செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

நத்தம் அருகே தலித் மக்களுக்கு முடிதிருத்த மறுப்பு

நத்தம் அருகே, சாணார் பட்டி ஒன்றியம் ஆவிளிபட்டியில், தலித் மக்களுக்கு ஆண்டாண்டு காலமாக முடிதிருத்த மறுக்கும் தீண்டாமைக் கொடுமை நிலவி வருகிறது. இப்பகுதி தலித் மக்கள் சாணார்பட்டிக்குச் சென்றுதான் முடிதிருத்தி வருவார்கள்.

இக்கொடுமையை எதிர்த்து ஞாயிற்றுக்கிழமையன்று (31.01.2010) போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவித்தது.

இதையடுத்து, திண்டுக்கல் வட்டாட்சியர், வாலிபர் சங்க நிர்வாகிகளை, வெள்ளிக்கிழமையன்றே அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் வாலிபர் சங்க மாவட்டச்செயலாளர் கே.பிரபாகரன், மாவட்டத் தலைவர் ஏ.அரபு முகமது, வெள்ளைக்கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் என்.பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சாதி ஆதிக்க சக்தியினரும் கலந்து கொண்டனர்.

இதில், முடிதிருத்த மறுப்பது சட்ட விரோதம், அவ்வாறு மீண்டும் தீண்டாமையை கடைப்பிடித்தால் யாராக இருந்தாலும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று வட்டாட்சியர் எச்சரித்தார். பின்னர் சுமூக முடிவு எடுக்கப்பட்டது.