஒதுக்கிய சாதி வெறியர்கள்

தேனி மாவட்டம், காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்- அருந்ததிய இளைஞர் ராம்பெருமாள். இருகண்களிலும் பார்வை யை இழந்தவர். இவர், கடந்த 22.12.2009 அன்று மாலை 5.45 மணியளவில், காட்டு நாயக்கன்பட்டி பயணிகள் நிழற்குடையில் உட்கார்ந்து இருந்த போது, அங்குவந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த செல்லத்துரை, சுருளி, சுருளியப்பன், கண்ணன் ஆகியோர் “சக்கிலிய நாயே நீ சமமாக உட்காருவதா” என்று சொல்லி செருப்பு களால் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ராம்பெருமாள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதனிடையே, ராம்பெருமாளையும் அவரது குடும்பத்தையும் ஊரை விட்டும் ஒதுக்கி வைத்து கொடுமை புரிந்துள்ளனர்.

தினசரி கூலி வேலை செய்தால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலையில், இவரின் குடும்பத்தி னரை யாரும் வேலைக்கு கூப்பிடாமல் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். தான் தாக்கப்பட்டதுடன், தனது குடும்பம் ஊரை விட்டும் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதை நினைத்து, கண்பார்வையற்ற அருந்ததிய இளைஞர் ராம்பெருமாள், மனரீதியிலும், உடல் ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆகவே, அருந்ததிய இளை ஞரை சாதியை சொல்லி செருப்பால் தாக்கியும், அவரது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கியும் வைத் துள்ள ஆதிக்க சாதியினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தேனி மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் ஆர்.காரல் மார்க்ஸ், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டார்.

காணி இன மக்களுக்கு அரசு திட்ட உதவி அமலாகவில்லை

குமரி மாவட்டம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் களியல் பேரூர் சிறப்புக்கூட் டம் பேரூராட்சிக்குழு உறுப்பினர் ராஜினி தலைமையில் நடைபெற்றது. களியல் வட்டாரச் செயலாளர் ராகவன், மாவட்டத் தலைவர் தங்கப்பன், நாகப்பன் நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் மலைவிளைபாசி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

களியல் பேரூர் கிளைத் தலைவராக ராஜினி, துணைத் தலைவராக இருதயதாஸ், செயலாளராக ஒமனா, துணைச் செயலாளராக வேலப்பன் காணி, பொருளாளராக நாகப்பன் நாயர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

களியக்காவிளை பேரூராட்சிக்கு உட்பட்ட மலையோரப் பகுதி தலைக்குமலை, சிற்றாறு - சிலோன் காலனி, மல்லமுத்தன்கரை கோதயாறு பகுதிகளில் வசிக்கும் காணி இன ஆதிவாசி மக்களுக்கு சமூக நலத்திட்டங்கள் ஒன்றும் இதுவரை அமலாக்கவில்லை; விவசாயத் தொழிலாளர் சமூக பாதுகாப்பு அட்டை களி யல் கிராம அலுவலகம் வாயிலாக விநியோகம் செய்யப்பட்டாலும், சலுகைகள் வழங்கப்படவில்லை; ஆகவே, இந்த திட்டங்களை உடனடியாக அமல்படுத்துவதுடன், சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்கு மலைப் பகுதிகளிலிருந்து ஏராளமான ஆதிவாசிகள் உள்ளிட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

வாலாஜாபேட்டை குறவன் மக்களின் 50 ஆண்டு கால போராட்டம் வெற்றி

வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை நகரில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் குறவன் இன மக்களின் குழந்தைகள் மேற்படிப்பிற்கு செல்லும் வகையில், சாதிச்சான்று வழங்காமல் நீண்ட காலம் புறக்கணிக்கப்பட்டு வந்தனர். பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், குறவன் இன மக்கள், குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் துவங்கி, கடந்த 2009- ஜூன் மாதம் அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு எம்எல்ஏ தலைமையில் கோரிக்கை மனுவை வட்டாட்சியரிடம் அளித்தனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் போராட்டம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, குறவன் இன மக்களுக்கு, குறவன் சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

பாராட்டு விழா
இந்நிலையில், குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் முதலாமாண்டு விழாவும், குறவன் இன மக்களின் வாழ்வுரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாராட்டு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

வாலாஜா கடப்பாரங்கையன் தெருவில் நடந்த விழாவிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.பெருமாள் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் எஸ்.ஜூட்டன் (தலைவர்), எம்.கணபதி (செயலர்), ஆர்.சுந்தரமூர்த்தி (பொருளாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், எம்எல்ஏக்கள் ஜி.லதா, பி.டில்லிபாபு, சங்கத்தின் மாநில அமைப்பாளர் ஏ.வி.சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.நாராயணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.காசிநாதன், எஸ்.ஆனந்தன் (காஞ்சிபுரம்), பி.வீரபத்ரன் (குறுமன்ஸ் சங்கம்), ஜி.ஆர்.பிரகாஷ் (கொண்டாரெட்டி மக்கள் சங்கம்), ஏ.பரமசிவம் (அக்காஸ்ட்), என்.ஜோதி (சிபிஎம்), நிலவு குப்புசாமி (வி.ச.), ஏ.ரேணு (வி.தொ.ச.), தா. வெங்கடேசன் (சிபிஎம்), பத்மாமணி (மாதர் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.

ஒன்றுபட்டு போராடினால்தான் ஆதிக்க சக்திகள் மற்றும் ஆட்சியாளர்க ளிடமிருந்து உரிமைகளை வென்றெடுக்க முடியும்; அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இறுதிவரை துணையாக இருக்கும் என்று விழாவில் பேசிய தலைவர்கள் குறிப்பிட்டனர்.

மழையால் பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்கள்

கோத்தகிரி கெந்தோனை ஆதிவாசி கிராமத்தில், மலைப் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத் தில் நீலகிரியில் பெய்த கனமழையால் இந்த வீடுகள் சேதம் அடைந்தன.

இந்நிலையில் இந்த வீடுகளை உடனடியாக சீரமைத்து கட்டி ஆதிவாசி மக்களுக்கு வழங்க வேண்

டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வாலிபர் சங்கத்தினர், கோத்தகிரி மார்க்

கெட் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோத்தகிரி பகுதி வாலிபர் சங்க செயலாளர் மகேஷ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ரஞ்சித்குமார் போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். ஜே.ஆல்தொரை, குருமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் போராட்டத்தை ஆதரித்துப் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோத்தகிரி பகுதி செயலாளர் தர்மராஜ், மாரியப்பன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். (ஜனவரி 5, 2010 வெளியான செய்தி)

தலித் இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் : தாக்கப்பட்டவர்கள் மீதே பொய்வழக்கு போட்ட பட்டுக்கோட்டை காவல்துறை

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது, மதுரபாஷானியபுரம் கிராமம். இங்கு தலித் பகுதியில், 31.12.2009 நள்ளிரவு 12 மணியளவில் தலித் இளைஞர்களான அ.ராஜேஷ், பொ.மோகன் ஆகியோர் அமர்ந்து இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த, ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திலுள்ள காடந்தங் குடி கிராமத்தைச் சேர்ந்த- ஆதிக்க சாதியைச் சேர்ந்த ந.ஜவஹர், வேதமுத்து, குகன் ஆகிய மூவரும், “என் னங்கடா, எழுந்திரிக்காமல் உட்கார்ந்திருக்கிறீர்கள்” என்று கூறி, சாதியை சொல்லி இழிவாகப் பேசியதுடன், ராஜேஷ், மோகன் ஆகிய இருவரையும் விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த ராஜேஷ், மோகன் ஆகியோர் பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், பட்டுக்கோட்டை பொறுப்பு டி.எஸ்.பி. மருத்துவமனைக்கு சென்று தலித் இளைஞர்கள் ராஜேஷையும், மோகனையும், புகாரை திரும்பப் பெறுமாறு சொன்னதுடன், இல்லையேல் உங்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்வேன் என்றும் மிரட்டியுள்ளார். அத்துடன், ஆதிக்க சாதியினர் மீதான புகாரை பதிவு செய்யாமல் காலம் கடத்தியுள்ளார்.

இதுபற்றி ஜனவரி 2-ம் தேதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதன் பிறகும் கூட நடவடிக்கை இல்லை. மாறாக தாக்குதலுக்குள்ளான ராஜேஷ், மோகன் ஆகியோர் மீதே 307 மற்றும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தலித் இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஜவகர், வேதமுத்து, குகன் ஆகியோரை, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்யாததுடன், மாறாக அவர்கள் மீதே வழக்கு போட்ட காவல்துறையின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் தனது அறிக்கையில் கண்டித்தார்.

தலித் இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சாதி ஆதிக்க வெறியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்; பாதிக்கப்பட்டவர்கள் மீதே பொய் வழக்கு போட்ட பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதே போல தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சின்னை.பாண்டியனும், கண்டனம் தெரிவித்தார்.

பட்டுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராஜேஷ், மோகன் ஆகியோரை, சின்னை.பாண்டியன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி, ஒன்றியச் செயலாளர் எஸ்.சாம்பசிவம் ஆகியோர் மருத்துவமனையில் நேரில் பார்த்து ஆறுதல் கூறினர். அதன்பிறகு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்வேலனிடம் சம்பவத்தை நேரில் விளக்கி மனுவும் அளித்தனர்.

தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக தொடர் போராட்டம் : திருப்பூர் கூட்டத்தில் முடிவு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்புக்குழு கூட்டம் 2.1.2010 சனிக்கிழமையன்று திருப்பூரில் கு.ஜக்கையன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆதித்தமிழர் சனநாயகப் பேரவை, ஆதித்தமிழர் பேரவை, புரட்சிப் புலிகள், அருந்தமிழர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு அருந்ததியர் ஜனநாயக முன்னணி, களம் ஆகிய தலித் அமைப்புகள், தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் உள்ள சிஐடியு, தமுஎகச, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் மத்தியதர அரங்கங்கள் ஆகியவற்றின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் துவக்கி வைத்து உரையாற்றினார். மாநில அமைப்பாளர் பி.சம்பத் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டங்களையும், தலையீடுகளையும் விளக்கினார். கே.சாமுவேல்ராஜ் தீர்மானங்களை முன்மொழிந்தார். எஸ்.கே.மகேந்திரன் எம்.எல்.ஏ நிறைவுரையாற்றினார்.

இக்கூட்டத்தில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அருந்ததியர் உள்ஒதுக்கீடு
அருந்ததியர் மக்களின் 3 சதவீத உள்ஒதுக்கீடு கல்வித்துறையில் மட்டும் அமலாகிறது. தமிழக அரசின் வேலைவாய்ப்பை பொறுத்தவரை இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர், மின்வாரியப் பணி ஆகியவற்றில் உள்ஒதுக்கீடு அமலாகவில்லை. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் சில மாவட்டங்களில் உள் ஒதுக்கீடு அடிப்படையில் பதிவு செய்ய மறுப்பதையும், பல மாவட்டங்களில் அருந்ததியர் என சான்றிதழ் தர மறுப்பதையும் கண்டித்தும், தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும் கோவை, திருப்பூர், நாமக்கல், விருதுநகர், திண்டுக்கல், நெல்லை, தருமபுரி ஆகிய 7 மையங்களில் வேலை வாய்ப்பு அலுவலகம் முன்பும், ஈரோட்டில் மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பும் பிப்ரவரி 15-ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பஞ்சமி நிலமீட்பு போராட்டம்
தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சட்ட விரோதமான நிலப்பதிவுகள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளது. எனவே பஞ்சமி நிலத்தை மீட்டு தலித் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் தலித் மக்கள் உட்பட விவசாயத் தொழிலாளர்களுக்கு உடன டியாக 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரி பிப்ரவரி 20 அன்று செங்கல்பட்டில் நில மீட்பு மாநாடு நடைபெறும்.

விழுப்புரத்தில் வாழ்வுரிமை மாநாடு
தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தவர் என அறிவிக்க வேண்டும் என்கிற நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரைகளை அமலாக்கிட வேண்டும் எனக் கோரி ஜனவரி 25- திருச்சியில் பெருந்திரள் கண்டன இயக்கமும், மார்ச் 20- விழுப்புரத்தில் தலித் கிறிஸ்தவர்கள் வாழ்வுரிமை மாநாடும் நடைபெறும்.

சென்னையில் கருத்தரங்கம்
தமிழகத்தில் தலித் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை 18 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயர்த்திடக் கோரியும், பின்னடைவுப் பணியிடங்கள், காலியிடங்களை நிரப்பிடக் கோரியும் பிப்ரவரியில் சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம் நடை பெறும்.

மதுரையில் பேரணி
தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட தொகுப்பு வீடுகளை மராமத்து செய்திடக் கோரியும், அவர்களின் வாழ்விடங்களில் குடிநீர், சுகாதாரம், மருத்துவம், சாலை, கழிப்பிடம், பொது விநியோகம் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரியும் மார்ச் மாதத்தில் மதுரையில் பேரணி நடைபெறும்.

ஒண்டிவீரனுக்கு நினைவுச் சின்னம்
விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு மணிமண்டபமும், சிலையும் அமைத்திடக்கோரி மார்ச் மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

விளக்கப் பிரச்சாரம்
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை உறுதியான முறையில் அமலாக்கிடக் கோரியும், வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சரத்துக்களை மக்கள் மத்தியில் பிரச் சாரம் செய்திடவும் சிறு பிரசுரம் வெளியிடுவது என்றும், அதை ஜன வரி இறுதி வாரத்தில் மக்களிடம் கொண்டு செல்வது எனவும் தீர்மா னிக்கப்பட்டது.

தலித் மக்களின் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இன்சூரன்ஸ் தொழிற்சங்க அமைப்பும் இணைந்து கோவையில் டாக்டர் அம்பேத்கார் கல்வி - வேலைவாய்ப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளின் உதவியோடு சென்னை, திருப்பூர், ஈரோடு, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் மார்ச் இறுதிக்குள் அமைப்பது.

சட்ட உதவி மையம்
தலித் மக்களின் சட்ட ரீதியான உரிமைகளைப் பாதுகாத்திடவும், அதற்காக போராடவும் சென்னை, மதுரையில் சட்ட உதவி மையம் அமைப்பது.

காவல்துறைக்கு கண்டனம்
காங்கியனூரில் ஆலய நுழைவு உரிமை கேட்டு போராடிய மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவர்கள் மீதும், தலித் மக்கள் மீதும் கடுமையான தடியடி நடத்தி பொய் வழக்கு தொடுத்துள்ள மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், பொய் வழக்குகளை வாபஸ் பெறவும் வேண்டும்; ஆதம்பாக்கம் திருவள்ளூர் நடுநிலைப்பள்ளியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்; ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கிட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தலித் மக்களின் கோயில்களை அபகரிக்க முயற்சி

அறந்தாங்கி ஒன்றியத்திலுள்ள ஆயிங்குடி - வல்லவாரியில் மொத்தம் 9 கோயில்கள் உள்ளன. இதில் 7 கோயில்களை ஆதிக்க சக்திகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். மீதமுள்ள ஸ்ரீஅய்யனார் கோயில், ஸ்ரீகருத்தப்பெரியான் மற்றும் பரிவார தேவதைகள் அடங்கிய 2 கோயில்கள், பரம்பரை பரம் பரையாக அவ்வூரில் உள்ள தலித்துகளால் நிர்வகிக்கப்பட்டு வருவதாகும். இவை தவிர மற்ற 7 கோயில் களிலும் தலித்துகளுக்கு இதுநாள்வரை ஆலயத்திற்குள் நுழைந்து வழிபடும் உரிமை மறுக்கப்பட்டே வந்துள்ளது.

தலித்துகள் வசமுள்ள இரண்டு கோயில்களில், நிர்வாகம், பூசாரி, சாமியாடிகள் அனைத்திலும் தலித்துகளே இருந்து வருகின்றனர். இவ்விரண்டு கோயில்களும் சக்திவாய்ந்த தெய்வங்களாக அப்பகுதி மக்களால் கருதப்படுவதால் பக்தர்களின் வருகையும், காணிக்கைகளும் கணிசமான அளவில் கூடிக் கொண்டே வந்துள்ளது. குறிப்பாக மற்ற சாதி மக்களும் இக்கோயில்களுக்கு வருகை புரிந்து தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

இது அப்பகுதி சாதி இந்துக்களின் கண்களை உறுத்த ஆரம்பிக்கவே, திடீரென ஒரு நாள் ஆதிக்க சக்தியைச் சேர்ந்த சிலர் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து, பூஜை வேலைகளைச் செய்ய ஆரம்பித் துள்ளனர். பல்வேறு பகுதிகளிலிருந்து நேர்த்திக்கடனாக கொண்டு வரப்பட்ட 18 கிடாய்களில் 15 கிடாய் களை அபகரித்து கொண்டும் சென்றுள்ளனர். தற்போது தலித்துகளின் கோயில்களை பூட்டி சாவிகளையும் ஆதிக்க சாதியினர் தங்கள் கைவசம் வைத்துக் கொண்டு, தலித்துகளை தடுத்து வருகின்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தலித் மக்கள் கோட்டாட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை 21.12.2009 அன்று சந்தித்து, நாங்கள் நிர்வகித்து வந்த எங்கள் பரம்பரைக் கோவிலை எங்களுக்கு மீட்டுத்தர வேண்டும் என மனுக்கொடுத்து முறையிட்டுள்ளனர். மனுக் கொடுத்ததை அறிந்த ஆதிக்க சாதியினர் தலித்துகளான பெரியய்யா மகன் சுப்பிரமணியன்(60), பெரியண்ணன் மகன் கருப்பையா(47) ஆகிய இருவரையும் மறித்து தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியபடி செருப்பால் அடித்துள்ளனர்.

இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றாலும், அதிகாரிகளும், காவல்துறையினரும் கட்டப்பஞ்சாயத்து செய்வதிலேயே குறியாக இருந்தனர். மிகவும் வறிய நிலையில் இருக்கும் தலித்துகளை சாதி ஆதிக்கத்துடனும் பணபலத்துடனும் இருக்கும் ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் தரப்பிலிருந்தே அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இந்த விசயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும்; செருப்பால் அடித்து துன்புறுத்தியவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத் தின்கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; தலித்துகள் வசமிருந்த கோயில்களின் நிர்வாகம், பூசாரி, சாமியாடி உரிமைகளை அவர்களே தடை யின்றித் தொடர உத்தரவாதமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; அவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பளிக்க வேண்டும் மீதமுள்ள 7 கோயில்களிலும் ஆலயத்திற்குள் நுழைந்து வழிபடும் உரிமையை தலித்துகளுக்கும் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவதாக கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எம்.சின்னத்துரை அறிக்கையில் வலியுறுத்தினார்.

செவ்வாய், 12 ஜனவரி, 2010

துறையூர் அருகே கொட்டையூரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கொட்டையூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு டீ கடைகளில் இரட்டை கிளாஸ் முறை பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும், செருப்பு அணிந்து செல்வதற்கும், கோயிலுக்குள் நுழைவதற்கும் பல ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் வாலிபர் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான இந்த அநீதியை எதிர்த்து 30.12.2009 அன்று கொட்டையூர் கிராமத்தில் ஆலய நுழைவோம் என்றும் இரட்டை டம்ளர் உள்ளிட்ட இழிவை அகற்றுவோம் என்றும் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் செவ்வாயன்று துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் சுமூக தீர்வு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்கள், வாலிபர் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினருடன் அப்பகுதியில் உள்ள கோயிலுக்குள் சென்று வழிபட்டனர். அதேபோல டீ கடைகளிலும் பொதுக் கிளாசில் டீ குடித்தனர்.

முன்னதாக நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தாசில்தார் நந்தகுமார், துறையூர் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சித்ரா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் அண்ணாதுரை, ஒன்றியச் செயலாளர் எம்.காசிராஜன், துறையூர் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.சங்கிலிதுரை, எஸ்.மருதமுத்து, உப்பிலியபுரம் ஒன்றியச் செயலாளர் எஸ்.முத்துசரம், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வன், ஒன்றியச் செயலாளர் எம்.ஆனந்தன், மாவட்டத் தலைவர் எ.சசிகுமார் மற்றும் முத்துகுமார், அசோக், சுரேஷ், அழகுமலை, பாக்கியராஜ், சக்திவேல், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சந்திரன் உள்பட ஏராளமான கொட்டையூர் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் நெறிக்குறவர்கள் ஆர்ப்பாட்டம்



குடிமனைப்பட்டா மற்றும் பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருத்துறைப்பூண்டியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், நெறிக்குறவர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

29.12.2009 செவ்வாயன்று நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் எம்.பி.கே.பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.தங்கராசு, பி.என்.தங்கராசு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சுப்பிரமணியன், எஸ்.நவமணி, ஒன்றியச் செயலாளர் ஜோதிபாசு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் டி.வடிவேல், கே.பி.ஜோதிபாசு, மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் பவானி, வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப் பினர் டி.வி.காரல் மார்க்ஸ், நகரக்குழு உறுப்பினர்கள் டி.வி.பன்னீர் செல்வம், கே.பசுபதி, ஆர்.எம்.சுப்பிரமணியன், எஸ்.சாமிநாதன், கே.கோபு, ஜி.முனியப்பன், கே.ஜி.ரகுராமன் (வாலிபர்), கலைச்செல்வி (மாதர்), நகர்மன்ற உறுப்பினர் ஜி.ரேவதி ஆகியோர் ஊர்வலத் தில் பங்கேற்றனர்.

முன்னதாக தோழர் பி.சீனிவாசராவ் நினைவு மண்டபம் அருகிலிருந்து நெறிக்குறவர் சமூகத் தலைவர்கள் கே.நாகூரான், வீரமணி, இராஜேந்திரன், காளிமுத்து ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் கோரிக்கைகளை முழங்கி ஊர்வலமாக வந்தனர். நீடாமங்கலம் நகரச் செயலாளர் சி.டி.ஜோசப் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்திப் பேசினார்.

நிறைவாக நகராட்சி ஆணையர் (பொறுப்பு) திருமலைவாசன் கோரிக்கை மனுவை பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


மாத்தூரில் தலித் மக்கள் ஆலயத்திற்குள் நுழைந்தனர்

நாகை மாவட்டம், செம்பனார் கோவில் ஒன்றியம்- மாத்தூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் நீண்டகால மாகவே தலித் மக்கள் உள்ளே செல்லவோ, வழிபாடு செய்யவோ உரிமை மறுக்கப்பட்டிருந்தது. இக்கொடுமை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய கள ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, வாலிபர் சங்கத்தின் தலைமையில், டிசம்பர் 30 அன்று தலித் மக்கள் ஆலயம் நுழைவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இந்நிலையில் 26.12.2009 அன்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் முன்னிலையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்தகட்டமாக 28-ம் தேதி, செம்பனார்கோயில் காவல்நிலையத்தில் கோட்டாட்சியர், காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர், வட்டாட்சியர், மண்டலத் துணை வட்டாட்சியர், வாலிபர் சங்கத் தலைவர்கள், மாத்தூர் தலித் மக்களின் தலைவர்கள், சாதி ஆதிக்க சக்தியினரின் பிரதிநிதிகள், கோயில் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற்றது.

இதில், அன்று மதியமே அரசு - காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் தலித் மக்கள் ஆலயம் நுழைந்து, வழிபாடும் நடத்துவார்கள் என்றும், தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை எவரும் தடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஆலய நுழைவு

அதன்படி மதியம் 2 மணிக்கு மாத்தூர் மாரியம்மன் கோயிலில் ஆர்டிஓ, டிஎஸ்பி மற்றும் அரசு, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் 75 பெண்கள் உள்பட தலித் மக்கள் 150 பேர் ஆலயத்துக்குள் நுழைந்தனர். அப்போது கோயில் கருவறை, சாதி ஆதிக்க சக்திகளால் பூட்டப்பட்டிருந்தது. அதிகாரிகள் பூட்டை உடைத்துக் கருவறையைத் திறந்து விட்டனர். தலித் மக்கள் அமைதியாகவும், உரிமை பெற்ற வெற்றிப் பூரிப்போடும் வழிபாடு செய்தனர்.




அதன்பின், காலனித் தெருவில் வாலிபர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் மார்க்ஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், நிர்வாகிகள் பி.ஏ.ஜி.சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி, கணேசன், சரவணன், கண்ணன் ஆகியோர் உரையாற்றினர்.

தலித் தெருவுக்கு வராத தேர் : திமுக பிரமுகரைக் கண்டித்து மறியல்

மதுரை- மேலூர் சாலையில் உள்ள உத்தங்குடி அய்யப்பன் கோயில் மண்டல பூஜை சனிக்கிழமையன்று (26.12.09) நடைபெற்றது. இந்த பூஜையையொட்டி அனைத்துத் தெருக்களிலும் கோயில் தேர் உலா வந்தது. ஆனால் தலித் மக்கள் வசிக்கும் தெருவிற்குள் மட்டும் தேர் வரவில்லை.

இதனிடையே, கோயில் அலங்காரக் குடையைத் தலித் இளைஞர்கள் கையால் தொட்டார்கள் என்பதற் காக, தலித் மக்கள் தாக்கப்பட்டனர். இதில் தலித் கர்ப்பிணிப் பெண் லட்சுமி, வினோத்குமார், பி.கண்ணன், பிரதாப் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

உத்தங்குடி ஊராட்சித் தலைவரான தனலட்சுமியின் கணவரும், துணைத் தலைவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் மணிமாறன், அம்பிகாபதி ஆகியோரும் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக தலித் மக்கள் குற்றம் சாட்டினர்.

இத்தாக்குதல் சம்பவத்தால் உத்தங்குடியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். காவல்துறையிடம் தலித் மக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக ஊராட்சித் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் உள் ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தி உத்தங்குடியில் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிறன்று மறியல் போராட்டம் நடை பெற்றது.

விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் மாநில நிர்வாகி செல்லப்பாண்டியன், தமிழர் தேசியப்பேரவை துணைத்தலைவர் ஆறுமுகம், உழவர் இயக்க மாவட்டத்தலைவர் மலைச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் அளித்த உறுதிமொழியின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

தாக்குதலுக்குள்ளான கர்ப்பிணி பெண் லட்சுமி, வினோத்குமார், பி.கண்ணன், பிரதாப் ஆகியோர் அரசு ராஜாஜி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்ததும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எம்.தங்கராஜ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று விவரங்களை கேட்டறிந்தனர். போராட்டத்துக்கு துணை நிற்பதாக உறுதி கூறினர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் வாங்கவேண்டும் என வலியுறுத்தினர்.

சாதி, மத வேறுபாட்டுக்கு சந்தனம் பூசுவது யாராயினும் அவர்களை சட்டம் அனுமதிக்காது என கடந்த மூன்று நாட்களுக்கு முன்புதான் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி அறிக்கை விட்டார். ஆனால், அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களே மதுரையில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பதும், தலித்துக்களின் புகார் மீது வழக்கு பதிவு செய்யக்கூட காவல்துறை மறுக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறையில் இரத்ததானம்

வெண்மணி தியாகிகள் தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இரத்ததான கழகம் சார்பில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் 25 யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் நகரத் தலைவர் டி.கே.ஆர்.கதிரவன் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் ஏ.பிரகாஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் சி.மேகநாதன், ஒன்றியத் தலைவர் எம்.இளைய ராஜா, ஒன்றியப் பொருளாளர் ஜி.வைரவன், துணைச் செயலாளர் எஸ்.ஜெயராஜ், துணைத் தலைவர் டி.அலெக்சாண்டர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சதீஸ், சி.ராஜா, எஸ்.ஆம்ஸ்ட்ராங் மற்றும் இளம்பெண்கள் மாவட்ட கன்வீனர் எம்.சிவரஞ்சனி, இரத்ததானக் கழக நிர்வாகிகள் பா.குமரவேல், ஏ.சரவணன், பொருளாளர் எம்.கார்த்தி, செயற்குழு உறுப்பினர் சி.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமா, நகர்மன்றத் துணைத்தலைவர் தம்பி சத்தியேந்திரன் ஆகியோர், இரத்ததானம் செய்த கொடையாளர்களுக்கு அரசின் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர். சங்கத்திற்கு கேடயமும் வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனை தலைமை அதிகாரி கே.சந்திரசேகரன், இரத்த வங்கி அதிகாரி ஆர்.மகேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இரத்த தான கழகத்தின் செயலாளர் ஏ.ஆர்.விஜய் நன்றி கூறினார்.

திங்கள், 11 ஜனவரி, 2010

சங்கடம் வேண்டாம்; சமத்துவம் வேண்டும் - பி.சம்பத்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், டிசம்பர் 25 வெண்மணித் தியாகிகள் நினைவு தினத்தன்று ஆலய நுழைவு உட்பட தீண்டாமை ஒழிப்பு நேரடி நடவடிக்கைகளுக்கு அறைகூவல் விடுத்திருந்தது. தமிழ்நாடு முழுவதும் இப்போராட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. வாலிபர் சங்கத்தின் இப்போராட்ட அறைகூவலையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர், பத்திரிகை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தான் பெங்களூர் சென்று ஓரிரு நாட்களில் திரும்ப இருப்பதாகவும் அவ்வாறு திரும்பிய பிறகு அனைத்து அரசியல் கட்சிகளோடும் கலந்துபேசி ஆலய நுழைவு உட்பட தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

கடந்த காலங்களில் இத்தகைய முயற்சிகள் இல்லாத சூழலில் தமிழக முதல்வர் அறிவித்துள்ள நடவடிக்கை தேவையானது என்பதையும், அதனை அவர் அவசியம் நிறைவேற்ற வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கிறோம். வர்க்க லாபம், குறுகிய அரசியல் ஆதாயம், வாக்கு வங்கி நோக்கங்களுக் காக சாதியமைப்பை பாதுகாத்து அவ்வப்போது சாதி உணர்வுகளை விசிறி வந்துள்ள முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ கட்சிகள் அனைத்தும் தங்களது தவறான பாதையைக் கைவிட்டு தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

ஆனால் முதல்வர் தனது அறிக்கையில் மேற்கண்ட அறிவிப்போடு மட்டும் நிறுத்தவில்லை. அவரது அறிக்கையில் கீழ்க்கண்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

“ஆண்டவனுக்கு அருகே நின்று அவனுக்கு பூஜை செய்யும் உரிமையை திமுக அரசு பெற்றுத்தந்துள்ளது. சாதி-மத வேறுபாடுகளுக்கு சந்தனம் பூசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டம் அனுமதிக்காது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்து, ஆட்சி நடத்தும் நமக்கு சங்கடம் கொடுக்க வேண்டும் என்பதற்கு அல்ல என்று அந்தக் கொள்கையை நிறைவேற்ற வேண்டும் என்று இப்போது திடீரென நினைத்துக் கொள் பவர்கள் போல ஆலயங்கள் சிலவற்றில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருப்பது தேவைதானா என்பதைச் சிந்தித்து ஒருமித்த கருத்தோடு ஒழித்திடுவோம் சாதி-மத வேற்றுமையை என ஓரணியில் திரண்டு நின்று ஒலித்திடுவதே வன்முறைக்கு வழிவகுக்காத நன்முறையாகும்.”

சுற்றிவளைத்து வார்த்தைகளையும் வாக்கியங்களையும் அவர் அமைத்திருந்தாலும் அதன் அர்த்தம் நமக்கு விளங்காமல் இல்லை. ஆலய நுழைவு உள்ளிட்ட தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளை வாலிபர் சங்கமும், இடதுசாரி இயக்கங்களும் திடீரென நினைத்து நடத்திக் கொண்டிருப்பது போலவும், தமிழ்நாடு அரசாங்கத்திற்கு சங்கடம் ஏற்படுத்துவது அதன் நோக்கம் போலவும் முதல்வரின் அறிக்கை அர்த்தப்படுத்துகிறது. இடதுசாரிகள் வர்க்கப் போராட்டம் மட்டுமே நடத்துவதாக வக்கனை பேசி விட்டு, தாங்கள் மட்டுமே சமூக நீதிக்காகப் போராடி வருவதாக முரசொலி ஏடும், திமுகவின் சில தலைவர்களும் பேசிவருவது நாம் அறியாததல்ல. அதனால்தான் இடதுசாரிகளை திடீரென நினைத்துப் போராடுவதாக கலைஞர் சாடுகிறார்.

பெரியார் சமூக நீதியிலும் தீண்டாமை ஒழிப்பிலும் காட்டிய அக்கறையை நாம் என்றும் மறுத்ததில்லை. ஆனால் அவர் வழிவந்ததாக பறைசாற்றும் திமுகவும், நம் தமிழ்நாடு அரசும் தீண்டாமை ஒழிப்பில் உரிய அக்கறை காட்டவில்லை என்பதே நமது குற்றச்சாட்டு. கீழவெண்மணி படுகொலை மட்டுமல்ல, மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் படுகொலை, காங்கியனூர் தடியடித் தாக்குதல் போன்றவை நடந்ததும் திமுக ஆட்சியில்தான். உத்தப்புரம் சுவர் இடிப்பு, அருந்ததியர் உள்ஒதுக்கீடு, ஆலய நுழைவுப்போராட்டங்கள் போன்ற பல போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற இயக்கங்கள் நடத்திய போது தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு ஏற்படுத்தியது உண்மையும், வரவேற்கத் தகுந்ததும்தான்.

ஆனால் இவையெல்லாம் போராட்டங்கள் உருவாக்கிய சூழலிலும் நிர்ப்பந்தத்திலும் நடந்தன என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். இடதுசாரிகளின் இப்போராட்டங்கள் எல்லாம் திடீரென நினைத்து நடந்தவையல்ல. மாறாக விடுதலைப்போராட்ட நிகழ்வுகள், நீடித்த நிலப்போராட்டங்கள், வெண்மணி தியாகம், தமிழ்நாட்டில் பல பகுதிகளில் நடந்த விவசாய இயக்கப் போராட்டங்களின் தொடர்ச்சியே இவை என்பதை தமிழக மக்கள் மட்டுமல்ல, கலைஞரும் அறிவார். திமுகவையும் இதர சில முதலாளித்துவ அரசியல் இயக்கங்களையும் போல், ஆளும் வர்க்கங்களுக்குத் துணைபோகும் வகையில் சாதி ஒடுக்குமுறையை வர்க்க ஓடுக்குமுறையிலிருந்து பிரித்துப் பார்க்கும் இயக்கம் அல்ல செங்கொடி இயக்கம். மாறாக சேர்த்துப் பார்க்கும் இயக்கம். இப்பார்வையிலும் பாதையிலும் வர்க்க, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான இடதுசாரிகளின் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இனியும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். எனவே தற்போது நடத்தப்பட்டுவரும் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களுக்கு வேறு விதமான நோக்கத்தையும், நியாயத்தையும் கற்பிப்பதை திமுகவும், கலைஞரும் கைவிடுவது நல்லது.

அது இருக்கட்டும். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை திமுக அரசுதான் கொண்டுவந்தது என்றும் அதன்மூலம் தலித் சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை இருப்பதாகவும் கலைஞர் கூறுகிறார். அந்த ‘சட்டப்பூர்வ உரிமை’யை நாம் மறுக்கவில்லை. ஆனால் அது ‘செயல்பூர்வமான உரிமை’யாக இருக்கிறதா?என்பதுதான் கேள்வி. இச்சட்டம் வந்தபிறகு தலித்துகள் பல ஆலயங்களில் அர்ச்சகராக முடிந்ததா? இல்லையே. ஆலயத்திற்குள் நுழைய தலித்துகளை அனுமதிக்காதபோது அர்ச்சகராக்க ஆதிக்க சக்திகள் எப்படி அனுமதிப்பார்கள்? தற்போது அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக பயிற்சிப்பள்ளிகள் நடைபெறுகின்றனவா? எனவே சட்டப்பூர்வ உரிமைகளைப் பற்றி பேசிப் பலனில்லை. தலித்துகளுக்கும் எல்லாவிதமான சம உரிமைகளையும் அரசியல் சாசனமும் சட்டங்களும் வழங்குகின்றன. ஆனால் நடைமுறையில் இதனை தலித்துகள் பெற முடிந்ததா என்றால், இல்லை.

எனவே, தான் மட்டுமே சரியான முறையில் செயல்படுவதாகவும் மற்றவர்கள் செயல்பாட்டில்தான் கோளாறு இருப்பது போன்ற கருத்துக்களை கலைஞரும் திமுகவும் கூறுவதைத் தவிர்ப்பது நல்லது. தீண்டாமை ஒழிப்புக்கு அரசுத் தரப்பில் உணர்வுப்பூர்வமாக முயற்சியும் மற்ற இயக்கங்கள் அதற்கான நடவடிக்கையில் இறங்கும்போது துணை நிற்பதுமே இன்றைய தேவையாகும். தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள் அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதற்கான போராட்டங்கள் அல்ல, மாறாக சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டங்களேயாகும்.

தலித் உரிமைகளை மீட்பதற்கான வாலிபர்களின் போராட்டக் களம்

மதுரை


மதுரை மாநகரில் தலித் மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்திடக்கோரியும், வடிவேல்கரை தலித் இளைஞர் முருகன் மீது போடப்பட்ட பொய்வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மதுரை மாநகர், புறநகர் மாவட்டக்குழுக்கள் சார்பில் காளவாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் தலைவர் வை.ஸ்டாலின் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணை அமைப்பாளர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், இரா.இராசகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் துவக்கி வைத்து உரையாற்றினார்.

மதுரை கிழக்குத் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் என்.நன்மாறன், வாலிபர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.பாலா, மாநகர் மாவட்டச் செயலாளர் ஜா.நரசிம்மன், புறநகர் மாவட்டச் செயலாளர் உமாமகேஸ்வரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எம்.தங்கராஜ், வாலிபர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் என்.கல்பனா, மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.சரவணக்குமார், ஜான்சி ஆகியோர் கண்டன உரையாற்றினர். புறநகர் மாவட்டச்செயலாளர் எம்.கண்ணன் நன்றி கூறினார்.

இரட்டைக்குவளை முறையை விளக்கும் வகையில் சிரட்டையில் டீ தருவது போல வாலிபர் சங்கத்தினர் சித்தரிப்பு செய்திருந்தனர். முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.



தேனி


வெண்மணி நினைவு தினத்தை முன்னிட்டு வீரபாண்டியில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பெண் களுக்கு கழிப்பிட வசதி கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வீரபாண்டி பேரூராட்சி 10-வது வார்டில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக குடியிருந்து வருகின்றனர். அருகில் உள்ள பொதுக்கழிப்பிடத்தை இம்மக்கள் பயன்படுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், அருந்ததிய மக்களுக்கு புதிய கழிப்பிட வசதி செய்து தரக்கோரி, வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். மலைச்சாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் டி.வெங்கடேசன் துவக்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் ஆர். காரல்மார்க்ஸ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். போராட்டத்தை ஆதரித்து அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர் திலகவதி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்கத் தலைவர்கள் ஈ.தர்மர், த.நாகராஜ், அய்யங்காளை, காமுத்துரை, ஆர். பி.ராமர், விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தை

போராட்டத்தைத் தொடர்ந்து வீரபாண்டி காவல் சார்பு ஆய்வாளர் முன்னிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் வாலிபர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு வார காலத்தில் இடத்தை தேர்வு கழிப்பறை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.



விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள தீண்டாமைக் கொடுமைகளை அகற்றிட உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பி.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஏ.சேகர் துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எல்.முருகன் விளக்கிப் பேசினார். முடிவில் மாநில துணைச்செயலாளர் என்.முத்துராஜ் கண்டன உரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் பி.மாரியப்பன், துணைச் செயலாளர்கள் எம்.தில்லை நாயகம், பாண்டியராஜன், பி.ராஜா, செல்வம், ஜெயக்குமார், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் வீ.மாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.



புதுக்கோட்டை


குன்றாண்டார் கோயில், கந்தர்வக்கோட்டை, பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் உள்ள இரட்டை டம்ளர் முறையை ஒழிக்க வேண்டும், தலித் மக்களை ஆலயங்களுக்குள் அனுமதிக்க வேண்டும், கோவனூர் மற்றும் பல இடங்களில் உள்ள பொதுக்குளங்களில் தலித்துகள் குளிப்பதற்கு தடை விதிக்கும் ஆதிக்க சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ஸ்ரீதர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட அமைப்பாளர் எஸ்.சங்கர், மாவட்ட நிர்வாகிகள் டி.அன்பழகன், ஆர்.எஸ்.அலெக்ஸ்பாண்டியன், எஸ்.பெருமாள், எஸ்.பக்ருதீன், ஒன்றிய நிர்வாகிகள் ராமநாதன், பேரின்பநாதன், நாகராஜன், சுப்பிரமணியன், பழனிச்சாமி, தினேஷ்குமார், ராஜா, புண்ணிய மூர்த்தி, வெங்கடேசன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வாலிபர்கள் கலந்து கொண்டனர்.

வெண்மணி நினைவகம்: இன்சூரன்ஸ் ஊழியர்கள் ரூ.2 லட்சம் நிதி


தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பினர், வெண்மணித் தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் சிறப்புக் கூட்டம், திருவாரூரில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயுள் மற்றும் பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் எம்.குன்னிகிருஷ்ணன் தலைமை வகித்தார். தஞ்சை கோட்ட சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.புண்ணிய மூர்த்தி வரவேற்றார்.

கோவை கோட்ட சங்க பொதுச்செயலாளர் சுரேஷ், கோவையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக தொடங்கி இருக்கும் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் பணிகள் பற்றி குறிப்பிட்டார். விரைவில் இதேபோன்ற மையத்தைச் சென்னையிலும் தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் சாமுவேல்ராஜ், முன்னணி மேற்கொண்டுள்ள இயக்கங்களை பட்டியலிட்டார். இதில் இன்சூரன்ஸ் ஊழியர்களின் பங்களிப்பை பாராட்டினார்.

இந்திய தொழிற்சங்க மையத்தின் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர் அ.சவுந்தரராசன், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் க.சுவாமிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

வெண்மணி மண்டல கட்டடப் பணிக்கு இன்சூரன்ஸ் ஊழியர்களின் நிதியாக ரூ. 2 லட்சம், அ.சவுந்தரராசனிடம் வழங்கப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வளர்ச்சி நிதியாக ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது.

ராமகிருஷ்ணன் (பொது இன்சூரன்ஸ்) நன்றி கூறினார். கூட்டம் முடிந்ததும் அனைவரும் கீழவெண்மணி சென்று தியாகிகள் ஸ்தூபிக்கு வீரவணக்கம் செலுத்தினர். தென்மண்டல தலைவர் குன்னி கிருஷ்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

வெண்மணி தியாகிகளின் நினைவுநாள் : சிபிஎம் தலைவர்கள் வீரவணக்கம்


1968-ம் ஆண்டு டிசம்பர் 25 அன்று நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம், கீழவெண்மணியின் விவசாயத் தொழிலாளர்கள், அரைப்படி நெல் கூலியாக உயர்த்திக் கேட்டதாலும், தங்கள் குடிசைகளில் ஏற்றிய செங்கொடியை இறக்க மறுத்ததாலும், அதிகார வர்க்கத்தின் ஆணவம் பிடித்த நிலப்பிரபுத்துவக் கொடியவர்கள் கீழவெண்மணியை ரணகளமாக்கினார்கள். 44 பேரை ஒரே குடிசையில் வைத்துக் கொளுத்திச் சாம்பலாக்கினார்கள்.

உலக வரலாற்றில் நெஞ்சை உலுக்கும் கறுப்புக் கறைபடிந்த நாள் டிசம்பர் 25. அந்த வெண்மணி வீரத் தியாகிகளின் 41-ஆம் ஆண்டு நினைவு தின வீர வணக்க நாள் நிகழ்ச்சிகள் வெண்மணியில் வெள்ளிக்கிழமையன்று எழுச்சியுடன் நடை பெற்றன.

தலைவர்கள் மலரஞ்சலி

வீரவணக்க நாள் நிகழ்ச்சிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.முரு கையன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் செங்கொடியை எழுச்சிமிகு முழக்கங்களுக்கு இடையே ஏற்றி வைத்தார்.

அதைத்தொடர்ந்து, என்.வரதராஜன், மத்தியக்குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர் கோ.வீரய்யன், சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.சீனிவாசன், ஏ.லாசர், விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம், நாகை சட்டமன்ற உறுப்பினர் வி.மாரிமுத்து, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சி. பழனிவேலு, தஞ்சை மாவட்டச் செயலாளர் ஜி. நீலமேகம், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எம்.சின்னத்துரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலத் துணைச் செயலாளர் கோ.பழனிச்சாமி, நாகை மாவட்டச் செயலாளர் எம்.செல்வராஜ், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் பி.பத்மாவதி ஆகியோர் தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து, நினைவகத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி.தம்புசாமி, நாகை மாலி, பி.வைரன், எம்.நடராஜன், வி.சுப்பிரமணியன், கோவை.சுப்பிரமணியன், டி.கணேசன், ஜி.கலைச் செல்வி, மாவட்ட ஊராட் சித் தலைவர் ஜி.ஜெயராமன், தலைஞாயிறு ஒன்றியப் பெருந்தலைவர் வி.அமிர்தலிங்கம், கீழ்வேளூர் ஒன்றியப் பெருந்தலைவர் எஸ்.செல்லையன், கீழையூர் ஒன்றியப் பெருந்தலைவர் மல்லிகா சீனிவாசன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், மாணவர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஜோ.ராஜ்மோகன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கரிகாலன், பா.சரவணத்தமிழன், சாம்ராஜ், நாகை மாவட்டச் செயலாளர் வி.சிங்காரவேலு, திருவாரூர் மாவட்டச் செயலாளர் அருளரசன், எழுத்தாளர் சங்கத் தலைவர்கள் சோலை.சுந்தரப் பெருமாள், எல்.பி.சாமி, ந.காவியன், பி.செல்வராஜ், சிபிஎம் நாகை மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் திரளானோர் மலரஞ்சலி செலுத்தினர்.

நூல் வெளியீடு

தீக்கதிர் செய்தி ஆசிரியர் மயிலை பாலு எழுதிய ‘நின்று கெடுத்த நீதி’ (வெண்மணி வழக்கு - பதிவுகளும் தீர்ப்புகளும்) என்னும் நூலை மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் வெளியிட மத்தியக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

முனைவர் செ.த.சுமதி எழுதிய ‘வெண்மணிப் படுகொலைகள்’ (வரலாறும் கலை இலக்கியப் பதிவுகளும்) என்னும் நூலை கோ.வீரய்யன் வெளியிட, அ.சவுந்தரராசன் பெற்றுக் கொண்டார். இரு நூல்களையும் வெளியிட்ட ‘அலைகள்’ பதிப்பக உரிமையாளர் ‘அலைகள்’ சிவத்தை நாகை மாலி அறிமுகம் செய்து வைத்தார்.

நிறைவாக மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், இரு நூல்களையும் பற்றி உரையாற்றுகையில் இந்த இரு நூல்களும் வெண்மணியின் வரலாற்றுப் பொக்கிஷங்கள். இந்த வெண்மணி தியாக வரலாறுதான் நாளைய தேசத்தின் வரலாற்றை மாற்றப் போகிறது என்று குறிப்பிட்டார். சிபிஎம் கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் எம்.காத்தமுத்து நன்றி கூறினார்.

தீண்டாமையை கடைப்பிடிக்கும் சலூன்கடைக்கு எதிர்ப்பு

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் கொடுவாய் கிராமத்தில் தலித் மக்களுக்கு முடிதிருத்த மறுத்து தீண்டாமையைக் கடைப்பிடித்துவரும் சலூன் கடையை வாலிபர் சங்கத்தினர் ஆவேசத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சில நாட்களுக்கு முன்பு சுப்பிரமணி என்ற தலித் வாலிபர் அங்கு முடி திருத்தச் சென்றுள்ளார். அப்போது கடையில் யாரும் இல்லை. இருந்த போதிலும் சுப்பிரமணி தலித் என்ற காரணத்திற்காகவே அவருக்கு முடி திருத்த மறுத்துள்ளனர். இந்த இழிவை முடிவுக்குக் கொண்டுவர, வெண்மணி தியாகிகளின் வீரவணக்க நாளையொட்டி, அக்கடையை முற்றுகையிட்டு வாலிபர்கள் போராட்டம் நடத்தினர். வாலிபர் சங்க ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஏராளமான தலித் இளைஞர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு தீண்டாமைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முருகேஷ் தலைமை வகித்தார். வாலிபர் சங்க தலை வர்கள் ஆர்.காளியப்பன், எஸ்.முத்துகண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் பி.ராம மூர்த்தி, என்.ஆறுமுகம், பி.மோகன், வடிவேல், மணவாளன், லோகநாதன், ஜி.சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எதிர்ப்பு மறியல்

இந்நிலையில், ஆதிக்க சக்தியினரை தனிப்பட்ட முறையில் திரட்டிய மேற்படி சலுன் கடைக்காரர், அவ்வூரில் உள்ள இதர சலூன் கடைகளையும், பிற கடைகளையும் அடைக்கச் செய்து, வாலிபர் சங்கத்தினரை கைது செய்யக் கோரி திடீர் மறியலை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து அரசு நிர்வாகம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது.

போராட்டங்கள் வெற்றி

இது தவிர ஈரோடு மாவட் டம் நசியனூர், கோவை மாவட்டம் புளியகுளத்தில் சமுதாயக்கூடம் திறப்பு, விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஒன்றியம் நல்லமநாயக்கன்பட்டியில் முடிதிருத்தப் போராட்டம் போன்ற இயக்கங்களையும் வாலிபர் சங்கத்தினர் வெற்றிகரமாக நடத்தினர். மேலும் மதுரை, சென்னை, புதுக் கோட்டை, உளுந்தூர்பேட்டை, சேலம், சிவகங்கை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இவ்வியக்கங்களில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில அமைப்பாளர் பி.சம்பத், வாலிபர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆர்.வேல்முருகன், இல.சண்முகசுந்தரம், எஸ்.பாலா, லெனின், ஜா.நரசிம்மன், என்.முத்துராஜ், குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இப்போராட்டங்களில் பங்கேற்ற வாலிபர் சங்க ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ள சங்கத்தின் மாநிலத் தலைவர்கள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, எஸ்.கண்ணன் ஆகியோர், தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமை எத்தனை எத்தனை வடிவங்களில் உள்ளது என்பதை தமிழக அரசு கவனிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

டிசம்பர் 30ம்தேதி நாகை, சத்தியமங்கலத்திலும், ஜனவரியில் புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களிலும் நேரடி நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க போலீசார் தடை : வாலிபர் சங்கத்தினர் கைது

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பழையபட்டினம் கிராமம். இக்கிராமத்தில் தலித், முஸ்லிம், கிறிஸ்தவ, ரெட்டியார் சமூகங்களை சார்ந்த மக்கள் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனர்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. ஊராட்சி அலுவலகம், நூலகம் மற்றும் கட்சிக் கொடிகம்பங்கள் உள்ள அரசு இடத்தில் சிலை நிறுவப்பட்டது.

எனினும், அங்குள்ள ஒரு சமூகத்தை சேர்ந்த சிலர், அம்பேத்கர் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இச்சிலைக்கு மாலை அணிவிக்கவும் விடமாட்டோம் என்றும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இப்பிரச்சனையை தீர்க்க அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.

இந்நிலையில், வெண்மணி தியாகிகளின் வீரவணக்க நாளான டிசம்பர் 25, 2009 அன்று, டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் போராட்டத்தை வாலிபர் சங்கம் அறிவித்தது.

இப்பிரச்சனை தொடர்பாக வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறிப்பிட்ட சமூகத்தினரின் பிடிவாதத்தால் தோல்வி அடைந்தது. எனவே, போராட்டம் நடந்தே தீரும் என வாலிபர் சங்கத்தினர் கூறினர்.

இந்நிலையில் பழையபட்டினம் கிராமத்திற்குள் செல்லும் சாலைகள் அனைத்துக்கும் போலீசாரால் சீல் வைக்கப்பட்டது. கிராமத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு யாரையும் கிராமத்திற்குள் அனுமதிக் கவில்லை. விருத்தாசலத்தில் இருந்து பழையபட்டினம் கிராமத்திற்கு செல்லும் சாலைகளையும் போலீசார் மற்றும் உளவுத்துறையினர் கண்காணித்தனர்.

கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர், இரண்டு துணை கண்காணிப்பா ளர், அதிரடிப்படையினர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட போலீசார் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிப்பதை தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வாலிபர் சங்கத்தினர் வாகனங்களில் பாதிதூரம் வரை வந்து, வாகனத்தில் இருந்து இறங்கி முந்திரிக் காடுகள் வழியாக நடந்தே போராட்டக் களத்திற்கு விரைந்தனர்.

“அம்பேத்கருக்கே தீண்டாமையா? என்ற முழக்கத்துடன் பழையபட்டினம் அம்பேத்கர் சிலை அருகே விரைந்த வாலிபர் சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அதைத் தொடர்ந்து சங்கத்தினர் இரண்டு மணிநேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். வாலிபர் சங்கத்தை சேர்ந்த 200 பேரும், தலித் மக்கள் 300 பேரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்ட னர்.

காவல்துறை அதிகாரிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அரசு தடைவிதித்துள்ளது; அதனால் மாலை அணிவிக்க முடியாது என்றனர். இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் என்ன தீவிரவாதியா? எல்லோருக்கும் பொதுவானவர்தானே என்று வாலிபர் சங்கத்தினர் கேட்க அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்திற்கு வாலிபர் சங்க வட்டச் செயலாளர் பொன்.சோமு தலைமை தாங்கினார், மாவட்டத் தலைவர் என்.எஸ்.அசோகன், மாவட்டச் செயலாளர் கே.ராஜேஷ் கண்ணன், பொருளாளர் வி.ராமகிருஷ்ணன், துணை செயலாளர் பி.வாஞ்சி நாதன், விவசாயத் தொழிலாளர் சங்க வட்டச் செயலாளர் வி.சிவஞானம் உள்ளிட்டோர் கைதாகினர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் கே. கந்தசாமி, வழக்கறிஞர் சங்க தலைவர் ஏ.சந்திரசேகரன் ஆகியோரை வழியிலேயே கைது செய்தனர். வாகனத்தில் வாலிபர் சங்கத்தினர் வந்ததால் 3 வாகனங்களை பறிமுதல் செய்து, 3 ஓட்டுநர்களையும் கைது செய்தனர்.

பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால், ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மாவட்டம் முழுவதும் வாலிபர்களை திரட்டி இப்போராட்டத்தை மீண்டும் நடத்துவோம் என்று வாலிபர் சங்கம் அறிவித்துள்ளது.

நாமக்கல் அருகே வாலிபர் சங்கப் போராட்டம் வெற்றி


வெண்மணி தியாகிகள் தினமான டிசம்பர் 25 வெள்ளியன்று தீண்டாமை கொடுமைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழகம் முழுவதும் நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. இதையொட்டி திருச்செங்கோடு அருகே கொக்கராயன்பேட்டையில் வாலிபர் சங்கத்தினர் தலைமையில் தலித் மக்கள் வெள்ளியன்று எழுச்சியுடன் ஆலயம் நுழைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் பள்ளிபாளையம் அருகே இருப்பது, கொக்கராயன் பேட்டை. இங்கு பழைமை வாய்ந்த பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் பராந்தக சோழன் காலத்தில் அமைக்கப்பட்ட இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கண்காணிப்பில் உள்ள போதிலும், தலித் மக்கள் கோவிலினுள் சென்று வழிபட முடியாத நிலை இருந்தது. ஆதிக்க சாதியினர் தலித் மக்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுத்து வந்தனர். இந்த அநீதியை முடிவுக்குக் கொண்டுவர, தலித் மக்களுடன் ஆலயத்திற்குள் நுழைவோம் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவித்தது.

இந்நிலையில், கடந்த 21.12.2009- அன்று வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். அதில், அனைத்து தரப்பு மக்களும் கோயிலுக்குள் சென்று வழிபட யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை என்றும், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் ஆலய நுழைவுப்போராட்டம் நடத்த ஒத்துழைப்பு தருவ தாகவும் கோயில் நிர்வாகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து வெண்மணி நினைவு தினத்தன்று வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு தலைமையில் ஆலய நுழைவு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.ரங்கசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.பெருமாள், எம்.அசோகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சி.துரைசாமி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர்கள் ந.வேலுசாமி, எஸ்.சுரேஷ், இ.கோவிந்தராஜ் மற்றும் திரளான தலித் மக்கள் ஆலயத்துக்குள் நுழைந்து வழிபாடு செய்தனர். போராட்டத்தையொட்டி கொக்கராயன்பேட்டையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், தலித்துக்கள் கோயிலுக்குள் நுழைய ஏற்பாடு செய்த வருவாய்க் கோட்டாட்சியரை பணிநீக்கம் செய்ய வேண்டுமெனக் கூறி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கண்டனம்

இச்செயலுக்கு வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர்கள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, எஸ்.கண்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே தலித் மக்களை பயமுறுத்தும் வகையில் ஆதிக்க சக்தி யினர் அராஜகமாகப் பேசியதையும், இதனால் தலித் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இதை காவல்துறை கணக்கில் கொண்டு தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

செவ்வாய், 5 ஜனவரி, 2010

சாதியக் கொடுமைகளை முறியடிக்க முற்போக்கு சக்திகள் இணைந்து போராட வேண்டும் - என்.வரதராஜன் அழைப்பு


நாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் கடந்த பின்னரும் சாதியக் கொடுமைகள் ஆழமாகிக் கொண்டிருக்கின்றன; அவற்றை எதிர்கொண்டு முறியடிக்க முற்போக்கு சக்திகள் கைகோர்த்துப் போராட வேண்டியுள்ளது என்று கோவையில் என். வரதராஜன் கூறினார்.

தந்தை பெரியாரின் 36 வது நினைவுதினத்தை யொட்டி வியாழனன்று நடந்த நிகழ்ச்சியில் கோவை காந்திபுரம் நகரப்பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் சாதியக் கொடுமைகளுக்கு எதிராக கடும் போராட்டம் நடத்தியவர் பெரியார். தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து வைக்கம் வரை சென்று போராடினார். பெண்ணடிமைத் தனத்திற்கு எதிராக அழுத்தமான கருத்துக்களை முன்வைத்தவர்; சமத்துவத்தை வலியுறுத்தியவர். இந்திய நாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் கடந்த பின்னரும் இத்தகைய கொடுமைகள் இன்னும் ஆழமாகிக் கொண்டிருக்கிறது. இன்று அக்கொடுமைகளை எதிர்கொண்டு முறியடிக்க ஜனநாயக முற்போக்கு சக்திகள் கைகோர்த்துப் போராட வேண்டியுள்ளது. அந்த உணர்வின் அடையாளமாக இன்று பெரியார் நினைவினை கடைப்பிடிக்கிறோம், என்றார்.

நிகழ்ச்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் யு.கே.வெள்ளிங்கிரி, மாநிலக் குழு உறுப்பினர் கே.சி.கருணாகரன், தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் சி.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கருப் பையா, சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகிகள் வி.பெருமாள், வழக்கறிஞர் வெண்மணி, வி.சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

வெண்மணித் தியாகிகள் புகழ் நிலைக்கட்டும் ! - அ.சவுந்தரராசன்

1968 டிசம்பர் 25. எத்தனை ஆண்டுகளாயினும் எண்ணுந்தோறும் நெஞ்சம் கொதிக்கும் வெங்கொடுமை நடந்த நாள். அன்றுதான் கீழ் வெண்மணி என்ற கிராமத்தில் ஒரு குடிசை வெந்து தணிந்தது. அதனுள்ளே இருந்த 44 மனித உயிர்கள் உடல்கருகி செத்து மடிந்தன. ஆண்டைகளின் அடியாள் கூட்டம் போலீஸ் துணையோடு குடிசையைக் கொளுத்திக் கொல்லிக்கட்டைகளாய் கோரக் கூத்தாடி குதித்தது. தமிழகம் வெட்கித் தலைகுனிந்து வெதும்பி நின்றது.

ஆண்டவன் அருளிய வேதங்களின் வழியாய், ‘புனிதம்’ பெற்று வந்த வருணாசிரமத்தின் கடைநிலை மக்கள் தீண்டவும் தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டார்கள். அந்த மக்கள் தஞ்சைத்தரணியில் உழவுப் பணி செய்யும் கூலிக்கூட்டத்தவர்கள். எத்தனையோ தலைமுறை முடிந்தபிறகும் முடிவுறாத இந்தத் தீண்டாமைத் தீமைக்கு எதிரான கலகக்கொடியை கம்யூனிஸ்டுகள் உயர்த்தினார்கள்.

அடிமைத்தனத்தை உடன்பிறப்பாய் கருதி அதற்கு உடன்பட உதிரத்தில் ஏற்றப்பட்ட அந்த மக்களுக்கு, செங்கொடி புதுப்பார்வை யைத் தந்தது. பிறப்பால் ஏற்றத்தாழ்வும், இழிவும் கற்பிப்பதைக் காரித்துப்பச் சொன்னது செங்கொடி. அந்த மக்களை அணிதிரட்டும் அரும்பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பி. சீனிவாசராவ் என்ற செஞ்சட்டைப் போராளி, “ உன்னை அடித்தால் திருப்பி அடி” என்று அவர்களது அடிமைத்தன உதிரத்தை எதிர்திசையில் பாயவைத்தார். காலில் செருப்பணிவது, தோளில் துண்டு போடுவது என்று ஒவ்வொரு தீண்டாமை வடிவத்திற்கும் முடிவுரை எழுதப்பட்டது.

ஒன்றுபட்ட உறுதிகொண்ட வலிய படையாய் அந்த மக்களை மாற்றிட விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டது.

அந்த மக்களை அடக்கி, ஒடுக்கி, சாட்டையை சொடுக்கி இன்பந்துய்த்து வந்த மிராசுக்கூட்டத்திற்கும், ஜாதி வெறியர்களுக்கும் இந்த பரிணாம வளர்ச்சி வயிற்றைக் கலக்கியது. இந்த மக்களுக்கும், சங்கத்திற்கும், செங்கொடிக்கும் எதிராய் கொடிய வன்முறைகள் ஏவிவிடப்பட்டன. எண்ணற்ற தோழர்கள் காயம்பட்டார்கள், களப்பலியானார்கள். எனினும் இழப்பதற்கு இழிவைத்தவிர வேறேதுமற்ற அந்த இரும்புநிறக்கூட்டம் உருக்கு நிகர் உறுதியைக் காட்டியது.

உழுபவனுக்கு நிலம் வேண்டும், உழைப்பதற்கு நியாயக்கூலி வேண்டும், பண்ணையடிமை முறை மாற வேண்டும் என முழங்கிய இந்த மக்களின் வீராவேசம் தஞ்சையை உலுக்கியது.

எப்படியும் இந்த மக்களை ஒடுக்கியே தீருவது என்று கங்கணங்கட்டிக் கொண்ட மிராசுகளின் கூட்டம் தங்களுக்கு என நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டது.

1968ல் கூலி உயர்வுக்கான போராட்டம் சூடுபிடித்த போது இறுதியில், நாள் கூலியாக அரைப்படி நெல் அதிகம் வேண்டும் என வேண்டப்பட்டது. அரைப்படி என்ன, 6 படி கூட உயர்வு தரத்தயார், ஆனால் செங்கொடியை இறக்கிவிட்டு, எமது சங்கத்தின் மஞ்சள் கொடிகளை ஊர்களில் பறக்கவிட வேண்டும் என்று மிராசுகள் கொக்கரித்தார்கள். கூலி உயர்வைக் கொட்டிக்கொடுத்தாலும் எங்களின் செங்கொடியை தாழ்த்தும் பேச்சிற்கே இடமில்லை என்று வியர்வைக்கூட்டம் நச்சென்று பதிலுரைத்தது.

அந்த வகையான ஒரு கிராமம்தான் கீழ் வெண்மணி. மிராசுகளின் தலைவன் இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் பண்ணைக் கருகில் இருந்த தலித் குடியிருப்பு.

1968 டிசம்பர் 25 இரவு அடியாள் கூட்டம் எதிர்பாராத தருணத்தில் திடீர்தாக்குதலை நடத்தி 44 மனித உயிர்களை உயிரோடு சாம்பலாக்கியது.

ஆண்டாண்டு காலமாய் அடங்கிக்கிடந்தவர்கள் உரிமை வேட்கை கொண்டால், ஆண்டைகள் கூட்டமும், அவர் சார்பாய் ஆளுங் கூட்டமும் என்னவெல்லாம் ஊழிக் கூத்தாடுவார்கள் என்பதற்கு வெண்மணியில் வெந்து மடிந்த மக்கள் சான்றாக இருக்கிறார்கள்...

எத்தனைக் கொடுமைகள் இழைத்தபோதும், கண்மணிகள் பலர் களப்பலியான போதும் செங்கொடியேந்திய வீரப்புதல்வர்களின் உறுதிகுலையாது என்பதற்கும் அந்த வெண்மணிதான் சான்று. இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் அழிந்தார்களே தவிர, உரிமைப்போராளிகள் உறுதிபட முன்னேறியே வருகின்றனர்.

தலித் மக்களை ஒரு தலித் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்று, அந்த மக்களுக்கு அரசியலிலும் தனிச்சேரி அமைக்கும் முயற்சி நடக்கிறது. ஜாதி அடையாளத்தோடு தலையெடுக்கும் அமைப்புகளுக்கு உண்மை பலம் வராது. சமூக ஒடுக்குமுறைகளை எதிர்க்கும் ஜனநாயக எண்ணங்கொண்ட எல்லா மக்களையும் இணைத்துத்தான் தீண்டாமை போன்ற கொடுமைகளை ஒழிக்க முடி யும். தஞ்சையில் தலித் மக்களை எழுச்சியூட்டி எதிர்வினையாற்றச் செய்தவர்கள் பிறப்பால் தலித்துகள் மட்டும் அல்ல. நிலம்,கூலி, மரியாதை என அங்கே சாதிக்கப்பட்டவை வேறு எங்கும் சாதிக்கப்படவும் இல்லை.


உழைப்பவர் யாவரும் ஓர் குலம் என்று முழங்கி தமிழகத் தொழிலாளி வர்க்கம் கீழ் வெண்மணி தியாக திருப்பூமியில் ஒரு கம்பீரமான நினைவாலயத்தை எழுப்பி வருகிறது. முற்றிலும் கருங்கற்களால் இந்த நினைவாலயம் எழுப்பப்பட்டு வருகிறது. இந்தக் கட்டிடத்தில் ஒரு செங்கல்கூட இருக்காது.

இந்த நினைவாலயத்தை எழுப்பத் தொடங்கிய போது செய்யப்பட்ட மண் பரிசோதனை எங்களைத் துணுக்குற செய்தது. லட்சக்கணக்கான ஆண்டுகளாக ஆற்று நீர்பாய்ந்த இந்த பூமியில் 55 அடி ஆழம் வரை மண் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கிறது. எனவே 55 அடி ஆழத்திலிருந்து 110 கான்கிரீட் தூண்களை தரைக்குக்கொண்டுவந்து அதன் மீதுதான் நமது நினைவாலயம் எழுகிறது. இதுவரை மண்ணுக்குக் கீழேயே எமது திட்டத்தில் பாதிக்கு மேல் செலவாகிவிட்டது. உயிர் கொடுத்து உரிமைப் பயிர் விளைவித்த அந்த செம்புலத்தில் நாம் எண்ணியதை எண் ணியபடி செய்து முடித்தாக வேண்டுமல்லவா? இதற்குப் பணம் ஒரு தடையாகலாமோ?

சிஐடியு சங்கங்களும், சம்மேளனங்களும், அரசு ஊழியர் சங்கமும், எல்ஐசி, பிஎஸ்என்எல், ஆசிரியர், வங்கி போன்ற அரங்கங்களின் தொழிற்சங்க அமைப்புகளும் அளித்த நன்கொடையில் வேலைகள் நடக்கின்றன. மேலும் பணம் வேண்டும் எனக்கூறியவுடன் அரசுப்போக்குவரத்து சம்மேளனம் கல்தானம் என்று ரூ. 6 லட்சத்தை கோட்டாவிற்கு மேல் அள்ளித்தந்தது. தருமபுரி, திருவண்ணாமலை போன்ற சிறிய மாவட்டங்கள் கூட இலக்கைத்தாண்டி தந்துள்ளன. திருப்பூரில் ஆர்.ஈஸ்வரன் என்ற தோழர் தனது பணிக்கொடை பணமான ரூ. 50 ஆயிரத்தை தந்து மகிழ்ந்தார். இப்படி தனிநபர் பட்டியலும் மிகப் பெரியது.

ரூ. 5000 வழங்குவோரின் பெயர் வெண்மணியில் கல்வெட்டில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்ட பிறகு பலர் பணம் அனுப்பி வருகின்றனர். ஒவ்வொரு சங்கமும், போக்குவரத்தில் ஒவ்வொரு பணிமனையும், மின்சாரத்தில் ஒவ்வொரு கிளையும் ரூ. 5000 செலுத்தவும், கல்வெட்டில் இடம்பெறவும் முடிவு செய்துள்ளன.

திருப்பூரைச் சேர்ந்த ஜி.எம்.லோகநாதன், ஆர்.ஆறுமுகம் ஆகிய இரண்டு தோழர்கள் மட்டும் முகப்புக் கதவைத் தங்களின் சொந்த செலவில் செய்து தருகிறார்கள். இந்த முகப்புக் கதவின் செலவு மட்டும் ரூ. 2 லட்சம். இந்த வர்க்க உணர்வை எந்த வார்த்தைகளில் பாராட்டுவது? இதைப்போலவே இதர ஜன்னல்கள், கதவுகளைத் தர பலர் முன்வர வேண்டும்.

2010, மே 30 சிஐடியுவின் 40-வது அமைப்பு தினம் ஆகும். இந்த 40-வது அமைப்பு தினத்தில் வெண்மணி நினைவாலய கட்டிடத்தின் திறப்பு விழாவை தமிழகத் தொழிலாளர்களும், விவசாயிகளும், இடதுசாரி போராளிகளும் இணைந்து நடத்தப்போகிறோம்.

வெண்மணி நினைவாலய மலர் ஒன்று வெளியிடப்படுகிறது. அதற்கான விளம்பரங்களை நிறைவு செய்ய ஒவ்வொருவரும் உதவ வேண்டும்.

இந்த நினைவாலயத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பல நாட்கள் தங்கி பயிற்சி பெறும் முகாம்கள் நடத்திட, இங்கே தமிழக உழைப்பாளி வர்க்கம் சந்தித்த இதர போர்க்களங்களைப் பற்றி ஆய்விற்கான ஏற்பாடுகளைச் செய்திட,

தீண்டாமைக் கொடுமைகளின் கோர வடிவங்களை இந்தத் தலைமுறை அறியத்தக்க சித்திரக்கூடம் உருவாக்கிட,

உழைக்கும் வர்க்க கலைப்பட்டறைகளின் களமாக இதை மாற்றிட,

நினைவாலயப்பகுதி முழுவதும் சோலையாகவும், தோப்பாகவும் பொலிவு பெற்றிட,

மக்கள் வந்து செல்லும் தலமாய் தனிப்புகழ் எய்திட,

பெரும் கட்டமைப்பு வசதிகளை இங்கே உருவாக்க வேண்டியுள்ளது.

தொழிலாளர் - விவசாயிகளின் ஒற்றுமைத் தேர் வர்க்கப் போர் களத்தில் முன்னேறட்டும்!

இந்த ஆண்டு வெண்மணித் தியாகிகளின் நினைவை நிதி வழங்கிப் போற்றிடுவோம்! கம்பீரமாய் நினைவாலயம் கட்டி முடித்திடுவோம்! வெண்மணித் தியாகிகள் புகழ் நின்று நிலைக்கட்டும்!

கட்டுரையாளர் : பொதுச்செயலாளர்,

சிஐடியு, தமிழ்நாடு மாநிலக்குழு

அலட்சியம் செய்யப்படும் ஆதிதிராவிட மாணவர்கள் - தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆய்வில் அம்பலம்


ஆலந்தூர் நகராட்சிக்கு உட்பட்டது ஆதம்பாக்கம். இங்குள்ள அம்பேத்கர் சிலை அருகே உள்ளது திருவள்ளுவர் நடுநிலைப்பள்ளி. இந்த பள்ளி 1956ம் ஆண்டு நடராஜன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. கிராம நத்தம் ஊர்ப் புறம்போக்கில், சுமார் 10 கிரவுண்ட் பரப்பளவில் அமைந்துள்ளது. எனினும் முறையாக பராமரிக்கப்படாததால் பாழடைந்து கிடக்கிறது.

1200 மாணவர்கள், 32 ஆசிரியர்களுடன் செயல்பட்டு வந்த இந்தப் பள்ளியில் தற்போது 133 மாணவர்களும், 6 ஆசிரியர்களும் உள்ளனர். இவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் ஆதிதிராவிடர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பள்ளி தொடங்கப்பட்டது முதல் அரசு உதவிபெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. 20 வருடங்கள் வரை பள்ளியை பராமரித்து வந்த நடராஜன், 1977ம் ஆண்டு பெரம்பூரைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவருக்கு பள்ளி நிர்வாகத்தை மாற்றிக் கொடுத்தார். 15 வருடங்கள் பள்ளியை நடத்தி வந்த ஜார்ஜ் மறைந்தார். இதன்பின்னர் அந்த பள்ளி உதவி கல்வி அதிகாரியின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது.

இந்நிலையில் 1995-ம் ஆண்டு கே.பி.வித்யாதரன்-பழனிமுத்து ஆகியோர் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் பள்ளியை நடத்தும் உரிமையை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

“இந்த பள்ளியை தரம் உயர்த்த எந்த முயற்சியும் வித்யாதரன் மேற்கொள்ளவில்லை. 2004-ம் ஆண்டு பள்ளியில் கட்டிடம் கட்ட ஆலந்தூர் நகராட்சி 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. அதனை வித்யாதரன் ஏற்க மறுத்துவிட்டார்.

பள்ளியை மூடிவிட்டு அந்த இடத்தை விற்பதற்கு வித்யாதரன் மறைமுகமாக முயற்சி மேற்கொண்டார். அதற்காக சில கட்டிடங்களை புதிதாக கட்டப்போவதாக கூறி இடித்தனர். ஆனால் கட்டிடம் எதுவும் கட்டவில்லை. வேறு சில முறைகேடுகளிலும் வித்யாதரன் ஈடுபட்டார். அவர் மீது பொது மக்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து அதி காரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர் மீது அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க முயற்சித்தனர்.

இந்நிலையில், 2007 ஏப்ரல் 11-ம் தேதி பள்ளி நிர்வாகம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எத்திராஜனிடம் சென்றது. இவரும் பள்ளியை தரம் உயர்த்த எந்த முயற்சியும் எடுக்காத நிலைதான் உள்ளது என்று சிபிஎம் ஆலந்தூர் பகுதிச் செயலாளர் கே. பாலச்சந்தர் கூறினார்.


இந்தச்சூழ்நிலையில் அந்தப் பள்ளியை 22.12.2009 அன்று தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் பி.சம்பத் ஆய்வு செய்தார். இந்த பள்ளியை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை மனுவை, அவரிடம் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்களும், பொதுமக்களும் கொடுத்தனர்.

“எத்திராஜன் பொறுப்பேற்ற பிறகும் புதிதாக கட்டிடம் கட்டவில்லை. தற்போது உள்ள ஓடு போட்ட ஷெட்டுகளும் மழை பெய்தால் ஒழுகுகிறது. தலைமை ஆசிரியருக்கு கூட தனி அறை இல்லை. சத்துணவு சாப்பாடு செய்யவோ, அரிசி பருப்புகளை வைக்கவோ தனித்தனி அறைகள் கிடையாது. ஆசிரியர்கள் உட்கார ஊர் மக்கள் சார்பில் நாற்காலிகள் வாங்கி கொடுத்தோம்.

சிறு மழை பெய்தால் கூட பள்ளிக்குள் வெள்ளம் வந்துவிடும்; அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுகள் பள்ளிக்குள் வந்துவிடுகிறது. மழைக்காலங்களில் குட்டையாக காட்சி அளிக்கும் பள்ளிக்கூட மைதானத்திற்கு ஊர்மக்கள் சேர்ந்து, அவ்வப்போது மண் கொட்டி சிறிது மேடாக்கி வைத் திருக்கிறோம். பள்ளிக்கென்று ஒரு காவலாளியும் கிடையாது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு கையூட்டு பெற்றுக் கொண்டு புதிதாக இரண்டு ஆசிரியர்களை எத்திராஜன் நியமித்தார். அதனை மாவட்ட கல்வி அதிகாரி ஏற்கவில்லை. ஆகையால், பள்ளியில் உள்ள 6 ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்து தலா 5 ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்.

இந்த பள்ளியின் எல்லைக்கு உட்பட்டு 9 ஆயிரம் மக்களை கொண்ட 2371 குடும் பங்கள் உள்ளன. இவர்களில் குறைந்தது 2 ஆயிரம் பேராவது மாணவர்களாக இருப்பார்கள். ஆசிரியர்கள் நன்றாக கற்பித்தாலும், குடிதண்ணீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை என்று கூறி பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க மறுக்கிறார்கள்.

கடந்த 25 வருடமாகவே பள்ளி மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்ய அதிகாரிகள் வருகிறார்கள்; ஆய்வு செய்கிறார்கள். இந்த மாதம் 18ம் தேதி கூட ஆண்டு ஆய்வு நடந்தது. ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை. பள்ளி இருக்க இருக்க தரம் தாழ்ந்துகொண்டேதான் செல்கிறது.

இந்த பள்ளியை அரசு ஏற்க வேண்டுமென்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த இறையன்பு அப்போது பரிந்துரைத்தார். ஆனால் அரசு மெத்தனமாக உள்ளது. இந்த பள்ளி உருப்பட ஒரே தீர்வு அதை அரசு ஏற்க வேண்டும் என்பதுதான்.

பள்ளியைச் சூறையாட மறைமுக முயற்சிகள் நடைபெறுகிறது. அதிகாரிகளும் இவர்களுக்கு உடந்தையாக உள்ளனர். இதனை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

பின்னர் அவர்களிடம் பேசிய பி.சம்பத், இந்த பிரச்சனையை முன்னுரிமை கொடுத்து கவனிப்பதாவும், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், உறுதி அளித்தார்.

இந்த ஆய்வின்போது தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சிபிஎம் நிர்வாகிகள் இளம்வழுதி, ரங்கன், வாலிபர் சங்கத் தலைவர்கள் கே.ஏ.சந்தோஷ், அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஜனவரி 8-ம் தேதிக்கு வாச்சாத்தி வழக்கு ஒத்திவைப்பு

தருமபுரி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் வாச்சாத்தி வழக்கு வரும் ஜனவரி 8ம் தேதி குறுக்கு விசாரணை நடத்த ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 20, 21, ஆகிய தேதிகளில் நடைபெற்ற குறுக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட 18 பெண்களில் 9 பேர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை சாட்சியாக அளித்தனர். பின்னர் நவம்பர் 13 அன்று நடைபெற்ற குறுக்கு விசாரணையில் மீதமுள்ள 9 பெண்கள் சாட்சியமளித்தனர்.

பின்னர் இவ்வழக்கில் டிசம்பர் 23 அன்று குறுக்கு விசாரணை மாவட்ட நீதிபதி எஸ். குமரகுரு தலைமையில் நடை பெற்றது. அரசு தரப்பு சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் ஜெயபால், எதிர்தரப்பு வழக்கறிஞர் வெங்கடேசன் ஆகியோர் ஆஜராகினர். சிறைவார்டன் மா. லலிதாபாய் சாட்சியமளித்தார். அப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் தனக்கு நேர்ந்த கொடுமைகளை தன்னிடம் கூறியதாக கூறினார். பாதிக்கப்பட்ட பெண்கள் சிறை சூப்பிரண்ட்டிடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கூறியதாகவும் அவர் கூறினார்.

பின்னர் நீதிபதி இவ்வழக்கில், ஜனவரி 8 அன்று குறுக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டார். அன்று மாவட்ட வனக்காவல் அதிகாரி துரைசாமி சாட்சியமளிக்கவுள்ளார். இவ்வழக்கில் எதிர்தரப்பு வழக்கறிஞராக விஜயராகவன் குறுக்கு விசாரணை நடத்துகிறார்.

டிச.25 அன்று தமிழகம் முழுவதும் 31 மையங்களில் தீண்டாமைக்கு எதிராக நேரடி நடவடிக்கை வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் தகவல்

வெண்மணி தியாகிகள் நினைவு தினமான டிசம்பர்25 அன்று தீண்டாமைக்கு எதி ராக 31 இடங்களில் ஆலய நுழைவு உள்ளிட்ட நேரடி நடவடிக்கைகளில் ஈடு படப்போவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் அறிவித்தார்.

இது தொடர்பாக 23.12.09 அன்று சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது வருமாறு:

தமிழகத்தில் 7ஆயிரம் கிராமங்களில் தீண்டாமை கொடுமை நிலவுகிறது என்று அரசே ஒப்புக்கொண்டுள்ளது. ஆலயங்களுக்குள் செல்லத் தடை, திருவிழாவில் பங்கேற்கத் தடை, தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை முறை, பொதுப்பாதையில் நடக்கத் தடை, செருப் பணிந்து நடக்கத் தடை, குளத்தில் குளிக்கத் தடை, குடிநீர் எடுக்கத் தடை, பொதுக்கடையில் முடிவெட்டிக் கொள்ள தடை, சைக்கிளில் செல்லத் தடை, மயானப் பாதையில் செல்ல தடை, மயானத்திற்கு ஒதுக்கிய இடம் ஆக்கிரமிப்பு என எண்ணற்ற வடிவங்களில் தீண்டாமை நிலவுகிறது. நகரங்களில் கூட வாடகை வீடு பெறுவது இயலாததாக இருக்கிறது.

ஆகவே, மாநில அரசு தீண்டாமையை ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பொது நடவடிக்கைகளிலும் தலித் மக்களை அனுமதிக்க வேண்டும். வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் முழுமையாக அமலாக்க வேண்டும். சிறப்பு உட்கூறு திட்ட நிதியை முழுமையாக செலவிட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.

44 விவசாயத் தொழிலாளர்களான தலித் மக்கள் எரித்து கொல்லப்பட்ட வெண்மணி நினைவு நாளான டிசம்பர் 25 அன்று 21 இடங்களில் நேரடி நடவடிக்கையும், 10 இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டை ஈஸ்வரன்கோவில் ஆலய நுழைவு போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ் பாபுவும், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, கோவனூர் பகுதிகளில் பொதுக்குளத்தில் குளிக்கும் போராட்டத்திற்கு செயலாளர் எஸ்.கண்ணனும், திருப்பூர் வேலம்பாளையத்தில் மயானத்திற்கு பாதை கேட்டு நடைபெறும் போராட்டத்திற்கு பொருளாளர் எஸ்.முத்துக்கண்ணனும் தலைமை தாங்குகின்றனர்.

மதுரை ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், வடசென்னையில் எஸ்.கே. மகேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

ஆலய நுழைவு போராட்டம், மயான ஆக்கிரமிப்பை அகற்றுதல், செருப்பணிந்து செல்லுதல், பொதுக்குளத்தில் தண்ணீர் எடுத்தல், அம் பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது, பொதுக் கடையில் சென்று முடிவெட்ட கோருவது, கழிப்பிடத்திற்குள் செல்வது, மாநகராட்சி சமூக நலக்கூடத்தை திறந்து விடுதல் என போராட்டங்கள் நடைபெறுகின்றன.

ஈரோடு மாவட்டம் நசியனூர், தொகுப்பு வீடு கட்ட ஒதுக்கிய தொகையை திருப்பி அனுப்பிய பஞ்சாயத்து தலைவரை கண்டித்தும், சுடுகாடு ஆக்கிரமிப்பை எதிர்த்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணம் நடைபெறுகிறது.

இவ்வாறு எஸ்.கண்ணன் கூறினார்.

இச்செய்தியாளர் சந்திப்பின் போது மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.

வாலிபர் சங்கப் போராட்டத்தால் அருந்ததியருக்கு முடிவெட்டப்பட்டது


இராஜபாளையம் அருகே அருந்ததியர் மக் களுக்கு முடிதிருத்தம் செய்ய, சாதி ஆதிக்க வெறியர்கள் விதித்திருந்த தடை உடைக் கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின், புதனன்று முதன் முறையாக அருந்ததியருக்கு முடிதிருத்தம் செய்யப்பட் டது.

இராஜபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் அருந்ததியர் மக்களுக்கு முடிதிருத்தம் செய்ய சாதி ஆதிக்கவெறியர்கள் தடை விதித்திருந்தனர். இதை எதிர்த்து, அக்கிராமத்தில் நடைபெற்ற- ஊர்ப்பெரியவர்கள், இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில், வாலிபர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் என்.முத்துராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.சாமுவேல்ராஜ், கிழக்கு ஒன்றியச் செயலாளர் மாரியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன் றியச் செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், தீண்டாமை கொடுமைக்கு எதிராக போராட்டத்தில் ஈடு படுவது என்று முடிவு செய்யப்பட்டு, அதைத்தொடர்ந்து, முதற்கட்டமாக வட்டாட்சியர் காளிமுத்துவிடம் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் வருவாய்த் துறை அலுவலர் விசாரணை செய்ததில், அருந்ததியர் மக்களுக்கு முடிவெட்ட மறுப்பது உண்மைதான் என்று ஊர்ஜிதம் செய்யப்பட் டது.

ஆகவே, 21-12-2009 அன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் சவரத் தொழிலாளி தமிழரசன், வட்டாட்சியர், காவல்துறை ஆய்வாளர் கார்த்திகைசாமி, அருந்ததியர் மக்கள், வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்ற சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அதில் முடிதிருத்தும் தொழிலாளி தமிழரசன் அன்றைய தினமே அருந்த தியர்களுக்கு முடிதிருத்த எழுத்துப் பூர்வமாக சம்மதம் தெரிவித்தார்.

இந்நிலையில் தலித்மக்கள் முடிதிருத்தத்திற்காக காத்திருந்தபோது, ஆதிக்க சாதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர், சவரத் தொழிலாளி தமிழரசனுக்கு அதிக அளவில் மதுவை வாங்கிக் கொடுத்து, அவரை நிதானமற்ற நிலையில், தலித் மக்கள் முன்பாக நிறுத்தி, இனி எப்படி முடிவெட்டுறீங்கன்னு பாப்போம்டா... என ஆதிக்க வெறியோடு கூறிவிட்டு சென்றார்.

ஏற்கனவே, வேலுச்சாமி அன்று காலை தலித்மக்கள் குடியிருப்புப் பகுதிக்கு வந்து சாதியைச் சொல்லி திட்டியதோடு, புகார் மனுவைத் திரும்பப்பெற வேண்டும் என மிரட்டிச் சென்றுள்ளார்.

எனவே, போராட்டக் குழுவினர் வேலுச்சாமியை தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும், சமாதான உடன்பாட்டை மீறிய தமிழரசன் மீதும் தனித் தனியாக புகார் அளித்தனர்.

இதன்பின் தமிழரசன் இரவு 9 மணியளவில், காவல் நிலையத்தில் வைத்து முடிவெட்ட சம்மதம் தெரிவித்தார். அதன்படி முனியாண்டி என்ற அருந்ததியருக்கு முடிதிருத்தம் செய்தார். பல வருடங்களாக உரிமை மறுக்கப்பட்ட தலித் மக்களுக்கு வாலிபர் சங்கம் நடத்திய போராட்டம் மூலம் உரிமை கிடைத்ததால் அருந்ததியர் மக்கள் மகிழ்ந்தனர்.

வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எல்.முருகன், மாவட்டப் பொருளாளர் பி.பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் சசிக்குமார், ஜெயக்குமார், ஊர் நாட்டாமை கருப்பன், மார்க்சிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ஜி.கணேசன், சண்முகவேல், முனியாண்டி, அம்மமுத்து, மாரிமுத்து ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

சாதிய மனோபாவத்தில் காவல்துறை நெல்லை ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி புகார்


சாதிய உள்நோக்கத்துடன் 3 கிராம தலித் மக்கள் மீது தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவதைக் கண்டித்து, நெல்லையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரி டம் மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் ஜெயராமனிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் வீ.பழனி தலைமையில் மேலக்கரை, அழகநேரி, சத்திரம்புதுக்குளம் பகுதிகளை சேர்ந்த மக்கள் கொடுத்துள்ள அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது :

தச்சநல்லூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கிராமங்களான மேலக்கரை, அழகநேரி, சத்திரம்புதுக்குளம் ஆகிய கிராமங்களில் தலித் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சில குற்றச் சம்பவங்கள் குறித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது தச்சநல்லூர் போலீசார் சாதிய உணர்வோடு உள்நோக்கம் கொண்டும், தலித் மக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் ஜாமீனில் வெளியே வர முடியாத செக்ஷனில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நியாயம் வழங்க வேண்டும்

இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.கிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.தியாகராஜன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் க.ஸ்ரீராம், தி.சந்திரசேகரன் மற்றும் கு.பழனி, வண்ணமுத்து உள்பட ஏராளமானோர் மனு அளிப்பில் கலந்து கொண்டனர்.

-(22.12.2009 அன்று செய்தியானது)

நெறிக் குறவர்களுக்கு பட்டா வேண்டும் - ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் நெறிக்குறவர்களின் வசிப்பிடங்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மா.சந் திரசேகரனிடம் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது.

மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன், திருத்துறைப்பூண்டி நகரச் செயலாளர் எம்.பி.கே.பாண்டியன், நெறிக்குறவர் சமூக மாவட்ட அமைப்பாளர் நாகூரான் ஆகியோர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது :

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, இடும்பாவனம், நீடாமங்கலம், பெரும்பண்ணையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான நெறிக்குறவர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான நலவாரியமும் செயல்பட்டு வருகின்றது. ஆனாலும், இவர்களின் வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் கிடையாது.

மேலும், நீண்ட காலமாக மாவட்டத்தில் பரவலாக வசித்து வரும் இவர்களுக்கு இலவச மனையோ, மனைப்பட்டாவோ இன்றுவரை வழங்கப்படவில்லை. இம்மக்கள் இதுகுறித்து பலமுறை கோரிக்கைகள் எழுப்பியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

எனவே, இவர்களுக்கு குடிமனைப்பட்டா, தொழில்புரிந்திட கூடுதல் கடனுதவி போன்றவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்கிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் வலியுறுத்தப்பட்டது.

-(21.12.2009 அன்று செய்தியானது)

மதுரையில் சிபிஎம் தலைமையில் பழங்குடி மக்கள் போராட்டம்


மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் எல்.கே.பி. நகர் பகுதியில் காட்டுநாயக்கன், சோழகர், ஆதியன் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சாட்டையடித்தும், குறிசொல்லியும் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் குடும்ப அட்டை வேண்டி மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு ஓராண்டிற்கு முன்னர் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் விசாரணை நடத்தி அட்டை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால், ஓராண்டு காலமாகியும் ஒருவருக்குக் கூட அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல் சாதிச்சான்றிதழ் வழங்குவதிலும் மாவட்ட நிர்வாகம் மெத்தனமாக உள்ளது.

இதையடுத்து, குடும்ப அட்டை, சாதிச்சான்று வழங்கக்கோரி, சக்கி மங்கலம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், காட்டுநாயக்கன், சோழகர், ஆதியன் சமூக மக்கள் காலை 10.30 மணிக்கு பூம்பூம் மாடுகளுடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எனினும் காலை 11.45 மணி வரை கிராம நிர்வாக அலுவலகத்தை அதிகாரிகள் திறக்கவில்லை.

போராட்டம் குறித்து எல்லப்பன் என்பவர் கூறுகையில், சாதிச்சான்று தர கலெக்டர் மறுப்பதால், எங்கள் சமூக குழந்தைகள் படிப்பைத் தொடர முடியாமல் சாட்டையடித் தொழிலுக்கு செல்கின்றனர். குறிசொல்லி பிழைப்பு நடத்துகின்றனர். நாங்கள் பிச்சை எடுப்பதாகக் கூறி எங்களை இழிவுபடுத்துகிறார்கள். சாதிச்சான்றிதழ் கொடுத்தால் எங்கள் குழந்தைகள் உயர்கல்விக்குச் செல்வார்கள். ஏனவே சாதிச்சான்றிதழ், ரேசன் அட்டை வழங்கும் வரை, எங்களது போராட்டம் தொடரும் என்றார்.

போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் தலைமை வகித்தார். சேகர், பசுபதி, முருகன், மணிமேகலை, சுமதி, அய்யுரு, கருப்பசாமி ஆகியோர் பேசினர்.

-(21.12.2009 அன்று செய்தியானது)

அருந்ததியர்கள் மீது பொய்வழக்கு வாபஸ் கோரி சிபிஎம் போராட்டம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியில் தலித் அருந்ததியர் மக்கள் மீது காவல்துறை பொய் வழக்கு போட்டதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபயணம் - ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பந்தல்குடி முதல் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ அலுவலகம் வரையிலான நடைப்பயணத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.சந்திரமோகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியன் நடைபயணத்தைத் துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.தாமஸ், எஸ்.பூங்கோதை ஆகியோர் பேசினர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.சாமுவேல்ராஜ் கண்டன உரையாற்றினார். அண்ணாத்துரை, கணேசன், செல்லத்துரை ஆகியோர் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

-(21.12.2009 அன்று செய்தியானது)

அசமத்துவம் நிலவும் நாட்டில் "பொதுத்திறமை" என்பது சாத்தியமல்ல! - பி.சம்பத் பேச்சு

கோவையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் பேசியதாவது:

வெற்று மனித நேயங்கள் ஒருபோதும் சமத்துவத்தை கொண்டு வராது. தமிழக முதல்வர் ‘தாழ்த்தப்பட்ட மக்கள் அடித்தட்டு மக்களல்ல, அடித்தளமானவர்கள்’ என்கிறார். அடித்தளமானவர்கள் என்றால் சமூகப் பொருளாதாரத் துறையில் அவர்களா ஆதிக்கம் செலுத்துகிறார்கள்?

இடதுசாரிகளின் சமூகப் பார்வையை புரிந்து கொள்ளாதவர்கள், வர்க்கப் போராட்டம் நடத்துவோருக்கு சமூகப் பிரச்சனையில் என்ன அக்கறை? என்று கேட்கின்றனர். இந்தியா

வில் வர்க்கமும், சாதியும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. இந்திய தலித் மக்களில் 99 சதவிகிதம் பேர் சொத்துக்களற்ற பாட்டாளி மக்கள். அதனால்தான் இரண்டையும் இணைத்துப் போராடுகிறோம்.

நமது நாட்டில் நிலவும் அசமத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் ‘பொதுத் திறமை’ என்று பேசுகிறார்கள். அது எப்படி சாத்தியம்? வளர்ப்பு, சூழல், வாய்ப்பு இணைந்தது தானே திறமை. பெற்றோர் படித்திருந்தால் தான், தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பார்களாம். அப்படியானால் தலித் மக்கள் எப்படிக் கல்வி பெற முடியும்?

கோவையில் துவங்கியுள்ள இந்த கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் அமைப்பு. இந்த அம்பேத்கர் மையம் செய்யும் பணி, அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய பணி. சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் இந்த மையத்தை பொறுப்பேற்றுத் தொடங்கும் அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கமும், அதன் ஊழியர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

தலித் மக்களின் 18 சதவிகித இடஒதுக்கீடு என்பது பொதுப்போட்டியில் தேர்வுசெய்த பின்னர்தான். ஆனால் 18 சதவிகிதம் இடஒதுக்கீடு போக பொதுப்போட்டியில் தலித்துகள் போட்டியிட முடியும் என்பதே மறுக்கப்படுகிறது. மறக்கடிக்கப்படுகிறது. எனவே நாம் நமது உரிமை

களைப் பெறுவதில் எப்போதும் விழிப்போடிருக்க வேண்டும்.

இவ்வாறு பி.சம்பத் பேசினார்..

டிச.30 - மாத்தூரில் கோயில் நுழைவுப் போராட்டம்- வாலிபர் சங்கம் அறிவித்தது

செம்பனார்கோயில் ஒன்றியம், மாத்தூரில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குள் நுழையும் உரிமை தலித் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது என்றும், மீறினால் மிகப்பெரிய கலவரம் ஏற்படும் என்று தலித் மக்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் களஆய்வில் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

இத்தகவலை மனு மூலமாகத் தமிழக முதல்வர் நாகை மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலக்குழு, நாகை மாவட்டத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவற்றுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

வாலிபர் சங்க நாகை மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின் தலைமையில் ஏ.ரவிச்சந்திரன், பி.ஏ.ஜி.சந்திரசேகரன், கே.பி.காரல் மார்க்ஸ், வி.எம்.சரவணன், ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் செம்பனார்கோயில் ஒன்றியம், மாத்தூரில், டிசம்பர் 13ம் தேதி தலித் மக்களின் நிலை யைப் பற்றி களஆய்வு செய்தனர்.

அதன் நிறைவில் அவர்கள் விடுத்த அறிக்கை வருமாறு:

மாத்தூரில் உள்ள மாரியம்மன் கோயில், மிகப்பழமையான ஒன்றாகும். 1998-ஆம் ஆண்டு இது புதுப்பிக்கப்பட்டது. சாதி இந்துக்களும், தலித் மக்களும் கோயிலுக்கு நிதி கொடுத்து வருகின்றனர். ஆனால், தலித் மக்களுக்கு கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்யும் உரிமை மட்டும் நெடுங்காலமாய் மறுக்கப்பட்டு வருகிறது. இதனை மீறினால் சாதி இந்துக்களினால் பெரிய கலவரம் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா மற்றும் தீ மிதி நிகழ்ச்சிகளுக்காக, வீதிகளைச் சுத்தம் செய்தல், தீ மிதிக்கான மரம் வெட்டுதல், திருவிழாக்காலங்களில் விளக்குகளைத் தூக்குதல் போன்ற வேலைகளுக்கு மட்டும் தலித் மக்களை, சாதி இந்துக்கள் பயன்படுத்து கின்றனர். ஆனால், கோயிலுக்குள் செல்லவோ, தீ மிதிக்கவோ தலித்துகளுக்கு உரிமை இல்லை.

எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மாத்தூரில், எவ்வித அச்சமும் இடர்பாடும் இல்லாமல் தலித் மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபடும் உரிமையை விரைவில் பெற்றுத் தர வேண்டும்.

அவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டது.

மேலும், டிசம்பர் 30 அன்று மாத்தூரில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

-(21.12.2009 அன்று செய்தியானது)

மலிவான விளம்பரம் தேடும் முதல்வர்: இரா.அதியமான் குற்றச்சாட்டு

கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில், டாக்டர் அம்பேத்கர் கல்வி, வேலை வாய்ப்பு பயிற்சி மையம், டிசம்பர் 20-ம் தேதி தொடங்கப்பட்டது.

இம்மையத்தின் தொடக்க விழாவுக்கு காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் கோவைப் பகுதி பொதுச் செயலாளர் வி.சுரேஷ் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் வி.பெருமாள் வரவேற்றார். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில், மையத்தை வாழ்த்தி, ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் இரா.அதியமான் பேசியதாவது:

அருந்ததியர் மக்களின் 25 ஆண்டுகாலப் போராட்டம், அருந்ததிய ஜனநாயக இயக்கங்களின் குரல், மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்குப் பின்னரே அருந்ததிய மக்களுக்கு உள்இட ஒதுக்கீடு கிடைத்தது. ஆனால், வள்ளுவர் கோட்ட விழாவில் பேசிய முதல்வர் தன்னிடம் தானே கோரிக்கை வைத்து நிறைவேற்றியதாகக் கூறுகிறார். அவர் சொன்னதுபோல் வலசை ரவிச்சந்திரனோ, துணை சபாநாயகர் துரைசாமியோ கோரிக்கை வைக்கவில்லை என்பது உண்மையாக இருக்கலாம், ஆனால் அதியமானோ, ஜக்கையனோ கோரிக்கை வைக்கவில்லையா? முதல்வர் இப்படிப் பேசியதன் மூலம் அருந்ததிய மக்கள் முகத்தில் கரிபூசிவிட்டார். எங்களுக்கு சலுகையோ பிச்சையோ தேவையில்லை. எங்கள் உரிமைகளைத் தாருங்கள் என்றுதான் கேட்கிறோம்.

மத்திய அரசின் தலித் சிறப்பு உட்கூறுத்திட்ட நிதியைத் தாருங்கள் என்கிறோம். ஆனால், ’பெண்சிங்கம்’ திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதியதால் கிடைத்த ரூ. 66 லட்சத்தை அருந்ததிய மாணவர்களுக்கு ஆளுக்கு ரூ. 5 ஆயிரம் கொடுக்கிறார். இதனால் பிரச்சனை தீர்ந்துவிடுமா? மருத்துவப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஐந்தாயிரம் எல்லாம் பாக்கெட் மணிதானே? எங்களை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள்? அரசாங்க பணத்தை. மக்கள் வரிப்பணத்தை வழங்க வேண்டியதுதானே? எங்களை ஏன் கொச்சைப் படுத்துகிறீர்கள்?

திருச்செந்தூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், உள் ஒதுக்கீடு சரியாக அமலாக வில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் என்.வரதராஜன் குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்த முதல்வர் நீண்டகாலமாக இருந்த கோரிக்கையை நிறைவேற்றினேன் என்றார். பிறகு எப்படி வள்ளுவர் கோட்டத்தில் மட்டும், நானே கோரிக்கை வைத்து நிறைவேற்றி னேன் என்கிறார். சிலர்கூறுவது போல் மற்ற கட்சிகளின் ஆதிதிராவிடர் நலப்பிரிவு அல்ல தீண்டாமை ஒழிப்பு முன்னணி. ஏனென்றால் மற்ற கட்சியின் பிரிவுகளில் அந்தந்த சாதியினரே தலைவர்களாக இருப்பார். இங்கு அனைத்து சமூகத்தவரும் தலைவர்களாக இருந்து குரல் கொடுப்பார்கள். அதை மிகச்சரியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திக் காட்டுகிறது.

இவ்வாறு இரா.அதியமான் பேசினார்.

நிகழ்ச்சியில் தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கே. சுவாமிநாதன், அருந்தமிழர் விடுதலை இயக்க மாநில அமைப்பாளர் கு.ஜக்கையன், ஆதித்தமிழர் விடுதலை முன்னணி மாநில அமைப்பாளர் கோவை ரவிக்குமார், கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் யு.கே.சிவஞானம், பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.கணேஷ் மற்றும் வழக்கறிஞர் வெண்மணி, பகுஜன் சமாஜ் கட்சி யின் மாநிலச் செயலாளர் இராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பயிற்சி மையத்திற்கு தலித்முரசு பத்திரிகை விற்பனையாளர் வேணுகோபால் ரூ. ஆயிரம் நிதி வழங்கினார்.

வலங்கைமான் வட்டத்தில் தீண்டாமை

வலங்கைமான் பேரூராட்சி- நான்காவது வார்டு வளையமாபுரத்தில், பேரூராட்சிக்குச் சொந்தமான பாதை வழியாக, இறந்த தலித் மக்களின் உடலை எடுத்துச் செல்ல ஆதிக்க சக்திகள் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றனர். மேலும், இந்த வட்டத்தில் குடிமனைப்பட்டா மற்றும் குடும்ப அட்டைகள் போன்றவை கிடைக்காமலும் தலித்மக்கள் அவதிப்படுகின்றனர்.

எனவே இந்தக் கொடுமைகளை எதிர்த்து ஜனவரி 8 அன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதென, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் அறிவித்துள்ளன. கட்சியின் மூத்தத் தலைவர் கோ.வீரையன், முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

-(19.12.2009 அன்று செய்தியானது)

தலித் மக்களுக்கான சிறப்பு நிதியை முறையாக செலவிடாத புதுவை அரசு

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஆலோசனைக்குழு கூட்டம், எல்.கலிவரதன் தலைமையில் நடைபெற்றது. முன்னணியின் புதுவை அமைப்பாளர் ஜி.ராமசாமி, நிர்வாகிகள் ராஜாங்கம் நிலவழகன், கொளஞ்சியப்பன்-தவமணி, லெனின், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், சிறப்பு உட்கூறு திட்ட நிதியை புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசு முறையாக செலவு செய்யாமல் வேறு திட்டங்களுக்கு திருப்பி விடுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி அரசு ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக மத்திய அரசிடம் நிதிபெற்று திட்டமிட்டு செலவிடுவதாக பெருமையடித்துக் கொள்கிறது. ஆனால் திட்ட நிதியை, உரிய காலத்தில் முறையாக செலவு செய்வதில்லை என மாநில பொதுக்கணக்குக் குழு புதுச்சேரி அரசு மீது குறைகூறியுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. இந்தப் போக்கு பட்ஜெட், திட்டம், நிதி ஒதுக்கீடு அரசின் செயல்பாடு ஆகியவை கேள்விக்குறி ஆகியுள்ளது.

மேலும், ஆதிதிராவிட நலத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 8.32 சதவீதம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் திட்ட நிதியில் 4.52 சதவீதம்தான் தலித் மக்களுக்கு சென்றிருக்கிறது. இது, தலித் மக்களின் வளர்ச்சியில் புதுவை அரசு கொண்டிருக்கும் அலட்சியமான பார்வையை அம்பலப்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டதோடு, புதுச் சேரி காங்கிரஸ் அரசும், தலித் சார் துறையும் உடனடியாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

எஞ்சிய சில மாதங்களில், திட்டத்தின் 95 சதவீத நிதியை செலவு செய்யும் வாய்ப்பே இல்லை. அவ்வாறு அவசர கதியாக செலவு செய்யுமேயானால் பெரும் ஊழல் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, எச்சரிக்கையோடும் முறைகேடுகள் இன்றி தலித் மக்களுக்கான திட்ட நிதியை செலவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.

கரையாம்பத்தூர் பகுதியில் ஆண்டாண்டு காலமாக நூற்றுக்கும் மேற்பட்ட தலித்மக்கள் சிறுசிறு பகுதியில் விவசாயம் செய்து வரும் நிலையில், அத்தகைய நிலங்களை அம்மக்களுக்கே பட்டா செய்து தரவேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

-(19.12.2009 அன்று செய்தியானது)