செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

ஆதிக்கச் சக்திகளின் 50 ஆண்டு தடை தகர்ந்தது! - நெடி கிராம அய்யனார் கோவிலில் தலித் மக்கள் வழிபாடு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நெடி கிராமத்தில் 100 தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொது ஏரியில் இம்மக்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு, அய்யனார் கோயிலில் வழிபடும் உரிமை ஆகியவற்றை ஆதிக்க சாதியினர் மறுத்து வந்தனர்.
இதனை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 30.01.10 அன்று ஆலயத்திற்குள் பொங்கலிட்டு சாமி கும்மிடும் போராட்டம் நடத்தினர். அப்போது கிராம ஆதிக்க சக்தியினர் திரண்டு வந்து பொங்கலை மட்டும் வைக்கலாம்; ஆனால், வழிபாடு நடத்த விடமாட்டோம் என்று கூறி, கோயிலையும் பூட்டி அராஜகம் செய்தனர்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, 01.02.2010 அன்று சமாதான கூட்டம் நடத்தியது. அப்போது, பிப்ரவரி 5-அன்று பொங்கலிட்டு சாமியை வழிபடுவது என்று கிராம மக்கள் வாலிபர் சங்கத்தின் சார்பில் முடிவு செய்தனர். இதையடுத்து வாலிபர் சங்கத்தினர் வெள்ளியன்று (பிப்.5) மாநிலத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு தலைமையில் கிராம மக்களை அழைத்துக் கொண்டு அய்யனார் கோயிலில் பொங்கலிட்டு வழி பாடு நடத்தினர். இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கே. தமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் கே.முனியாண்டி, ஒன்றியச் செயலாளர்கள் சத்தியராஜ், காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாலிபர் சங்கத்திற்கு பாராட்டு
தங்களது உரிமையை மீட்டுக் கொடுத்த வாலிபர் சங்கத் தலைவர்களுக்கு கிராம மக்கள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். கிராமத்திற்கு நூலகம் ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர். அனைவருக்கும் பொங்கல் வழங்கி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த போராட்டம் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக திண்டிவனம் வட்டாட்சியர் பெ.சீத்தாராமன், மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நூற் றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கந்துவட்டிக் கொடுமை : துப்புரவுத் தொழிலாளி மீது கொலை வெறித் தாக்குதல்

அருப்புக்கோட்டை நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் ஆத்திபட்டியை சேர்ந்த பாப்பன்(45). இவருக்கு தெரிந்த மாரியம்மாள் என்பவர், 34-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கலைச்செல்வி யிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாக தெரிகிறது. அந்த பணத்தை மாரியம்மாளிடம் இருந்து மற்றொருவர் வாங்கிவிட்டாராம்.
எனவே, கொடுத்த பணத்திற்கு வட்டி தரவில்லை எனக்கூறி வேலைசெய்து விட்டு மாலையில் வந்த பாப்பனை கவுன்சிலர் செல்வி அடியாட்களுடன் வந்து ஆட்டோவில் கட்டாயப்படுத்தி தூக்கிச் சென்றுள்ளார். பின்பு செல்வி மற்றும் 4 பேர் சேர்ந்து பாப்பனை பல மணிநேரம் கொடூர ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.
பாப்பன் தற்போது அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப்பட்ட பாப்பனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.சேகர், நகர செயலாளர் எம். தாமஸ், ஒன்றியச் செயலாளர் ஆர்.சந்திரமோகன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

நரிக்குறவர் காலனியில் நிலம் ஆக்கிரமிப்பு

வேலூர் மாவட்டம் சோளிங்கர் கொண்டபாளையம் நெறிக்குறவர் காலனி உள்ளது. இந்நிலையில் இக்காலனிக்கு வரும் வழிகளை ஆக்கிரமித்து, ஆதிக்க சாதியினர் வீடுகளைக் கட்டியுள்ளனர். இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியருக்கும், கோட்டாட்சியருக்கும் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து, நெறிக்குறவர் காலனிக்கான பொது வழி ஆக்கிரமிப்புக்களை அகற்றக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வாலாஜா தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் சங்கத் தலைவர் ஆர்.காளப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டப் பொருளாளர் ஆர்.குப்புசாமி, நிலவு குப்புசாமி, தா.வெங்கடேசன், எல்.சி.மணி, பத்மா மணி, ஆர்.ரேணு, பெருமாள், ஜோதி உள்ளிட்ட பலர் பேசினர்.
நெறிக்குறவர் சமூகத் தலைவர்கள் ஆர்.கேந்திரராஜ், முருகன் ஆகியோர் தாங்கள் நீண்ட காலமாக அனுபவித்து வரும் கொடுமைகளை விளக்கினர்.  எங்களுக்காக முதன் முறையாக போராடவும், எங்களை பேசவும் வைத்த விவசாயிகள் சங்கத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றும் கூறினர்.
கொண்டபாளையம் நெறிக்குறவர் காலனியில் வசிக்கும் 43 குடும்பங்களுக்கு, ஆதிக்க சக்திகளின் ஆக்கிர மிப்புகளை அகற்றி சுற்றுச்சுவர் அமைக்கக் கோரி வாலாஜா தாசில்தாரிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், மண்டல துணை தாசில்தாரை விரைவில் அனுப்பி விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

கோவை தீண்டாமைச் சுவர் : பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

கோவை 10-வது வட்டம் பெரியார் நகரில் ஆதிதிராவிடர் நலத்துறையால் வழங்கப்பட்ட இடத்தில் அருந் ததியர் சமூகத்தினர் 58 வீடுகள் கட்டி வசித்து வந்தனர். 1989 முதல் தந்தை பெரியார் நகர் என்று அழைக்கப்பட்ட அந்த பகுதிக்கு செல்லும் ஜீவா வீதி என்ற 30 அடி அகல பொதுப்பாதை உள்ளது. ஆனால், தலித் மக்கள் இந்த வீதியில் நடப்பதா என்ற வன்மத்துடன், அந்த வீதியை மறித்து ஆதிக்க சாதியினர் சுவர் எழுப்பினர். இந்த சுவருக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக சுவருக்கு இந்தப் புறம் பெயரளவிற்கு பிள்ளையார் சிலையை நிறுவி கோயிலாக்கினர், ஆதிக்க சாதியினர். பல்லாண்டு காலமாக அருந்ததியர் மக்கள் முறையிட்டும் பொதுப்பாதை பயன்பாட்டுக்கு வரவில்லை. பிள்ளையார் சிலை உள்ள அந்த பகுதியை, ஆதிக்க சாதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் மாட்டுத் தொழுவமாக பயன்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் சுவரை அகற்றக் கோரியும் முழுமையான பாதை கிடைத்திட நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாநகராட்சி ஆணையரிடம் புகார் செய்யப்பட்டது.
இப்புகாரை அடுத்து, அரசு நிர்வாகம் கடந்த சனிக்கிழமையன்று தீண்டாமைச் சுவரைச் இடித்து அகற்றியது. ஆனால் அங்கிருந்த பிள்ளையார் சிலை அகற்றப் படவில்லை. இதனால் முழுமையான பாதை அருந்
ததியர்களுக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில் கோவை கோட்டாட்சியர் பாலச்சந்திரன் தலைமையில் பேச்சு வார்த்தை திங்களன்று (01.02.2010) மாலை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்றது. அரசுத் தரப்பில் வட்டாட்சியர் சுப்பிரமணியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், கோவை வடக்கு மண்டலத் தலைவர் சி.பத்மநாபன், வழக்கறிஞர் வெண்மணி, ஆதித்தமிழர் விடுதலை முன்னணி அமைப்பாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆதிக்க சாதியினர் தரப்பில் சம்பந்தபட்டவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.  ஆனால், நாங்கள்தான் கோயில் நிர்வாகிகள் எனக் கூறிக்கொண்டு இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சியை சேர்ந்த சிவப்பிரகாசம், எரியீட்டி வேலு மற்றும் சுரேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
30 அடி அகலப் பொதுப்பாதை முழுமையாக அருந்ததியர் மக்களின் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்று பெரியார் நகர் பகுதி மக்கள் சார்பில் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்த்தரப்பினர் முடி வெடுக்க கால அவகாசம் கேட்டதால் வரும் வியாழனன்று பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

ஆக்கிரமிக்கப்பட்ட தலித் மக்களின் சுடுகாட்டு நிலம்

மண்ணச்சநல்லூர் தாலுகாவிலுள்ள சி.ஆர். பாளையத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சுமார் 500 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு சிறுகனூர் ஊராட்சித்தலைவர் மற்றும் வருவாய் கிராம அலுவலர் ஆகியோரால் உப்பாறு ஓடைப்புறம் போக்கில் சுடுகாட்டிற்காக இடம் ஒதுக்கித் தரப்பட்டது. இந்த இடத்தை சி.ஆர். பாளையத்தை சேர்ந்த சிலர் (ரங்கசாமிகவுண்டர், ராமதாஸ் உள்ளிட்டோர்)  பிளாட் போட்டு விற்க முயற்சிப்பதாக தெரியவந்தது.
இதையடுத்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மயான இடத்தை மீட்டுத்தரக் கோரி, திங்களன்று (1.02.2010) சிஆர். பாளையம் கிராம முக்கியஸ்தர்கள் பாலு, ரங்கநாதன், அகிலாண்டேஸ்வரி, செல்வராஜ், வார்டு ஊராட்சி உறுப்பினர் சின்னப்பொண்ணு ஆகியோர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் எம்.ஜெயசீலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் எஸ்.பாண்டியன், எஸ்.பிலால், டி.ரஜினிகாந்த் ஆகிய 500 பேர் கையெழுத்திட்ட மனுவை, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் தலித் மக்கள் அளித்தனர்.

திங்கள், 22 பிப்ரவரி, 2010

பாதை கேட்டு தலித் மக்கள் பிணத்துடன் மறியல்

தேனி ஊஞ்சாம்பட்டி இந்திரா காலனி தலித்மக்கள், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லும் பாதையை நில உரிமையாளர்கள் அடைத்து விட்ட நிலையில், தனியாக பாதை அமைத்துத்தர வேண்டுமென பலமுறை அதிகாரி களிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில் போத்தன் மகன் ராஜா என்பவர் திடீரென மரணமடைந்து விட்டார். அவரை சுடுகாட்டிற்குத் தூக்கிச் செல்ல பாதையில்லை. இதையடுத்து, சுடுகாட்டுக்குச் செல்ல பாதை கேட்டு, பாடையுடன் தேனி-திண்டுக்கல் சாலையில் தலித்மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கோட்டாட்சியர் சுப்பிரமணி, வட்டாட்சியர் குழந்தைவேல் ஆகியோர் தலித் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு வாரத்தில் பாதை அமைத்துத்தருவதாக அளித்த உறுதிமொழியை அடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

நகரத்தை விட்டு வெளியேற்றப்படும் பழங்குடியினர்- சி.முருகேசன்

கிருஷ்ணகிரி நகராட்சியால் 15 இருளர் பழங்குடியினர் குடும்பங்கள் நகரத்தை விட்டு வெளியேற்றப்படும் நிலையில் உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக இருளர் பழங்குடி மக்கள் உள்ளனர். காடுகளில் வசித்த இவர்கள் கடந்த காலங்களில் வனத்துறையினரால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இருப்பிடமும் வாழ்வாதாரமும் இல்லாமல் தவித்தனர். எலிகளையும் அவற்றின் வளைகளில் கிடைக்கும் தானியங்களையும் உணவுக்கு பயன்படுத்தினர்.

கொத்தடிமைகளாகவும் காகிதம் பொறுக்கும் நிலைக்கும் சிறார்கள் தள்ளப்பட்டனர். அதிகார வர்க்கமும் பிறரும் கண்டு கொள்ளாத ஒதுக்குப்புறமான இடங்களில் குடில் அமைத்து தங்கினர். உழைக்கும் சிறார் பள்ளிகள் மூலம் கல்வி கற்கும் வாய்ப்பை இவர்கள் அண்மை காலமாக பெறத்தொடங்கினர். கடந்த சில ஆண்டுகளாக இச்சிறார்களில் ஒரு பகுதியினர் முறையான பள்ளிகளில் சேர்ந்து படிக்கின்றனர். கிருஷ்ணகிரி நகரத்திற்குள் ராசு வீதி ராயல் கிணறு அருகே 30 ஆண்டுகளுக்கு முன்பு 15 இருளர் குடும்பங்கள் குடில் அமைத்து தங்கின.

எம்.ஜி.ஆர்.ஆட்சியின் போது இவர்கள் அனைவருக்கும் அதே இடத்தில் தொகுப்பு வீடுகள் கட்டி வழங்கப்பட்டன. அவற்றை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி நகராட்சி அதிகாரிகள் புல்டோசர் கொண்டு வந்து இடித்து விட்டதாக அம்சவல்லி (22) கூறினார். பழைய காகிதம் சேகரிக்கும் தொழில் செய்யும் இவர் மேலும் கூறுகையில், அவங்க காட்டின எடத்திலதான் இப்ப வரைக்கும் பிளாஸ்டிக் பேப்பர்ல குடிசை போட்டு வசிக்கிறோம். இதையும் எடுக்கப் போறாங்களாம். எங்க பசங்க இப்பதான் பள்ளிக் கூடம் போறாங்க. அதையும் கெடுக்கப்பாக்குறாங்க என்றார்.

நகராட்சி தூய்மைப் பணியாளர்களின் தொகுப்பு வீடுகள் உட்பட இதே பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அருந்த தியர்களின் சில வீடுகளை நகராட்சி நிர்வாகம் இடித்து தள்ளியது. தீக்கதிர் நாளிதழில் இதுகுறித்து விரிவான செய்தி அப்போது வெளியிடப்பட்டது. உடனடியாக வீடு கட்டித்தரக்கோரி நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது கோரிக்கையை ஏற்பதாக அறிவித்த நகராட்சி நிர்வாகம், இதுவரை வீடு கட்டி தராததால் அதே இடத்தில் இடிபாடுகளுக்கிடையே குடியேறினர். இப்போது இருளர் பழங்குடியினரையும் அப்புறப்படுத்தி விட்டு தான் வீடு கட்டி வாடகைக்கு தர முடியும் என்கிறது நகராட்சி நிர்வாகம். நகராட்சி ஊழியர்களும் இருளர் பழங்குடியினரும் நீண்ட காலமாக குடியிருக்கும் இடங்களுக்கு தமிழக முதல்வர் அறிவித்துள்ளபடி பட்டா வழங்க வேண்டும். அவர்கள் சொந்தமாக வீடு கட்டிக் கொள்ள உதவி செய்ய வேண்டும். அடித்தட்டில் உள்ள ஏழைகளின் குடியிருப்பை உறுதிப்படுத்துவதே அவர்களது முன்னேற் றத்திற்கு முதல் தேவை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். கவனத்தில் கொள்ளுமா வருவாய் துறையும் நகராட்சி நிர்வாகமும்.
- தீக்கதிரில் வெளியான கட்டுரை

தீண்டாமைச்சுவர் அகற்றம் : அருந்ததிய மக்கள் நன்றி

21 ஆண்டுகாலமாக தங்களை மறித்து நின்ற தீண்டமைச்சுவரை அகற்றித்தர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி,ஆதித் தமிழர் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளுக்கு கோவை, சிங்காநல்லூர், 10-வது வட்டம் பெரியார் நகர்வாழ் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

சனிக்கிழமை காலையில் ஆனந்தக் கண்ணீர் மல்க தீண்டாமைச்சுவர் கீழே விழுந்ததைக் கண்ட மக்கள், அன்று மாலையே அதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க விழைந்தனர். இரவு எட்டு மணிக்கு பெரியார் நகர் மக்கள் அனைவரும் கலந்து கொண்ட கூட்டத்தில் அனைத்து அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

சுவர் அகற்றுவதை நோக்கிச் செல்லுகையில் எத்தகைய தடைகள் மற்றும் அத்தடைகளைக் களைய கிடைத்த ஆதரவுகள் ஆகியவை பற்றி ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் ரவிக்குமார் எடுத்துக் கூறினார். அவரைத் தொடர்ந்து அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் சி.பத்மநாபன், கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் யு.கே.சிவஞானம், மார்க்சிஸ்ட் கட்சியின் சிங்கை நகரச் செயலாளர் கே.மனோகரன் ஆகியோர் ஒட்டு மொத்த தீண்டாமை ஒழிப்பு நோக்கிய பாதையில் பயணிக்க வேண்டிய அவசியத்தையும், அதற்காக அனைத்துப்பகுதி உழைப்பாளி மக்களும் இணைய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினர்.

பேச்சுவார்த்தை
சுவர் மட்டும் அகற்றப்பட்டுள்ள நிலையில், முழு மையான பாதையாக அது உருவாகும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் விருப்பம். தங்கள் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் விநாயகர் சிலையை வைத்துக் கொள்ள அவர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, திங்களன்று மாலை ஐந்து மணியளவில் ஆர்.டி.ஓ. முன்னிலையில் மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.

நெடி கிராம தலித் மக்கள் அய்யனார் கோவிலில் பொங்கலிடலாம்; வழிபட கூடாதாம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் நெடி கிராமத்தில் உள்ளது அய்யனார் ஆலயம். இந்த ஆலயத்தில் தலித் மக்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுச்சொத்துக்களில் தலித் மக்களால் உரிமை கொண்டாட முடியவில்லை. தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் போதுமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.

இப்பிரச்சனைகள் குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தமிழக முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று அய்யனார் ஆலயத்தில் பொங்கலிட்டு படைக்கும் போராட்டத்திற்கு வாலிபர் சங்கம் திட்ட மிட்டது.

இதனையடுத்து ஜனவரி 20ம் தேதி அதிகாரிகள் சமாதான கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் வாலிபர் சங்கத்தினர் தலித் மக்களின் உரிமைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஜனவரி 30 காந்தி நினைவு தினத்தன்று மீண்டும் போராட்டத்தை நடத்த வாலிபர் சங்கத்தினர் முடிவு செய்தனர்.

இதன்படி சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.ஆனந்தன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.முத்துக்குமரன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கண்ணப்பன், செயலாளர் செந்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் கே.முனியாண்டி, மாணவர் சங்க செயலாளர் கார்க்கி ஆகியோர் தலைமையில் நெடி கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று கோவிலுக்குள் வழிபட முயன்றனர். அப்போது காவல் துறையினரும், ஆதிக்கச் சக்திகளும் வழியை மறித்ததால் சிறிது நேரம் அங்கு பதட்டம் நிலவியது.

கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்தாமல் இங்கிருந்து செல்லமாட்டோம் என்று தலித்மக்கள் உறுதிபட அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதனையடுத்து கோட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பிறகு தலித் மக்கள் பொங்கலிட மட்டும் அனுமதிக்கப்பட்டது. அதே சமயம் சாமியை வழிபட அனுமதி மறுக்கப்பட்டது.

இரு சமூக மக்களையும் அழைத்து பிப்ரவரி 1 அன்று மீண்டும் சமாதானக் கூட்டம் நடத்தி, தலித் மக்களை ஆலயத்திற்குள் அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் வழக்கம் போல் உறுதியளித்தனர்.

கண்டனம்
நெடி கிராமத்தில் தலித் மக்கள் பொங்கல் வைத்து வழிபட முற்பட்டதோடு ஆதிக்க சாதி வெறியர்களால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். காவல்துறையும், வருவாய் துறையும் வேடிக்கை பார்த்துள்ளதோடு தலித் மக்களின் உரிமையை நிலைநாட்டாமல் மெத்தனமாக செயல்பட்டத்தை இந்திய ஜனநாயாக வாலிபர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

திண்டுக்கல் முனிசிபல் தொழிலாளர் சங்கம்- அருந்ததியர் விடுதலைக்கான முன்னோடி!: என்.வரதராஜன் பெருமிதம்

திண்டுக்கல் முனிசிபல் தொழிலாளர் சங்கம், அருந்ததியர் விடுதலை மற்றும் உரிமைகளை பெற்றுத்தந்த முன்னோடிச் சங்கம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் கூறினார்.

முன்னாள் கவுன்சிலரும், முனிசிபல் தொழிலாளர்களின் உரிமைக்கு பாடுபட்டவருமான தோழர் பி.முத்தனின் படத்திறப்பு விழா, ஞாயிறன்று (31.01.2010) முனிசிபல் காலனியில் நடைபெற்றது. இந்த விழாவில் தோழர் பி.முத்தன் படத்தைத் திறந்து வைத்து என்.வரதராஜன் பேசியதாவது:-

திண்டுக்கல் முனிசிபல் தொழிலாளர் சங்கத்திற்கு ஒரு பாரம்பரியம் உண்டு. இந்தப் பகுதியில் பல கட்சிகள் இருக்கலாம். ஆனால் முனிசிபல் தொழிலாளர்களுக்கு பல்வேறு உரிமைகளைப் பெற்றுத் தந்தது செங்கொடி இயக்கமான முனிசிபல் தொழிலாளர் சங்கம் தான். 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலுவலகத்தில் நான் ஒரு ஊழியராக பணியாற்றி உள்ளேன். இப்பகுதியில் அனைத்து குடும்பத்தினருடனும் எனக்கு நல்ல பரிச்சயம் உண்டு. அவர்களது வீடுகளில் உணவருந்தியுள்ளேன். இந்த அருந்ததிய மக்கள் தங்களுக்கு எத்தகைய பிரச்சனை ஏற்பட்டாலும் நமது கட்சி அலுவலகத்திற்குத்தான் வருவார்கள்.

இந்திய நாடாளுமன்றத்தில் 543 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் 303 பேர் கோடீஸ்வரர்கள். மத்திய மந்திரிகள் 64 பேர் ரூ. 500 கோடிக்கும் மேல் சொத்து வைத்துள்ளனர். 33 மத்திய அமைச்சர்கள் ரூ. 50 கோடிக்கும் மேல் சொத்து வைத்துள்ளனர். இவர்கள் எல்லாம் எந்த வர்க்கத்திற்கு சாதகமாக இருப்பார்கள் என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் கடந்த 50 ஆண்டுக்கு முன்பு இந்த முனிசிபல் காலனி எப்படி இருந்ததோ அதே போலத்தான் உள்ளது. எந்த முன்னேற்றமும், மாற்றமும் இல்லை. இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் மாற்றம் இல்லை. இந்த பகுதியிலுள்ள வீடுகளுக்கு பட்டா கூட இன்னும் கொடுக்கப்படவில்லை.

அருந்ததியர்களின் சமூக விடுதலைக்காக, மார்க்சிஸ்ட் கட்சி இயக்கங்கள் நடத்தி வருகிறது. 3 சதவீத இடஒதுக்கீட்டை நாம் போராடி பெற்றுள்ளோம். இன்றைக்கு நமது பிள்ளைகளும் டாக்டர்களாக , என்ஜினீயர்களாக கல்லூரிகளில் படிக்கிறார்கள். இது நமது போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. 6 சதவீத இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தையும் நாம் தொடர வேண்டியுள்ளது.

தோழர்கள் ஏ.பாலசுப்ரமணியம், எஸ்.ஏ.தங்கராஜன் ஆகியோர் இப்பகுதி மக்களுக்காக அரும்பாடுபட்டனர். அவர்களுடன் இணைந்து நமது செங்கொடி இயக்கத்தை இப்பகுதியில் கட்டுவதற்கு முத்தன் போன்றவர்களின் பணி அளப்பரியது.

இவ்வாறு என்.வரதராஜன் பேசினார்.

இக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.கணேசன் தலைமை வகித்தார். மாரியப்பன் வரவேற்றார். திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.பாண்டி, நகரச் செயலாளர் வ.கல்யாணசுந்தரம், சிஐடியு மாவட்டப் பொருளாளர் கே.முத்துராஜ் மற்றும் பி.ஆசாத், ஏ.பிச்சைமுத்து, தன்னாசி, டி.காமாட்சி, சுந்தரம், மரியதாஸ், திருப்பதி, முருகன் மற்றும் முத்தன் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

தலித் மக்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி - `அம்மி’ வலியுறுத்தல்

தீண்டாமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம் தேனியில் நடைபெற்றது. அருந்ததியர் மக்கள் முன்னேற்ற இயக்க மாவட்ட அமைப்பாளர் எம்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். இயக்க ஆலோசகர் டி.வி.முருகேசன் முன்னிலை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில நிர்வாகி கே.சாமுவேல்ராஜ் சிறப்புரையாற்றினார்.

விழுதுகள் அமைப்பாளர் எம்.தங்கவேல், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கப் பொறுப்பாளர் சண்முகவேல், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தேனி மாவட்ட அமைப்பாளர் டி.வெங்கடேசன், அம்மி திட்ட இயக்குநர் ராஜரத்தினம், பி.முருகேசன், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் பேசினர். மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் சிறப்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில், அருந்ததியர் மக்கள் முன்னேற்ற இயக்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அருந்ததியர் மீதான எதிர்வழக்குகளை காவல்துறை திரும்பப் பெற வேண்டுமென தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், அருந்ததியர் மக்கள் முன்னேற்ற இயக்கமும் (அம்மி) வலியுறுத்தின.

நத்தம் அருகே தலித் மக்களுக்கு முடிதிருத்த மறுப்பு

நத்தம் அருகே, சாணார் பட்டி ஒன்றியம் ஆவிளிபட்டியில், தலித் மக்களுக்கு ஆண்டாண்டு காலமாக முடிதிருத்த மறுக்கும் தீண்டாமைக் கொடுமை நிலவி வருகிறது. இப்பகுதி தலித் மக்கள் சாணார்பட்டிக்குச் சென்றுதான் முடிதிருத்தி வருவார்கள்.

இக்கொடுமையை எதிர்த்து ஞாயிற்றுக்கிழமையன்று (31.01.2010) போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவித்தது.

இதையடுத்து, திண்டுக்கல் வட்டாட்சியர், வாலிபர் சங்க நிர்வாகிகளை, வெள்ளிக்கிழமையன்றே அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் வாலிபர் சங்க மாவட்டச்செயலாளர் கே.பிரபாகரன், மாவட்டத் தலைவர் ஏ.அரபு முகமது, வெள்ளைக்கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் என்.பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சாதி ஆதிக்க சக்தியினரும் கலந்து கொண்டனர்.

இதில், முடிதிருத்த மறுப்பது சட்ட விரோதம், அவ்வாறு மீண்டும் தீண்டாமையை கடைப்பிடித்தால் யாராக இருந்தாலும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று வட்டாட்சியர் எச்சரித்தார். பின்னர் சுமூக முடிவு எடுக்கப்பட்டது.

தமிழக அரசின் நடவடிக்கைக்கு பி.சம்பத் வரவேற்பு

கோவையில் தீண்டாமைச்சுவரை அகற்ற தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் வரவேற்று அறிக்கை விடுத்தார்.

அந்த அறிக்கை வருமாறு:

கோவையில் கட்டப்பட்டிருந்த தீண்டாமைச்சுவர் தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, கோவை மாநகராட்சி ஆணையரிடமும் ஜனவரி 29 அன்று மகஜர் அளித்தனர். இதனைத்தொடர்ந்து அரசு நிர்வாகம் தந்தை பெரியார் நகரில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச்சுவரை அப்புறப்படுத்தியுள்ளது. சாலையின் முழுமையான பயன்பாட்டிற்காக, நடுவே உள்ள விநாயகர் கோயிலை வேறு இடத்திற்கு மாற்றுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மாற்று இடம் தருவதற்கான ஏற்பாடும் நடந்து வருகிறது.

தமிழ்நாடு அரசு கோவை, பெரியார் நகர் தீண்டாமைச் சுவரை அகற்ற எடுத்த நடவடிக்கைகளை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு வரவேற்கிறது. இதோடு மாற்று இடத்தில் விநாயகர் கோவில் அமைக்க ஏற்பாடு செய்து அச்சாலையை தலித் மக்கள் சுதந்திரமாகப் பயன்படுத்த நடவடிக்கையை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பிற்கான முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அனைத்துப் பகுதி மக்களையும், ஜனநாயக இயக்கங்களையும் கேட்டுக் கொள்வதோடு தமிழக அரசு அதற்கான முயற்சிகளை முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகிறோம்.

பிள்ளையார் சிலையை வைத்து

இந்து மக்கள் கட்சியினர் அடாவடி
தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்ட போது அங்கு வந்த இந்து மக்கள் கட்சியின் சிவபிரகாசம், இந்து முன்னணியின் ஸ்டோன் சரவணன் உள்ளிட்டோர் தீண்டாமை சுவரின் உட்புற மாட்டு தொழுவத்தில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையை அகற்றக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காவல்துறை அதிகாரிகளுடன் சுவரை இடித்தது தப்பு எப்படி இடிக்கலாம் என வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் இந்து மக்கள் கட்சியின் கொடியினை கொண்டு வந்து தீண்டாமை சுவரோடு இருந்த பிள்ளையார் சிலை இருக்கும் பகுதியில் கட்ட முயன்றனர். அதனை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

அப்போது இந்து மக்கள் கட்சியினர், அருந்ததிய மக்களை தரக்குறைவாக பேசினர். அப்போது இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. காவல்துறையினர் அப்பகு தியில் இருந்து அனைவரையும் செல்லுமாறு விரட்டினர்.

இதனால் சுவர் இடிக்கப்பட்டாலும் நடுவழியை மறைத்து இருக்கும் மாட்டு தொழுவ பிள்ளையார் சிலையால் அருந்த தியர் மக்களுக்கு முழுமையாக வழி பிறக்க வில்லை. அதிகாரிகள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரிடம் பிள்ளையார் சிலைக்கு மாற்று இடம் பார்த்த உடனே இந்த சிலை அகற்றப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

ஆட்சியர் உறுதி
பின்னர் மாலை 3 மணியளவில் தீண்டாமை சுவர் இடிக்கப்பட்ட இடத்தை கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் பு.உமாநாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அருந்ததியர் மக்கள், கடவுளின் பெயரால் மறுபடியும் எங்களுக்கான வழியை மறித்து இருப்பது எப்படி நியாயம்? தாங்கள் சுவரை இடிக்க நடவடிக்கை எடுத்தது போல், முழுமையாக வழி கிடைக்க இந்த மாட்டுத் தொழுவத்தையும் அதன் உள்ளே இருக்கும் பிள்ளையார் சிலையையும் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கூறினார்.

திங்கள், 15 பிப்ரவரி, 2010

கோவையில் தகர்ந்தது தீண்டாமைச் சுவர்

கோவை வரதராஜபுரம் ஜீவா வீதியில் கடந்த 22 ஆண்டுகளாக இருந்து வந்த தீண்டாமைச்சுவர் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முயற்சியால் தகர்க்கப்பட்டுள்ளது.

ஆனாலும் கடவுளின் பெயரால் இந்து மக்கள் கட்சியினர் பொதுச்சாலையின் நடுவில் அருந்ததியர் பகுதிக்கு செல்வதை தடுப்பதற்காக மாட்டுத் தொழுவத்தில் வைத்திருந்த பிள்ளையார் சிலை அகற்றப்படவில்லை. இதனால், சுவர் தகர்க்கப்பட்டாலும், அருந்ததியர் மக்களுக்கு முழுமையாக வழி கிடைக்கவில்லை.

கோயம்புத்தூர் வரதராஜபுரம் காமராஜர் ரோட்டில் உள்ளது ஜீவா வீதி. இந்த வீதியின் கடைசி பகுதியான தந்தை பெரியார் நகரில் அருந்ததியர் மக்கள் வசித்து வருகின்றனர். 1989-ம் ஆண்டு அருந்ததியர் மக்களுக்கு தமிழக அரசு ஆதிதிராவிட நலத்துறையின் மூலம் அதிகாரபூர்வமாக குடியிருக்கும் இடத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்கியது. இதனால் ஆத்திரமுற்ற ஆதிக்க சாதியினர் அருந்ததியர்கள் தந்தை பெரியார் நகருக்குள் செல்ல முடியாத வகையில் ஜீவா வீதியில் பொதுச்சாலையை மறித்து குறுக்குச்சுவர் கட்டி தடுத்துள்ளனர். இதேபோன்று ஜீவா வீதிக்கு அடுத்து உள்ள நேதாஜி வீதியின் வழியாகவும் அருந்ததியர்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புச்சுவர் கட்டி வழியை மறித்துள்ளனர். இதனால் எந்த பகுதி வழியாகவும் தங்கள் இடத்திற்கு செல்ல முடியாமல் இருந்து வந்த அருந்ததியர்கள் 1989-ம் ஆண்டே நேதாஜி வீதியில் இருந்த தடுப்பு சுவரை இடித்து தள்ளியுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு ஏராளமான அருந்ததியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த வழக்கில் அருந்ததியர்கள் சில தினங்களுக்கு முன்புதான் விடுதலையாகியுள்ளனர்.

இந்நிலையில் ஜீவா வீதியில் கடந்த 22 வருடங்களாக இருந்து வந்த தீண்டாமைச் சுவரை இடித்து, அருந்ததியர்களுக்கு வழி விட வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பான செய்தி சனிக் கிழமை (ஜன.30) தீக்கதிர் நாளேட்டில் வெளியானது.

சுவர் இடிப்பு
அதைத்தொடர்ந்து, சனிக்கிழமையன்று காலை 9 மணியளவில் மாநகராட்சி அதிகாரிகள், சுவர் அமைந்துள்ள இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது அது முழுக்க அருந்ததியர்கள் செல்லக் கூடாது என்பதற்காக கட்டப்பட்ட தீண்டாமைச் சுவர் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் பு.உமாநாத் மற்றும் மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா ஆகியோரின் உத்தரவின் அடிப்படையில் தீண்டாமைச் சுவரை இடிக்க ஜெசிபி வாகனம் வரவழைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற சாதி ஆதிக்க வெறியர்கள், சுவரை இடிக்க விடாமல் வாகனத்தை மறித்து நின்றனர்.

இதையடுத்து அருந்ததியர் பகுதியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் யு.கே.சிவஞானம், ரவிக்குமார், பெருமாள், வெண்மணி, கணேஷ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் சிங்காநல்லூர் நகரச் செயலாளர் மனோகரன், மாவட்டச் செயற்குழு உறுப் பினர் நெல்சன்பாபு, மாவட்டக் குழு உறுப்பினர் தெய்வேந்திரன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அ.ர.பாபு உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து ஏராளமான காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

ஆதிக்க சக்தியினரின் எதிர்ப்பை மீறி மாநகராட்சி அதிகாரிகள் தீண்டாமைச் சுவரை இடித்து தள்ளினர். தெற்கு வட்டாட்சியர் சுப்பிரமணியம் தலைமையில் மாநகராட்சி உதவி ஆணையர் (கிழக்கு) லோகநாதன், நகர்புற திட்ட அலுவலர் சவுந்தரராஜ், உதவி நகர்ப்புற திட்ட அலுவலர்கள் ரவிச்சந்திரன், புவனேஸ்வரி, ஆய்வாளர் பொன்ராஜ், இளநிலைபொறியாளர் கலாவதி, காவல்துறை ஆய்வாளர் கௌதம் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் இடிப்பு பணி நடைபெற்றது.

திருப்பிவிடப்படும் தலித் நல நிதி

தலித் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்படும் நிதி எப்படியெல்லாம் திருப்பி விடப்படுகிறது அல்லது பயன்படுத்தப்படாமலேயே போகிறது என்பது பற்றியெல்லாம் ஏராளமான செய்திகள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் வாசிக்கும்போது மேசையைத் தட்டும் ஒலியில் பல விஷயங்கள் அமுங்கிப் போகின்றன. சமத்துவபுரங்கள் அமைப்பதற்கு தலித்துகளின் நல நிதியில் கணிசமான தொகைக்கு வெட்டு விழுகிறது. தாட்கோ நிதி இதற்கு திருப்பி விடப்படுகிறது.

துணை முதல்வரான பிறகு புதிய சமத்துவபுரங்களை உருவாக்குவதில் ஸ்டாலின் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் என்கிறார்கள். கூடுதல் சமத்துவபுரங்கள் என்றால் தலித் நலன்களுக்கான நிதி கூடுதலாகத் திருப்பி விடப்படுகிறது என்பதுதானே அர்த்தம். எந்த நோக்கத்திற்காக சமத்துவபுரங்கள் அமைக்கப்படுகின்றனவோ, அது நடக்கிறதா என்ற கேள்வி ஒருபுறம்.

அதைவிடக் கொடுமை என்னவென்றால், சமத்துவபுரம் என்றாலே ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்தான் அமைக்கப்படுகிறது. தலித்தோடு ஒரே குடியிருப்புப் பகுதியில் இருக்க வேண்டுமென்றால் ஊருக்கு வெளியேதான் மற்ற பிரிவினரும் செல்ல வேண்டும் என்பதுதான் அரசு தர விரும்பும் செய்தியாக இருக்கிறது. ஒருவேளை, சமத்துவபுரம் அமைக்கப்படும் பகுதியை ரியல் எஸ்டேட்காரர்கள் சேர்ந்து முன்னேற்றினால் அதற்கு விடிவுகாலம் கிடைக்கலாம்.

இப்படி தலித்துகளுக்கு ஒதுக்கப்படும் நிதியைத் திருப்பி விடுவதில் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கில்லாடிகள். தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் 44 வீடுகளுக்கு தலித்துகள் நலனுக்கான நிதியிலிருந்துதான் பணத்தை எடுத்துக் கொடுத்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது, 44 சட்டமன்றத் தொகுதிகள் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டதாம். எப்படியெல்லாம் யோசிக்குறாங்க... (தீக்கதிர் கட்டுரை)

கோவையிலும் ஒரு தீண்டாமைச்சுவர்!

கோயம்புத்தூர் தந்தை பெரியார் நகரில் வசிக்கும் அருந்ததிய சமூகத்தினர் பயன்படுத்தும் சாலையை மறித்து, சாதி ஆதிக்க வெறியர்கள் சுவர் கட்டியிருக்கும் அராஜகத்தை, கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஆதித்தமிழர் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன.

கோவை மாநகராட்சி, சிங்காநல்லூர் 10-வது வட்டம் காமராஜர் ரோடு அருகில் உள்ளது, தந்தை பெரியார் நகர். இங்கு குடியிருக்கும் 58 அருந்ததியர் குடும்பங்களுக்கு, ஆதிதிராவிட நலத்துறையின் மூலம் 1989-ஆம் ஆண்டில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.

தந்தை பெரியார் நகரிலிருந்து ஜீவா வீதி வழியாக, காமராஜர் ரோடு எனும் பிரதான சாலையை இணைக்கும் 30 அடி சாலை உள்ளது. இச்சாலை வழியாகத்தான் பெரியார் நகரில் வசிக்கும் தலித் மக்கள் காமராஜர் சாலைக்கு செல்ல வேண்டியுள்ளது. இங்கு மாநகராட்சி மூலம் சாலை, கழிவுநீர் வடிகால் மற்றும் தெருவிளக்கு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. அருந்ததியர் மக்கள் செல்லும் இச்சாலையை சாதி ஆதிக்க வெறியர்கள் சிலர், தீண்டாமை எண்ணத்தோடு சுவர்கட்டி மறித்து அடைத் துள்ளனர்.

1989 ஆம் ஆண்டில் அருந்ததிய சமூகத்தினருக்கு இந்த மனைப்பட்டாக்கள் வழங்கப்படுவதற்கு முன்பு வரை தடுப்புச்சுவர் எழுப்பப்படாத நிலையில், பட்டா வழங்கிய பிறகுதான் தடுப்புச்சுவர் கட்டியுள்ளனர். மறுபுறத்தில் - அதாவது தங்கள் பகுதியில்- வெகுசாமர்த்தியமாக விநாயகர் சிலையொன்றை வைத்து பெயருக்கு கோவில் என்று பெயர்ப்பலகையும் மாட்டியுள்ளனர்.

அந்தக் கோயிலில் பூசைகள் எதுவும் நடப்பதில்லை. அருகில் உள்ள வீட்டுக்காரர் அந்தக் கோயிலை மாட்டுத் தொழுவமாகவே பயன்படுத்தி வருகிறார். தலித் மக்கள் அந்தப் பாதையைப் பயன்படுத்தி, தங்கள் வீடுகளுக்கு முன்பாக நடந்து சென்றுவிடக்கூடாது என்பதே அந்தக் கோயில் மற்றும் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டதன் பின்னணியாகும்.

தற்போது சுவர் இருக்கும்பாதை மட்டுமின்றி, அருந்ததிய மக்களின் குடியிருப்புக்குள் வருவதற்கான மற்றொரு பாதையும், மனைப்பட்டாக்கள் தரப்பட்ட சமயத்தில் அடைக்கப்பட்டே இருந்தது என்ற அதிர்ச்சியான தகவலையும் அருந்ததிய மக்கள் தெரிவிக்கின்றனர். அந்தப்பாதையைத் திறக்க கடுமையான போராட்டம் நடந்துள்ளது. அப்போது, காவல்துறையினர் பலர் மீது வழக்குத் தொடுத்தனர். 1989-ஆம் ஆண்டில் போடப்பட்ட அந்த வழக்கில் சில ஆண்டுகளுக்கு முன்புதான் தீர்ப்பு வந்து தலித் மக்கள் விடுதலையாகியுள்ளனர்.

இந்நிலையில், அண்மையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய பல போராட்டங்கள், அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு, ஆலய நுழைவுப் போராட்ட வெற்றிகள் போன்றவை, பெரியார் நகர் மக்களுக்கு நம்பிக்கை அளித்தன. இதனால் தங்களுக்குரிய பாதை மறிக்கப்பட்ட கொடுமையிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஆதித்தமிழர் விடுதலை முன்னணி அமைப்பாளர்களை அணுகி அருந்ததியர் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்தலைவர் சி.பத்மநாபன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.பெருமாள், கே.கணேஷ், வழக்கறிஞர் வெண்மணி, மார்க்சிஸ்ட் கட்சியின் நகரச்செயலாளர் கே.மனோகரன், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் ரவிக்குமார் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் நிர்வாகிகள் அந்த இடத்தைப் பார்வையிட்டனர்.

பொதுப்பாதையை மறித்தே சுவர் எழுப்பப்பட்டுள்ளது என்பது உறுதியானதால் இவ்வமைப்புகள் சார்பில் கோவை மாநகர ஆணையர் அன்சுல் மிஸ்ராவை வெள்ளிக்கிழமையன்று (29.01.2010) சந்தித்து மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட ஆணையர் பொதுப்பாதையை மறித்துக் கட்டப்பட்டுள்ள சுவர் அகற்றப்படும் என்று உறுதி அளித்தார்.

ரெட்டிப்பட்டி தலித் மக்களுக்கு நீதி வேண்டும்: ஆட்சியர் அலுவலகத்தில் டில்லிபாபு எம்எல்ஏ தலைமையில் 2 மணி நேரம் போராட்டம்!

ஊத்தங்கரை தாலுகா ரெட்டிப்பட்டி கிராம தலித் மக்கள், மிட்டா மிராசுகளின் ஆக்கிரமிப்பில் உள்ள தங்களின் சுமார் 500 ஏக்கர் நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் போராடி வருகின்றனர்.

அதனொரு பகுதியாக, சுமார் நூறு பேர், இரண்டு நாள் நடைபயணம் மேற்கொண்டு, வியாழனன்று (28.01.2010) கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுக்கச் சென்றனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், பி.டில்லிபாபு எம்எல்ஏ, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.தருமன், செயலாளர் எக்ஸ்.இருதயராஜ், பொருளாளர் வி.கோவிந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ரவீந்திரன், வட்டச் செயலாளர்கள் கிருஷ்ணகிரி நஞ்சுண்டன், போச்சம்பள்ளி சின்னசாமி, சி.ஐ.டி.யு. கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.மகாலிங்கம், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.அண்ணாமலை, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் இல்லாததால் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.பிரபாகரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ரெட்டிப்பட்டி தலித் மக்களின் நிலம் குறித்து ஏற்கெனவே ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு மீது வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. விசாரணையும் நடத்துள்ளது. இது குறித்த விவரங்களை வருவாய் அலுவலரி டம் கேட்டனர். விவரம் கோட்டாட்சியரிடம் உள்ளதாக அவர் தகவல் தெரிவித்தார். விசாரணை நடத்திய கோட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியர் வந்து பதில் அளித்த பிறகுதான் இங்கிருந்து செல்வோம் என்று கூறி அனைவரும் கோட்டாட்சியரின் அறைமுன் அமர்ந்து கொண்டனர்.

இரவு சுமார் எட்டு மணி அளவில் வருவாய் கோட்டாட்சியர் அன்பரசு வந்தார். வருவாய் அலுவலர் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட தலைவர்களை அழைத்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

1984 யு.டி.ஆர். பட்டா மாறுதல் குறித்த ஆவணங்களை சென்னை ஆவணக் காப்பகத்திலிருந்து பெற வேண்டும்; அதன் பிறகு ஒரு குழு மூலம் ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை ஆட்சியரிடம் அளிக்க இருப்பதாக கோட்டாட்சியர் கூறினார். இதற்கு இரண்டு மாத காலம் ஆகும் எனவும் அவர் கூறினார். பிரச்சனைக்குரிய இந்நிலத்தை இதற்கிடையில் விற்கவும், பத்திரப் பதிவு செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும் கோட்டாட்சியர் தெரிவித் தார்.

போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு கிருஷ்ணகிரி அணையிலிருந்து உபரி நீரைக் கொண்டு செல்வதற்கான கால்வாய் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கக் கோரும் முன்மொழிவை உடனடியாக அரசுக்கு அனுப்பி வைப்பதாக வருவாய் அலுவலர் தொவித்தார். இதுபோல் இட்டிக்கல் அகரம் தலித் மக்களுக்கு அளிக்கப்பட்ட நிலத்திற்கு, வனத்துறையினர் அத்துமீறி உரிமை கோருவதை தடுப்பது, வசந்தப்பள்ளியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முனி வெங்கடப்பன் ஏழைகளிடமிருந்து ஆக்கிரமித்த தரிசு நிலத்தை, 2 ஏக்கர் இலவச நிலத்திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மீது விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

வாச்சாத்தி வழக்கு பிப்.11-க்கு ஒத்திவைப்பு

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் வாச்சாத்தி கிராமத்தில் 1992-ம் ஆண்டு மலைவாழ் இனத்தை சேர்ந்த 18 பெண்கள் வனத்துறையை சேர்ந்தவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக வனத்துறை காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் 269 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 16 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் கடந்த ஜூன் மாதம் தருமபுரி அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இவ்வழக்கு நடந்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற குறுக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட 18 பெண்கள், பின்னர் சிறைவார்டன் லலிதா பாய் சாட்சியமளித்தனர்,

ஜனவரி 28 அன்று மாவட்ட நீதிபதி எஸ்.குமரகுரு முன்பு நடைபெற்ற குறுக்கு விசாரணையில் குற்றவாளி தரப்பில் டி.எப். ஓ. துரைசாமி சாட்சியமளித்தார். அரசுத் தரப்பு சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் ஜெயபால், எதிர்த்தரப்பு வழக்கறிஞர் விஜயராகவன், வாதாடினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் பிப்ரவரி 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். பிப்ரவரி 11 அன்று மத்திய புலனாய்வுத்துறை மாவட்ட துணைக்கண்காணிப்பாளர் ஜகநாதன் சாட்சியமளிக்க உள்ளார்.

மிட்டா மிராசுகளிடம் தலித்துகளின் நிலம் வருவாய்த்துறை உதவியுடன் தொடரும் அநீதி - -சி.முருகேசன்

வசதி படைத்தவர்களிடம் உள்ளூர் அதிகாரமும் கிடைத்துவிட்டால் முடிசூடா மன்னர்களாக மாறிவிடுகிறார்கள். அதற்கு உதாரணமாக உள்ளது ரெட்டிப்பட்டி. இங்கு ஆங்கிலேயர் காலத்தில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட நில உரிமையை கூட தட்டிப் பறித்துள்ளனர். தலித்துக்களை ஏழைகளாகவே- தொடர்ந்து தங்களுக்கு சேவகம் செய்யும் நபர்களாகவே நீடிக்க வைத்துள்ளனர். தொடரும் சமூக ஒடுக்குமுறை குறித்து ஒரு நேரடி ரிப்போர்ட்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகாவில் உள்ளது தலித் கிராமமான ரெட்டிப்பட்டி. பர்கூர் சிப்காட் தொழிற்பேட்டைக்கும் வாணிப்பட்டி ஏரிக்கும் மத்தியில் ரெட்டிப்பட்டியை சேர்ந்த தலித் மக்களுக்கு உரிமையுள்ள சுமார் ஐநூறு ஏக்கர் நிலம் உள்ளது. புல எண்கள்: 109, 110, 111, 115, 117, 119, 120 உள்ளிட்ட நிலங்கள், அரசு ஆவணங்களில் தோட்டி மானியம் என குறிக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பகுதி மேட்டு நிலமாக இருந்ததால் மானாவாரி விவசாயம் நடைபெற்று வந்தது. விவசாயம் சோறு போடாததால் சில குடும்பங்கள் வெளியூர்களில் பிழைப்பு தேடி சென்றுள்ளன.

ஆனந்தூர் தரப்பிலுள்ள இப்பகுதியின் கிராம நிர்வாகம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆனந்தூர் மிராசுதார் துரைசாமி செட்டி குடும்பத்தினரிடம் இருந்து வருகிறது. இதைப் பயன்படுத்தி தலித் மக்களின் தோட்டி மானிய நிலங்களை இக்குடும்பத்தினர் கைப்பற்றியுள்ளனர். 1985-ல் இத்தகைய நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு யு.டி.ஆர். பட்டாவும் பெற்றுள்ளனர். இதில் அண்ணாமலை மகன் துரைசாமி என்கிற தலித் விவசாயியின் அனுபவத்தில் இருந்த 20 ஏக்கர் நிலமும் உள்ளது.

மிராசுதார்கள் பட்டாவுடன் வந்து நிலங்களுக்கு சொந்தம் கொண்டாடியபோது தலித் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எதிர்த்து நிற்கக்கூட ஆற்றல் இல்லாத அவர்கள், பட்டாவைக் கண்டு ஒடுங்கிப் போயினர். எதிர்த்து நின்ற ஒரு சிலர் காவல்துறை மற்றும் குண்டர் படையின் தாக்குதலுக்கு உள்ளாகினர். அ.துரைசாமியை காவல்துறை மூலம் கடும் சித்ரவதை செய்து நிலத்தை விட்டு துரத்தியதாக அவரது மகன் ஜெயவேல் கூறினார். இவர்கள் வசித்த வீடு இடிந்து புல் முளைத்துள்ளது. முறைகேடான பட்டாக்களை ரத்து செய்யவும், இதற்கு காரணமான வருவாய் துறையினர் மீது நடவடிக்கை கோரியும் அ.துரைசாமி தொடர்ந்து மனுக்கள் கொடுத்துள்ளார். 2001-ல் தருமபுரி மாவட்டமாக இருந்தபோது ஆட்சியர் கா.பாலச்சந்திரன் பிறப்பித்த ஆணையில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் விசாரித்து 30 நாட்களுக்குள் அறிக்கை அனுப்பவேண்டும் என கூறியிருந்தார். கிராம நிர்வாகத்தை மிட்டாதார் வகையறாக்கள் தன்வசம் வைத்திருந்ததால் ஆட்சியரின் உத்தரவு மதிப்பிழந்து போனது. ஆனாலும் நிலத்திற்குள் மிராசுதார் குடும்பத்தாரை அனுமதிக்காமல் தடுத்து வந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டமாக மாறிய பிறகு 15.11.2005 தேதியில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியரிடம் புதிய மனு கொடுத்துள்ளார். இதன் மீதான விசாரணை 5 மாதங்கள் கழித்து 5.4.2006 ல் நடந்துள்ளது. அடுத்த இரண்டு மாதத்திற்குள் அ.துரைசாமி இறந்தார். வருவாய்த் துறையும் இதில் முடங்கிக் கொண்டது. உடனடியாக மிராசுதார்கள் ஏழரை ஏக்கர் நிலத்தை வெளியூர் நபர்களுக்கு விற்றுள்ளனர். தொடர்ந்து இதர நிலங்களையும் சிறுகச் சிறுக விற்கத் துவங்கினர். கிராமத்தை ஒட்டிய மந்தைவெளி நிலம் கூட இவர்களது ஆக்கிரமிப்பிலிருந்து தப்பவில்லை. கிராம நிர்வாக அதிகாரி ஜெகதீசன், இந்த 5 ஏக்கர் நிலத்திற்கு பட்டா போட்டு வைத்துள்ளாராம். முழுவதும் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் கிராமமான ரெட்டிப்பட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனாலும் மிராசுதார்களின் ஆதிக்கம்தான் எங்கும் நிரம்பி உள்ளது.

இதுகுறித்து இங்குள்ளவர்களிடம் கேட்டபோது, ஆடு, மாடு மேய்க்கக்கூட எங்களுக்கு இடம் இல்லை. எங்க நிலத்தை திருப்பித்தர மாட்டாங்க. அவங்க தயவுல தான் பிழைக்கிறோம். வேலையும் சரி, மாடு கண்ணு மேய்க்கறதும் சரி அவங்கள நம்பி தான் இருக்கிறோம் என்றனர்.

ரெட்டிப்பட்டி கிராமத்தில் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் குறித்து சில விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஜெகதீசன் பெற்றுள்ளார். பல விவரங்களை அளிக்க வருவாய் துறையும், ஆவணகாப்பகமும் காலம் கடத்துவதாக அவர் கூறினார். ஏழைகளின் நலன்களை பாதுகாப்பதாக கூறும் ஆட்சியாளர்கள் ரெட்டிப்பட்டி தலித் மக்களின் நில உரிமையை மீட்டுத் தருவார்களா?

மிராசுதார்களின் மூர்க்கத்தனம்
ரெட்டிப்பட்டியில் தனது தோட்டத்தை ஒட்டி மிராசுதார்களின் ஆக்கிரமிப்பில் உள்ள ஒரு பகுதி நிலத்தை தலித் அல்லாத பொன்னுசாமி, குத்தகைக்கு உழுது வந்தார். சும்மா கிடந்த நிலம் அவரது உழைப்பால் உயிர் பெற்றது. தலித் மக்களுடன் அவர் நெருக்கமானதால் மிராசுதார்கள் ஆத்திரமடைந்தனர். இதையொட்டி நடந்தவற்றை பொன்னுசாமி விவரித்தார்: விளைந்த நெல்லை அறுவடை செய்துவிட்டு வெளியேறுவதாக கூறினேன். ஏற்காத துரைசாமி செட்டியாரும், அவர் குடும்பத்தாரும் ரவுடிகள் துணையோடு என்னை தாக்கினர். என்மேல் கொலை முயற்சி வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்பினர். இந்த சம்ப வத்தை தலித் மக்களை மிரட்டுவதற்கும் பயன்படுத்திக்கொண்டனர் என்றார்.

நடைபயணம் - ஆர்ப்பாட்டம்:
இந்நிலையில், தங்களின் நிலத்தை மீட்டுத்தரவும், முறைகேடாக பட்டா வழங்கியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி புதனன்று (27.01.2010) ரெட்டிப்பட்டியிருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி, தலித் மக்கள் நடைபயணம் மேற்கொள்கின்றனர். வியாழனன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட் டமும் நடைபெற உள்ளது.

(தீக்கதிரில் வெளியான கட்டுரை)

வியாழன், 11 பிப்ரவரி, 2010

ஒன்றுபடுத்தியதும் வென்று காட்டியதும் மார்க்சிஸ்ட் கட்சிதான்! - அருந்ததியர் இயக்க தலைவர்கள் புகழாரம்

அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு கோரி 25 ஆண்டுகாலம் போராடினாலும் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போராட்டம்தான் வெற்றியைத் தந்தது. பல்வேறு அருந்ததியர் இயக்கங்களை ஒன்றுபடுத்திப் போராடியதும், கோரிக்கையை வென்று காட்டியதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் என்று அருந்ததியர் அமைப்புகளின் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.

பல்வேறு அருந்ததியர் அமைப்புகளின் சார்பில் கோவையில் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில், அருந்ததியர் இயக்கங்களின் தலைவர்கள் பேசியதாவது:

ஆதித்தமிழர் சனநாயகப் பேரவையின்
மாநில அமைப்பாளர் அ.சு.பவுத்தன் :
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல, இன்று அருந்ததியர் மக்கள் எழுச்சி கொண்டு வருகிறார்கள். பல்வேறு அரசியல் இயக்கங்கள் ஓட்டைப்பெற மட்டுமே அருந்ததியர் மக்களைப் பயன்படுத்தி வந்தபோது மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே உண்மையான அக்கறையுடன் போராடியது. குழுக்களாகப் போராடிக்கொண்டிருந்த எங்களை ஒரே அரங்கத்தில் அமர்த்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். 1989-ல் வன்னியர் சமூகம் 105 சாதிகளை ஒன்றுதிரட்டி 27 சதவிகித பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்காக போராடியது. ஆனால் அருந்ததியர் இடஒதுக்கீட்டை தலித் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பள்ளர், பறையர் அமைப்புகளே எதிர்ப்பதுதான் வேதனையானது.

ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின்
மாநில அமைப்பாளர் கோவை ரவிக்குமார்:
கடைநிலைச் சாதியினரை விடுவிப்பதே முதல்பணி என்று போராடிய மார்க்சிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவிக்கிறோம். கையால் மலம் அள்ளும் மனிதாபிமானமற்ற சமுதாயக் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஒரு மாமனிதர் விரும்பி னார். அதற்குத் தடைவிதித்த முதல் மாநிலம் மேற்குவங்கம். அந்த மாமனிதர் ஜோதிபாசு. அவருக்கு எங்கள் வீரவணக்கத்தை தெரிவிக்கிறோம். சிலநாட்களுக்கு முன்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது, ஆண்டானுக்கு அடிமைகள் எடுத்த விழா. இந்த விழா தனது சகதோழனை தோளில் தட்டிப் பாராட்டுவது.

அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின்
மாநில அமைப்பாளர் கு.ஜக்கையன்:
உள்ஒதுக்கீடு அறிவித்தவுடன் தோழர் சம்பத்திடம் பாராட்டுவிழா நடத்துகிறோம் என்று அனுமதி கேட்டேன். அப்படி ஒரு விளம்பரம் தேடும் வேலை வேண்டாம் என்றார். ஆனால் தமிழக முதல்வர் தன்னிடம்தானே கோரிக்கை வைத்து நிறைவேற்றியதாகச் சொன்னார். எனவே உண்மையை ஊருக்குச் சொல்லவே இந்த விழா. சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பென்சன் வழங்கப்பட்டபோது என்.சங்கரய்யா, நல்லகண்ணு போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் வாங்க மறுத்தனர். பென்சனுக்காகவா போராடினோம் என்று மார்தட்டிய பாரம்பரியத்தைக் கொண்டது கம்யூனிஸ்ட் இயக்கம். உள் இடஒதுக்கீடு கேட்டு நடந்த போராட்டத்தில் திண்டுக்கல் மறியலில் பங்கேற்று ஆளும் அரசுக்கு நெருக்கடி தந்தவர் தோழர் என்.வரதராஜன்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் இளைஞர்களை ஆகர்ஷித்த பகத்சிங்கிடம் கடைசி ஆசை என்னவென்று கேட்டார் கள். அதற்கு பகத்சிங், “சிறையில் பணிபுரியும் பேபி என்னும் பெண்மணி கையால் இரண்டு துண்டு ரொட்டி வேண்டும்,” என்று கேட்டார். சிறை முழுவதும் தேடிவிட்டு அப்படி ஒரு பெண் இல்லை என்று தெரிவித்தனர். அதற்கு பகத்சிங் கூறினார்: “கைதிகளின் கழிவறைகளில் மலம் அள்ளும் பணி செய்கிறார் பேபி,” என்று. அவர் இந்நாட்டின் உண்மையான புரட்சித்தலைவர் ஆவார். காந்தி தனக்கு அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் துப்புரவுப்பணியாளனாகப் பிறக்க வேண்டும் என்று கூறினார். இதனை அம்பேத்கரிடம் சொன்னபோது, “அடுத்த பிறவியும் இருக்க வேண்டும், அப்போதும் அவர்கள் துப்புரவுப்பணியைச் செய்து கொண்டிருக்க வேண்டும் என்று காந்தி விரும்புகிறாரோ?’’ என்னவோ என்றார். இன்று சிலர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை நீக்க வேண்டும் என்கின்றனர். அது அவர்களால் முடியாது. முதுகுளத்தூர் கலவரத்தில் உண்மை நிலையை வெளியுலகிற்குச் சொன்ன தினகரன் எனும் செய்தியாளர் தேவர் சாதியைச் சேர்ந்தவர்தான். தலித் மக்களுக்காகப் போராடி வீழ்ந்த திருப்பூர் இடுவாயைச் சேர்ந்த சிபிஎம் தோழர் ரத்தினசாமி, கவுண்டர் சாதிதான். தலித் மக்களின் விடுதலை என்பது முற்போக்கு எண்ணம் கொண்ட ஜனநாயக முற்போக்கு எண்ணம் கொண்டோர் இணையும்போதுதான் சாத்தியப்படும்.

அருந்ததியர் மக்கள் முன்னேற்றக்கழக
மேற்கு மண்டலச் செயலாளர் ராதாமணி:
எதுவுமேயில்லை என்று ஒதுக்கப்பட்டோருக்கு உதவுவது மார்க்சிஸ்ட் கட்சிதான். சேரிகளை மாற்றாத திராவிடம்தான் இதுவரை ஆண்டு வருகிறது. எனவே சமூக அடிமைத்தனத்தை மாற்ற வேண்டும் என்று போராடி வரும் மார்க்சிஸ்ட் கட்சி யைப் பாராட்டுவதில் பேரானந்தப்படுகிறோம்.

தலித் விடுதலைக்கட்சியின் மாநிலப்
பொதுச்செயலாளர் செங்கோட்டையன்:
இன்றைக்கு துணை முதல்வர் வருகைக்காக கருமத்தம்பட்டி முதல் கோவை வரை போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். அதனால் என்னால் சரியான நேரத்திற்கு வர இயலவில்லை. 1964 முதல் மார்க்சிஸ்ட் கட்சியின் பி.எஸ்.(பி.சம்பத்)போன்ற தோழர்கள் சேரி மக்களிடம் இறங்கிப்பணி செய்து வருகிறார்கள். அப்படிச் செய்த இடங்களில் எல்லாம் இன்று கம்யூனிஸ்டுகளுக்குப் பேராதரவு இருக்கிறது. சாதியத்தை வேரறுக்கும் சக்தி மார்க்சியத்திற்கே உண்டு. எனவே இடதுசாரிகளுடன் இணைந்து நின்று சமூகக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்.

பாராட்டு விழாவில் மக்கள் முன்னேற்ற முன்னணி பொதுச்செயலாளர் பால்ராசு, தந்தை பெரியார் - டாக்டர் அம்பேத்கர் மக் கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் எம்.ஆர்.கிருஷ்ணன், அருந்ததியர் மனித உரிமை அமைப்பின் மாநில அமைப்பாளர் ஆர்.ஆர். கருப்புச்சாமி, வீர அருந்ததியர் பேரவை பொதுச்செயலாளர் ஓ.ரங்கசாமி, அருந்ததியர் விடுதலை முன்னணி நிறுவனர் என்.டி.ஆர். ஜெகஜீவன்ராம், ஜனநாயக மக்கள் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் கோ.சென்னியப்பன், தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்க மாநிலப் பொதுச்செயலாளர் வி.பி.பன்னீர்செல்வம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட் டோர் உரையாற்றினர்.

மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த அருந்ததிய மக்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாராட்டுவிழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

“அருந்ததியர் விடுதலை என்பது உழைக்கும் மக்களின் விடுதலையுடன் இணைந்ததே” - என்.வரதராஜன் பேச்சு

சமூகத்தின் அடித்தளத்தில் அடக்கப்பட்டிருக்கும் அருந்ததியர் மக்களின் விடுதலை என்பது உழைக்கும் மக்களின் விடு தலையோடு இணைந்ததே என கோவையில் அருந்ததிய அமைப்புகளின் சார்பில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் என்.வரதராஜன் பேசினார்.

கோவை புதுசித்தாபுதூரில் ஞாயிறன்று (24.01.2010) நடைபெற்ற பாராட்டுவிழாக் கூட்டத்திற்கு வழக்கறிஞர் வெண்மணி தலைமை வகித் தார். விழாவில் ஏற்புரையாற்றிய என்.வரதராஜன் மேலும் பேசியதாவது:-

உலக சமுதாயத்தையே மாற்றும் ஆற்றல்மிக்க- மாமனிதர் மார்க்சின் அற்புதமான தத்துவத்தைக் கொண்டது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மார்க்ஸ் தனது தத்துவத்தை விளக்கும்போது ‘தந்தை, தாய் எனும் உரிமை பாராட்டி தனது குழந்தையைக் கூட சுரண்ட மார்க்சியம் அனுமதிக்காது’ என்றார். அதனடிப்படையில் நாம் சுரண்டலுக்கு எதிராக வீரம் செறிந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம்.

நமது கிராமப்புறங்கள் இன்று அழிந்து போன நந்தவனங்களாய் காட்சி தருகின்றன. வங்கிகளில் கடன் பெற முடியாததால் கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கிச் சீரழிகிறார்கள். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் விவசாயிகளுக்கு 4 சதவிகித வட்டியில் கடன் வழங்க சிபாரிசு செய்தார். ஆனால் ஆள்வோர் அதை அமலாக்கவில்லை.

“தலித் மக்களின் விடுதலை என்பது அருந்ததியரின் விடுதலையோடு இணைந்தது. இன்று கோவையில்கூட என்னைச் சந்தித்த அருந்ததிய இளைஞர்கள், தங்களுக்கு சலவை செய்யவும், முடிவெட்டவும் மறுக்கப்படுவதாக தெரிவித்தனர். “பெரியார் பிறந்த மண்ணில் இன்னும் தீண்டாமையோ, ஒடுக்குமுறைகளோ குறையவில்லையே. அதனைப் போக்க 5 முறை முதல்வர் ஆன கருணாநிதி ஏதேனும் செய்தாரா? கடுமையான கிளர்ச்சிகளுக்குப் பிறகு பாதாளச் சாக்கடை அடைப்பை நீக்க சென்னையில் மட்டும் இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதையே 50 நகரங்களுக்கும் விரிவுபடுத்து, சுடுகாட்டில் பிணம் புதைக்கும், எரிக்கும் வேலைகளைச் செய்யும் மக்களை மயான உதவியாளராக்கி அரசு ஊழியராக அறிவித்திட வேண்டும்; கையால் மலம் அள்ளும் கொடுமைக்கு முற்றுப்புள்ளிவை, தரிசு நில விநியோகத்தினை அருந்ததிய மக்களுக்கு வழங்கு என்று அருந்ததிய அமைப்புகளை இணைத்துக்கொண்டு கடும் போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நடத்தும். நீண்ட நெடிய போராட்டங்களால் அமலான மூன்று சதவிகித உள்ஒதுக்கீடு கூட முழுமையாக அமலாகவில்லை அதனை உயர்நீதிமன்றம் சென்று போராடிப் பெறவேண்டிய நிலை உள்ளது.

தீண்டாமை- வன்கொடுமைக்கு தீயிடும் போராட்டத்தில் அருந்ததியர்கள் முதல் படியில் நிற்க வேண்டும். அதற்கு மார்க்சிஸ்ட் கட்சி துணைநிற்கும். நாம் ஒன்றிணைந்து வீறுகொண்டு முன்னேறுவோம். இவ்வாறு என்.வரதராஜன் பேசினார்.

தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் இணைத்திடுக!- திருச்சியில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தலித் கிறிஸ்தவர்களைத் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருச்சி ரயில்வே ஜங்சன் ரவுண்டானா அருகில் திங்களன்று (25.01.2010) காலை எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சிராப்பள்ளி மாவட்டச் செயலாளர் எஸ்.ஸ்ரீதர் தலைமை வகித்தார் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் எம்.ஜெயசீலன் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், ஆயர் பேரவையின் எஸ்.சி., எஸ்.டி கமிஷன் மாநிலச் செயலாளர் இசட்.தேவ சகாயராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

டி.கே.ரங்கராஜன் எம்.பி. பேசுகையில், மத்திய அரசால் அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை வந்தும் கூட அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை; 60 ஆண்டுகளாக தலித் கிறிஸ்தவர்கள் தாழ்த்தப்பட் டோர் பட்டியலில் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றனர்; இவர்களை பிற்படுத்தப்பட்டவர்களும் ஏற்றுக்கொள்வதில்லை; தாழ்த்தப்பட்டவர்களும் ஏற்றுக் கொள்வதில்லை; இந்நிலையில், தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களுடன் இணைந்து போராடும் இதற்கு அனைத்துப்பகுதி மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். முடிவில் மாநகரச் செயலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ்.இந்துராஜ், சி.மாசிலாமணி, எஸ்.சந்திரன், ஆர்.ராஜா, வி.வி.கிருஷ்ணமூர்த்தி, கே.சி.பாண்டியன், கே.சிவராஜ், வி.சிதம்பரம், எஸ்.ரங்கராஜன், ஏ.பழனிச்சாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் எம்.அண்ணாதுரை நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தலித் கிறிஸ்தவர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி தூத்துக்குடி மாவட்டத்தில் அமைப்பு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தூத்துக்குடி மாவட்ட அமைப்புக் கூட்டம், தூத்துக்குடியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.ரசல் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கனகராஜ் வாழ்த்துரை வழங்கினார். 70 பேர் கொண்ட அமைப்புக்குழு, கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.இசக்கிமுத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

கழுகுமலை வேலாயுதபுரம் கிராமத்தில் இலவச டி.வி. மறுக்கப்பட்டுள்ள 13 அருந்ததியர் குடும்பங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக இலவச டி.வி. வழங்க வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் தீண்டாமை நிலவும் கிராமங்களை கண்டறிந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அலட்சியம் காட்டும்பட்சத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம் நடத்தும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில அமைப்பாளர் பி.சம்பத் பேசுகையில், இரட்டை டம்ளர், சலூன்களில் இரண்டுசேர், சலவையகத்தில் இரண்டு பீரோ, கோயிலில் நுழைய அனுமதி மறுப்பு, பொது மயானப் பாதை போன்ற பல பிரச்சனைகள் மாவட்டத்தில் நிலவும் நிலையில், அவற்றுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவோம் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அருந்ததிய அமைப்புக்கள் நடத்திய பாராட்டு விழா

சமுதாயத்தின் அடித்தட்டில் அழுந்திக் கிடக்கும் அருந்ததியர் மக்களுக்காக போராட்டக்களம் கண்டு 3 சதவிகித உள்ஒதுக்கீட்டை வென்றெடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, அருந்ததியர் அமைப்புகள் உணர்வுப்பூர்வமாக பாராட்டு விழா நடத்தினர்.

இந்த விழாவில் கண்களில் நம்பிக்கை ஒளியோடு பல்லாயிரக்கணக்கான அருந்ததியர் மக்கள் குடும்பம், குடும்பமாகக் கலந்து கொண்டனர்.

தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அருந்ததியர் அமைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாகப் போராடி வந்தன. இந்நிலையில் அந்த மக்களின் கோரிக்கையை வென்றெடுப்பதற்காக தோளோடு தோள்சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்லாயிரக்கணக்கான மக்களை அணி திரட்டி போராட்டக்களம் கண்டது. இதன் விளைவாக கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து 3 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது.

இதையடுத்து, தங்கள் வாழ்வாதாரக் கோரிக்கையை போராடி வென்றெடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாராட்டு விழா நடத்துவதென அருந் ததியர் அமைப்புகள் முடிவு செய்தன.

இதனடிப்படையில் கோவை காந்திபுரம் புது சித்தாபுதூரில் ஞாயிறன்று இந்த விழா நடந்தது. இதில் எழுத்தாளர் பிரபஞ்சன், அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் மாநில அமைப்பாளர் கு.ஜக்கையன், ஆதித்தமிழர் விடுதலை முன்னணி மாநில அமைப்பாளர் இரவிக்குமார், ஆதித்தமிழர் சனநாயகப் பேரவை மாநில அமைப்பாளர் அ.சு.பவுத்தன், மக்கள் முன்னேற்ற முன்னணி பொதுச் செயலாளர் பால்ராசு, அருந்ததியர் மக்கள் முன்னேற்றக் கழக மேற்கு மண்டலப் பொறுப்பாளர் ராதாமணி, தலித் விடுதலைக் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இரா.மூர்த்தி, தந்தை பெரியார் டாக்டர் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் நீலகிரி எம்.ஆர்.கிருஷ்ணன், அருந்ததியர் மனித உரிமை அமைப்பின் மாநில அமைப்பாளர் ஆர்.ஆர்.கருப்புச்சாமி, வீர அருந்ததியர் பேரவைப் பொதுச்செயலாளர் ஓ.ரங்கசாமி, அருந்ததியர் விடுதலை முன்னணி நிறுவனர் என்.டி.ஆர்.ஜெகஜீவன்ராம், ஜனநாயக மக்கள் இயக்கத் தலைவர் கோ.சென்னியப்பன், தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்க மாநிலப் பொதுச்செயலாளர் வி.பி.மணி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பேசினர்.

விழாவில் சத்தியமங்கலம் சாக்கிய கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் ஏற்புரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளருமான பி.சம்பத், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் பேசினர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.தங்கவேல், என்.சீனிவாசன், மாவட்டச் செயலாளர்கள் யு.கே.வெள்ளிங்கிரி, கே.காமராஜ், ப.மாரிமுத்து, எம்.ராஜகோபாலன், ஏ.ரங்கசாமி, ஆர்.பத்ரி, மாநிலக்குழு உறுப்பினர் கே.சி.கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பங்கேற்ற அருந்ததியர் அமைப்பினர் தங்கள் கொடிகளை ஏந்தி உற்சாகமாக வந்திருந்தனர்.

புதன், 10 பிப்ரவரி, 2010

ஒரே நாளில் சாதிச் சான்றிதழ்: இருளர் இன மக்கள் நன்றி

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த கரடிப்புத்தூர் கிராமத்தில், ஒரேநாளில் விசாரணை செய்து, உடனடியாக இருளர் இன மக்களுக்கு வீடு வீடாக சென்று சாதிச்சான்றிதழ் வழங்கிய அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள கரடிப்புத்தூர் ஊராட்சியில் உள்ள கோபால்ரெட்டி கண்டிகையில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள், ஆரம்பக் கல்வி, உயர்கல்வி கற்க சாதிச் சான்றிதழ் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இதில் ஒரு சிலர் உயர்கல்வி கற்றாலும், அவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவியும் கிடைப்பதில்லை. சாதிச்சான்று இல் லாமல் எந்த அரசு உதவியும் கிடைப்பதில்லை. பல குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா இல்லை. அரசு வழங்கும் வண்ண தொலைக்காட்சி பெட்டிகளும் இன்னும் வந்து சேரவில்லை.

இந்த நிலையில் அங்கு வாழும் இருளர் இன மக்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவள்ளூர் மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயதென்னரசு தலைமையில் தொடர்ந்து மனு கொடுத்து வந்தனர்.

3 மணி நேரத்தில் சாதிச் சான்று

இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஆர்டிஓ தலைமையில் அதிகாரிகள் கடந்த வாரம் கோபால் ரெட்டி கண்டிகைக்கு சென்று இருளர் இன மக்களிடம் விசாரணை செய்தனர். அதன் பிறகு அந்த இடத்திலேயே சாதிச்சான்றிதழ் தயார் செய்து 3 மணி நேரத்தில் 24 நபர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கினர்.

இரவு நேரம் ஆனதால் தீப்பந்தம் ஏந்திக் கொண்டு பொன்னேரி ஆர்டிஓ குமார் வீடு, வீடாக சென்று சான்றிதழ் வழங்கினார். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் முனியசாமி உடனிருந்தார்.

ஒரு சில மணி நேரத்திலேயே சாதிச்சான்றிதழ் வழங்கிய அதிகாரிகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

சிபிஎம் கரத்தைப் பற்றி முன்னேறுவோம்! - நீலவேந்தன் (ஆதித்தமிழர் பேரவை)

அறிவியல் அடிப்படை ஏதுமற்று முப்பது நூற்றாண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் சாதிய சமூக அமைப்பில், கீழ்நிலையில் வாழ்ந்து வரும் அருந்ததியர் மக்களின் உள் இடஒதுக்கீட்டுக்கான சமூகநீதிப் போராட்டம் கடந்த கால் நூற்றாண் டுக்கு முன்னால் முகிழ்த்து விவாதப்பொருளாகி, மக்கள் கோரிக்கையாக மாறி, உள் இடஒதுக்கீட்டு கோரிக்கையின் அடிநாதம் வெற்று சாதி உணர்வல்ல, அது சனநாயக அடிப்படையிலானது என்று தியாகத்தழும்புகளால் உருவேறிய மார்க்சிஸ்ட் கட்சியால் அரசியல் கோரிக்கையாக மாற்றப்பட்டு இன்று அருந்ததியர் மாணவர் கரங்களில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றால், இந்த கோரிக்கை கடந்துவந்த பாதை அவ்வளவு எளிதானதும் குறுகியதும் அல்ல.

பட்டியலிடப்பட்ட சாதியினருக்கென கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் இட ஒதுக்கீடு இந்திய அரசியல் சாசனத்திலேயே புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களால் உறுதி செய்யப்பட்டு விட்டாலும், பட்டியலிடப்பட்ட சாதியினருக்கென வழங்கப்பட்ட இடஒதுக்கீடு அனைத்து பட்டியலிடப்பட்ட சாதியினர்களுக்குள் சமமாக பகிர்ந்து கொள்ளப்படவில்லை. பட் டியலிடப்பட்ட சாதிகளிலேயே ஓரளவு முன்னேறிய சில சாதிகள் மட்டுமே இடஒதுக்கீட்டின் பலனை நுகர்ந்து வந்ததால், வஞ்சிக்கப்பட்ட சகோதர சாதிகள் தங்களுக்கென தனி உள்இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்தன. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய துணைக்கண்டம் முழுமையுமே இதுபோன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, அதற்கான போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.

குறிப்பாக பஞ்சாப்பிலும், ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் உள் இடஒதுக்கீட்டு கோரிக்கை வெகுவீச்சாக முன்னெடுக்கப்பட்டு, பஞ்சாபிலும் ஆந்திராவிலும் உள் இடஒதுக்கீடு சட்டமாகவே மாறியது. தமிழகத்தில் இவ்வாறாக வஞ்சிக்கப்பட்ட அருந் ததியர்கள் உள் இடஒதுக்கீடு கோரினர். தமிழகத்தில் 1984ம் ஆண்டில் கோவையில் நடைபெற்ற “இளைஞர் வழிகாட்டும் பணி” என்கிற அமைப்பின் மாநாட்டில், உள் இடஒதுக்கீடு கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் நாமறிந்த வகையில் அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டுக்கான முதல் கோரிக்கையாகும்.

பத்து ஆண்டுகளாக அருந்ததியர் மக்களுக்குள்ளாகவே சுழன்று வந்த கோரிக்கை, 1994ம் ஆண்டு வாக்கில் சமூகநீதி இயக்கங்களால் பேசப்பட்டது. 1999-2000 ஆண்டுகளில் ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அருந்ததியர் இயக்கங்களின் சக்திக்குட்பட்ட போராட்டங்களால் சக தலித் இயக்கங்களின் கவனத்தை ஈர்த்தது. 2004 - 2005 ஆண்டுகளில் ஆதித்தமிழர் பேரவை உள் இடஒதுக்கீடு கோரி மாநாடுகளையும் பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்த தொடங்கி, உள்இடஒதுக்கீடு கோரிக்கை போராட்டக்களத்துக்கு மாறியது.

2006ம் ஆண்டு செப்டம்பர் 17-ல் விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய அருந்ததியர் சமூக பொருளாதார மாநாட்டின், “அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையாக வாழும் அருந்ததியர்களின் சமூக பொருளாதார விடுதலைக்காக விவசாயிகள், தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டி போராடும்” என்கிற வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் விடுத்த அறை கூவல் அருந்ததியர் விடுதலைப் போராட்டத்தின் மைல்கல்லாகும்.

2007ம் ஆண்டு ஜூன் 12ல் சென்னை மாநகரை குலுக்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த “அருந்ததியர் சமூக பொருளாதார உரிமைப்பேரணி” சமூக அரங்கில் உள் இடஒதுக்கீட்டு கோரிக்கைக்கு வலுசேர்த்ததோடு ஆட்சியாளர்களின் காதுகளுக்கு உள்இடஒதுக்கீடு கோரிக்கை எட்டிய, வரலாற்றில் குறித்து வைக்கத்தக்க நாளாக மாறியது. பேரணி முடிவில் மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர்களை சந்திப்பதாக இருந்த தமிழக முதல்வர், தில்லிப்பயணம் காரணமாக பேரணிக்கு முன்னதாகவே தலைவர்களை சந்தித்தார். அழைப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான் என்றாலும், அதியமான், ஜக்கையன் உள்ளிட்ட அருந்ததியர் தலைவர்களை உடன் அழைத்துச்சென்ற அரசியல் பண்பாடு, ஒடுக்கப்பட்ட மக்களின்பால் மார்க்சிஸ்ட் கட்சி கொண்டிருக்கிற பூடகமும் வேடமும் இல்லாத வர்க்கப்பாசத் தை அருந்ததியர்கள் என்றென்றும் நினைவு கூரத்தக்கவர்கள்.

அதே ஆண்டில் நவம்பர் 2-ம் தேதி அருந்ததியர் உள்இடஒதுக்கீட்டுக்காக மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் அருந்ததியர்கள் மட்டுமல்லாது உழைப்பாளி மக்கள் வர்க்கப்பாசத்துடன் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டு கைதாகினர். 2008-ம் ஆண்டு சனவரி 23-ல் தமிழக அரசு ஆளுநர் உரையில், அருந்ததியர் உள்இடஒதுக்கீடு வழங்க அனைத்துக்கட்சிகளின் கூட்டம் கூட்டப்பெறும் என அறிவித்தது.

இதற்கிடையில், பல்வேறு அரசியல் கட்சிகள் ஒடுக்கப்பட்டோரை மாத்திரம் வைத்து ஒடுக்கப்பட்டோர் பிரிவு நடத்திக் கொண்டிருக்கையில், வர்க்க வெகுஜன அரங்கங்களை உள்ளடக்கி, மதுரையில் தியாகவேங்கை லீலாவதி அரங்கில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியை மார்க்சிஸ்ட் கட்சி அமைத்தது.

12.02.2008ல் தமிழக அரசு கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், தமிழக அரசு 2.35 சதவீத இடஒதுக்கீடு தர தயாராய் இருப்பதாக சொன்னபோது, 2.35 சதவீதம் நியாயமான அளவாக இருக்காது என்று ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் அவர்கள் ஆதாரங்களோடு போராடியபொழுது, அவரோடு தோள்நின்று போராடியது மார்க்சிஸ்ட் கட்சி. அதன் விளைவாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையத்திடம் ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அருந்ததியர் இயக்கங்களும் மார்க்சிஸ்ட் கட்சியும் தனித்தனியாக சந்தித்து ஆவணங்களை வழங்கின. ஆணையம் அளித்த பரிந்துரையின் பேரில் அமைச்சரவைக்குழு அமைக்கப்பட்டு அமைச்சரவைக்குழு ஏற்றுக் கொண்டபின், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மசோதாவாக முன்வைக்கப்பட்டு சட்டமாக மாறி 2009-2010ம் கல்வியாண்டிலேயே அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.

அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தின் சுருக்கமான, உண்மையான வரலாறு இவ்வாறிருக்க, கடந்த டிசம்பர் 5ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், சில அருந்ததியர் அமைப்புகள் நடத்திய பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் அருந்ததியர் உள்இடஒதுக்கீட்டு கோரிக்கையை யாரும் என்னிடத்தில் வைக்கவில்லை, அது எனக்கு நானே வைத்துக்கொண்ட கோரிக்கை என்று பேசியிருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று, அருந்ததியர் உள்இடஒதுக்கீடு குறித்து பரிசீலித்து பரிந்துரை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்படுகிறது என சட்டமன்றத்தில் பேசியது இன்றும் சட்டமன்ற நடவடிக்கைக் குறிப்புகளில் உள்ளது. ஆனால் உண்மையை மறைத்து, யாரும் என்னிடம் கோரிக் கை வைக்கவில்லை என்று சொல்லும் தமிழக முதல்வர், 2007 ஜூன் 12க்கு முன்பு இக்கோரிக்கை தொடர்பாக தமிழக அரசோ தி.மு.கவோ பேசியதாக ஆதாரம் காட்ட முடியுமா? தமிழக முதல்வரின் பாணியிலேயே நாம் பணிவோடு நினைவுபடுத்துகிறோம் 2007 ஜூன் 13ம் நாளிட்ட முரசொலி நாளிதழ் இதற்கு பதில் சொல்லும்.

இதுவே, தமிழகத்தின் சமூக அமைப்பில் அதிகாரம் பெற்று விளங்கும் மேல்..? சாதிகளில் ஒன்று நடத்துகிற பாராட்டு விழா வில், யாரும் கோரிக்கை வைக்கவில்லை என்று உண்மையை மறைக்க முடியுமா? தமிழக முதல்வரின் உண்மை மறைப்பை கண்டிக்கவும், கிராமப்புறங்களில் ஏவப்படும் வன்கொடுமைக்கு இணையான “மென்கொடுமைக்கு” எதிர்வினையாற்றவும் ஒரேவழி, அருந்ததியர் அமைப்புகள் சார்பில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவையில் சனவரி 24-ல் எடுக்கப்படும் பாராட்டு விழாவில், வெகுவாரியாக அருந்ததியர் பெருமக்கள் கலந்துகொண்டு வெற்றியடையச் செய்வதும் உண்மையான சமூகநீதிப் போராட்டத்தை கூடுதல் குறைவு இன்றி பதிவு செய்வதேயாகும்.

அருந்ததியர் விடுதலைப் போராட்டத்தின் ஒரு மைல்கல்லான உள் இடஒதுக்கீடு பெற்றுத் தந்ததற்காக மாத்திரம் நடத்தப் பெறும் பாராட்டு விழா அல்ல. ஆதிக்க சாதியென அடையாளம் காட்டப்படும் சாதியில் பிறந்து சக்கிலியர்களுக்கு ஆதரவாக இருந்ததனால் படுகோரமாக கொலை செய்யப்பட்ட தியாகி இடுவாய் ரத்தினசாமியின் வீரஞ்செறிந்த போராட்டம், அது தனிப்பட்ட ரத்தினசாமியின் குணநலன்களால் மாத்திரம் விளைந்தது அல்ல. ரத்தினசாமியை அவ்வாறு வார்த்தெடுத்த மார்க்சிஸ்ட் கட்சியின் நீண்ட நெடிய கட்சித்திட்டத்தின் விளைவே!

இன்றைக்கும் “வாழும் ரத்தினசாமிகள்” மார்க்சிஸ்ட் கட்சியில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நாம் கண்ணார பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த பாராட்டு விழா அந்த “வாழும் ரத்தினசாமிகளை” ஊக்கப்படுத்தும் ஒரு சிறு முயற்சியுமாகும்.

இரக்கப்பட்டு உச்சுக் கொட்டிய வாய்களுக்கு இடையில், தியாகத் தழும்புகளால் உருவேறிய முதிர்ந்த கரம் ஒன்று மார்க்சிஸ்ட் கட்சியாக அருந்ததியர்களை தூக்கிவிட வந்திருக்கிறது. கரத்தை வலுவாகப் பற்றிக்கொண்டு விடுதலைப் பாதையில் முன்னேறுவோம்!

- (தீக்கதிர், 24.01.2010)

அருந்ததியர்களின் இன்றைய வாழ்நிலை- ஒரு நேரடி ரிப்போர்ட்

நாமக்கல்லை அடுத்த புதுச்சத்திரம் ஒன்றியத்தில் உள்ளது திருமலைப்பட்டி ஊராட்சி. இங்கு 60 குடும்பங்கள் வசிக்கும் வண்ணாம்பாறை என்ற அருந்ததியர் கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் மக்களில் 18 வயது முதல் 30 வயது வரையுள்ள இளைஞர்கiளைத் தவிர மற்றவர்கள் விவசாய கூலி வேலைக்குத் தான் செல்கின்றனர். உள்ளூரில் வருடம் முழுவதும் வேலையிருப்பதில்லை. இதனால் கணவன், மனைவி இருவரும் வெளியூருக்கு வேலைதேடி சென்று விடுகின்றனர். வருடத்தில் சுமார் பத்து மாதங்கள் வேலைக்காக வெளியூரில்தான் தங்கி உள்ளனர். நெல் நடவு, களை எடுப்பது, அறுவடை என்றும், மஞ்சள் காட்டிற்கும், கரும்பு வெட்டுவதற்கும், நிலக்கடலை பறிப்பதற்கும் போர் வைப்பதற்கும், சோளத்தட்டு அறுக்கவும், குச்சிக்கிழங்கு பிடுங்கவும் என திருச்சி, கரூர், தஞ்சாவூர், ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் கேரளா வரை சென்று அங்கேயே தங்கியுள்ளனர். வயதான பாட்டன் பாட்டிகளின் பராமரிப்பில் குழந்தைகளை விட்டுச் செல்லும் நாடோடித் தொழிலாளர்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குழந்தைகளைப் பார்க்க வந்து செல்கின்றனர்.

இளைஞர்களும் லாரி மற்றும் ரிக் வண்டிகளுக்கு சென்று விடுகின்றனர். கர்நாடகா முதல் எபிவரை செல்லும் இவர்களும் வருடத்தில் இரண்டு அல்லது மூன்றுமுறைதான் வீட்டிற்கு வருகின்றனர். திருமணமாகாதவர்கள்தான் வெளியூர் வேலைக்கு செல்கின்றனர் என்றால், திருமணமானவர்களும் மனைவி, குழந்தைகளைத் தவிக்க விட்டு சென்றுவிடுகின்றனர். குழந்தைகள் பெறாத சிலரும் மாதக்கணக்கில் வீட்டுக்கு வருவதில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அண்டை வீட்டில் இருப்பவர்கள்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். செல்போனின் தயவால் குரலை மட்டும் கேட்கலாம், நலம் விசாரிக்கலாம் என்பதுதான் சற்று ஆறுதலான விசயம். குழந்தைகளைப் பராமரிக்க வேறு யாரும் இல்லாத
வர்கள் மட்டுமே சொந்த ஊரிலேயே இருக்கின்றனர். அவர்களும் சுற்றுவட்டாரத்தில் சுமார் 60 கிலோ மீட்டர் வரை வேலைக்கு சென்று வருகின்றனர். பெற்றோர்களை பிரிந்து வாழும் குழந்தைகளுக்கும், கணவனை பிரிந்து வாழும் மனைவிகளுக்கும் இதன் பாதிப்புகளை, பிரச்சனைகளையோ உணர்ந்தாலும், அதை சொல்லத் தெரியவில்லை. விடுபட வழியும் தெரியாமல் தலையெழுத்து என்றும், ஆண்டவன் விட்ட வழி என்றும், வலிகள், வேதனைகளோடும், வாழ்ந்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு தேசிய கிராமப்புற வேலை உத்தரவாதத்திட்டம் உதவாமல் போனதுதான் கொடுமை. அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க வந்த போது ஊரில் ஒருவரும் இல்லை. புகைப்படம் கொடுத்தும் பெயரை பதிவுசெய்து அடையாள அட்டை பெறவில்லை. இதனால் 100 நாள் வேலை உறுதித்திட்டம் இவர்களுக்கு ஏட்டில் எழுதிய சர்க்கரையாகிவிட்டது.

இது ஒருபுறம் என்றால் இங்கு வசிக்கும் 60 குடும்பங்களில் 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓலைக்குடிசைகள் தான் வீடுகள். சரியான பேருந்து வசதி இல்லை. அவசர உதவிக்கும், மருத்துவமனைக்கு செல்லவும் 3 கி.மீ நடந்து சென்று பஸ் ஏற வேண்டும். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் 4 கிலோ மீட்டர் நடந்து சென்றுதான் படிக்க வேண்டும். தேவையான தெரு
விளக்கு வசதி இல்லை. இப்பகுதியில் பெரும்பாலான கிராமங்களில் இதுதான் நிலை. அடிப்படை வசதிகளும் இல்லாமல், வாழ வழியுமில்லாமல், அரசு அறிவிக்கும் திட்டங்களிலும் பயன்பெற முடியாமல் நாடோடிகளாய் திரியும் அப்பாவி அருந்ததிய மக்கள் வாழ்வு வளம்பெறுவது எப்போது….?

சாமி கும்பிடச் சென்ற தலித் மக்கள் மீது தாக்குதல்:தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்டது உளுத்திமடை கிராமம். பல்வேறு சமூகத்தினர் வாழ்ந்துவரும் இங்கு, செங்கமடை என்ற பகுதியில், ஊருக்குப் பொதுவான அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குள் தலித் மக்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், ஆதிக்க சாதியினரின் தடையை மீறி, கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிடுவதென முடிவு செய்து, அதன்படி, கடந்த 15.1.2010 அன்று தலித் மக்கள் கோயிலுக்கு சென்றனர்.

அப்போது, செங்கமடை மனோகரன் என்பவரின் தலைமையில் ஏராளமான ஆதிக்க சாதியினர், தலித் மக்களை கொடூர மான ஆயுதங்கள் மூலம் கடுமையாக தாக்கினர். முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் தாக்குதலுக்கு உள்ளாகினர். முத்துப்பாண்டி, லட்சுமி, பஞ்சயம்மாள் ஆகியோர் உட்பட பலர் காயமடைந்தனர். முத்துப்பாண்டி என்பவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, தாக்குதல் நடத்திய ஆதிக்க சாதியினர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, அதற்கு மாறாக, தாக்குத லுக்கு உள்ளான பெண்கள் உட்பட தலித்துக்கள் பலரை, சிகிச்சை பெறக்கூட அனுமதிக்காமல் இரவோடு இரவாக கைது செய்துள்ளது. தலித் மக்கள் 11 பேர் மீது வழக்கும் பதிவும் செய்துள்ளது.

அதுமட்டுமன்றி, காவல் ஆய்வாளர், தலித் பகுதிக்கு இரவு நேரத்தில் சென்று அங்குள்ள பெண்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இதுஒருபுறமிருக்க, உளுத்திமடையில் உள்ள கடைகளில், தலித் மக்கள் பொருட்கள் வாங்க ஆதிக்க சாதியினரால் தடை ஏற் படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கெனவே இங்குள்ள டீ கடைகளில் இரட்டை டம்ளர் முறை தற்போதுவரை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவிழா காலங்களில் நாடகம் நடைபெற்றால் தலித் மக்கள் சமவரி கொடுத்தாலும், கடைசி வரிசையில் அமர்ந்து தான் பார்க்க வேண்டுமாம்; வரி தரவில்லையெனில் வீடு புகுந்து அவர்கள் வேலைக்காக பயன்படுத்தும் மண் வெட்டி, கத்தி, அரிவாள், பானை போன்ற பொருட்களை எடுத்துச் சென்று விடுவார்களாம்.

தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையால், இங்குள்ள தலித் மாணவர்கள், பள்ளிக்கு செல்லக்கூட பயந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஏனெனில், இங்கு பள்ளிக்கூடமும்கூட ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதியில்தான் உள்ளது.

இந்நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.சாமுவேல்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், தாலுகா செயலாளர்கள் ஏ.பி.கண்ணன், வி.முருகன், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பூங்கோதை, மாவட்டத் தலைவர் சி.ஜோதிலட்சுமி, மாவட்டப் பொருளாளர் எஸ்.சரோஜா, பூமிநாதன், அன்புச்செல்வன் ஆகியோர் உளுத்திமடை கிராமத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், பிரச்சனைகளைக் கேட்டறிந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் நம்பிக்கை ஊட்டினர்.

சாமி கும்பிட கோயிலுக்கு சென்ற தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது; பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீது போடப்பட்ட பொய்வழக்கை காவல் துறை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்; வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என்று, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.சாமுவேல்ராஜ், 20.1.2010 அன்று அறிக்கையொன்றையும் விடுத்துள்ளார்.

தலித் மக்களுக்கு குடிநீர் கேட்டால் தடியடியா? காவல்துறைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

தண்ணீர் கேட்டு போராடிய தலித் மக்கள் மீது தடியடி நடத்திய, வேடசந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஸ் வரனை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் என்.பாண்டி விடுத்துள்ள அறிக்கையில் இதுதொடர்பாக மேலும் குறிப்பிட்டி ருப்பதாவது:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் பாலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது, புது அழகாபுரி. இங்குள்ள ஆதி திரா விடர் குடியிருப்புப் பகுதிக்கு, கடந்த எட்டு நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை; மின்சாரம் இல்லை; இதனால், பொங்கல் நாட்களில் கூட அந்த மக்கள் நிம்மதியாக சமைத்துச் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் ஆவேசமடைந்த தலித் மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஆண்களும் பெண்களுமாக திரண்டு, புதனன்று காலையில் சாலையில் நின்று முழக்கமிட்டுள்ளனர். கூம்பூர் காவல் துறையினரும், வேடசந்தூர் காவல் ஆய்வாளரும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து பொதுமக்களோடு பேசித் தீர்வு ஏற்படுத்த முயன்றுள்ளனர்.

அப்போது அங்குவந்த வேடசந்தூர் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் மகேஸ்வரன், வாகனத்தை விட்டு இறங்கியவுடன் யாரிடமும் எந்த விசாரணையும் செய்யாமல், இவனை அடித்து தூக்கினால் எல்லாம் தீர்ந்து விடும் என்று கூறிக்கொண்டே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வேடசந்தூர் ஒன்றியச் செயலாளர் சு.பாலுபாரதியை தடியால் கடுமையாக தாக்கியுள்ளார். அவர் தாக்கிய உடன் அங்கிருந்த காவலர்களும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பாலுபாரதி மயக்கமடையவே, அவரை வாகனத்தில் தூக்கிப் போட்டுக் கொண்டு சென்றுவிட்டனர்.

அதைத்தொடர்ந்து, பாலுபாரதியை விடுவிக்காமல் கலைந்து செல்லமாட்டோம் என்று தலித் மக்கள் உறுதியுடன் இருந்துள்ளனர். இதனிடையே, திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே.பாலபாரதி, சம்பவ இடத்திற்குச் சென்று, பிரச்சனையில் தலையிட்ட பிறகு, பாலுபாரதியை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தலித் மக்கள் தண்ணீர் கேட்டதற்காக, அதற்கு தலைமை தாங்கிய வாலிபர் சங்க நிர்வாகி சு.பாலுபாரதியை மனிதாபிமானற்ற முறையில் கடுமையாக தாக்கிய வேடசந்தூர் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் மகேஸ்வரனை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டுமென மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மாவட்டச் செயலாளர் என்.பாண்டி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக முதல்வருக்கும், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் புகார் மனு அனுப்பட்டுள்ளது.

தலித் உரிமைப் பாதுகாப்புச் சட்டங்களும், ஊடகங்களும்- கி.இலக்குவன்

தலித் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னணியில் நிற்கும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அது தீண்டாமைக் கொடுமைக்கு முடிவு கட்டுதல் தொடங்கி அருந்ததியர் உள்ஒதுக்கீடு, அனைத்து ஆலயங்களிலும் தலித்துகளுக்கு அனுமதி, இரட்டைக் கிளாஸ்முறை ஒழிப்பு, தலித்துகளுக்கு மயானவசதி ஏற்படுத்தித் தருதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காகவும் போராடி வருகிறது.

தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை. ஆனால் இந்து நாளிதழின் வாசகர்களுக்காக, தலித்துகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களைப் பற்றியும் அவை முறையாக அமல்படுத்தப்படாமல் இருப்பதைப் பற்றியும் 21-12-09 இதழில் ஆசிரியர் எஸ்.விசுவநாதன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அந்த கட்டுரை, வாசகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள பிரதிபலிப்புகளையும், அவர் தமக்காக ஒதுக்கப்பட்டுள்ள பத்தியில் (28-12-09-இந்து நாளிதழ்) பதிவு செய்துள்ளார்.

தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிப்பதற்குக் காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினால், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒருவகையான விளக்கத்தை அளிக்கின்றனர். தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான சட்டங்கள் போதுமானவையாக இல்லை என்பது அவர்கள் முன்வைக்கும் வாதம். ஆனால் அது உண்மையல்ல. பார்க்கப்போனால் எஸ்.சி, எஸ்.டி.பிரிவினருக்கு இழைக்கப்படும் வன்கொடுமைக்கு எதிரான சட்டம் ஒரு வல்லமைமிக்க சட்டமே. அந்த சட்டத்தைப் பயன்படுத்தி தலித்துகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது மட்டு மின்றி, அந்த சட்டத்தை அமல்படுத்த மறுக்கும் அதிகாரிகளின் மீதும்கூட நடவடிக்கை எடுக்க முடியும். சில சூழ்நிலைகளில் மாவட்ட ஆட்சியாளர் மீதுகூட நடவடிக்கை எடுக்கலாம். எனவே குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகள் கிடைக்காமலிருப்பதற்கு காரணம், சட்டத்திலுள்ள பலவீனம் அல்ல.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 17வது பிரிவு தீண்டாமைக்குத் தடைவிதிக்கிறது. அரசியல் அமைப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டுகள் கழித்து, 1955ல் தீண்டாமைக் குற்ற சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இச்சட்டம் கோயில் தீண்டாமைச்சட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் ஆலயங்களுக்குள் தலித்துகளை அனுமதிக்க மறுப்பதானது தீண்டாமைக் கொடுமைகளுக்குள் ஒரு மிகப்பெரும் கொடுமையாக உள்ளது. தீண்டாமைக்கு ஆதரவாகப் பேசுவதையும் அதை நடைமுறையில் அனுசரிப்பதையும் தண்டனைக்குரிய குற்றங்களாக 1955 சிவில் உரிமைகள் சட்டம் ஆக்கியுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டம் தீண்டாமைக்குத் தடை விதித்துள்ளதை அடுத்து மக்கள் பெறக் கூடிய உரிமைகளும் சிவில் உரிமைகளாக அச்சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் வேறு பல உரிமைகளும் இந்த சிவில் உரிமைகள் சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

1989ல் ராஜீவ்காந்தி ஆட்சிக்காலத்தில், 1989 எஸ்சி, எஸ்டி பாதுகாப்புச்சட்டம் கொண்டு வரப்பட்டது. தலித்துகளுக்கு எதிராக பல்வேறு வடிவங்களில் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், அவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலும் 1989 சட்டம் அமைந்திருந்தது. அது முறையாக அமல்படுத்தப்பட்டிருந்தால் களச்சூழலில் அது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.

தலித்துகளுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளுக்கு எதிராகத் தொடரப்படும் வழக்குகளின் அவல நிலையை மத்திய அரசின் முன்னாள் செயலாளர்களில் ஒருவரான பி.எஸ்.கிருஷ்ணன் பின்வருமாறு விளக்கியுள்ளார். 1999 முதல் 2003 வரையிலான காலத்தில் தலித்துகள் அளித்த புகார்களில் 50 முதல் 60 சதவீதம் வரையிலானவைக்குத்தான் குற்றப்பத்திரிகைகள் அளிக்கப்பட்டன. அவற்றில் விசாரணை நிலையை எட்டியவை 8 முதல் 21 சதவீதம் வரையிலானவையே. விசாரிக்கப்பட்ட வழக்குகளிலும் 11 முதல் 13 சதவீதம் வரையிலானவற்றில்தான் தண்டனைகள் வழங்கப்பட்டன. நீதிமன்றத்துக்குச் சென்ற அனைத்து வழக்குகளையும் அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால், 1 முதல் 2 சதவீதம் வழக்குகளில்தான் தண்டனைகள் வழங்கப்பட்டன (ஆதாரம்: பிரன்ட்லைன் 4-12-09)

வேலை அளிக்க மறுப்பது போன்ற பொருளாதாரக் குற்றங்களையும், சமூகப்புறக்கணிப்பு போன்றவற்றையும் தண்டனைக் குரிய குற்றங்களாக்கக்கூடிய விதிகள் 1989 சட்டத்தில் இடம்பெறவில்லை. ஆனால் இதற்கான அடிப்படைத் தவறு சட்டத்தில் இருப்பதாகக் கூறமுடியாது. சமூக அமைப்பில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சிந்தனைகளும் கோட்பாடுகளுமே இவற்றைத் தீர்மானிக்கின்றன. அதன் தாக்கத்துக்கு உட்பட்டவர்களாகவே காவல்துறையும் அதிகார வர்க்கமும் இருந்து வருகிறது.சமூக அக்கறையுள்ள இதழியலாளர்களுக்கு இது பெரும் சவாலாக உள்ளது என்று விசுவநாதன் சுட்டிக்காட்டுகிறார்.

சமூக ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளைப் பற்றிய செய்திகளை மட்டும் வெளியிடுவதுடன் ஊடகங்கள் நின்று விடக்கூடாது. சமூக நீதி மற்றும் முற்போக்கான சமூக மாற்றங்களுக்கான பிரதிநிதிகளாக ஊடகங்கள் பணிபுரிய வேண்டும் என்றும் விசுவநாதன் வலியுறுத்தி யுள்ளார்.

தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆண்டவனுக்கு அருகே நின்று பூஜை செய்யும் உரிமையை திமுக அரசு பெற்றுத் தந்துள்ளது என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார். ஆனால் அந்த அறிவிப்பிற்கு நேர் எதிராக கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் திருக்கோ விலூர் வட்டம் காங்கியனூரில் நடைபெற்றுள்ளது. தலித் மக்களைத் திரட்டி ஆலய நுழைவுக்கு சென்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மற்றும் சிபிஎம் தலைவர்களைத் தடுத்து நிறுத்தியதோடு காவல்துறையினர் தடியடியும் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மாவட்ட காவல்துறை, வருவாய் துறையினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை இதுவரைக்கும் எடுக்கப்படவில்லை. ஆனால் உரிமையை நிலைநாட்டச் சென்றவர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.

கல்வராயன்மலை, வாரம் ஊராட்சி மன்ற உறுப்பினர் தி.தேவராஜ் பழங்குடி இனத்தை சார்ந்தவர். இவரது படுகொலையில் உண்மை குற்றவாளி கைது செய்யப்படவில்லை. பாணப்பட்டு கிராமத்தில் தலித் இளைஞர் பி.சிவபாலன் கொலையை காவல்துறையே தற்கொலை என திசை திருப்புகிறது.

எனவே, காங்கியனூரில் போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும்; தேவராஜ் படுகொலையில் உண்மை குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்; சிவபாலன் கொலைச் சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; சிறப்பு உட்கூறு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை முழுமையாக தலித் மற்றும் பழங்குடியின மக்க ளுக்கே செலவிட வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில அமைப்பாளர் பி.சம்பத் கண்டன உரையாற்றினார். ஆர்.ராமமூர்த்தி சாரங்கன் (வழக்கறிஞர் சங்கம்), ஜி.ஆனந்தன் (சிபிஎம்), சி.நிக்கோலஸ் (அம்பேத்கர் பேரவை), எல்.யேசுமரியான் (அம்பேத்கர் நூற்றாண்டு இயக்கம்), ஏ.கோதண்டம் (பார் கவுன்சில்), வி.உதயகுமார், பி.குமார் (சிஐடியு), டி.ஏழுமலை, ஆர்.தாண்டவராயன், என்.சுப்பிரமணியன் (விவசாயிகள் சங்கம்), கே. கலியன், பி.சுப்பிரமணியன் (விதொச), ஆர்.கண்ணப்பன், எம்.செந்தில் (வாலிபர் சங்கம்), ஏ.சக்தி, எஸ்.கீதா (மாதர்), ஜெ.முகமது அனஸ், யு.கார்க்கி (மாணவர்), ஆர்.மதி (அருந்ததியர் சங்கம்) மற்றும் பலர் பேசினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் முத்துக்குமரன் தலைமை வகித்தார்.

குருமன்ஸ் பழங்குடி மக்களுக்கு இனச்சான்று வழங்குக : பி.டில்லிபாபு

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கோட்டத்தில் வாழ்ந்து வரும் குருமன்ஸ் பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் (எஸ்டி) வழங்க வேண்டும் என்று பி.டில்லிபாபு எம்எல்ஏ வலியுறுத்தினார்.

இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு தலைமைச் செயலாளரை சந்தித்து அவர் மனு அளித்தார்.

அதன் விபரம் வருமாறு:-

தமிழகத்தில் பழங்குடியின பட்டியலில் குருமன்ஸ் பிரிவு வரிசை எண். 18ல் உள்ளது. இவர்களுக்கு குருமன்ஸ் பழங்குடி இனச் (எஸ்.டி) சான்றிதழ் அரூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் வழங்கப்பட்டு வருகின்றன.

வேலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே, சான்றிதழ் பெற்றிருக்கும் பெற்றோர்களுக்கு மெய்த்தன்மையறிந்து பின்னர் அவர்க ளது பிள்ளைகளுக்கு சாதிச்சான்று வழங்கப்படும் என்று அதிகாரி அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில், திருப்பத்தூர், கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர், வாணியம்பாடி தாலுகாகளில் கடந்த 2.5.07 அன்று மாவட்ட விழிப்புணர்வு குழு மூலம் மெய்த்தன்மையறிந்து சான்றிதழ் வழங்கலாம் என்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து விழிப்புக்குழுவில் உறுதிசெய்யப்பட்ட நபர்களது பிள்ளைகளுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்கிட கோரி மனு செய்ததில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் நந்தகுமார் முன்னுக்குப் பின் முரணான தகவல்களுடன் பதில் சொல்வதும், உள்நோக்கத்துடன் திட்டமிட்டே சாதிச்சான்றிதழ் வழங்கிட மறுத்தும் வருகின்றார்.

மேலும், “மாவட்ட விழிப்புக்குழுவின் மெய்த்தன்மை குறித்த அறிக்கை அடிப்படையில் மட்டும் சார் ஆட்சியரால் சாதிச் சான்று மேற்கண்ட நபர்களுக்கு வழங்க இயலாது” என்பது - பழங்குடியினருக்கான இந்திய அரசியல் சட்ட உரிமையை மறுப்பதாகும். மேலும், தமிழக அரசு ஆணைகளை காலில்போட்டு மிதிக்கும் செயலாகும்.

சென்னை உயர்நீதி மன்றம் சமீபத்தில் பெற்றோர்கள் எஸ்டி இனச்சான்றிதழ் பெற்றிருந்தால் அவர்களது பிள்ளைகளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு பிறகும் திருப்பத்தூர் சார் ஆட்சியரிடத்தில் கடந்த 5 மாத காலத்திற்கு மேலாக சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் என்ற அடிப்படையி லும் 3 முறை நேரில் சென்று வலியுறுத்தி பேசியுள்ளேன்.

ஆனால், கோட்டாட்சியர் திட்டமிட்டு குருமன்ஸ் இனத்திற்கு எஸ்.டி. சான்றிதழ் தர மறுத்து வருவது சாதிய இன உணர்வோடு அவர் பணியாற்றுகிறாரா? என்ற சந்தேகத்தை அப்பகுதி பழங்குடி மக்களின் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, இதே போன்று உறுதி செய்யப் பட்ட 28 பேர்களது வாரிசுகளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டுமென்று, 12.12.09 அன்று போராட்டத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சியருக்கு வலியுறுத்தப்பட்டது. அப்போது 1 மாதக் காலத்திற்குள் சாதிசான்றிதழ் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியரே தெரிவித்துள்ளார்.

எனவே, தலைமைச் செயலாளர் இப்பிரச்சனையில் தலையிட்டு, விசாரணை செய்து குருமன்ஸ் இனமக்களுக்கு குறிப்பாக வேலூர் - திருப்பத்தூர் கோட்டத்தில் சாதிச்சான்றிதழ் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குறவன் இன மக்களுக்கு சாதிச் சான்றிதழில் வஞ்சகம்

குறவன் இன மக்களுக்கு வழங்கப்பட்ட சாதிச்சான்றிதழில் கல்விச் சலுகைகளுக்கு மட்டுமே என குறிப்பிடப்பட்டு உள்ளதால், அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற இச்சான்றிதழை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது; எனவே, அனை வருக்கும் வழங்குவது போல சாதிச்சான்று வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநில அமைப்பாளர் ஏ.வி.சண்முகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளருக்கு மனு அனுப்பினார்.

அந்த மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது:

வேலூர் மாவட்டம், வாலாஜா நகரத்தில் வாழும் குறவன் இன மக்களுக்கு குறவன், எஸ்.சி. சாதிச்சான்று கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு வட்டாட்சியர் 2009 ஏப்ரல் மாதம், குறவன் எஸ்.சி. சாதிச்சான்று வழங்கினார். ஆனால் அந்த சாதிச்சான்றிதழில் இச்சான்று கல்வி சலுகைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மற்ற தாலுகாக்களில் எங்குமே இதுபோல் வழங்காத பட்சத்தில், வாலாஜா வட்டாட்சியர் மட்டும் இதுபோல் சான்று வழங்கியுள்ளதால், எங்களது பிள்ளைகள் வேலைவாய்ப்பில் பதிவு செய்திடவும், அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு இந்த சான்றிதழைப் பயன்படுத்தவும் முடியாத நிலையில் உள்ளோம்.

எனவே, இந்த சான்றிதழில் உள்ள கல்விச் சலுகைகளுக்கு மட்டும் என்று எழுதியுள்ளதை மாற்றி, அனைவருக்கும் வழங்கு வதுபோல், சாதிச்சான்று வழங்கிட ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஏ.வி.சண்முகம் குறிப்பிட்டிருந்தார்.

பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்குக! : தலைமைச் செயலாளரிடம் டில்லிபாபு எம்எல்ஏ மனு

தமிழகத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் 36 வகையான பழங்குடியின மக்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பழங்குடியின சாதிச்சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட இவர்களுக்கு உடனே எஸ்.டி இனச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அரசு தலைமைச் செயலாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு செவ்வாயன்று (12.01.2010 )மனு அளித்தார்.

பழங்குடி இன மக்களில், குறிப்பாக குருமன்ஸ், கொண்டாரெட்டி, காட்டு நாயக்கன், மலைவேடன், ஆதியன் போன்ற பிரிவினர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக வேலூர், மேட்டூர், வாணியம்பாடி, பாலக்கோடு ஆகிய மாவட்டங்களில் சாதிச்சான்றிதழ் வழங்க மறுக்கப்படுகிறது. அதேபோல், மதுரை மாவட்டத்தில் மலைவேடன், விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி பகுதிகளில் காட்டு நாயக்கன் திருவாரூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் ஆதியன் போன்ற பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் புதியதாக வழங்கப்படுவதில்லை. மேலும், பெற்றோர்கள் கடந்த காலங்களில் பழங்குடியின (எஸ்.டி) சாதிச்சான்றிதழ் பெற்றிருந்தால் மெய்த்தன்மையறிவது என்றும் சான்றிதழ் சரிபார்ப்பது என்றும் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் பழங்குடியினர், பெண்கள், உயர்கல்வி படிப்பதும், வேலைக்குச் செல்வதும் அரிதாகவே காணப்படுகிறது. அரசின் உதவித்திட்டங்களை பெற முடியாமல் பரிதவிக்கின்ற நிலை நீடிக்கின்றது.

மாவட்ட விழிக்கண்குழு கமிட்டி, எஸ்.டி., சான்றிதழ், மெய்த்தன்மையறிந்து மூவர் குழு இறுதியாக செய்திட்ட பிறகு, சான்றிதழ் பெற்றுள்ள பெற்றோர்களது பிள்ளைகளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கிட விண்ணப்பித்தால் திருப்பத்தூர் - சிவகாசி போன்ற கோட்டங்களில் பணியாற்றும் சாராட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் திட்டமிட்டே சான்றிதழ் தரமறுக்கின்றனர்.

அதேபோல், குறவன் இனமக்களுக்கு வழங்கப்படும் ஆதிதிராவிடர் இனச் சான்றிதழ் - வேலூர் மாவட்டத்தில் வாலாஜா, அரக்கோணம், திருப்பத்தூர் போன்ற வட்டங்களில் பல மாதங்களாக இழுத்தடிக்கப்படுகிறது. மேலும், வாலாஜாவில் வழங்கியுள்ள நிரந்தர இனச்சான்றிதழ், பள்ளி படிப்பிற்காக மட்டும் இச்சான்றிதழ் என்று எழுதப்பட்டுள்ளதை வாபஸ் பெற வேண்டும். பெற்றோர்கள் சாதிச்சான்றிதழ் பெற்றுள்ள பிள்ளைகளுக்கு உடனடியாக 15 நாட்களிலேயே சாதிச்சான்று வழங்கிட வேண்டும். குறவன் இனமக்களுக்கு (பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் ஆதிதிராவிடர் இனச் சான்றிதழை வேலூர், (அரக் கோணம், வாலாஜா ) திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உடனடியாக வழங்கிட வேண்டும்.

மாணவர்களுக்கான சாதிச்சான்றிதழ் தருமபுரி மாவட்டத்தில் வழங்கப்படுவது போல அந்தந்தப் பள்ளிகளிலேயும் சாதிச்சான்றிதழ் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கிட திட்டமிட்டு மறுக்கும் ஒரு சில அதிகாரிகள் குறித்து அரசு - அரசாணை மேற்கொண்டு பரிசீலனை செய்திட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டில்லிபாபு தலைமையில் தமிழ்நாடு பழங்குடியினர் கூட்டமைப்புத் தலைவர் சிவலிங்கம், குறவன் பழங்குடியின மக்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் ஏ.வி.சண்முகம், குருமன்ஸ் சங்க பொதுச் செயலாளர் பி.வீரபத்திரன், கொண்டாரெட்டிஸ் சங்க பொதுச்செயலாளர் பிரகாஷ், ஜி.பெருமாள், ஜீ.அரங்கநாதன் ஆகியோர் கொண்ட குழு மனுவை அளித்தது.

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

கோபி அருகே அருந்ததியர்கள் மீது கொடூரத்தாக்குதல்: ஆட்சியரிடம் முறையீடு

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த புள்ளப்பநாயக்கன்பாளையம் ஏழூரில் அருந்ததிய மக்கள் 4 பேர் மீது ஆதிக்க சாதியினர் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ஆதிக்க சாதியினரிடமிருந்து தங்களது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி தலித் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், கோபி வட்டத்தில் உள்ளது புள்ளப்பநாயக்கன்பாளையம் கிராமம். இதையடுத்த ஏழூரில் சுமார் 150 அருந்ததிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 29.12.09 அன்று அச்சமூகத்தை சேர்ந்த ஒருவர் சாலை

யோரம் சிறுநீர்கழிக்கச் சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த அரவை மில் உரிமையாளர் ஒருவர் அவரை சாதிப் பெயரை கூறி தரக்குறைவாக திட்டியதுடன் கொலைமிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கொடுத்த புகாரை வாபஸ் பெறவேண்டும் என்று ஆதிக்க சாதியினர் தலித் மக்களை மிரட்டியதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர்கள் சமாதான பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டனர்.

இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத தலித் மக்கள் 4 பேர் மீது 15 பேர் கொண்ட ஆதிக்கசாதிக் கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியது. இதில் பாதிக்கப்பட்ட அவர்கள் நால்வரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 15 பேர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று கோரியும் பாதிக்கப்பட்ட அருந்ததிய இன மக்கள் பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் இதுவரை அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இப்பிரச்சனை காரணமாக தாங்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே வாழ்ந்து வருவதாக தலித் மக்கள் கூறினர். எனவே, மீண்டும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், தங்கள் உயிருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் 11.01.10 திங்களன்று அவர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இப்பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயக் கூலிகளாவர். அவர்கள் ஆதிக்க சாதியினரின் தோட்டங்களிலும், வயல்களிலுமே வேலைபார்க்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. ஆனால் தற்போது இச்சம்பவம் காரணமாக பெரும் பாலும் ஆதிக்கசாதியினர் வேலை கொடுக்க மறுத்து விடுவதாகவும், இதனால் தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு செய்வதறியாது தவித்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.

அம்பேத்கர் வேலைவாய்ப்பு மையத்தில் பயிற்சி துவங்கியது

கோவையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. இதில் அரசு வேலை- போட்டித் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள், 10.01.2010 அன்று துவங்கியது.

கோவை சரோஜ் நிலையத்தில் (கோவைப் பகுதி ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்க அலுவலகம்) நடைபெற்ற பயிற்சி வகுப்புத் துவக்க விழாவில், பயிற்சி பெற வந்த மாணவர்களை கோவை மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம் வாழ்த்திப் பேசினார். மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், தீக்கதிர் நாளிதழ் துணை ஆசிரியருமான க.கணேஷ் நோக்கங்களை விளக்கினார்.

பயிற்சி மையத்தில் முதல் கட்டமாக ஏப்ரல்-11ல் நடைபெற உள்ள தமிழக அரசுப் பணி தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்

வுக்காக பயிற்சி அளிக்கப்படுகிறது. வரலாறு, கணிதம், அறிவியல், தமிழ் மற்றும் பொது அறிவுக்கான அனைத்து பாடங்

களுக்கும் தனித்தனி வகுப்புகள் நடைபெற உள்ளன. முதல் நாள் துவக்க பயிற்சி வகுப்பிலேயே தலித் மற்

றும் அருந்ததியப் பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

பயிற்சி வகுப்பு துவக்கத்தில் அகில இந்திய ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் கோவைப் பகுதி செயலாளர் வி.சுரேஷ், தலைவர் எம்.கஜேந்திரன், பொருளாளர் மணிகண்டன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.

நெல்சன் பாபு, மாவட்டக் குழு உறுப்பினர் என்.ஜாகீர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாக வழக்கறிஞர் வெண்மணி உள்ளிட்டோர் பங்கேற்று தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

தீண்டாமைக்கெதிரான உறுதியான போராட்டம்: ஜி.ராமகிருஷ்ணன் பெருமிதம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட பேரவைக் கூட்டம், நாகை புளு ஸ்டார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமையன்று (9.1.2010) நடைபெற்றது.

மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச்செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், இடைக்குழு உறுப்பினர்கள் பேரவையில் பங்கு பெற்றனர். பேரவைக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ‘இன்றைய அரசியல் நிலைமை’ என்னும் பொருளில் சிறப்புரையாற்றினார்.

அப்போது வேதாரண்யம் ஒன்றியம், வாட்டாக்குடி கிராமத்தில் தலித்துகளுக்காகத் தனி மயானம் வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி சமத்துவ மயானம் பெற்றது; செட்டிப்புலம் சிவன் கோயிலில் தலித் மக்கள் ஆலய நுழைவு செய்தது, வாலிபர் சங்கப் போராட்டத்தால் செம்பனார்கோயில் ஒன்றியம் மாத்தூர் மாரியம்மன் கோயிலில் தலித் மக்கள் ஆலய நுழைவு செய்தது ஆகியவை தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அண்மைக் காலத்தில் பெற்ற வெற்றிகள் என்று ஜி.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இப்பேரவையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நாகை மாலி, பி.வைரன், எம்.நடராஜன், எம்.காத்தமுத்து, டி.கணேசன், கோவை சுப்பிரமணியன், ஜி.கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலித் இளைஞர்கள் மீது பொய் வழக்கு : மதுக்கூரில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஒன்றியம், மதுரபாஷானபுரம் கிராமத்தில் ஆதிக்க சாதியினரால் தாக்குதலுக்கு உள்ளான தலித் இளைஞர்கள் மீதே பொய் வழக்கு போட்டுள்ள காவல்துறையினரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுக்கூர் பேருந்து நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.காசிநாதன் தலைமை தாங் கினார். தலித் இளைஞர்களை அரிவாளால் வெட்டிய ஆதிக்க சாதியினரை இதுவரை கைது செய்யாததைக் கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பொய் வழக்கு போட்டதைக் கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதியவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி, ஒன்றியச் செயலாளர் எஸ்.சாம்பசிவம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.ரகு நாதன், பி.சக்திவேல், ஜி.பெரமையன், எஸ்.தங்கவேல், எம்.கைலாசம், பி.ஜீவா, எம்.முருகேசன், ஏ.எஸ்.அருளானந்து, வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் வாசு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.