செவ்வாய், 22 டிசம்பர், 2009

அருந்ததிய மக்களுடன் சந்திப்பு : என்.வரதராஜனுக்கு உற்சாக வரவேற்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் அருந்ததிய மக்களைச் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், குறைகளைக் கேட்டு வருகிறார்.

ஏற்கெனவே, ரெட்டி யார்சத்திரம் ஒன்றியம், பழனி ஏரியா ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சந்திப்பு இயக்கங்களில் பங்கேற்றார். புதனன்று (16.12.09) குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள சின்னழகு நாயக்கனூர், கணக்கப்பிள்ளையூர், சூலப்புரம், கூம்பூர் புதூர் ஆகிய பகுதிகளில் அருந்ததிய மக்களைச் சந்தித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் வெடிமுழக்கங்களுடனும், தப்பாட்டம், தேவராட்டம், மங்கள வாத்தியங்கள் முழங்க அவருக்கு அருந்ததிய மக்கள் வரவேற்பளித்தனர். இந்நிகழ்ச்சியையொட்டி இந்த கிராமங்கள் விழாக் கோலம் பூண்டிருந்தன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.செல்வராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் கள் கே.ரங்கசாமி, ஏ.ராஜரத்தினம், குஜிலியம்பாறை ஒன்றியப் பெருந்தலைவர் ஆர்.ஆறுமுகம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வி.தர்மர், ஆர்.தியாகராஜன், எல்.தங்கவேல், எல்.ஜெயபால், டி.சௌந்திரராஜன், பி.பாலசுப்ரமணி மற்றும் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.