புதன், 23 டிசம்பர், 2009

தலித் மக்கள் நலனில் மேற்குவங்க ஆட்சி

32 வருட கால இடதுமுன்னணி ஆட்சியில் 84 சதவீத நிலங்கள், விளிம்பு நிலை மக்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன. இது அகில இந்திய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம்.

மேற்குவங்க மக்கள் தொகையில் 28 சதவீதமாக உள்ள தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு, மொத்த நிலவிநியோகத்தில் 54 சதவீதம் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த உதாரணத்தை வேறு எந்த மாநிலத்திலாவது காட்ட முடியுமா? பிறமாநிலங்களை ஒப்பிடும்போது மலைவாழ் மக்களுக்கும், தலித் மக்களுக்கும் மேற்கு வங்கத்தில்தான் அதிக அளவில் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதை நானோ மார்க்சிஸ்ட் கட்சியோ கூறவில்லை; மத்திய அரசின் கிராமப்புற வளர்ச்சி துறைதான் கூறுகிறது.

( 18.12.09 அன்று, சென்னையில் நிகழ்த்திய உரையில், மேற்குவங்க மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சூரியகாந்த் மிஸ்ரா )

மதுரை நகர தலித் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் : கள ஆய்வறிக்கை வெளியீடு

மதுரை நகர தலித் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்த கள ஆய்வறிக்கை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் வெள்ளிக்கிழமையன்று (18.12.09) மதுரையில் வெளியிடப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையை வெளியிட்ட முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், இக்கள ஆய்வு மதுரை நகரில் தலித் மக்கள் வசிக்கும் 25-க்கும் மேற்பட்ட பகுதிகளில், 50 கள ஆய்வாளர்களால் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறியியதாவது:

பொய்வழக்கு

நாகமலைப்புதுக்கோட்டையில் சைக்கிளில் சென்றதற்காக தலித் பிரிவைச் சேர்ந்த முருகனை ஆதிக்கச்சாதியினர் தாக்கிப் படுகாயப்படுத்தியுள்ளனர். ஆனால் முருகன் மீதே காவல்துறை வழக்குத் தொடர்ந் துள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கையை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. முருகன் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய்வழக்கை வாபஸ் பெற வேண்டும். அவரைத் தாக்கிய ஆதிக்கசாதி வெறியர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலித் தொழிலாளர்கள்

மயானங்களில், செருப்பு தைத்தலில், துப்புரவுப் பணிகளில் ஈடுபடுபவர்கள் தலித் தொழிலாளர்களே ஆவர். மயானப் பணிகள் அரசுப் பணி ளாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் பணி வரை முறைப்படுத்தப்பட வேண் டும். செருப்பு தைக்கிற தொழிலாளர்களுக்கு நிழற்குடைகள் அமைத்துத்தர வேண்டும். மக்கள் அதிகமாகக் கூடுமிடங்களில் தொழில் செய்வதற்கு உரிமம் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு வங்கிக் கடன் ஏற்பாடு செய்து, கந்துவட்டிக்காரர்களிடமிருந்து மீட்க வேண்டும். துப்புரவுப் பணியாளர் குழந்தைகளுக்கு ஷிப்டு முறைக் கல்விக்கு வழிவகை செய்ய வேண்டும். அனைத்து துப்புரவுப் பணியாளர்களுக்கும் அரசுக் குடியிருப்புகளை உறுதி செய்ய வேண்டும். 3000 துப்புரவுப் பணியாளர்களில் சில நூறு பேருக்கே தற்போது அரசுக் குடியிருப்புகள் உள்ளன. தலித் மக்கள் வாழும் பகுதியில் நிலங்களின் விலை மார்க்கெட் விலையை விட குறைவாக உள்ளதும் சாதி மனோபாவத்தின் வெளிப்பாட்டின் தன்மையாகும்.

சாதிய பாரபட்சங்கள்

மயான வண்டிகள் கிடைப்பதில் சிரமங்கள் உள்ளன. தண்டல்காரன்பட்டியில் கோவில் வழிபாட்டில் பிரச்சனைகள் உள்ளன. துப்புரவுப் பணிகளுக்கு தலித் அல்லாதோர் நியமிக்கப்பட்டாலும், அவர்களுக்கு நடைமுறையில் வேறு பணிகளை ஒப்படைக்கிற நிலை உள்ளது. இப்பிரச்சனைகளை ஆய்வு செய்து அவற்றைக் களைய உரிய முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

மதுரையில் 30-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாய் குடியிருந்து வரும் நிலையிலும் கூட தலித் மக்களுக்கு பட்டா வழங்கப்படாத நிலை பல பகுதிகளில் தொடர்கிறது. மஞ்சள்மேடு, மேலப்பொன்னகரம் மினி காலனி, இந்திரா நகர், சுப்பிரமணியபுரம் பள்ளம், சுப்பிரமணியபுரம் மாநகராட்சி காலனி, கீழ்மதுரை சி.எஸ்.ஆர். அரிசனக் காலனி, அனுப்பானடி- அம்பேத்கார் நகர், கரும்பாலை, விராட்டிபத்து கீழத்தெரு, அரசரடி அம்பேத்கார் நகர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் பட்டா கோரிக்கைகள் பல ஆண்டுகளாகப் பரிசீலிக்கப்படாமல் உள்ளன.

சுகாதாரச் சீர்கேடுகள்

கரும்பாலை, பந்தல்குடி, கோமஸ்பாளையம், இந்திராநகர், கோபாலிபுரம், கிருதுமால் வாய்க்கால் கரைகளில் நிலவும் சுகாதாரச் சீர்கேடுகள், தலித் மக்களின் அன்றாட வாழ்க்கையையே கேள்விக்குறி ஆக்குவதாக உள்ளன. சாக்கடையும் கொசுக்களும், குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட அனைவரின் உடல்நலத்திற்கும் பெரும் கேடுகளை விளைவிக்கின்றன.

கிருதுமால் வாய்க்கால் கரையில் துர்நாற்றத்தைத் தடுக்கும் வகையில், மேலவாசல் பகுதியில் தடுப்புச் சுவரை எழுப்ப வேண்டுமென்ற சாதாரணமான கோரிக்கை கூட அரசால் நிறைவேற்றப்படாத நிலை உள்ளது. பொதுக்கழிப்பறைகள் மூடப்பட்ட நிலை, கழிப்பறைகளில் தண்ணீர் வசதியின்மை, கட்டணக் கழிப்பறைகளுக்கு கூடுதல் செலவினம், பராமரிப்பு இன்மை ஆகியன பெரும் பிரச்சனைகளாக உள்ளன. குளிப்பதற்கும், துவைப்பதற்கும் ஒரு நபருக்கு ரூ. 8 செலவழிக்க வேண்டுமெனில், மக்களின் அன்றாட வருமானத்தில் பெரும்பகுதியை இழக்க வேண்டியுள்ளது.

தலித் மக்கள் வாழும் பகுதிகள் அரசின் பாராமுகத்திற்கு ஆளாகியிருப்பதன் வெளிப்பாடுகளே இந்த சுகாதாரச் சீர்கேடுகளாகும்.

அரசுத் திட்டங்களில் தாமதம்

முதியோர் பென்சன், கல்வி உதவித் தொகை, ஆதரவற்ற பெண்கள் உதவித் தொகை, கைம்பெண் உதவித் தொகை உள்ளிட்ட பயன்கள் கிடைப்பதில் காலதாமதம் உள்ளதாக புகார்கள் உள்ளன. அரசு நலத்திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் அரசின் தரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டும். அருந்ததியர் பகுதிகளில் அரசுத் திட்டங்கள் குறித்த செய்திகள் சென்று சேராமலேயே உள்ளன.

தண்ணீர் பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக உள்ளது. போதுமான குழாய்கள் அமைக்கப்பட வேண்டியுள்ளது. கோபாலிபுரத்தில் ஒரு பகுதி, மின்விளக்குகள் இன்றி இருண்டு கிடக்கிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் போதுமான மருந்துகள் இல்லை. மருத்துவர்களின் வருகையும், கவனிப்பும் உறு ப்படுத்தப்பட வேண்டியுள்ளது. மதுரையின் பல்வேறு பகுதிகளில் தலித் மக்களின் சாதிப்பெயரைக் குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள தெருப்பெயர்களை நீக்க வேண்டும். பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்திருந்தாலும்கூட தலித் மக்களுக்கு மதுரை நகரில் வீடு வாடகைக்கு வழங்கப்படுவதில்லை.

போராட்டம்

தலித் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வுகான அரசு நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளும் முயற்சிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு பி.சம்பத் தெரிவித்தார்.

இக்கோரிக்கைகளை முன்வைத்து, டிசம்பர் 25-ம் தேதி, 44 பேர் உயிரோடு எரித்து கருக்கப்பட்ட கீழ வெண்மணி தியாகிகள் வீரவணக்க நாளன்று, தீண் டாமை ஒழிப்பு முன்னணியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாநகர், புறநகர் மாவட்டக் குழுக்களும் இணைந்து பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை மதுரை காளவாசல் அருகே நடத்த உள்ளன என்றும் அவர் கூறினார்.

இப்பேட்டியின் போது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எம்.தங்கராசு, இணைஅமைப்பாளர்கள் இரா. இராசகோபால், எஸ்.கே.பொன்னுத்தாய், தென்மண்டல இன்சூ ரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் க.சுவாமிநாதன், மதுரை மாநகர்-புறநகர் வாலிபர் சங்கத் தலைவர்கள் ஜா.நரசிம்மன், உமாமகேஸ்வரன், வை.ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.

சமூகநீதியின் (அவ)லட்சணம்!

நாட்டின் வருங்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியப் பொறுப்பான மத்திய அமைச்சரகச் செயலாளர்கள் பொறுப்பில் ஒரு தலித்துகூட தற்போது இல்லை என்பது அம்பலமாகியுள்ளது.

இடஒதுக்கீடு சட்டரீதியாகத் தரப்பட்டும் அது முறையாக அமலாவதில்லை என்பது ஒருபுறம். ஒதுக்கீட்டுக்கான போராட்டங்கள் ஒருபுறம். அது முடிந்தவுடன் அதை நடைமுறைப்படுத்துவதற்கான போராட்டங்களை ஜனநாயக அமைப்புகள் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

தாங்கள் சரியான பாதையில்தான் செல்கிறோம் என்று மத்திய அரசுக்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சியும், திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக்கட்சிகளும் சொல்லிக் கொள்கின்றன. ஆனால் தலித்துகளின் சமூக, பொருளாதார, அரசியல் நிலையில் பெரும் மாற்றங்கள் தேவை என்ற நிலையே இன்னும் நீடிக்கிறது. மத்திய அரசின் செயலாளர்கள் பொறுப்பில் ஒரு தலித் கூட இல்லை என்ற விபரமும் இதைத்தான் காட்டுகிறது. இந்தப் புள்ளிவிபரத்தையும் அரசுதான் அளித்துள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசுகையில் மத்திய அமைச்சர் பிருத்விராஜ் சவுகான் இதைத் தெரிவித்தார்.

மத்திய அரசு பணிகளைப் பொறுத்தவரை, மொத்தம் 88 செயலாளர்கள், 66 கூடுதல் செயலாளர்கள், 249 இணைச் செயலாளர்கள் மற்றும் 471 இயக்குநர்கள் உள்ளனர். தலைமைப் பொறுப்பான செயலாளர்களில் ஒருவர் கூட தலித்து இல்லை. கூடுதல் செயலாளராக ஒரே ஒருவர் இருக்கிறார். இணைச்செயலாளர்களாக 13 பேரும், இயக்குநர்களாக 31 பேரும் பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கிறார்கள். பழங்குடியினத்தைச் சேர்ந்த நான்கு பேர் செயலாளர்கள் பொறுப்பில் இருக்கிறார்கள். ஒருவர் கூடுதல் செயலாளராகவும், ஒன்பது பேர் இணைச் செயலாளர் பொறுப்பிலும் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய நிலை நிலவிவரும் வேளையிலும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்வுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தலித்துகளுக்கு தரப்பட்டு வரும் சலுகைகளை வெட்ட வேண்டும் என்று மத்திய அரசின் தேர்வாணையம் பரிந்துரைகளை அளித்து வருகிறது. நகர்ப்புற பணம் படைத்தவர்களுக்கு சாதகமாக தேர்வு முறையை மாற்றுவது பற்றிய பரிசீலனையும் நடந்து வருகிறது. அதன் தலைவராக சில மாதங்களுக்கு முன்பாக பதவியேற்ற அகர்வால், பதவியேற்ற நாளிலிருந்தே இத்தகைய வேலைகளில்தான் முனைப்பாக இருந்து வருகிறார்.

- தீக்கதிர் கட்டுரை (19.12.09)

செவ்வாய், 22 டிசம்பர், 2009

அருந்ததிய மக்களுடன் சந்திப்பு : என்.வரதராஜனுக்கு உற்சாக வரவேற்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் அருந்ததிய மக்களைச் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், குறைகளைக் கேட்டு வருகிறார்.

ஏற்கெனவே, ரெட்டி யார்சத்திரம் ஒன்றியம், பழனி ஏரியா ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சந்திப்பு இயக்கங்களில் பங்கேற்றார். புதனன்று (16.12.09) குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள சின்னழகு நாயக்கனூர், கணக்கப்பிள்ளையூர், சூலப்புரம், கூம்பூர் புதூர் ஆகிய பகுதிகளில் அருந்ததிய மக்களைச் சந்தித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் வெடிமுழக்கங்களுடனும், தப்பாட்டம், தேவராட்டம், மங்கள வாத்தியங்கள் முழங்க அவருக்கு அருந்ததிய மக்கள் வரவேற்பளித்தனர். இந்நிகழ்ச்சியையொட்டி இந்த கிராமங்கள் விழாக் கோலம் பூண்டிருந்தன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.செல்வராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் கள் கே.ரங்கசாமி, ஏ.ராஜரத்தினம், குஜிலியம்பாறை ஒன்றியப் பெருந்தலைவர் ஆர்.ஆறுமுகம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வி.தர்மர், ஆர்.தியாகராஜன், எல்.தங்கவேல், எல்.ஜெயபால், டி.சௌந்திரராஜன், பி.பாலசுப்ரமணி மற்றும் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உள்ஒதுக்கீடு: உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு

இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் அருந்ததியருக்கான உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண் டுமென சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, சமூக நீதியை உயர்த்திப் பிடிப்பதாக உள்ளது என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்றது.

முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:

இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அருந்ததிய மக்களுக்கான உள்ஒதுக்கீடு என்ற நீண்ட கால கோரிக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அருந்ததிய அமைப்புகளால் முன்வைக்கப்பட்டு தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதற்கான அரசாணை 2009 ஏப்ரல் 29 அன்று வெளியிடப்பட்டது. இந்த ஆணை வெளிவருவதற்கு முன்பாக 5 ஆயிரத்து 773 இடைநிலை ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணை வந் திருந்தது. உள்ஒதுக்கீடுக்கான அரசாணை வந்தபோது அந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகள் நிறைவு பெறவில்லை. இதனால் பல ஆண்டுகளாக நீடித்து வந்த சமச்சீரற்ற நிலையைப் போக்குவதற்காக வந்த உள்ஒதுக்கீடு இந்த ஆசிரியர்கள் பணி நியமனத்திலும் வழங்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை எழுந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் கருணாநிதிக்கு கடிதமும் எழுதினார். ஆனால் அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்பாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகள் துவங்கிவிட்டதால் இந்த உள்ஒதுக்கீட்டை அதில் நடைமுறைப்படுத்த முடியாது என்று அரசிடமிருந்து பதில் வந்தது.

தற்போது வந்துள்ள உயர்நீதிமன்றத் தீர்ப்பு அரசின் நிலையை நிராகரித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த மேலான தீர்ப்பால் உள்ஒதுக்கீட்டின் அடிப்படையில் 173 அருந்ததியர்கள் உடனடியாக இடைநிலை ஆசிரியப் பணியில் அமருவார்கள். சமூக நீதியை உயர்த்திப் பிடித்துள்ள இந்தத் தீர்ப்பை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்கிறது. தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மாநில அரசை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது.

மின்வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி நியமனத்தில் அருந்ததியருக்கான உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி நீதிமன்றத்தில் மனு, தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மின்வாரியத்தில் நடக்கும் நியமனத்தில் உள்ஒதுக்கீடு குறித்து மின்வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந் நிலையில் மின்வாரிய நியமனங்களிலும் அருந்ததியருக்கான உள்ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

மேலும் அரசாணை வெளிவந்ததற்குப் பின்னர், இதேபோன்று இதர துறைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பும் பணி தொடங்கியிருப்பின், அத்துறைகளிலும் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு முறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட வேண்டுமென தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது.

தமிழக அரசு, உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்திடாமல் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டுமென அரசை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. (17.12.09)

நகராட்சி நிர்வாகத்தின் சாதிய மனோபாவம்

அருப்புக்கோட்டை நகராட்சியில், காலியாக இருந்த 17 துப்புரவுத் தொழிலாளர் பணியிடங்கள் அண்மையில் நிரப்பப்பட்டன.

இதில், 13 பேர் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய 4 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில், அருந்ததியர்கள் 13 பேரை மட்டும் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தும் நகராட்சி நிர்வாகம், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 4 பேரை மட்டும் துப்புரவுப் பணி அல்லாத வேறு பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. நகராட்சி நிர்வாகத்தின் இந்த சாதிய மனோபாவத்திற்கு கடும் கண்டனம் எழுந்தது.

இதுகுறித்து சிஐடியு சார்பில் நகராட்சி ஆணையாளருக்கு புகார் மனு அனுப்பப்பட்டது.

துப்புரவுப் பணிக்கென தேர்வு செய்தவர்களில் சிலரை மட்டும் வேறு வேலை செய்ய சொல்வது சாதிய கண்ணோட்டத்துடனான அணுகுமுறையாகும். இதுவும் தீண்டாமையின் ஒரு வடிவமே. அருந்ததியர் சமூகத்தை சார்ந்த துப்புரவு பணியாளர்களை மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துச் செய்திட நிர்ப்பந்தம் செய்வது எந்த வகையிலும் நியாயம் இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே இங்கு நடைபெற் றுள்ளன. இனியும் தொடரும் பட்சத்தில் சிஐடியு சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று சிஐடியு தனது புகாரில் கூறியது. (16.12.09)

புதன், 16 டிசம்பர், 2009

தலித் மயானப் பாதை அடைப்பு: சிபிஎம் தலைமையில் சடலத்துடன் மறியல்

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள கே.வி.குப்பம் ஒன்றியத்திற்கு உட்பட்டது செஞ்சி ஊராட்சி. இங்குள்ள தலித் காலனியில் 600-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.

அதேபகுதியைச் சேர்ந்த கோபால்நாயுடு என்பவருக்குச் சொந்தமான நிலத்தைத்தான் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தலித் மக்கள் மயானப் பாதையாக பயன்படுத்தி வந்தனர். இதற்கு கிராமத்தில் உள்ள ஆதிக்க சக்திகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் தலித் காலனியைச் சேர்ந்த பெருமாள் மனைவி லட்சுமி (65) வெள்ளியன்று இரவு இறந்தார். இவரது சடலத்தை அடக்கம் செய்ய சனிக்கிழமை மாலை மயானத்துக்குக் கொண்டு சென்றனர். அப்போது முட்கள் மற்றும் தென்னை மரங்களால் மயானப் பாதை அடைக்கப்பட்டிருந்து. இதை கண்டு ஆவேசமைந்த தலித் மக்கள், உறவினர்களுடன் சடலத்தை சாலையில் வைத்து மறி யலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த காட்பாடி தாசில்தார் ரேணு, காவல் ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து, தலித் மக்களிடமும், பட்டா நிலத்தின் உரிமையாளரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் ஏ.நாராயணன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.டி.சங்கரி, எம்.வி.எஸ்.மணி, தாலுகா செயலாளர் ஏகநாத ஈஸ்வரன், ராமச்சந்திரன், செந்தாமரை உள்ளிட்டோர் அரசு அதிகாரிகளிடம் பேசினர். சட்டம்- ஒழுங்கு சீர்குலையாமல் இருக்க தலித்மக்கள் பயன்படுத்திய மயானப்பாதையின் முள்வேலியை அகற்ற வலியுறுத்தினர்.

இதுபற்றி வேலூர் மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரனிடம் தொலைபேசியில் தகவல் கொடுத்தார் தாசில்தார் ரேணு. அதைத்தொடர்ந்து தற்காலிகமாக வழி விடுவது எனவும், ஓரிரு நாளில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் துரைசாமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் முட்களை, மரங்களை அகற்றி மயானப் பாதையைச் சீர் செய்தனர். இதனால் 4.30 மணியில் இருந்து 5.30 வரை நடைபெற்ற மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

வன மக்களுக்கு பட்டா வழங்க டில்லிபாபு எம்எல்ஏ கோரிக்கை

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டம் மிகவும் பின்தங்கிய பகுதியாகும் மலைவாழ் மக்கள், இருளர் குருமன் மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகமாக வனப்பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்கள் மூன்று தலைமுறைகளாக விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால் பல ஆண்டுகளாகியும் இவர்களுக்கு நிலப்பட்டா வழங்கப்படவில்லை.

குறிப்பாக மலைக் கிராமமான பிக்கன அள்ளி, திம்மராயன அள்ளி, மகேந்திர மங்களம், பௌமாரன அள்ளி, குண்டாங்காடு, வீரசாமனூர்மலை, கண்டகபைல் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மலைக் கிராம மக்கள், பட்டா கேட்டு நீண்டகாலம் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், வனப்பகுதியில் வசித்துக் கொண்டு, விவசாயம் செய்துவரும் மக்களுக்கு வன உரிமை சட்டத்தின் கீழ் பட்டா வழங்கக் வேண்டுமென தருமபுரி கோட்டாட்சியர் மணிவண்ணனிடம் 261 மனுக்களை பி.டில்லிபாபு எம்.எல்.ஏ. வழங்கினார்.

அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன், மாவட்டப் பொருளாளர் கே.காளியப்பன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ்.கே.கோவிந்தன், எஸ்.பி.சின்னராசு, வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

வேப்பங்குளத்தில் தொடரும் தீண்டாமைக் கொடுமை

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது டி.வேப்பங்குளம் கிராமம். இங்குள்ள தலித் மக்கள், சமீபத்தில் ஆதிக்க சமூகத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டனர். தலித் மக்கள் ஊரையே காலி செய்து வேறு இடத்தில் குடியேறும் நிலை ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியர் சிஜிதாமஸ்வைத்யன் சமாதான கூட்டம் நடத்தி அம் மக்களை அங்கே மீண்டும் குடியமர்த்த நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில் வேப்பங்குளத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.சேகர், கே.சாமுவேல்ராஜ், சி.முருகேசன் ஆகியோர் நேரில் சென்று தலித் மக்களைச் சந்தித்தனர்.

அப்போது, உள்ளூர் கடைகளில் தலித் மக்களுக்கு பொருட்கள் வழங்க ஆதிக்க சக்தியினர் தடை விதித்திருப்பதும், குழந்தைகளுக்கு பால் போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கூட வழங்கக்கூடாது என்று அவர்கள் தடை செய்திருப்பதும், அதேபோல தலித்துக்களுக்கு வேலை வழங்க மறுப்பதும், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் தர மறுப்பதும் என சாதியக் கொடுமை தாண்டவமாடுவது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஞானகுரு ஆகியோர் மாவட்ட ஆட்சியர் சிஜிதாமஸ்வைத்யனை நேரில் சந்தித்து மனுக்கொடுத் தனர்.

தலித் மக்கள் மீதான தீண்டாமைக் கொடுமைகளை தடுக்க உறுதியான நடவடிக்கையை எடுப்பதுடன், டி.வேப்பங்குளம் தலித் மக்கள் வியாபாரக் கடைகள் துவங்க அரசு கடனுதவி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

செய்யூர் அருகே தலித் மக்கள் மீது தாக்குதல்

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே உள்ளது பரசநல்லூர் கிராமம். இங்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே தேர்தல் முன்விரோதம் இருந்து வருகிறது.

தேர்தலின் போது தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஏஜெண்டாக இருந்தார் என்பதற்காக ஆதிக்க சாதியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரின் தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஆதிக்க சாதியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலித் மக்கள் கடந்த சில மாதங்களாக வேலைநிறுத்தம் செய்து வந்தனர்.

இதற்கிடையில் தண்டரை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தலித் குழந்தைகளை சேர்ப்பதில்லை என்றும் புகார் எழுந்தது.

இச்சம்பவங்கள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியருக்கு புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மீண்டும் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதில் ஆதிக்க சாதியினர், தலித் பகுதிகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில், அலமேலு (55), உமையாள்(65) ஆகிய இருவர் க்கு பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலித் மக்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் ப.சு.பாரதி அண்ணா, வாலிபர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் இல.சண்முகசுந்தரம், மாவட்டத் தலைவர் முனுசாமி, நந்தன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

இதற்கிடையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு சார்பில் காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டது.

இந்த பிரச்சனை குறித்து இரு தரப்பினர் மீதும் செய்யூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆதிக்க சாதியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் உட்பட 5 பேரையும், தலித் மக்கள் சிலரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த கிராமத்தில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலைக்கு மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே முக்கிய காரணம் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி குற்றம் சாட்டியது.

இந்த பகுதியில் தீண்டாமை கொடுமைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரும் தமிழக அரசும் உடனடி யாக தீர்வு காண வேண்டும் என்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியது.

நெஞ்சில் தைத்த முள், புண்ணாக்கி விடுமோ?

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை கடந்த 2006-ம் ஆண்டு மே மாதம் தமிழக முதல்வர் அறிவித்தபோது தமிழ் மக்கள் அகமகிழ்ந்து வரவேற்றனர். சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகள் ஆதரவோடு ஒருமனதாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை’ அகற்றிவிட்டார் என்று முதல்வருக்கு புகழாரம் சூட்டி மகிழ்ந்தனர், பெரியாரின் வழிவந்தவர்களாகச் சொல்லிக் கொள்வோர்.

தமிழ்ச் சமுதாயத்தில் எத்தனையோ விசயங்களில் அழிக்க முடியாத தடத்தைப் பதித்தவர் தந்தை பெரியார். கோயில்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் (பிராமணர்கள்) மட்டுமே அர்ச்சகர்களாக இருக்க முடியும் என்ற ஏகபோக நிலையை எண்ணி வேதனைப்பட்டார். சமூக ஏற்றத்தாழ்வில் அவர்களின் கருத்தியல் ரீதியான மேலாதிக்கத்திற்கு வெளிப்படையான, கூர்மையான அடையாளமாக இந்த விசயம் இருப்பதால்தான், இதை ‘என் நெஞ்சில் தைத்த முள்’ என்று பெரியார் சொன்னார். அவர் எப்போதோ சொல்லி வைத்ததல்ல, நீண்ட நெடுங்கால அவரது போராட்ட வாழ்க்கையின் கடைசி கட்டத்தில்தான் இதைச் சொல்லி வைத்தார். தனது கடந்தகால களப்பணிகளால் ஏற்பட்ட தாக்கங்களுக்காக தற்பெருமை கொள்ளாமல் சமூக அவலத்தை வேரறுக்க இறுதிமூச்சு வரை சலனமில்லாமல் பாடுபட்டவர். எனவே அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் நிலை ஏற்பட்டால் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்பட்டு விட்டது என்று மகிழ்ச்சி அடைவது நியாயமே.

ஆனால், தமிழக அரசு சட்டம் பிறப்பித்த பிறகு தற்போதைய நிலை என்ன?

2006-ம் ஆண்டு சட்டம் நிறைவேறிய பிறகு, 2007-ம் ஆண்டு மே மாதம் இந்து அறநிலையத் துறையின் கீழ் ஆறு பகுதிகளில் அர்ச்சகர் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டன. இந்த பயிற்சி மையங்களில் சேரும் மாணவர்களுக்கு ரூ. 500 வீதம் மாத உதவித் தொகை வழங்கப்படும். ஆகம விதிகளை படித்து தேர்ச்சி பெற்றவுடன் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் மொத்தமுள்ள 36 ஆயிரம் கோயில்களில் பணி நியமனம் செய்யப்படுவர் என்று அரசு அறிவித்தது.

இந்த ஓராண்டு இலவச வகுப்பில் மொத்தம் 240 பேர் சேர்க்கப்பட்டனர். 207 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் மூவர் பிராமணர்கள். மற்றவர்கள் பிற்படுத்தப்பட்ட, தலித் சமுதாயத்தினர். கோயில்களில் அர்ச்சகர்கள் ஆவதன் தார்மீகப் பெருமையைக் கருதாவிட்டாலும், அரசு வேலை கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கையில் இவர்கள் காத்திருந்தனர்.

ஆனால் மதுரை மீனாட்சியம்மன் கோயில் பரம்பரை அர்ச்சகர்கள் உள்ளிட்ட சிலர், தமிழக அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். மத சுதந்திரத்தில் தலையிடக் கூடாது (?) என்ற அரசியல் சட்டப் பிரிவை காரணம் காட்டியதால் உச்சநீதிமன்றமும் மாற்றுச் சாதியினரை அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு தடை விதித்துவிட்டது!

இதற்கு முன்பு வேறொரு வழக்கில் இந்து மதத்தைச் சேர்ந்த எந்த சாதியினரும் கோயில் அர்ச்சகராகலாம் என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதை 2002-ம் ஆண்டு இதே உச்சநீதிமன்றம் உயர்த்திப் பிடித்தது. ஏற்கெனவே 1972ம் ஆண்டு தமிழகம் சார்ந்த வழக்கிலும் இதேபோன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

எனினும் தற்போது பரம்பரை அர்ச்சகர்களுக்குச் சாதகமாக தடையுத்தரவு விதிக்கப்பட்டு வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கைச் சந்திக்க தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞரை நியமித்துள்ளதாகவும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வர உறுதியோடு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனினும் அரசின் செயல்பாடு இந்த விசயத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

குறிப்பாக கோயிலில் வேறு சாதியினர் அர்ச்சகர் ஆக தற்காலிகத் தடைதான் விதிக்கப்பட்டுள்ளது. படித்து முடித்த 207 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்காவிட்டாலும், பயிற்சி முடித்ததற்கான சான்றிதழை வழங்குவதில் வேறு தடை ஏதும் இல்லையே. ஆனால் அதைக்கூட இன்று வரை மாநில அரசு நிறுத்தி வைத்திருப்பது ஏன்? இங்கு படித்த அருண்குமார் என்பவர் மட்டும் அர்ச்சகராக தற்போது கோயிலில் பணியாற்றி வருகிறார், பிராமணர் என்பதால்!

மேலும், ஒரேயொரு ஆண்டு மட்டுமே செயல்பட்ட ஆறு அர்ச்சகர் பயிற்சி மையங்களையும் மாநில அரசு இழுத்து மூடிவிட்டது. அந்த மையங்கள் தொடர்ந்து செயல்பட்டிருந்தால் தற்போது பிற சாதி அர்ச்சகர்களாக இன்னும் 480 பேர் தேர்ச்சி பெற்றிருக்க முடியும். மொத்தம் 36 ஆயிரம் கோயில்

கள் இருக்கும் போது இந்த எண்ணிக்கை மிகவும் சொற்பமே! வழக்கை விரைந்து நடத்தி சட்டரீதியாகத் தடையைத் தகர்க்கவும், அரசியல் உறுதிப்பாட்டோடும் செயல்பட்டால்தான் இதில் வெற்றி பெற முடியும்.

ஆனால் அரசின் செயல்பாடு உறுதி மிக்கதாக இல்லை என்பதையே சம்பவங்கள் உணர்த்துகின்றன. பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் முற்றிலுமாக அகற்றப் பட்டுவிட்டதா அல்லது முள்ளின் பகுதி உள்ளேயே இருந்து புண்ணாக்கி விடுமோ? துணிந்து அகற்ற வேண்டும் முள்ளை!

(12.12.09 தீக்கதிர் கட்டுரை)

உத்தப்புரம் தலித் மக்கள் மீது தாக்குதல்- வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

உத்தப்புரத்தில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி தலித் மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இதில் தலித் மக்கள் பலர் காயமடைந்தனர். அவர்களது வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்நிலையில், உத்தப்புரம் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; தாக்குதலுக்கு மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்; வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்தவேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு தொடர்பாக தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பொதுத்துறை (சட்டம்-ஒழுங்கு) இணைச்செயலர் ஏ.பி.லலிதா தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1995-ன்படி, தமிழக முதல்வர் தலைமையில் 26 மாவட்ட ஆட்சியர்களை உறுப்பினராகக் கொண்ட கண்காணிப்புக் குழு 3.8.2006ல் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தந்த மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் நிலுவை குறித்தும், தாக்கியவர்கள் முழு தண்டனை பெற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் 15.9.2009ல் வன் கொடுமை வழக்குகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழுவைக் கூட்டி மேல் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழக அரசின் சமூக நீதி மற்றும் மனித உரிமை தொடர்பான அரசிதழ் அறிவிப்பு நகல் அனைத்து காவல் நிலையங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. வன்கொடுமை தொடர்பான வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் 23 அரசு வழக்கறிஞர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 29.7.2008 மற்றும் 30.6.2009- ல் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் உத்தப்புரம் தொடர்பாக புகார் ஏதும் வரவில்லை.

மேலும், இதுதொடர்பாக மூன்று மாதத்துக்கு ஒருமுறை சமூகநீதி மற்றும் மனித உரிமைகளுக்கான ஐ.ஜி. தலைமையில், முதன்மைச் செயலர் முன்னிலையில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனிடையே இந்த வழக்கு தொடர்பான விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்து டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. (11.12.09 தேதிய நாளிதழ் செய்திகள்)

திமுக பேரூராட்சித் தலைவரின் அராஜகம் - என்.வரதராஜனிடம் அருந்ததிய மக்கள் கண்ணீர்!

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், பழநி ஆகிய பகுதிகளில் உள்ள அருந்ததிய மக்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் என்.வரதராஜன் நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டார்.

அதனொரு பகுதியாக ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட டி.கே.என்.புதூர் அருந்ததியர் மக்களைச் என்.வரதராஜன் சந்திந்தபோது, அப்பகுதி அருந்ததிய மக்கள் கூறியதாவது:

எங்கள் தெருவிளக்கு உடைந்து உள்ளது. ஆனால் அந்த தெருவிளக்கை நாங்கள் தான் உடைத்தோம் என்று கூறி ஆயக்குடி காவல் நிலையத்தில் ஆயக்குடி திமுக பேரூராட்சித் தலைவர் கார்த்திகேயன் தூண்டுதலின் பேரில் நிர்வாக அதிகாரி புகார் கொடுத்துள்ளார். போலீசார் இந்த புகாரைப் பெற்றுக் கொண்டனர். சில தினங்களுக்கு முன்பு சப்- இன்ஸ்பெக்டர் சாந்தாலட்சுமி இரவு 12 மணிக்கு வந்து கோழி இருக்கிறதா, ஆடு இருக்கிறதா என்று கேட்டார். வீடுகளுக்குள் புகுந்து தேடினார். இதற்கு முருகேசன், சேகர், மதுரைவீரன் ஆகிய இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உடனே, நீங்கள்தான் அந்த மூன்று பேரா? வாங்க தெருவிளக்கை உடைத்ததாக உங்கள் பேரில் பேரூராட்சியிலிருந்து புகார் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறி சட்டையைப்பிடித்து இழுத்துச் சென்றார். அதன்பிறகு அவர்கள் மீது பொதுச்சொத்துக்குச் சேதம் விளைவித்ததாகக் கூறி வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் நீதிமன்றம் சென்று ஜாமீனில் மீட்டு வந்தனர். எங்கள் பிள்ளைகள் என்ன கிரிமினல்களா? உடைக்காத லைட்டை உடைத்தாக பொய்யான புகார் கூறி இப்படி இழுத்துச் செல்லலாமா? இவ்வாறு அருந்ததியப் பெண்கள் என்.வரதராஜனிடம் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

மேலும் இப்பகுதியைச் சேர்ந்த முருகேசனுக்கு, தமிழக அரசின் இலவச கேஸ் அடுப்பு வழங்கப்பட்டு இருந்ததாகவும், இந்நிலையில், முருகேசன், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னையில் நடைபெற்ற அருந்ததியர் கோரிக்கை பேரணியில் கலந்து கொண்டதால், கேஸ் அடுப்பைத் திரும்பித் தருமாறு, பேரூராட்சித் தலைவர் கார்த்திகேயன் மிரட்டியதாகவும் தெரிவித்தனர்.

அவற்றை பொறுமையாகக் கேட்ட என்.வரதராஜன், இந்த பிரச்சனை சம்பந்தமாக உரிய நடவடிக் கையை மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார்.

மேலும் கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி பகுதி அருந்ததியர் மக்களையும் என்.வரதராஜன் சந்தித்தார்.

கணக்கன்பட்டியில் வசிக்கும், 200 அருந்ததியர் குடும்பத்தினர் "எங்களுக்கென சுடுகாடு இல்லை; இறந்தவர்களை நெடுஞ்சாலையின் ஓரத்தில் தான் புதைக்கிறோம்; இப்பகுதியில் 30 சென்ட் புறம்போக்கு நிலம் உள்ளது; அந்த நிலமும் ஆக்கிரமிப்பில் உள்ளது; அதனை மீட்டு சுடுகாட்டிற்கு வழங்க வேண்டும்; கணக்கன்பட்டியின் ஒட்டுமொத்த கழிவுநீர் ஓடையும் எங்கள் பகுதியில் தான் வந்து சேர்கிறது; இதனால் பல்வேறு கொடிய நோய்களால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்; இந்த சாக்கடையில் தான் குடிநீர் குழாய் உள்ளது; அந்த சாக்கடை கலந்த நீரைத்தான் குடிக் கிறோம். இப்பகுதியில் இரண்டு கிணறுகள் திறந்த நிலையில் உள்ளதால் இதில் ஒரு குழந்தையும், வெளியூர்க்காரர் ஒருவரும் விழுந்து இறந்துள்ளனர். இதனை மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; மேலும் ஒரு வீட்டில் 4 குடும்பம் வசிக்கும் நிலை உள்ளது; எனவே எங்களுக்கு வீட்டு மனை அல்லது தொகுப்பு வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.

பச்சள நாயக்கன்பட்டியிலும் இதே போன்ற கோரிக் கைகள் எழுப்பப்பட்டன. இந்த கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று என்.வரதராஜன் உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்டச் செயலாளர் என்.பாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.முத்துச்சாமி, முன்னாள் எம்எல்ஏ என்.பழனிவேலு, பழநி நகர்மன்றத் தலைவர் வி. இராஜமாணிக்கம், பழனி நகரச் செயலாளர் எம்.குரு சாமி, பழனி ஏரியாச் செயலாளர் கே. அருள்செல்வன் உள்ளிட்டோர் என்.வரதராஜனுடன் சென்றனர்.

செவ்வாய், 15 டிசம்பர், 2009

மார்க்சிஸ்ட் கட்சிக்கு பாராட்டு விழா - அருந்ததியர் இயக்கங்கள் முடிவு

அருந்ததியர் உள்ஒதுக்கீடு கிடைப்பதற்கு உற்ற துணைவனாக உடனிருந்து உறுதியாகப் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவையில் ஜனவரி 24ம் தேதி பாராட்டு விழா நடத்துவதென அனைத்து அருந்ததியர் இயக்கங்களின் கூட்டுக் கூட்டம் முடிவு செய்தது.

திருப்பூரில் புதன்கிழமை (9.12.09) அருந்ததியர் இயக்கங்களின் கூட்டுக் கூட்டம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் அருந்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் கு.ஜக்கையன், வி.குமார், கவுதம சக்திவேல், பி.முருகேசன், டி.நாகராஜ், கோவை சூர்யா, கோவை ஜெயராமன், ஏ.அருண், ப.சுந்தரம், இளவேனில், வெ.பொ.நாவ ளவன், ஆதித்தமிழர் பேரவை சார்பில் நீலவேந்தன், தமிழ்வேந்தன், நாகராஜ், கருப்பசாமி, ஆதித் தமிழர் சனநாயகப் பேரவை சார்பில் அ.சு.பவுத்தன், அருந்ததியர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் விழுதுகள் ஆர்.நாதன், அருந்ததியர் விடுதலை முன்னணி சார்பில் என்.டி.ஆர்., ஆதித்தமிழர் விடுதலை முன்னணி சார்பில் கோவை ரவிக்குமார், சோ.ப.மதன்குமார், தந்தை பெரியார் டாக்டர் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் கா.பத்ரன், பி.ரவி, கே.மூர்த்தி, ஜி.குமாரவேல், தலித் விடுதலைக் கட்சி சார்பில் இரா.மூர்த்தி, மு.சுந்தரம், ஆறுச்சாமி, வீர அருந்ததியர் பேரவை சார்பில் அர.விடுதலைச் செல்வன், ஓ. ரங்கசாமி, என்.முருகன், தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில் பி.ராமமூர்த்தி, செ.முத்துக்கண்ணன் (திருப்பூர்), யு.கே.சிவஞானம், கணேஷ் (கோவை), ஆர்.பத்ரி, ஆர்.சதாசிவம் (நீலகிரி), பி.வெங்கடேசன் (தர்மபுரி), ந.வேலுசாமி, சி.துரைசாமி (நாமக்கல்), பி.பி.பழனிசாமி, கருப்பசாமி (ஈரோடு) உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் அருந்ததியர் மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 3 சதவிகிதம் உள் ஒதுக்கீடு கிடைப்பதற்காக அருந்ததியர் அமைப்புகளோடு உற்ற துணைவனாக உறுதியாகப் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அருந்ததியர் மக்கள் அமைப்புகளின் ஒற்றுமையை வலுப்படுத்தி மேலும் முன்னெடுத்துச் செல்வதென தீர்மானிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவையில் வரும் ஜனவரி 24-ம் தேதி பாராட்டு விழா நடத்துவது என்றும், இந்த விழாவிற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோரை அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த விழாவுக்கு மாநிலம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான அருந்ததியர் மக்களை அணி திரட்டி வருவது, அதற்காக ஜனவரி 17-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு அருந்ததியர் குடியிருப்புப் பகுதிகளில் ஊர்க் கூட்டங்கள் மற்றும் தெருமுனைப் பிரச்சாரம் நடத்துவது, இந்த விழா பற்றி சுவர் விளம்பரங்கள், தட்டி பலகைகள் மூலம் பரவலாக விளம்பரம் செய் வது, துண்டறிக்கைகள் வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

நிறைவாக பேசிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், ஒன்றுபட்ட போராட்டம் காரணமாகவே அருந்ததிய மக்களுக்கு உள்ஒதுக்கீடு கிடைத்துள்ளது. இது முறையாக அமலாவதற்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டியுள்ளது. நிலம், குடிமனைப்பட்டா போன்ற கோரிக்கைகளுக்காக தொடர்ந்து இணைந்து போராடுவோம் என்றார்.

திங்கள், 14 டிசம்பர், 2009

அருந்ததியர் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்தது செங்கொடி இயக்கம் - என். வரதராஜன் பெருமிதம்




திண்டுக்கல் ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில், ரெட்டியார்பட்டி காலனி, நீலமலைக்கோட்டை காலனி, ரெட்டியார் சத்திரம் காலனி அருந்ததிய மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் என்.வரதராஜன் நேரில் சந்தித்து, குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் அருந்ததியர் மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

அருந்ததியர் மக்களோடு இன்று நேற்றல்ல, ஆண்டாண்டு காலமாக அவர்களோடு இரண்டறக் கலந்த இயக்கம் செங்கொடி இயக்கம். திண்டுக்கல் நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி ஆற்றிய பங்கை அவ்வளவு குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களது பஞ்சப்படிக்காக, உடைக்காக, சமூக மேம்பாட்டிற்காக எண்ணற்ற போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.

இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் ஆகி என்ன பயன்? இன்றும் கூட மனித மலத்தை சுமக்கும் அவலத்தை அருந்ததிய மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். குடியிருக்க வீடு இல்லை. குடியிருக்கும் வீட்டுக்குப் பட்டா இல்லை. ரேசன் கடையில் நல்ல அரிசி போடவில்லை. பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்க முடியவில்லை. 2 ஏக்கர் திட்டம் என்கிறார்கள். அந்தத் திட்டத்தின்படி யாருக்கும் நிலம் கிடைக்கவில்லை. மயானம் இல்லை, மயானம் இருந்தால் அதற்குப் பாதை இல்லை. தொகுப்பு வீடு கட்டித்தரப்படவில்லை என்று ஏராளமான புகார்களை நீங்கள் என்னிடம் கூறி உள்ளீர்கள்.

100 பேருக்கு அரசின் வேலைவாய்ப்பு கிடைத்தால், அதில் தலித் மக்கள் 18 பேருக்கு வேலை தர வேண்டும். ஆனால், அந்த 18 தலித் இளைஞர்களில் ஒரு அருந்ததியருக்குக்கூட வேலை கிடைப்பதில்லை. அந்த அளவிற்கு கல்வியில், வேலைவாய்ப்பில் அருந்ததிய மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். எனவே தான் அருந்ததிய மக்களின் சமூக விடுதலைக்காக சென்னையில் பிரம்மாண்டமான பேரணியை நடத்தினோம். ஆர்ப்பரித்தோம். தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடாக 6 சதவீதம் வேண்டும் என மாநில அரசிடம் கோரிக்கை வைத்தோம். முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினோம். மகஜர் கொடுத்தோம். ஆனால் அரசு 3 சதவீதம்தான் தந்தது. உள்ஒதுக்கீட்டில் 6 சதவீதம் பெறுவதற்கான போராட்டத்தை நாம் தொடர்ந்து நடத்த வேண்டியுள்ளது. தீண்டாமை எனும் கொடுந்தீயில் அருந்ததிய மக்கள் வெந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளுக்கு ஒரே தீர்வு போராட்டம் தான்.

நகர் மற்றும் கிராமப்புறங்களில் இறந்த மனிதனை எரிப்பது, புதைப்பது, தப்படிப்பது போன்ற பணி யை அருந்ததியர் செய்கிறார்கள். நமது தலைமையில் அருந்ததியர் அமைப்புக்கள் எழுப்பிய முழக்கத்தின் எதிரொலியாகத்தான் சென்னையில் மட்டும் 175 பேருக்கு மயான உதவியாளர் பணி வழங்கப்பட்டது. ஏன் அரசு அதனை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தக் கூடாது? தொடர்ந்து நமது போராட் டங்களில் வலியுறுத்துவோம். பொருளாதார நெருக்கடியிலிருந்தும், சமூக நெருக்கடியிலிருந்தும் ஒட்டு மொத்தமாக அருந்ததியர்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தருவோம்.

இவ்வாறு என்.வரதராஜன் பேசினார்.

என்.வரதராஜனுக்கு ஆரத்தி எடுத்து அருந்ததிய பெண்கள் உற்சாக வரவேற்பு





ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் உள்ள ரெட்டியார்பட்டி காலனி, நீலமலைக்கோட்டை காலனி, ரெட்டியார்சத்திரம் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள அருந்ததியர் மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் திங்களன்று மாலை (7.12.09)சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது வரதராஜனுக்கு, அருந்ததியர் பெண்கள் ஆரத்தி எடுத்தும், வெடிமுழக்கங் களுடனும், கொட்டு மேளத்துடனும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருந்ததியர் மக்கள், தங்களது பகுதியில் நிலவும் அவலங்கள் குறித்து பேசினர். மனுக்கள் கொடுத்தனர்.

பெரும்பாலான மக்கள் தாங்கள் கழிப்பறையின்றி தவிப்பதாக கூறினர். வெளியூர்க்காரர்கள் இங்கு வந்தால், கழிப்பறை இன்றி இருப்பது கண்டு, இதெல்லாம் ஒரு ஊரா என்று திட்டுகிறார்கள் என்றும் தெரிவித்தார். இன்னொருவர் கூறும் போது, இந்த பகுதி மக்களில் இதுவரை யாருக்கும்ம் முதியோர் பென்சன் கிடைத்ததில்லை என்ற தகவலை வெளியிட்டார். எங்களது மக்கள் குறைந்தது 5 முறை யாவது மனு செய்திருப்பார்கள். ஆனாலும் யாருக்கும் முதியோர் பென்சன் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். மேலும் செருப்பு தைக்க வங்கியில் கடன் பெற்றோம். அந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டும், கடனைக் கட்டுமாறு வங்கியாளர்கள் மிரட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல ரெட்டியார்சத்திரம் காலனியைச் சேர்ந்த மாணவர்கள் ஒருவருக்கு கூட இதுவரை கல்விக் கடன் வழங்கப்படவில்லை. தொகுப்பு வீடுகளும் கட்டித்தரப்படவில்லை என்று பலரும் முறையிட்டனர்.

நீலமலைக்கோட்டை மற்றும் ரெட்டியார் சத்திரம் காலனி பகுதி மக்களும் இதேபோன்ற குறைகளைத் தெரிவித்தனர். நீலமலைக்கோட்டை காலனியில் ஒரு பி.காம் படித்த மாணவர் பல ஆண்டுகளாகியும் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்று என்.வரதராஜனிடம் மனுக் கொடுத்தார்.

ரேசன் கடைக்குச் சென்றால் அருந்ததியர் என்ற காரணத்திற்காக ரேசன் அரிசி போட மறுக்கிறார்கள். இந்த கடைகளில் உள்ள நல்ல ரேசன் அரிசியை மற்ற கடைகளுக்குக் கொடுத்து விடுகிறார்கள். அல்லது விற்றுவிடுகிறார்கள். எங்களுக்கு நாற்றம் பிடித்த அரிசியை போடுகிறார்கள். அந்த அரிசியை நாங்கள் சமைத்துச் சாப்பிட முடியவில்லை. இதனை சாப்பிட்டால் குழந்தைகள் வாந்தி எடுத்து விடுகின்றன. உடல் நிலை சரியில்லாமல் போய் விடுகிறது. அதனால் அந்த அரிசி எங்கள் வீடுகளில் அடுக்குப்பானைகளில்தான் கிடக்கிறது. காலனி வீடுகள் கட்டி 30 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவை இடிந்து விழும் நிலையில் உள்ளன. 100 நாள் வேலைத் திட்டத்தில் எங்களுக்கு ரூ. 60-தான் சம்பளம் தருகி றார்கள். எதிர்த்துக் கேட்டால் வேலை தர மறுத்துவிடுகிறார்கள்.

இந்த புகார் சம்பந்தமாக உரிய நடவடிக்கையை எடுப்போம் என்றும், இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் சட்டமன்றத்திலும் எதிரொலிக்கும் என்றும் என்.வரதராஜன் வாக்குறுதி அளித்தார்.

சனி, 12 டிசம்பர், 2009

போராட்ட வரலாற்றை மறைக்கலாமா? - பி.சம்பத்


“....நீங்கள் பேசும் போது சொல்லிக் கொண்டீர்கள். நீங்கள் என்னிடம் கோரிக்கை வைத்ததாகவும் அதை நான் நிறைவேற்றிக் கொடுத்ததாக வும் பேசும் போது துரைச்சாமியும், ரவிச்சந்திரனும் சொன்னார்கள். நான் சொல்லுகிறேன். நீங்கள் யாரும் கோரிக்கை வைத்து நான் கொடுக்க வில்லை. இப்படிச் சொல்வதற் காக நீங்கள் என்னை மன்னிக்க வேண் டும். நானே கோரிக்கை வைத்து, நானே நிறைவேற்றிக் கொண்ட திட்டம்தான் இந்தத் திட்டம். நான் யாரிடத்தில் கோரிக்கை வைப்பது? என்னிடத்திலே தான் கோரிக்கை வைக்க வேண்டும்....”

..... அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியதற்காக, சென்னையில் ( 5.12.09)நடைபெற்ற பாராட்டு விழாவில், தமிழக முதல்வர் கலைஞர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது.

இந்த உரையில் கலைஞரும், திராவிட இயக்கமும், சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றியப் பணிகளை உணர்ச்சி கரமாக எடுத்துரைத்துள்ளார். அருந்ததியர் மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண் டும் என்ற கோரிக்கையை ஏற்று, 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளதை நாம் ஏற்கனவே வரவேற்றுள்ளோம்.

ஆனால் இந்த உள்ஒதுக்கீடு பெற நடைபெற்ற போராட்டங்களைப் பற்றி எதுவுமே குறிப்பிடாமல், எல்லாமே தனது சாதனையாகவும் தனது இயக்கத்தின் சாதனையாகவும் விவரிப்பது என்ன தார்மீக நியாயம் என நமக்கு விளங்கவில்லை. அருந்ததியர் உள்ஒதுக்கீடு என்பது இப்போதைய திமுக ஆட்சியில் மட்டும் முன்வைத்து பெறப்பட்ட கோரிக்கையல்ல. 25 ஆண்டு களுக்கு மேலாக அருந்ததியர் அமைப்புக்களும், அருந்ததியர் மக்களும் அதற்காக எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளனர். இப்போராட்டங்கள் எதுவும் ஆளும் வர்க்கங்களாலும் அரசாங்கத்தாலும், ஏன் இதற்கு முந்தைய திமுக ஆட்சிக் காலங்களிலும் கண்டுகொள்ளப்படவே இல்லை. ஊடகங்களும் கூட அருந்தியர் மக்களின் கோரிக்கைக்கு உரிய நியாயமோ முக்கியத்துவமோ தரவில்லை.

அருந்ததியர் மக்களின் நீண்ட நெடும் போராட்டங்களை ஆய்வுசெய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 2 ஆண்டுகளுக்கு முன்பே அம்மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது. 2007 ஜூன் 12-ம் நாள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருந்ததியர் மக்களைத் திரட்டி கோட்டை நோக்கிப் பேரணியை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது. அருந்ததியர் அமைப்புகளின் தலைவர் களோடு தமிழக முதல்வரை அன்றைய தினமே மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சந்தித்தார்கள். சிறப்பான கலந்துரையாடலுக்குப் பிறகு தமிழக முதல்வர், அருந்ததியர் மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க கொள்கையளவில் ஏற்றுக்கொள்வதாக அப்போது அறிவித்தார். மார்க்சிஸ்ட் கட்சியும் அருந்ததியர் அமைப்புகளும் கேட்டுக் கொண்டதற்கிணங்க இக்கோரிக்கையை ஆய்வு செய்து சிபாரிசு அளிக்க ஒரு கமிஷன் அமைக்கவும் ஏற்றுக்கொண்டார். இதன் பிறகு இது அமலாக காலம் கடக்கவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மாநாடுகள், 100 இடங்களில் தர்ணா, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாநிலம் தழுவிய மறியல் என பலகட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் பிறகு நீதியரசர் ஜனார்த்தனம் கமிஷன் அமைக்கப்பட்டு அதன் சிபாரிசாக 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க அறிக்கை தரப் பட்டது.

இதன் பிறகு கோட்டையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அனைத்துக் கட்சிகளும் இந்த உள்ஒதுக்கீடுக்கு ஒப்புதல் தெரிவித்தன. அதன் பிறகு சட்டமன்றத்தில் 3 சதவீத உள்ஒதுக்கீடுக்கான சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டு சில மாதங்களுக்குப் பிறகு இதற்கான அரசாணை வெளிவந்தது. இந்த உள்ஒதுக்கீட் டில் சில அருந்ததியர் பிரிவினர் விடுபட்டுள்ளதால் அவர்களையும் இணைத்து உள்ஒதுக்கீடு அளவை உயர்த்த வேண்டும் என்ற உணர்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அருந்ததியர் அமைப்புகளுக்கும் இருந்தது. ஆயினும் 3 சதவீத உள்ஒதுக்கீடு? முதல் கட்ட வெற்றி என்ற நிலை எடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக அரசின் முன்முயற்சிக்கும், முடிவுக்கும் வரவேற்பு தெரிவித்தது. இதற்காக நீண்ட காலம் போராடிய அருந்ததியர் மக்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்தும், தனித்தும் போராடிய அருந்ததியர் அமைப்புகளுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு தெரிவித்தது. அருந்ததியர் உள்ஒதுக்கீடு பற்றிய பிரச்சனையில் இவை தான் வரலாற்று ரீதியான உண்மைகள். தமிழக முதல்வரும், சில பத்திரிகையாளர் சந்திப்புகளில் அருந்ததியர் உள்ஒதுக்கீடு பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சி காட்டிய ஆர்வத்தையும் தலையீட்டையும் ஏற்றுக்கொண்டார்.

ஆனால் 5.12.2009-ந் தேதிய பாராட்டு விழாவில் அருந்ததியர் மக்களின் போராட்டங்களைப் பற்றியோ, அருந்ததியர் அமைப்புக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய இயக்கங்களைப் பற்றியோ எதுவும் குறிப்பிடாமல், எல்லாமே தனது சாதனையாகவும் தனது இயக்கத்தின் சாதனையாகவும் பறைசாற்றிக் கொண்டார். எந்தக் கட்சியும் அதன் தலைவரும் அரசியல் ஆதாயம் தேட முனைவதில் தவறில்லைதான். ஆனால் அதற்காக ஒடுக்கப்பட்ட அருந்ததியர் மக்களின் போராட்ட வரலாற்றையும் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அருந்ததியர் அமைப்புகளின் பங்கையும் பற்றியும் கோடிட்டுக்கூடக் காட்டாமல், தானே கோரிக்கை வைத்ததாகவும், தானே நிறைவேற்றிக் கொண்டதாகவும் பறைசாற்றுவது அவருக்கும், அவரது இயக்கத்திற்கும் சுயபெருமையாக இருக்கலாம். ஆனால், ஆளுங்கட்சியின் ஏற்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட இந்த பாராட்டு விழாவில் பங்கேற்றவர்கள் கூட முதல்வரின் கூற்றை முற்றாக ஏற்றிருக்க மாட்டார்கள்.  (7.12.09)


(கட்டுரையாளர்: அமைப்பாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி,
மாநிலச் செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்).

தீண்டாமை ஒழிப்பும் ஜனநாயகப் புரட்சியும்! - பி. சம்பத்


டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்தியாவின் தலைசிறந்த சமூக நீதிப் போராளி. புரட்சிகரமான சிந்தனையாளர். இந்துத்துவா கோட்பாடுகளைத் தோலுரித்துக் காட்டியவர். சாதியமைப்பு ஒழிய சீற்றத்துடன் போராடியவர். தீண்டாமை ஒழியவும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பெற்றிடவும் எழுச்சி மிக்க போராட் டங்களை நடத்தியவர். இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் சாதியடிமைத்தனத்திற்கு எதிராகவும், தீண்டாமை ஒழிப்பிற்காகவும் அவர் நடத்திய போராட்டமும், வெளிப்படுத்திய கருத்துகளும் இந்திய மக்கள் மத்தியிலும் அரசியல் இயக்கங்கள் மத்தியிலும் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தின. இதனால் தான், இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் அரசியல் சாசனத்தை உருவாக்கும் தலைமைப் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டபோது தேசமே அதனை அங்கீகரித்தது. இந்தியாவின் சட்ட அமைச்சராகவும் அவர் திறம்பட செயல்பட்டார்.

இந்தியச் சமூகத்தின் அடித்தட்டு மக்கள் மத்தியில் அவரது சிந்தனைகளும் கருத்துக்களும் ஆழமான கிளர்ச்சி உணர்வுகளை ஏற்படுத்தின. இன்றளவும் ஏற்படுத்தி வருகின்றன. எல்லா சமூக நீதிக்கான அமைப்புகளும் ஜனநாயக இயக்கங்களும் மனித உரிமையில் அக்கறையுள்ள அனைவரும் ஏகோபித்த முறையில் அம்பேத்கரை உயர்த்திப் பிடிப்பதை இன்றளவும் காண முடிகிறது. அரசியல், பொருளாதாரம், சமூகம் போன்ற பல துறைகளிலும் ஏராளமான நூல்களைக் கற்றிருந்த மேதையாக அவர் விளங்கினாலும் அடித்தட்டு மக்களின் குறிப்பாக தலித் மக்களின் நலன்கள் மற்றும் உரிமைகள் குறித்து ஆவேசமான அக்கறையுடன் செயல்பட்டார். தனது பணிகள் பற்றி அம்பேத்கர் அவர்களே குறிப்பிடுவதாவது;

“உலகிலுள்ள அடிமைச் சமூகங்கள் அனைத்துக்கும் நானே தலைவர் என்று கூறவில்லை. தீர்க்கப்பட வேண்டிய வேறு பல பிரச்சனைகள் கொடுமைகள் நம் நாட்டில் இல்லையென்றும் நான் கூறவில்லை. ஆனால் மனிதன் தன் வாழ்நாளில் எந்த அளவுக்குப் பணியாற்ற முடியும் என்பதை உணர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன்”.

இந்தியாவில் நிலவும் சாதிய ஒடுக்கு முறைகளுக்கும் தீண்டாமைக் கொடுமைகளுக்கும் இந்து மதமும் இந்துத்துவா கோட்பாடுகளும் சித்தாந்த அஸ்திவாரமாக விளங்குவதைக் கண்ட அம்பேத்கர் அவற்றைக் கடுமையாகச் சாடினார். பெண் அடிமைத்தனத்தையும், சாதிய அடிமைத்தனத்தையும் வலியுறுத்தும் புராணங்களும், இதிகாசங்களும் கட்டுக்கதைகள் என்றார். மனுநீதியை உருவாக்கிய மனு மட்டும் தன் கைகளில் கிடைத்திருந்தால் அவனை அப்படியே கடித்துக் குதறியிருப் பேன் என அதன் மீதான தன் வெஞ்சினத்தை வெளிப்படுத்தினார். இத்தகைய கருத்துப் பிரச்சாரம் மட்டுமல்லாமல் தலித் மக்களை அணி திரட்டி ஆலய நுழைவு, பொதுக் குளங்களில் குளிக்க வைப்பது உள்பட தீவிரமான தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களையும் நடத்தினார். இதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் அவர் உத்வேகமூட்டும் ஆவேசமான சக்தியாக மாறினார்.

டாக்டர் அம்பேத்கர் அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் தலைமைப் பொறுப்பை உணர்வுப்பூர்வமாக ஏற்றார். அரசியல் சாசனத்தின் மூலம் தீண்டாமை ஒழிப்பையும் சாதிய ஒடுக்குமுறைகளையும் முடிவுக்கும் கொண்டு வர முடியும் என நம்பினார். 1950இல் இந்திய அரசியல் சாசனத்தை முன்மொழியும் போது தீண்டாமை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக கம்பீரமாக அறிவித்தார். அதனை மீறி யாரேனும் தீண்டாமையைக் கடைப்பிடித் தால் அவர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கும் சட்டங்களும் கொண்டு வரப்பட் டன. ஆனால் அந்தோ! அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. அம்பேத்கர் தனது வாழ்நாளில் இறுதி நாட்களில் இதற்காக தனது மனவேதனையை வெளிப்படுத்தினார். தீண்டாமை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டு விட்டதாகக் கூறியதற்காக தான் வருந்துவதாகவும், தலித் மக்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் எழுச்சிமிக்க போராட்டங்கள் மூலமே அது சாத்தியமாகும் என உறுதிபட அறிவித்தார்.

சாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு என்பது இந்தியாவில் உள்ள இடதுசாரி மற்றும் ஜனநாயக இயக்கங்களின் மிகப் பிரதானமான கடமையாகும். இந்திய ஜனநாயகப் புரட்சியின் பிரிக்க முடியாத அம்சமாகவும் இது விளங்குகிறது. டாக்டர் அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுவதும் இதற்காக கடுமையாகப் போராடினார். ஆனால் இக்கடமைகளை நிறைவேற்ற நிலப்பிரபுத்துவ ஒழிப்பும், நில விநியோகமும் பிரதான தேவையாக உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியத் தலைவர்களில் ஒருவரான தோழர் பி.டி. ரணதிவே கூறுவதாவது;

“தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய புகழ் பெற்ற பெரும் வீரர் அம்பேத்கர். ஆரம்பக் காலத்தில் உயர் சாதியினரின் கபடத்தனங்களை அம்பலப்படுத்திக் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகத் தாக்கினார். அதற்குப் பின் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலமும், தனி குடியிருப்புகளும் கோரினார். இதை ஒரு விவசாயப் புரட்சியின்றி, ஜனநாயகப் புரட்சியின்றி சாதிக்க முடியாது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் கொடுப்பதன் மூலம் அவர்கள் பண் ணையடிமைகளாக மற்ற சாதியினரைச் சார்ந்து நிற்கும் நிலையைத் தவிர்க்கலாம்.”.

இப்புரிதலோடு தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு போராட்டங்களை முன் எடுத்துச் செல்வோம்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கமும், இடதுசாரி இயக்கங்களும் தேச விடுதலைக்காக மட்டும் அல்ல. இந்திய ஆளும் வர்க்கங்களின் வர்க்கச் சுரண்டலை ஒழிக்கவும், தலித் - பழங்குடி மக்களின் சமூக விடுதலைக்காகவும் எண்ணற்ற போராட்டங்கள் நடத்தியுள்ளன. இடதுசாரி இயக்கங்கள் இன்று வலுவானதாக உள்ள மேற்குவங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் நிலங்களில் சாதிய மோதல்களோ, ஒடுக்குமுறைகளோ இல்லை என்பதைக் கண்கூடாக காண முடியும். குறிப்பாக மேற்குவங்க மாநி லத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரி இயக்கங்களும் நடத்திய போராட்டங்களாலும், இடதுசாரி அரசின் சாதனையாலும் 19 லட்சம் பேருக்கு 10 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலம் விநியோகிக்கப்பட்டு உள்ளது. இவர்களில் 12 லட்சம் பேர் தலித்துகள் மற்றும் பழங்குடியினர்கள் ஆவர். இவ்விருவரும் சேர்ந்து மாநில மக்கள் தொகையில் 27 சதவிகிதமாக இருந்த போதிலும், அதைவிட மிகக் கணிசமான சதவிகிதத்தில் தலித் மக்கள் நிலம் பெற்றிருப்பதை காண முடியும். இம்மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மீது எவ்வித வன்கொடுமைத் தாக்குதலும் நடைபெறவில்லை என இந்திய அரசின் தலித் பழங்குடியினர் நல்வாழ்விற்கான ஆணையரே கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கீழத்தஞ்சை மாவட்டத்தில் (இன்றைய நாகை, திருவாரூர்) கிராமப்புற கணிசமான தலித் விவசாயத் தொழிலாளர்களுக்கு இதர மாவட்டங்களை விட அதிகமான கூலியும், இதோடு இழிவான பல தீண்டாமை வடிவங்கள் ஒழிக்கப்பட்டதும் நம் முன் உள்ள சாட்சிய மாகும். சமீப காலங்களில் தொடர்ச்சியான பல தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள் நடத்தி அதில் வெற்றி பெற்று வருகிறோம். (பாப்பாபட்டி, கீரிப்பட்டி, உத்தப்புரம், அருந்ததியர் உள்ஒதுக்கீடு, பல கிராமங்களில் ஆலய நுழைவு, இரட்டைக் குவளை முறை ஒழிப்பு உள்ளிட்ட போராட்டங்கள்)

தலித் - பழங்குடி மக்களில் மிக மிகக் கணிசமானவர்கள் ஏழை உழைப்பாளிகள். இந்திய பாட்டாளி வர்க்கத்தின் பிரிக்க முடியாத பகுதியினர். இப்பார்வையோடு இம்மக்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்கான போராட்டங்களை வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பணிகளையும் போராட்டங்களையும் மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்த தோழர் பிரபாகர் சான்ஸ்கிரி, பின்வருமாறு பிரகடனப்படுத்துகிறார்.

“...சாதிய முறைக்கான பொருளாதார அடிப்படை கரைந்து கொண்டிருக்கும் நேரத்தில், அந்தச் சாதிய முறையானது சமூக மேல்கட்டுமானத்தை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண் டுள்ளது. அங்கே அது, சுரண்டும் வர்க்கங்களாலும் அவற்றின் அரசியல் அமைப்பாளர்களாலும் பேணிக் காக்கப்படுகின்றது. ராஜாராம் மோகன்ராய் போன்றவர்களால் துவக்கப்பட்டு ஜோதிபாபூலே மற்றும் அம்பேத்காரால் சாதிய முறையை ஒழித்துக் கட்டுவது என்ற எழுச்சிகர உள்ளடக்கம் கொடுக்கப்பட்டுள்ள சமூகச் சீர்த்திருத்த இயக்கமானது, மக்கள் ஜனநாயகப் புரட்சியின் பகுதி என்ற முறையில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கடமைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டுத் தொழிலாளி வர்க்கத்தின் கட்சியால் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.”

இப்பார்வையில் சமூகச் சீர்திருத்த இயக்கங்களையும் குறிப்பாக தீண்டாமை ஒழிப்பையும் வலுவாக முன்னெடுத்துச் செல்வோம்.     (5.12.09)

(கட்டுரையாளர்: அமைப்பாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி,
மாநிலச் செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்).

இருப்பதைப் பறிக்கும் மத்திய பணியாளர் தேர்வாணையம் - யு.கே.சிவஞானம்

“ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட மிக உயரிய அரசுப்பணிகளுக்கான தேர்வுகளில் முக்கியமான மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை, யு.பி.எஸ்.சி. ஒப்புக் கொள்கிறது. தற்போதுள்ள துவக்கக்கட்டத் தேர்வுக்குப் பதிலாக செயல்திறன் தேர்வைக் கொண்டுவர வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளோம்; அதேபோல் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படும் வாய்ப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.” என்று கூறியிருப்பவர் வேறு யாருமல்ல, மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின்(யு.பி.எஸ்.சி) தலைவர் டி.பி.அகர்வால்தான்.

1990களின் பிற்பகுதி மற்றும் இந்த நூற் றாண்டின் துவக்கப்பகுதி ஆகியவை, டாலர் கனவுகளோடு படிப்புகளை முடித்தவர்களின் காலமாக இருந்தது. அண்மையில் ஏற்பட்டுள்ள அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி மற்றும் அந்த நெருக்கடியின் அடுத்த பரிமாணமான சர்வதேசப் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் மீண்டும் அரசு, பொதுத்துறை மற்றும் வங்கி வேலைகள் பக்கம் பலரின் கண்களும் பதிந்துள்ளன. அதில் கணிசமானவர்கள் “கலெக்டர் ஆகப்போறோம்” என்ற எண்ணத்தையும் மனதில் ஏற்றிக் கொண்டவர்களாக உள்ளனர்.

நாட்டின் உயர்பதவிகளை வகிக்கப்போகும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளைத் தேர்வு செய்யப்போகும் தேர்வு முறையில் மாற்றம் வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஏற்கெனவே அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி முறைகளை மேலும் செழுமைப்படுத்த வேண்டும் என்பதுதான் பல வல்லுநர்களின் கருத்துமாகும். ஆனால் அகர்வால் அளித்துள்ள பரிந்துரைகள், இருப்பதையும் பறித்துக் கொண்டுவிடுவது போன்றுதான் உள்ளது. இந்தக் கருத்துக்கள் ஏதோ போகிற போக்கில் தெரிவிக்கப்பட்டவை அல்ல. குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீல் பங்கேற்ற கூட்டமொன்றில் அவர் முன்னிலையிலேயே வைக்கப்பட்டவைதான்.

தற்போதைய தேர்வுமுறையில் துவக்கக் கட்டத் தேர்வில் பொதுப்பாடம்(ஜெனரல் ஸ்ட டிஸ்) மற்றும் விருப்பப்பாடம் ஆகிய இரண்டு தாள்கள் உள்ளன. இதில் முதல்தாள் அனை வருக்கும் பொதுவானதாகவும், இரண்டாவதாக, மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அளித்துள்ள பட்டியலிலிருந்து தங்களுக்கு விருப்பமான பாடத்தை தேர்வு எழுதுபவர்கள் தேர்வு செய்து கொள்ளும் வகையிலும் தற்போதைய முறை உள்ளது. புதிதாகக் கொண்டுவர வேண்டும் என்று அகர்வால் போன்றவர்கள் விரும்புவது கிட்டத்தட்ட வங்கித் தேர்வுகளைப் போன்ற முறையைத்தான். வங்கிப் பணியின் தன்மைக்கு வேண்டுமானால் செயல்திறன் தேர்வு பொருத்தமாக இருக்கலாம். ஆனால் பன்முகத்தன்மை கொண்ட சிவில் சர்வீஸ் தேர்வுக்கு புதிய பரிந்துரைகளைவிட தற்போதுள்ள முறையே நல்லது. இவர்கள் கூறும் செயல்திறன் வினாக்கள் பொதுப்பாடத்தில் கேட்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய முறை இருப்பதால் பொறியியல், மருத்துவம், விவசாயம் ஆகிய தொழில் சார்ந்த படிப்புகள் படித்தவர்களோடு அறிவியல், கலை, இலக்கியம் ஆகிய பாடங்களைப் படித்தவர்களும் தங்களுக்குப் பிடித்த பாடத்தைத் தேர்வு செய்துகொள்ள முடிகிறது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என்று அனைத்துத் தரப்பினரும் இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்யத் தயங்காத நிலையை இது உருவாக்கியுள்ளது. அண்மைக்காலங்களில் இந்த சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பங்கேற்று வெற்றிபெறுபவர்களில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இதை உறுதிப்படுத்துகிறது.

தேர்வாணையத் தலைவர் அகர்வால் சொல்லும் செயல்திறன் தேர்வு என்பது ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் ஆகிய படிப்புகளுக்கு செல்பவர்களுக்காக நடத்தப்படுவதாகும். அத்தகைய தேர்வுகளில் நகர்ப்புறத்தைச் சேர்ந்த பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் வெற்றி பெறுகிறார்கள் என்பதே நடைமுறை உண்மை. இதே தேர்வு முறையை சிவில் சர்வீசஸ் தேர்வுக்கும் கொண்டு வந்தால், குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டுமே அது பலனைத் தருவதாக அமைந்து விடும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பும் இத்தகைய மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சி நடைபெற்றது. கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டதால் இதைக் கைவிட நேர்ந்தது என்பது கடந்தகால அனுபவம்.

இது ஒருபுறம். மறுபுறத்தில் வாய்ப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் அகர்வால் பரிந்துரைக்கிறார். அவர் பேசியது நவம்பர் 14 அன்று. இதன் பின்னணியை ஆய்வது இங்கு பொருத்தமாக இருக்கும். பொதுப்பிரிவினருக்கு நான்கு வாய்ப்புகளும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஏழு வாய்ப்புகளும், தலித் மற்றும் பழங்குடியினருக்கு வாய்ப்புகளுக்கான வரம்பு இல்லாமலும் தற்போது உள்ளது. வாய்ப்புகளைக் குறைக்க வேண்டும் என்று இவர் யாரைக் குறி வைக்கிறார் என்பதை சொல்ல வேண்டியதே இல்லை. நிச்சயமாக சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரைக் குறிவைத்தே இவரது பேச்சு இருக்கிறது.

தலித்துகள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் இந்த சலுகைகளை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் கதவுகளை ஆதித்ய குமார் என்பவர் தட்டினார். அதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அல்டாமஸ் கபீர் மற்றும் சிரியாக் ஜோசப் ஆகியோர், தலித் மற்றும் பழங்குடியினருக்கு அரசியல் சாசனப்படி கூடுதல் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளதை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. இச்சலுகைகள் அரசியல் சட்டப்பிரிவு 16(4)ன்படி சரியானதுதான்.

இட ஒதுக்கீடு என்பது சட்டரீதியாக வழங்கப்பட்டுவிட்டாலும் அதை நடைமுறைப் படுத்துவதில் இன்னும் ஏராளமான முட்டுக் கட்டைகளை ஒடுக்கப்பட்ட மக்கள் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் இருப்பதையும் பறித்துவிட்டு “சமமான” நிலையை உருவாக்கப்போகிறோம் என்று அகர்வால் போன்ற பெருங்குடிமகன்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சமூகநீதிப் பாதையில் இதுபோன்ற பெரும் தடைகளை நாடு சந்தித்துக் கொண்டே இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கள் எழும்பாமல் வாய்க்குள்ளேயே அடங்கி விடும் என்று இவர்கள் நினைத்தால் ஏமாந்தே போவார்கள். (தீக்கதிர், 5.12.09)

(கட்டுரையாளர், மாவட்ட அமைப்பாளர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, கோவை)

வியாழன், 10 டிசம்பர், 2009

தலித் மக்களுக்கு ஆதரவாக தர்ணா நடத்திய விருதுநகர் ஆட்சியர் : தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாராட்டு


சமாதானக் கூட்டத்தில் தலித் மக்களை மிரட்டியவரை உடனடியாக கைது செய்யக் கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிஜிதாமஸ்வைத்யன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தலித் மக்களுக்கு நம் பிக்கை ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியரின் போராட்டத்தை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாராட்டியது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ளது டி.வேப்பங்குளம் கிராமம். இங்கு கடந்த அக்டோபர் மாதம் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்காக புகைப்படம் எடுக்கப்பட் டது. அப்போது புகைப்படம் எடுக்க வந்த தலித் மக்களை சாதி ஆதிக்க சக்தியினர் நீண்ட நேரம் காத்திருக்க வைத்துள்ளனர். அப்போது தலித் பிரிவை சேர்ந்த ஒருவர் “எங்களை ஏன்? நீண்ட நேரம் காத்திருக்க வைக்கிறீர்கள்” என கேட்கவே, சாதி ஆதிக்க வெறியர்கள், தலித் மக்களை கடுமையாக தாக்கினர். இதையடுத்து தலித் மக்கள் அனைவரும் குடும்பத்துடன் ஊரையே காலி செய்து அருகில் உள்ள சின்ன காரியாபட்டியில் தங்கினர்.

இப்பிரச்சனையில் நியாயம் கிடைக்க வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சாதி ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புக்கள் போராட்டம் நடத்தின.

இந்நிலையில் டி.வேப்பங்குளத்தில் சமாதானக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏற்பாடு செய்தார். புதன்கிழமை மாலை, அக்கிராமத்திற்கு சென்று இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மனோகரன் என்பவர், “எத்தனை சமாதானக் கூட்டம் நடத்தினாலும் உங்களைச் சும்மா விட மாட்டோம்” என ஆட்சியர் முன்னிலையிலேயே தலித் மக்களை பகிரங்கமாக மிரட்டினார்.

அப்போது தலித் மக்கள், “உங்கள் முன்பே, இப்படி மிரட்டினால் நாங் கள் என்ன செய்வது; எப்படி அமைதியாக வாழ முடியும்?” என ஆட்சியரிடம் கேட்கவே, உடனே, மாவட்ட ஆட்சியர் சிஜி தாமஸ் வைத்யன், தலித் மக்களை மிரட்டிய, சாதிவெறியன் மனோகரனை கைது செய்ய உத்தர விட்டார். இந்நிலையில் மனோகரன் அங்கிருந்து தப்பிவிடவே, அவரைக் கைது செய்யும் வரை ஊரை விட்டுப் போகமாட்டேன் என ஆட்சியர் அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பல மணி நேரத்திற்கு பின்பு குற்றவாளி கைது செய்யப்பட்ட பின்னரே ஆட்சியர் அங்கிருந்து சென்றார்.

இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின், விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் கே.சாமுவேல்ராஜ் விடுத்த அறிக்கையில், (3.12.09) "தலித் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் மாவட்ட ஆட்சியர் செயல்பட்டதை தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாராட்டுகிறது; மேலும், நரிக்குடி ஒன்றியம் இருஞ்சிறை கிராம வழக்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்நீதிமன்றத்திற்கு சென்று அக்கிராமத்தில் தீண்டாமை உள்ளது என வெளிப்படையாக வாக்குமூலம் அளித்ததையும் பாராட்டுகிறோம் என்று குறிப்பிட்டார்.

22 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்போம்: கே.பாலகிருஷ்ணன்


தமிழகத்தில் புறம்போக்கு நிலத்தை யார் ஆக்கிரமித்திருந்தாலும் அதை மீட்டு ஏழைகளுக்கு தரும்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் ஓயாது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சிறுதாவூர் நிலப்பிரச்சனையில் தமிழக முதல்வரின் திசைதிருப்பும் நடவடிக்கைகளை கண்டித்தும், உண்மை நிலையை விளக்கியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்போரூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் எம்.மனோகரன் தலைமை தாங்கினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஜி.மோகனன், மாவட்டக்குழு உறுப்பினர் இ.சங்கர், பகுதிச் செயலாளர் எம்.அழகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.நேரு, செயலாளர் சி. பாஸ்கரன், ஆர்.மணி மற்றும் பலர் பேசினர்.

இந்த பொதுக்கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு கிராமத்தில் 415 விவசாயிகளின் சாகுபடி நிலங்களை நில உரிமையாளர்களுக்கு தெரியாமலே விற்பனை செய்துள்ள கொடுமை நடந்துள் ளது. மாநிலம் முழுவதும் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. நிலமோசடியை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி போராடி வருகிறது. அந்த வகையில்தான் நீதிபதி தினகரன் ஆக்கிர மித்து வைத்துள்ள நிலத்தையும் மீட்பதற்கு போராட்டம் நடத்தினோம். ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு, போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சி மீது பாய்வதில் என்ன நியாயம்? என்பதை முதல்வர் கருணாநிதிதான் விளக்க வேண்டும் என்றார்.

காவேரிராஜபுரமாக இருந்தாலும், சிறுதாவூராக இருந்தாலும் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டெடுக்க மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும். ஏழைகள் மீது அக்கறை கொண்ட முதல்வர் என்றால் இந்த ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டெடுத்து இரண்டு ஏக்கர் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் கருணாநிதி ஏழைகளுக்கு கொடுத்திருக்க வேண்டாமா? சிறுதாவூர் நிலத்தை மீட்டுக் கொடுப்பதில் தயக்கம் இருப்பதால்தான் வழக்கை கிடப்பில் போட்டுள்ளார்...

அரசியல் ஆதாயத்திற்காக கொள்கைகளை விலைபேசும் பழக்கம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு கிடையாது. நிலத்தை யார் ஆக்கிரமித்திருந்தாலும் மீட்டெடுத்து அடித்தட்டு ஏழை மக்களுக்கு தரும்வரை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஓயாது; மாநிலம் முழுவதிலும் உள்ள 22 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்களையும் மீட்டெடுக்க தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம்.

இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார். (தீக்கதிர், 2.12.09)

செவ்வாய், 8 டிசம்பர், 2009

பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட நிலம் எவ்வளவு? - பி.ஆர்.நடராஜன் எம்.பி. கேள்வி

பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட நிலம் எவ் வளவு என்று மார்க்சிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர்கள் பதில் அளித் துள்ளனர்.

நிலச்சீர்திருத்தங்கள் ஆணையச் சட்டத்தின் மூலம் கடந்த மூன்றாண்டு களில் ஒவ்வொரு மாநிலத் திலும் பழங்குடியினருக்கு அளிக்கப்பட்ட நிலத்தின் விவரம் என்ன என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் எழுப்பிய வினாவிற்கு, அமைச்சர் பதிலளித்துள்ளார்.

மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் இணை அமைச் சர் டாக்டர் துஷார்பாய் ஏ. சௌத்திரி எழுத்துமூலம் பதிலளிக்கையில், ‘நிலம் மற்றும் அதன் மேலாண்மை’ என்பது மாநிலப் பட்டிய லில் வருகிறது என்றும், ஆயினும் மத்திய அரசின் சார்பில் இயங்கும் நிலவளத் துறை, மாநிலங்களில் அமல் படுத்தப்படும் நிலச்சீர் திருத் தங்களை ஒருங்கிணைத் திடும் ஓர் அமைப்பாக செயல் பட்டு வருகிறது என்றும் கூறினார். மேலும், மாநிலங் கள் ரீதியாக பழங்குடியி னருக்கு அளிக்கப்பட்டுள்ள உபரி நிலங்களின் விநியோ கம் தனியே இணைக்கப்பட் டிருக்கிறது என்று கூறினார்.

அந்த பட்டியலில், 2007 ஆம் ஆண்டில் மொத்தம் 7 லட்சத்து 95 ஆயிரத்து 886 ஏக்கர் நிலம் விநியோகிக்கப் பட்டிருக்கிறது. இதில் மேற்கு வங்கத்தில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 931 ஏக்கரும், தமிழ் நாட்டில் 320 ஏக்கரும் விநி யோகிக்கப்பட்டிருக்கிறது.

2008ஆம் ஆண்டில் மொத் தம் 7 லட்சத்து 79 ஆயிரத்து 858 ஏக்கர் நிலம் விநியோ கிக்கப்பட்டிருக்கிறது. இதில் மேற்கு வங்கத்தில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 394 ஏக்கரும், தமிழ்நாட்டில் 320 ஏக்கரும், புதுச்சேரியில் நிலம் எதுவும் விநியோகிக் கப்படவில்லை.

2009ஆம் ஆண்டில் மொத் தம் 7 லட்சத்து 89 ஆயிரத்து 288 ஏக்கர் நிலம் விநியோ கிக்கப்பட்டதில், மேற்கு வங் கத்தில் 2 லட்சத்து 22 ஆயி ரத்து 394 ஏக்கரும், தமிழ் நாட்டில் 320 ஏக்கரும் புதுச் சேரியில் நிலம் விநியோ கிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்த மூன்றாண்டுகளில் நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட நிலத் தின்அளவு என்ன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர். நடராஜன் எழுப்பிய வினாவிற்கு, அமைச்சர் டி.நெப்போ லியன் பதிலளித்துள்ளார்.

அமைச்சர் எழுத்து மூலம் பதிலளிக்கையில், உபரி நிலங்கள் கையகப் படுத்தல் மற்றும் விநியோ கம் தொடர்பாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை மற் றும் நிலச்சீர்திருத்தங்கள் துறை கவனித்து வருகின் றன என்றும், அவற்றிடமி ருந்து பெறப்பட்ட விவரங் களின் அடிப்படையில், கடந்த மூன்றாண்டுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட நிலத் தின் விவரம் தனி இணைப் பாகத் தரப்பட்டிருக்கிறது என்றும் கூறினார்.

இவ்வாறு அளிக்கப்பட் டுள்ள இணைப்பில், 2007 ஆம் ஆண்டில் மொத்தம் 18 லட்சத்து 33 ஆயிரத்து 129 ஏக்கர் நிலம் விநியோகிக்கப் பட்டிருக்கிறது. இதில் மேற்கு வங்கத்தில் 3 லட்சத்து 85 ஆயிரத்து 4 ஏக்கரும், தமிழ்நாட்டில் 20 ஆயிரத்து 999 ஏக்கரும், புதுச்சேரியில் 640 ஏக்கரும் விநியோகிக் கப்பட்டிருக்கின்றன.

2008ஆம் ஆண்டில் மொத்தம் 18 லட்சத்து 32 ஆயிரத்து 556 ஏக்கர் நிலம் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இதில் மேற்கு வங்கத்தில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 777 ஏக்கரும், தமிழ்நாட்டில் 71 ஆயிரத்து 192 ஏக்கரும், புதுச்சேரியில் 640 ஏக்கரும் விநியோகிக்கப்பட்டிருக் கின்றன.

2009ஆம் ஆண்டில் மொத் தம் 18 லட்சத்து 01 ஆயிரத்து 833 ஏக்கர் நிலம் விநியோ கிக்கப்பட்டதில், மேற்கு வங்கத்தில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 777 ஏக்கரும், தமிழ்நாட்டில் 71 ஆயிரத்து 262 ஏக்கரும், புதுச்சேரியில் 640 ஏக்கரும் விநியோகிக் கப்பட்டிருக்கின்றன என்று பதிலில் கூறப்பட்டுள்ளது. (தீக்கதிர், 3.12.09)

தலித் மக்களின் நிலங்களை எடுக்க அரசு முயற்சி - கே.பி. பெருமாள்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் தமிழ்நாடு அரசு சிப்காட் அமைத் திட நிலம் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.

ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட முப்புலிவெட்டி, மேட்டூர், லட்சுமிபுரம், சுப்பிரமணியபுரம், மேலமீனாட்சிபுரம், தெற்கு ஆவரங்காடு, வடக்கு பரம்பூர், ஓட்டப்பிடாரம், தெற்கு பரம்பூர் ஆகிய கிராமங்களிலும், குறுக்குச்சாலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட கீழ மீனாட்சிபுரம், ராமச்சந்திராபுரம் ஆகிய 11 கிராமங்களின் விவசாய விளைநிலங்களில் 1553.85 ஏக்கர் நிலத்தை அரசு கையகப் படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இந்த விளைநிலங்கள் முழுவதும் கரிசல் பூமி. தற்போது 90சதவீத நிலங்கள் கடந்த மூன்றாண்டு காலமாக விவசாயம் செய்து வருகிற பகுதி என்று அரசின் அடங்கலில் உள்ளது. இங்கு உளுந்து, பாசிபயறு, தட்டை பயிறு, பருத்தி, எள், திணை, சோளநாத்து, சூரியகாந்தி, மக்காச்சோளம் போன்றவை களை பிரதானமாக விவசாயம் செய்து வரு கின்றனர்.

இந்த 11 கிராமங்களிலும் 15 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். 1500 குடும் பங்கள் இந்த விளைநிலங்களை பயன்படுத்தி விவசாயம் செய்கின்றன. இதில் 70சதவீத நிலங்கள், தலித் மக்களுடைய நிலங்களாகும். இந்த பகுதியில்தான் பெரும்பகுதியான தலித்துகள் நிலஉடைமையாளராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியபுரம், லெட்சுமிபுரம் கிராமங் களில் ஊரைச்சுற்றி நிலங்கள் இருக்கின்றன. இந்த நிலங்களை எடுத்தால் அங்கு மக்கள் குடியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவர்களுடைய வீடுகள் தவிர மற்ற நிலங்கள் முழுவதையும் அரசு எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.

ஆடு, மாடு, கோழிகள் கூட மேய்வதற்கு இந்த கிராமங்களில் நிலம் இல்லாமல் போய்விடும். இந்த இரண்டு கிராமங்களிலும் சுகாதார வசதிகள், பஸ் போக்குவரத்து, நல்ல சாலை வசதிகள், சுப்பிரமணியபுரத்தில் பள்ளிக்கூட வசதி இல்லை, அங்கன்வாடி (பாலகர் பள்ளி) பள்ளி கூட இல்லை. இந்த இரண்டு கிராம மக்களும் பிரதான சாலைக்கு செல்ல வேண்டுமானால் 2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும். கடை வீதிக்கு செல்ல வேண்டுமானால் 4 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும்.

இப்படி எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஊரில் குடியி ருக்க ஒரே காரணம், தங்களின் சொந்த நிலம் இங்கு உள்ளது. அதன் வருவாயில் தங்கள் வாழ்க்கையை இங்கு செலுத்த முடிகிறது என்ற நம்பிக்கையில் இந்த இரண்டு கிராமங் களிலும் மக்கள் குடியிருக்கிறார்கள்.

அரசு சிப்காட்டிற்கு நிலம் எடுக்கப் போகி றது என்ற செய்தி வெளியான உடன் அனைத்து கிராமங்களின் சார்பில் 26.10.09ல் தாலுகா அலுவலகத்திற்கு பேரணியாக சென்றனர்.

தமிழக அரசு, நிலம் இல்லாத ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்குகிறோம் என்று பல புள்ளி விவரங்களை தெரிவித்தும், பல விளம்பரங்கள், பிரச்சாரங்களையும் நடத்தி வருகிறது.

ஆனால் மறுபுறுத்தில், தலித்துகள் பெரும்பகுதியினர் நில உடைமையாளராக உள்ள இந்த பகுதியில், அவர்களுடைய நிலத் தை சிப்காட்டிற்காக அரசு எடுத்து விட்டால் அந்த தலித்துகள் நிலமற்ற கூலிகளாக மாற வேண்டிய நிலையை தமிழக அரசே உருவாக்குகிறது. அதாவது நிலம் இருப்பவர்களை நிலம் இல்லாதவர்களாகவும், நிலம் இல்லாத வர்களை நிலம் உள்ளவர்களாகவும் அரசு மாற்றுகின்ற கொள்கை இதில் புலப்படும். தமிழக அரசின் நில விநியோகத் திட்டத்தில் முரண்பாடான நிலையை இதன் மூலம் உணர முடிகிறது.

எனவே, ஓட்டப்பிடாரம், பகுதியில் சிப் காட்டிற்கு விளை நிலங்களை அரசு எடுப்பதை நிரந்தரமாக கைவிடும் வரையும், சிப்காட்டை ஓட்டப்பிடாரத்திற்கு வடக்கில் உள்ள வனத் துறைக்கு சொந்தமான இடத்தில் அமைத்திட வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மக்களை திரட்டி தொடர்ந்து போராடும்.
- (3.12.09 தீக்கதிர் கட்டுரை)

வாச்சாத்தி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

தருமபுரி அமர்வு நீதி மன்றத்தில் நடந்துவரும் வாச்சாத்தி வழக்கு டிசம்பர் 23-ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் வாச்சாத்தி கிராமத்தில் 1992 ஆம் ஆண்டு மலைவாழ் மக்களை சார்ந்த 18 பெண்கள் வனத்துறையை சேர்ந்தவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதுதொடர்பாக வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்துறையினர் 269 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கும் மாற்றப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 16 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் கடந்த ஜுன் மாதம் தருமபுரி அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. ஆகஸ்ட் 20,21 அன்று மாவட்ட நீதிபதி எஸ். குமரகுரு தலைமையில் நடைபெற்ற குறுக்கு விசாரணையில், வனத்துறையினரால் பாதிக்கப்பட்ட 18 பெண்களில் முதல் நாள் ஜெயா, சித்திரா, அமுதா, காந்தி, லட்சுமி ஆகிய ஐந்து பேரும் இரண்டாம் நாள் முத்துவேடி, பாப்பாத்தி, மல்லிகா மாரிக்கண்ணு ஆகிய நான்கு பேரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கூறினர்.

நவம்பர் 13 அன்று நடை பெற்ற விசாரணையில் பாதிக்கப்பட்ட 18 பெண்களில் மீதமுள்ள செல்வி, தேன்மொழி, காந்திமதி உள்ளிட்ட ஒன்பது பேரும் தங்களுக்கு நேர்ந்த கொடு மைகளை நீதிபதியிடம் கூறினர். பின்னர் இவ்வழக்கு நவம்பர் 30 அன்று நடைபெறுவதாக இருந்தது. சிறை வார்டன் லதாபாய் சாட்சியமளிக்க வந்திருந்தார். ஆனால், மாவட்ட நீதிபதி எஸ். குமரகுரு விடுப்பு என்பதால், டிசம்பர் 23 ம் தேதிக்கு வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

வியாழன், 19 நவம்பர், 2009

உத்தப்புரம் பிரச்சனை: ஆட்சியர், எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

உத்தப்புரம் பிரச்சனை தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை (16.11.09) அன்று உத்தரவிட்டது.

உத்தப்புரம் தலித் மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் குறித்தும், தாக்குதலால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணம், தவறிழைத்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை உத்தப்புரத்திலும் தமிழகத்தின் மற்ற அடையாளங் காணப்பட்ட வன்கொடுமை நடக்கும் இடங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இவரது மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், காவல்துறை நடத்திய தாக்குதல் குறித்து விசா ரணை நடத்த உத்தரவிட்டு, விசாரணை நீதிபதிகள் அளித்த அறிக்கையின்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் உத்தப்புரம் குறித்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.முருகேசன், எஸ்.நாகமுத்து ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் லஜபதிராய், வன்கொடுமை தடுப்புச்சட்டப்படி உத்தப்புரத் தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

புதன், 18 நவம்பர், 2009

காட்டுக்கீரை பறித்த தலித் பெண்கள் மீது தாக்குதல்


கோவை துடியலூர் அருகே உள்ளது பன்னிமடை ஊராட்சி. இங்குள்ள கொண்டல்சாமி நகரில் கவிதா, துளசிமணி, தெய்வானை ஆகியோர் வசித்து வருகின்றனர்.

அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வந்ததால் செங்கல் சூளைகள் இயங்கவில்லை. இதனால் அவர்களுக்கும் வேலையில்லை.

எனவே திங்களன்று (16.11.09) மாலை உணவுக்காக காட்டுக்கீரை பறிக்கச் சென்றனர். அவர்கள் கீரை பறித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்தின் உரிமையாளர் கோபால் (எ) ராஜகோபால் அவர்களது சாதியைக் குறித்து இழிவாகப் பேசியதுடன் கையில் வைத்திருந்த தடியால் மூன்று பேரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த தலித் பெண்கள் மூவரும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக கவிதா துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில், போலீசார் முதலில் சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் தகவலறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட நிர்வாகி வி.பெருமாள் தலையிட்டு பேசியதையடுத்து வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கொங்குநாடு
இந்நிலையில் தலைமறைவாக உள்ள ராஜகோபாலுக்கு ஆதரவாக கொங்குநாடு முன்னேற்றப் பேரவையினர் வியாழனன்று இரவு துடியலூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தோட்டத்தில் பெண்கள் காய்கறி, கீரை மற்றும் பழங்களைத் திருடியதாகப் புகார் அளித்துள்ளனர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆறுதல்
இந்நிலையில் வெள்ளியன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். முகாம் மருத்துவரை அணுகி அவர்கள் சிகிச்சை விபரங்கள் குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம் தெரிவித்ததாவது:

“தலித் பெண்களை ஆதிக்க வெறியோடு தாக்கிய ராஜகோபாலை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும். இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடும்’’ என்றார்.

சந்திப்பின் போது அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் வி.பெருமாள், என்.ஜாகீர், மார்க்சிஸ்ட் கட்சியின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளர் ஆர்.கேசவமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செவ்வாய், 17 நவம்பர், 2009

போராட்டம் வெற்றி.... வேலூர் குறவன், குரும்பன்ஸ் மக்களுக்கு சாதிச் சான்றிதழ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தின் அயராத போராட்டத்தைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் குறவன் மற்றும் குரும்பன்ஸ் இன மக்களுக்கு ஒரு மாதத்திற்குள் சாதிச் சான்றிதழ் வழங்குவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

இக்கோரிக்கைக்காக சனிக்கிழமையன்று (14.11.2009) மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்மை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களிடம் இதனை அவர் தெரிவித்தார்.

கடந்த 4-ம் தேதி இதே கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் நடைபெற்றது. பின்னர், மலைவாழ் மக்கள் சங்க தலைவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்தபோது, ஆட்சியர் அவர்களைஅவமானப்படுத்தினார்.

ஆட்சியரின் இத்தகைய செயலை கண்டித்து வெள்ளியன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்பின்னர் தலைவர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், ஒரு மாதத்திற்குள் குறவன், குரும்பன்ஸ் இன மக்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்குவதாக உறுதியளித்தார். மேலும், பழங்குடி மக்களை இழிவுபடுத்தும் நோக்கம் எதுவும் தமக்கு இல்லை என்றும், கம்யூனிஸ்ட் கட்சியை தாம் மிகவும் மதிப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

திங்கள், 16 நவம்பர், 2009

குறவன் இனச் சான்றிதழ் கேட்டு போராட்டம் : வேலூர் மாவட்டத்தில் காவல்துறை அடக்குமுறை

குறவன் இன மக்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டு மனு கொடுக்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை அவமரியாதை செய்த மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து வெள்ளியன்று(13.11.2009) தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குறவன் இன மக்களுக்கு சாதிச்சான்றிதழ கேட்டு, கடந்த 4- ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் குறவர் இன மக்கள் சங்கத்தினர் இணைந்து பட்டினிப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளருமான பெ.சண் முகம், கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் ஏ.நாராயணன், குறவர் பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் ஏ.வி.சண்முகம் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரனை சந்தித்து மனு அளித்து முறையிட்டனர்.

அப்போது, எங்களின் கோரிக்கைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்று தலைவர்கள் கேட்டபோது, கோபமடைந்த ஆட்சியர், தலைவர்களை “வெளியே போங்கள்'' என்று கூறிஅவமானப்படுத்தினார்.

இச்சம்பவத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்காமல் வியாழன் இரவு 10 மணியளவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு வந்து அனுமதி இல்லை என்பதைத் தெரிவித்தனர்.

மேலும், பெருமளவு காவல்துறையினரை அந்த பகுதியில் குவித்து, மறுநாள் ஆர்ப்பாட்டம் நடத்தும் இடத்திற்கு வரும் கட்சியினரை வழியிலேயே மடக்கி கைது செய்தனர்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.டி.சங்கரி, எம்.வி.எஸ்.மணி ஆகியோரை வலுக்கட் டாயமாக தரதரவென்று இழுத்துச் சென்று போலீஸ் வேனில் ஏற்றினர். பின்னர் ஆர்ப்பாட்டத்திற்காக வந்து கொண்டிருந்த, பெ.சண்முகம், டில்லிபாபு எம்எல்ஏ, ஜி.லதா எம்எல்ஏ உள்ளிட்ட தலைவர்கள் வந்த வாகனத்தையும் வழிமடக்கி கைது செய்ய முற்பட்டனர். இதனால் வாக்குவாதம் எழுந்தது. முடிவில் டிஎஸ்பி பாலசந்தர், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால் உங்களைக் கைது செய்கிறோம் என்று சொல்ல, பதிலுக்கு தலைவர்களும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று உறுதியுடன் இருக்கவே, பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு மாவட்ட ஆட்சியர் இல்லை. கூட்டத்தில் இருப்பதாக கூறினர். வெகுநேரமாகியும் மாவட்ட ஆட்சியர் வராததால் கோபமுற்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர் காவல்துறையினரின் ஏற்பாட்டின் பேரில், தலைவர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

சனி, 14 நவம்பர், 2009

வாச்சாத்தி வழக்கு: நவ. 30-க்கு ஒத்திவைப்பு


தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம், வாச்சாத்தி கிராமத்தில் 1992-ஆம் ஆண்டு மலை வாழ்மக்களை சேர்ந்த 18 பெண்கள் வனத்துறையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட் டனர்.

இதுதொடர்பாக வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த் துறையைச் சேர்ந்த 269 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிபிஐ விசாரணைக்கும் மாற்றப்பட்டது.

அதன்பின் கடந்த 16 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, கடந்த 2009-ஜூன் மாதம் தருமபுரி அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. ஆகஸ்ட் 20, 21 தேதிகளி மாவட்ட நீதிபதி எஸ்.குமரகுரு தலைமையில் நடைபெற்ற குறுக்கு விசாரணையில் வனத்துறை யினரால் பாதிக்கப்பட்ட 18 பெண்களில், ஜெயா, சித்ரா, அமுதா, காந்தி, லட்சுமி ஆகிய ஐந்து பேர் முதல் நாளிலும், முத்துவேடி, பாப்பாத்தி, மல்லிகா, மாரிக்கண்ணு ஆகிய நான்கு பேர் இரண்டாம் நாளிலும் சாட்சியம் அளித்தனர்.

அடுத்தகட்டமாக நவம்பர் 13 அன்று நடைபெற்ற குறுக்கு விசாரணையில், எஞ்சிய செல்வி, தேன்மொழி, காந்திமதி, பாப்பாத்தி, சுகுணா, கம்சலா, பழனியம்மாள், பூங்கொடி, சரோஜா ஆகிய ஒன்பது பேர் தங்களுக்கு நடந்த கொடுமைகளை நீதிபதி முன் சாட்சியளித்தனர்.

இவ்வழக்கில் அரசுத் தரப்பு சிபிஐ வழக்கறிஞர் ஜெயபால், எதிர்தரப்பு வழக்கறிஞர் வெங்கடேசன் ஆகியோர் வாதாடினர். இதன்பின்னர் வழக்கு விசாரணையை நவcபர் 30-ம் தேதிக்கு நீதிபதி எஸ். குமரகுரு ஒத்தி வைத்தார்.

விசாரணைக்காக வாச்சாத்தி பெண்கள் வந்திருந்த போது தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாநில துணைச்செயலாளர் பி.டில்லிபாபு எம்.எல்.ஏ., விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன் மற்றும் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே. பூபதி, மாவட்டச் செயலாளர் கிரைச மேரி ஆகியோர் உடனிருந்தனர்.

தலித் மக்களின் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம், நவம்பர் 12, 13 (2009)ஆகிய தேதி களில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகா, ஒட்டப் பிடாரம் பஞ்சாயத்திற்குட்பட்ட 1533 ஏக்கர் நிலங்களை சிப்காட் இரண் டாம் கட்டத்திற்காக கையகப்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலங்களில் 70 சதவீதம் தலித் மக்களுக்கு சொந்தமானவை. இவர்களுக்கு இது மட்டுமே வாழ்வாதாரம். அந்தப் பகுதியில் நன்கு விளையும் நிலங்களும், நிலத்தடி நீர்மட்டம் போதுமான அளவும் விவசாயம் மற்றும் குடிநீருக்கு லாயக்கான நிலத்தடி நீர் உள்ள பகுதியும் இதுவே. இந்த நிலங்களின் சொந்தக்காரர்களுக்கு இதைத் தவிர வேறு வாய்ப்புகள் கிடையாது.

ஆனால் இந்த இடத்திலிருந்து அதிகபட்சமாக பத்து கிலோமீட்டர் தூரத்திலும், குறைந்தபட்சம் 4 கிலோ மீட்டர் தூரத்திலும் வனத்துறைக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது. இதில் அபூர்வ தாவரங்களோ, விலங்கினங்களோ கிடையாது. வேறு பெரிய மரங்களும் கிடையாது. வகைப்படுத்துதலில் மட்டுமே அது வனப்பகுதியாக உள்ளது. இதுதவிர அரசு தரிசு நிலங்களும் உள்ளன.

எனவே, மேற்கண்ட 1533 ஏக்கர் அளவுள்ள அந்த இடம் கையகப்படுத்தப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே ஒட்டப்பிடாரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் சிப்காட் வளாகத்திற்காக தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும்.

வியாழன், 12 நவம்பர், 2009

சிறுதாவூரில் மெத்தனம் காட்டுவது யார்? - முதலமைச்சருக்கு சிபிஎம் கேள்வி

காவேரிராஜபுரத்தில் நீதிபதி தினகரன் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்டு, நிலமற்ற தலித் மக்களுக்கு வழங்கும் வகையில், நிலமீட்புப் போராட்டத்தை நடத்தப் போவதாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்த நிலையில், அப்போராட்டத்தை ஒடுக்க முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசும் காவல்துறையும் தீவிரமாக இயங்கின. இப்போராட்டத்தை முதல்வர் கருணாநிதியும் தனக்கே உரிய பாணியில் விமர்சித்தார்.

அதற்குப் பதிலளித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் (9.11.2009) அன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

காவேரிராஜபுரத்தில் நீதிபதி பி.டி.தினகரன் ஆக்கிரமிப்பில் இருந்த அரசுப் புறம்போக்கு நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு வழங்கும் போராட்டம் தொடர்பாக முதலமைச்சர் கலைஞர் கரு ணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுதாவூர் நிலம் பற்றி தற்போது மார்க்சிஸ்ட் கட்சியினர் அவசரம் காட்டவில்லை” என்று குற்றஞ்சாட்டியுள்ளது, எந்த விதத்திலும் பொருத்தமானது அல்ல.

“தற்போது” என்று முதலமைச்சர் கூறியுள்ளது அஇஅதிமுகவுடன் மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி உடன்பாடு கொண்ட பின்னணியைக் குறிப்பதாக உள்ளது. அவ்வாறு உடன்பாடு கொண்டு தேர்தல் களத்தில் நின்றிருந்த போதே திமுக தரப்பில் சிறுதாகூர் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “சிறுதாவூர் நிலப் பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு எவ்வித மாற்றமும் இன்றித் தொடர் கிறது” என்று தெளிவுபடுத்தப் பட்டது. அதே காலகட்டத்தில் இப்பிரச்சனை தொடர்பான விசா ரணை ஆணையத்தின் முன்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நேரடி சாட்சியம் அளிக்கப்பட்டது மட்டுமின்றி, கட்சியின் சார்பில் வழக்கறிஞர் மூலமான வாதங்களும் முன்வைக்கப்பட்டு விட்டன.

இப்பிரச்சனையில் இறுதி அறிக்கை தர வேண்டிய விசாரணை ஆணையத் தலைவர் நீதிபதி சிவசுப்பிரமணியன், வேறொரு விசார ணையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதால் சிறுதாவூர் பிரச்சனை கிடப்பில் போடப்பட்டுள்ளதே தவிர, மார்க்சிஸ்ட் கட்சி அவசரம் காட்டாததால் அல்ல.

மேற்குவங்கத்துக்கு ஒரு சட்டம், தமிழ்நாட்டுக்கு ஒரு சட்டம் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் செயல்படக்கூடாது என்றும் முதல மைச்சர் கூறியுள்ளார். நிலச்சீர்திருத்தச் சட்டம் மேற்குவங்கத்தில் எவ்வளவு சிறப்பாக அமல்படுத்தப்பட் டுள்ளது என்பதை, மண்டல் கமிஷன் அறிக்கையே பதிவு செய்துள்ளதையும், தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தச் சட்டம், மறைந்த அண்ணா அவர்களாலேயே ‘உச்சவரம்பா, மிச்ச வரம்பா’ என்று ஏகடியம் பேசப்பட்ட நிலைமாற வில்லை என்பதையும் மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விழைகிறது.

காவேரிராஜபுரத்தைப் பொறுத்தவரை, நீதிபதி தினகரன் தரப் பிலேயே ஆக்கிரமிப்பு வேலிகள் அகற்றப்பட்டுவிட்ட நிலையில், அந்நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு நீதிமன் றத் தடை யாணை ஏதுமற்ற பின்னணியில், தமிழக அரசு மெத்தனம் காட்டக் கூடாது என்பதற்காக அமைதியான முறையில் நீலமீட்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாட்டில் எந்த முரண்பாடும் இல்லை. ஆக்கிரமிப்பு நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி ஒத்துழைப்பை நல்கும். நிலமீட்பு போராட்டத்தை சட்டம் - ஒழுங்குப் பிரச்சனையாக சித்தரிக்க முதலமைச்சர் முற்பட வேண்டாம் எனவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இவ்வாறு என்.வரதராஜன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தலித்துகள் மீது வெறித் தாக்குதல்: நம்பிவயல் கிராமத்தில் அராஜகம்

நம்பிவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலையும், காவல்துறையினரின் அலட்சியத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், நம்பிவயல் கிராமத்தில் ஏர்டெல் நிறுவனம் ஒன்று, புகழேந்தி என்பவர் இடத்தில் டவர் அமைத்துள்ளது. கடந்த 21.10.2009 அன்று இந்த டவர் பராமரிப்பு பணிக்காக வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் அங்கு சென்று பணி முடித்து திரும்பியிருக்கிறார்.

அவரை புகழேந்தி என்பவர் வழிமறித்து நீ எந்த ஊர்? உன்னுடைய சாதி என்ன? எனக்கு ஏன், வணக்கம் செய்யவில்லை? என்று கேட்டு தகராறு செய்துள்ளார். விஜயக்குமார் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை தெரிந்து கொண்டு சாதியைச் சொல்லி இழிவாக பேசி புகழேந்தி அடித்திருக்கிறார். கீழே விழுந்தவரை உயிர்நிலை யில் மிதித்தும் இருக்கிறார். இதனால் அவர் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

இவரை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல கூட புகழேந்திக்கு பயந்து யாரும் முன்வரவில்லை. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர் பட்டுக்கோட்டை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறார். புகழேந்தி மீது புகார் கொடுக்கப்பட்டும் காவல் துறை எந்தவித நடவடிக் கையும் எடுக்கவில்லை.

இதனைக் கண்டித்து சில ஜனநாயக அமைப்புகள் இணைந்து பட்டுக்கோட்டையில் 2.11.2009 அன்று தர்ணாப்போராட்டத்தை நடத்தியிருக்கின்றன. இதற்கு அடுத்த நாள் நம்பி வயல் கிராமத்தில் குபேந்தி ரன் வீடு, தங்கத்துரை டி.வி. மெக்கானிக் கடை ஆகியவை புகழேந்தி மற்றும் அவரின் உறவினர்களால் தாக்கப்பட்டு சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளது. மேலும் பக்கத்தில் உள்ள இப்ராகிம் என்பவரின் டீ கடையையும் தாக்கியுள்ளார்கள்.

இதனால், ஆத்திரமுற்ற பொதுமக்கள் சாலை மறியல் செய்திருக்கின்றனர். ஆனாலும் போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய மறுக்கின்றனர். பட்டுக்கோட்டை கோட்டாட்சியர், நேரில்சென்று விசாரணை மேற்கொண்டார்.

அதன் அடிப்படையில் குற்றவாளிகளில் கதிரேசன், பிரசாத் என்ற இருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் முதல் குற்றவாளி புகழேந்தி கைது செய்யப்படவில்லை. இது அப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு குற்றச் செயல்களுக்கு காரணகர்த்தாவான புகழேந்தியை காவல்துறை கைது செய்ய ஏன் தயக்கம் காட்டுகிறது என்பது புதிராக உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன், தஞ்சை மாவட்ட காவல் துறையினர் குற்றவாளி களை கைது செய்து சட்டப் படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் கூறியுள்ளார்.



நம்பிவயல் தாக்குதல்
சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய சாதிவெறியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வன் கொடுமை பாதிப்பு அரசு நிதி வழங்கிடவும் வற்புறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.செல்வம் தலைமை தாங்கினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சின்னை.பாண்டியன் கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை வலியுறுத்தி மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.சாம்பசிவம், திருவோணம் ஒன்றியச் செயலாளர் கே.ராமசாமி, நகரச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ. கோவிந்தசாமி, எம்.அய்யாவு, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ஏ.மூக்கையன், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.வாசு, கிளைச் செயலாளர் எஸ்.ஏங்கெல்ஸ் மற்றும் நம்பிவயல் கிராம மக்கள் கட்சி ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



தீண்டாமை ஒழிப்பு முன்னணி
கண்டனம்

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சின்னை. பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

குற்றவாளி புகழேந்தியை காவல்துறையினர் கைது செய்யவில்லை. ஆனால் புகழேந்தி போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்க மாக காட்டிக் கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. இதனால்தான் வன்கொடுமைக் குற்றம் புரிந்தும், வீடு கடைகளை அடித்து நொறுக்கியதற்கும் காரணமான புகழேந்தியை காவல்துறை கைது செய்ய மறுக்கிறதா? சாதிய ஆதிக்க சக்திகளுக்கு துணைபோகிறதா?

பட்டுக்கோட்டை பகுதியில் காவல்துறையின் நடவடிக்கை வன்கொடுமை தாக்குதலுக்கு உள்ளாகும் தலித் மக்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. மதுக்கூர் ஒன்றியம் சொக்கனாவூர், பட்டுக்கோட்டை ஒன்றியம் தாமரங்கோட்டையிலும் தலித்துக்களை சாதி ஆதிக்க வெறியர் தாக்கிய போதும் காவல்துறை அவர்களுக்கு ஆதரவாக செயல் பட்டது. தொடர்ந்து சாதி ஆதிக்க வெறியருக்கு ஆதரவாக செயல்படும் பட்டுக்கோட்டை சரக காவல்துறையை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தஞ்சை மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இதில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.

சாதிவெறியில் நடந்த கவுரவக் கொலை

பழநி சாலைப்புதூர் அழகாபுரியில் வசித்து வந்தவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த அம்மாபட்டியன் மகன் பத்ரகாளி (வயது 25). பத்ரகாளியும், பழநி சண்முகாநதி பகுதியைச் சேர்ந்த கள்ளர் சமூகத்தவரான சீனிவாசனின் (வயது 65) மகள் ஸ்ரீபிரியா (வயது 21)-வும் வெவ்வேறு கல்லூரியில் பி.எட் பட்ட வகுப்பு படித்து வந்த நிலையில், பழநி அருகே அழகாபுரியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் பயிற்சி ஆசிரியர்களாக கடந்த ஆண்டு வேலை செய்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதற்கு ஸ்ரீபிரியா வீட்டினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி பத்ரகாளியும், ஸ்ரீபிரியாவும் சேலத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.

இதையறிந்து பழநியில் இருந்த வீட்டைக் காலி செய்து தமது குடும்பத்தாருடன் திருச்சிக்குச் சென்றுவிட்ட சீனிவாசன், புதுமணத் தம்பதிகளை தானும் தனது உறவினர்கள் மூலமும் மிரட்டியுள்ளார்.

எனவே பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஸ்ரீபிரியா தமக்குப் பாதுகாப்புக் கோரி மனுக் கொடுத்திருந்தார். பாதுகாப்புக் கருதி உடுமலை அருகே மடத்துக்குளம் தேவேந்திரர் வீதியில் உள்ள பத்ரகாளியின் அக்கா ராணி வீட்டில் பத்ரகாளியும், ஸ்ரீபிரியாவும் தங்கியிருந்தனர்.

கடந்த 4-ம் தேதி சீனிவாசன், அவரது உறவினர்கள் ஆசைத்தம்பி என்கிற ராஜ்கண்ணன் (27), பண்ணாடி (30) ஆகியோர் மடத்துக்குளத்துக்கு வந்து ஸ்ரீபிரியாவைச் சந்தித்துள்ளனர். திருச்சியில் அம்மாவின் உடல் நிலை மிக மோசமாக இருப்பதால் நேரில் வந்து பார்த்துச் செல்லும்படி அவர்கள் அழைத்துள்ளனர்.

அப்போது பத்ரகாளி வெளியே சென்றிருந்தார். எனவே இவர்கள் அழைப்பதில் சந்தேகம் அடைந்த ஸ்ரீபிரியா நேரில் வர மறுத்ததுடன் வேண்டுமானால் செல்போனில் பேசுவதாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அவர்கள் திரும்பி சென்றுவிட்டனர்.

சிறிது நேரம் கழித்து அவர்கள் மீண்டும் வந்துள்ளனர். அங்கிருந்த ராணி மற்றும் பக்கத்து வீட்டுப் பெண் இருவரையும் பக்கத்தில் இருந்த அறையில் தள்ளி கதவைத் பூட்டிவிட்டு ஸ்ரீபிரியாவின் கழுத்து, மார்பு, அடிவயிறு பகுதியில் சரமாரியாகக் கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீபிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாதி கவுரவத்தை மீறி தலித் இளைஞரை திருமணம் செய்வதா? என்ற ஆத்திரத்தில் இந்தக் கொ
லையைச் செய்து விட்டு மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

உடுமலை டிஎஸ்பி ராஜா தலைமையில் போலீசார் தீவிரமாகத் தேடி வியாழக்கிழமை ஸ்ரீபிரியாவின் தந்தை சீனிவாசன், ஆசைத்தம்பி, பண்ணாடி மூவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீபிரியாவின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்குப் பின் அவரது கணவர் பத்ரகாளி குடும்பத்தாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இதேபோன்று இப்பகுதியில் 'சாதி கௌரவத்தை' பாதுகாக்கிறோம் என்று கூறிக்கொண்டு, கடந்த 2 ஆண்டு காலத்தில் மட்டும் 7 'கவுரவ' கொலைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

தடையையும் மீறி நடந்த நிலமீட்புப் போராட்டம் - கி.வரதராசன் உள்பட 500 பேர் கைது


நீதிபதி பி.டி.தினகரன் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள அரசு புறம்போக்கு மற்றும் தரிசு நிலங் களை மீட்டு நிலமற்ற தலித் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் விநியோகம் செய்திட காவேரிராஜபுரத்தை நோக்கி சென்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் மற்றும் 200 பெண்கள் உட்பட 500 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

இந்த ஒற்றைப் போராட்டத்தைத் தடுப்பதற்காக, திருவள்ளூர் மாவட்டம் முழுவதிற்குமே அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தும், காவல் துறையினர் மற்றும் அரசின் அனைத்து கெடுபிடிகளையும், மிரட்டல்களையும் மீறி இந்த போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. காவேரிராஜபுரம் கிராமத்தை காவல்துறை முழுமையாக ஆக்கிரமித்து முற்றுகையிட்டிருந்தும் தலித் மக்கள் திரளாக இந்த போராட்டத்தில் பங்கேற்று சிறைசென்றனர்.

போலீசாரின் தடை உத்தரவையும் மீறி, திட்டமிட்டபடி, தமிழ்நாடு விவசாயிகள் திங்களன்று (நவ. 9- 2009) காவேரி ராஜபுரத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக சென்றனர். அவர்களை காவல்துறையினர் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக் குழுவினர் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இம்மறியல் போராட்டம் நீடித்தது. மீண்டும் அங்கிருந்து காவேரிராஜபுரத்தை நோக்கி புறப்பட முயற்சித்த போது காவல்துறை ஐ.ஜி, டி.ஐ.ஜி ஆகியோர் தலைமையில் கூடியிருந்த போலீசார் வலுக்கட்டாயமாக அனைவரையும் கைது செய்தனர்.

இதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கி.வரதராசன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் உ.வாசுகி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கே.முகமது அலி, மாநிலப் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பொருளாளர் பெ.சண்முகம், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.வீரையன், பொதுச்செயலா ளர் எஸ்.திருநாவுக்கரசு, பொருளாளர் ஜி.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கே.செல்வராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ப.சுந்தரராசன், விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ்.எம். அனீப், பி.துளசி நாராயணன், கே. ஆறுமுகம், பி.கதிர்வேல், அ.து.கோதண்டன், வி.எம்.ராமன் (காவேரிராஜபுரம்) உள்ளிட்ட 500 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதில் சுமார் 200 பேர் பெண்களாவர். பெண்கள் கை குழந்தைகளுடன் கைதானது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மறியல் போராட்டத்தின் போது உரையாற்றிய தலைவர்கள், நீதிபதி பி.டி.தினகரன் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள நிலங்களை மாவட்ட நிர்வாகமும், முதலமைச்சரும் உடனடியாக மீட் டெடுக்க வேண்டும் என்றும், அந்த நிலங்களை இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

நீதிபதியால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை மீட்டெடுக்கும் வரை விவசாயிகள் சங்கத்தின் போராட்டம் ஓயாது என்றும், எத்தகைய மிரட்டல்களையும் செங்கொடி இயக்கம் சந்திக்கும் என்றும், அடக்கு முறைக்கு அஞ்சாது என்றும் எச்சரித்தனர்.

திங்கள், 9 நவம்பர், 2009

நிலமோசடி நீதிபதிக்கு ஆதரவாக தமிழக அரசு - திருவள்ளூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு - பெ.சண்முகம் - தலைவர்கள் கைது

திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜபுரம் கிராமத் தில், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தின கரன் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க வலியு றுத்தி தமிழ்நாடு விவசாயி கள் சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ச்சியான போராட் டங்களை நடத்தி வருகின்ற னர். இதுதொடர்பான நீதி விசாரணையை நியாயமாக நடத்த தலையிடுமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கும் புகார் அனுப்பப்பட்டுள் ளது. எனினும் தமிழக அர சும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் ஆக்கிரமிக் கப்பட்ட நிலத்தை மீட்கும் நடவடிக்கைகளை மேற் கொள்ளாமல், இதை எதிர்த்து போராடுகிற விவசாயிகளை ஒடுக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், காவேரிராஜபுரம் கிராமத் தில் நீதிபதி தினகரனால் சட்டவிரோதமாக ஆக் கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களை மீட்டு, தலித் மற் றும் நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கும் போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்தது.

2009 நவம்பர் 9 -ம் தேதி, விவசாயிகள் சங்க பொதுச்செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான கி.வரதராசன் தலைமையில் இப்போராட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தப் போராட்டத்தை சீர்குலைக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஞாயிறன்று காலை முதலே அராஜக நடவடிக்கைகளை துவக்கி விட்டன. கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஏராளமான போலீஸ் பட்டாளத்தை திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் குவித்துள்ளது. மேலும், மாவட்டம் முழு வதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவேரிராஜபுரம் கிராமத்திலும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அக்கிராமத்தைச் சேர்ந்த தலித் மக்கள் வீட்டை விட்டு வர முடியாத அளவிற்கு வீட்டுக்குள்ளேயே சிறை வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஞாயிறன்று மாலை 5 மணியளவில் போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அழைப்பின் பேரில் அவரது அலுவலகத்திற்குச் சென்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான பெ.சண்முகம், கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.செல்வராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ப.சுந்தரராசன், மாவட்டத் தலைவர்கள் கே.துளசி நாராயணன், கே.ராஜேந்திரன் ஆகியோரை காவல் துறையினர் அராஜகமாக கைது செய்தனர்.

எனினும், போராட்டத்தை முடக்க அரசு மேற்கொள்ளும் இத்தகைய கைது நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும், அரசு எத்தகைய மிரட்ட லில் ஈடுபட்டாலும், அனைத் தையும் மீறி திங்களன்று காவேரிராஜபுரம் கிராமத்தில் நிலமீட்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்தார்.

மேலும், சட்டவிரோ தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்டு முதலமைச்சரின் இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கிட நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டும் தமிழக அரசு, சட்டவிரோத நில ஆக்கிரமிப்பை பாதுகாத்திட இத்தனை சுறுசுறுப்புடன் செயல்படுவது ஏன் என்றும் தனது அறிக்கையில் அவர் கேள்வி எழுப்பினார்.

காவேரிராஜபுரத்தில் நிலமீட்பு போராட்டத்தை முடக்க விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களை அராஜகமாக கைது செய்துள்ள காவல்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வன்மையாகக் கண்டித்தது. கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

காவேரிராஜபுரம் கிராமத்தில் நீதிபதி பி.டி.தினகரன் அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு தரிசு நிலங்களை மீட்டு தலித் மற்றும் நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கிட வற்புறுத்தி திங்களன்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், விவசாயிகள் சங்க அகில இந்திய பொதுச் செயலாளருமான கி.வரதராசன் தலைமையில் போராட்டம் நடைபெற இருந்தது.

இந்நிலையில், போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விடுத்த அழைப்பின் பேரில் கண்காணிப்பாளரின் அலுவலகத்திற்கு ஞாயிறன்று மாலை 5 மணியளவில் சென்ற பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து, ஏராளமான போலீஸ் படையைக் குவித்து பொதுமக்களையும், காவேரிராஜபுரம் மக்களையும் மிரட்டி வருகின்றனர்.

பேச்சுவார்த்தைக்கு என அழைத்து விட்டு, தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது காவல்துறையின் கையாலாகாத்தனத்திற்கு எடுத்துக் காட்டாகும். தமிழக அரசின் இத்தகைய அராஜகமான போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண் டிக்கிறது.

இத்தகைய அராஜகப் போக்கை கைவிட்டு, கைது செய்துள்ள தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், மேலும், 144 தடை உத்தரவையும், குவிக்கப்பட்டுள்ள போலீசையும் திரும்பப் பெற வேண்டுமெனவும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை உறுதி செய்திட வேண்டுமெனவும், நீதிபதியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்டு தலித் மற்றும் நிலமற்றவர்களுக்கு வழங்கிட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வற்புறுத்தி கண்டனக் குரல் எழுப்பிட வேண்டுமென கட்சி அமைப்பு களையும், ஜனநாயக அமைப்புகளையும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் கூறியது.