புதன், 16 டிசம்பர், 2009

தலித் மயானப் பாதை அடைப்பு: சிபிஎம் தலைமையில் சடலத்துடன் மறியல்

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள கே.வி.குப்பம் ஒன்றியத்திற்கு உட்பட்டது செஞ்சி ஊராட்சி. இங்குள்ள தலித் காலனியில் 600-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.

அதேபகுதியைச் சேர்ந்த கோபால்நாயுடு என்பவருக்குச் சொந்தமான நிலத்தைத்தான் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தலித் மக்கள் மயானப் பாதையாக பயன்படுத்தி வந்தனர். இதற்கு கிராமத்தில் உள்ள ஆதிக்க சக்திகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் தலித் காலனியைச் சேர்ந்த பெருமாள் மனைவி லட்சுமி (65) வெள்ளியன்று இரவு இறந்தார். இவரது சடலத்தை அடக்கம் செய்ய சனிக்கிழமை மாலை மயானத்துக்குக் கொண்டு சென்றனர். அப்போது முட்கள் மற்றும் தென்னை மரங்களால் மயானப் பாதை அடைக்கப்பட்டிருந்து. இதை கண்டு ஆவேசமைந்த தலித் மக்கள், உறவினர்களுடன் சடலத்தை சாலையில் வைத்து மறி யலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த காட்பாடி தாசில்தார் ரேணு, காவல் ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து, தலித் மக்களிடமும், பட்டா நிலத்தின் உரிமையாளரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் ஏ.நாராயணன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.டி.சங்கரி, எம்.வி.எஸ்.மணி, தாலுகா செயலாளர் ஏகநாத ஈஸ்வரன், ராமச்சந்திரன், செந்தாமரை உள்ளிட்டோர் அரசு அதிகாரிகளிடம் பேசினர். சட்டம்- ஒழுங்கு சீர்குலையாமல் இருக்க தலித்மக்கள் பயன்படுத்திய மயானப்பாதையின் முள்வேலியை அகற்ற வலியுறுத்தினர்.

இதுபற்றி வேலூர் மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரனிடம் தொலைபேசியில் தகவல் கொடுத்தார் தாசில்தார் ரேணு. அதைத்தொடர்ந்து தற்காலிகமாக வழி விடுவது எனவும், ஓரிரு நாளில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் துரைசாமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் முட்களை, மரங்களை அகற்றி மயானப் பாதையைச் சீர் செய்தனர். இதனால் 4.30 மணியில் இருந்து 5.30 வரை நடைபெற்ற மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

வன மக்களுக்கு பட்டா வழங்க டில்லிபாபு எம்எல்ஏ கோரிக்கை

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டம் மிகவும் பின்தங்கிய பகுதியாகும் மலைவாழ் மக்கள், இருளர் குருமன் மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகமாக வனப்பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்கள் மூன்று தலைமுறைகளாக விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால் பல ஆண்டுகளாகியும் இவர்களுக்கு நிலப்பட்டா வழங்கப்படவில்லை.

குறிப்பாக மலைக் கிராமமான பிக்கன அள்ளி, திம்மராயன அள்ளி, மகேந்திர மங்களம், பௌமாரன அள்ளி, குண்டாங்காடு, வீரசாமனூர்மலை, கண்டகபைல் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மலைக் கிராம மக்கள், பட்டா கேட்டு நீண்டகாலம் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், வனப்பகுதியில் வசித்துக் கொண்டு, விவசாயம் செய்துவரும் மக்களுக்கு வன உரிமை சட்டத்தின் கீழ் பட்டா வழங்கக் வேண்டுமென தருமபுரி கோட்டாட்சியர் மணிவண்ணனிடம் 261 மனுக்களை பி.டில்லிபாபு எம்.எல்.ஏ. வழங்கினார்.

அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன், மாவட்டப் பொருளாளர் கே.காளியப்பன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ்.கே.கோவிந்தன், எஸ்.பி.சின்னராசு, வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

வேப்பங்குளத்தில் தொடரும் தீண்டாமைக் கொடுமை

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது டி.வேப்பங்குளம் கிராமம். இங்குள்ள தலித் மக்கள், சமீபத்தில் ஆதிக்க சமூகத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டனர். தலித் மக்கள் ஊரையே காலி செய்து வேறு இடத்தில் குடியேறும் நிலை ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியர் சிஜிதாமஸ்வைத்யன் சமாதான கூட்டம் நடத்தி அம் மக்களை அங்கே மீண்டும் குடியமர்த்த நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில் வேப்பங்குளத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.சேகர், கே.சாமுவேல்ராஜ், சி.முருகேசன் ஆகியோர் நேரில் சென்று தலித் மக்களைச் சந்தித்தனர்.

அப்போது, உள்ளூர் கடைகளில் தலித் மக்களுக்கு பொருட்கள் வழங்க ஆதிக்க சக்தியினர் தடை விதித்திருப்பதும், குழந்தைகளுக்கு பால் போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கூட வழங்கக்கூடாது என்று அவர்கள் தடை செய்திருப்பதும், அதேபோல தலித்துக்களுக்கு வேலை வழங்க மறுப்பதும், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் தர மறுப்பதும் என சாதியக் கொடுமை தாண்டவமாடுவது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஞானகுரு ஆகியோர் மாவட்ட ஆட்சியர் சிஜிதாமஸ்வைத்யனை நேரில் சந்தித்து மனுக்கொடுத் தனர்.

தலித் மக்கள் மீதான தீண்டாமைக் கொடுமைகளை தடுக்க உறுதியான நடவடிக்கையை எடுப்பதுடன், டி.வேப்பங்குளம் தலித் மக்கள் வியாபாரக் கடைகள் துவங்க அரசு கடனுதவி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

செய்யூர் அருகே தலித் மக்கள் மீது தாக்குதல்

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே உள்ளது பரசநல்லூர் கிராமம். இங்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே தேர்தல் முன்விரோதம் இருந்து வருகிறது.

தேர்தலின் போது தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஏஜெண்டாக இருந்தார் என்பதற்காக ஆதிக்க சாதியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரின் தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஆதிக்க சாதியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலித் மக்கள் கடந்த சில மாதங்களாக வேலைநிறுத்தம் செய்து வந்தனர்.

இதற்கிடையில் தண்டரை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தலித் குழந்தைகளை சேர்ப்பதில்லை என்றும் புகார் எழுந்தது.

இச்சம்பவங்கள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியருக்கு புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மீண்டும் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதில் ஆதிக்க சாதியினர், தலித் பகுதிகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில், அலமேலு (55), உமையாள்(65) ஆகிய இருவர் க்கு பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலித் மக்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் ப.சு.பாரதி அண்ணா, வாலிபர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் இல.சண்முகசுந்தரம், மாவட்டத் தலைவர் முனுசாமி, நந்தன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

இதற்கிடையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு சார்பில் காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டது.

இந்த பிரச்சனை குறித்து இரு தரப்பினர் மீதும் செய்யூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆதிக்க சாதியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் உட்பட 5 பேரையும், தலித் மக்கள் சிலரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த கிராமத்தில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலைக்கு மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே முக்கிய காரணம் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி குற்றம் சாட்டியது.

இந்த பகுதியில் தீண்டாமை கொடுமைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரும் தமிழக அரசும் உடனடி யாக தீர்வு காண வேண்டும் என்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியது.

நெஞ்சில் தைத்த முள், புண்ணாக்கி விடுமோ?

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை கடந்த 2006-ம் ஆண்டு மே மாதம் தமிழக முதல்வர் அறிவித்தபோது தமிழ் மக்கள் அகமகிழ்ந்து வரவேற்றனர். சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகள் ஆதரவோடு ஒருமனதாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை’ அகற்றிவிட்டார் என்று முதல்வருக்கு புகழாரம் சூட்டி மகிழ்ந்தனர், பெரியாரின் வழிவந்தவர்களாகச் சொல்லிக் கொள்வோர்.

தமிழ்ச் சமுதாயத்தில் எத்தனையோ விசயங்களில் அழிக்க முடியாத தடத்தைப் பதித்தவர் தந்தை பெரியார். கோயில்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் (பிராமணர்கள்) மட்டுமே அர்ச்சகர்களாக இருக்க முடியும் என்ற ஏகபோக நிலையை எண்ணி வேதனைப்பட்டார். சமூக ஏற்றத்தாழ்வில் அவர்களின் கருத்தியல் ரீதியான மேலாதிக்கத்திற்கு வெளிப்படையான, கூர்மையான அடையாளமாக இந்த விசயம் இருப்பதால்தான், இதை ‘என் நெஞ்சில் தைத்த முள்’ என்று பெரியார் சொன்னார். அவர் எப்போதோ சொல்லி வைத்ததல்ல, நீண்ட நெடுங்கால அவரது போராட்ட வாழ்க்கையின் கடைசி கட்டத்தில்தான் இதைச் சொல்லி வைத்தார். தனது கடந்தகால களப்பணிகளால் ஏற்பட்ட தாக்கங்களுக்காக தற்பெருமை கொள்ளாமல் சமூக அவலத்தை வேரறுக்க இறுதிமூச்சு வரை சலனமில்லாமல் பாடுபட்டவர். எனவே அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் நிலை ஏற்பட்டால் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்பட்டு விட்டது என்று மகிழ்ச்சி அடைவது நியாயமே.

ஆனால், தமிழக அரசு சட்டம் பிறப்பித்த பிறகு தற்போதைய நிலை என்ன?

2006-ம் ஆண்டு சட்டம் நிறைவேறிய பிறகு, 2007-ம் ஆண்டு மே மாதம் இந்து அறநிலையத் துறையின் கீழ் ஆறு பகுதிகளில் அர்ச்சகர் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டன. இந்த பயிற்சி மையங்களில் சேரும் மாணவர்களுக்கு ரூ. 500 வீதம் மாத உதவித் தொகை வழங்கப்படும். ஆகம விதிகளை படித்து தேர்ச்சி பெற்றவுடன் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் மொத்தமுள்ள 36 ஆயிரம் கோயில்களில் பணி நியமனம் செய்யப்படுவர் என்று அரசு அறிவித்தது.

இந்த ஓராண்டு இலவச வகுப்பில் மொத்தம் 240 பேர் சேர்க்கப்பட்டனர். 207 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் மூவர் பிராமணர்கள். மற்றவர்கள் பிற்படுத்தப்பட்ட, தலித் சமுதாயத்தினர். கோயில்களில் அர்ச்சகர்கள் ஆவதன் தார்மீகப் பெருமையைக் கருதாவிட்டாலும், அரசு வேலை கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கையில் இவர்கள் காத்திருந்தனர்.

ஆனால் மதுரை மீனாட்சியம்மன் கோயில் பரம்பரை அர்ச்சகர்கள் உள்ளிட்ட சிலர், தமிழக அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். மத சுதந்திரத்தில் தலையிடக் கூடாது (?) என்ற அரசியல் சட்டப் பிரிவை காரணம் காட்டியதால் உச்சநீதிமன்றமும் மாற்றுச் சாதியினரை அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு தடை விதித்துவிட்டது!

இதற்கு முன்பு வேறொரு வழக்கில் இந்து மதத்தைச் சேர்ந்த எந்த சாதியினரும் கோயில் அர்ச்சகராகலாம் என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதை 2002-ம் ஆண்டு இதே உச்சநீதிமன்றம் உயர்த்திப் பிடித்தது. ஏற்கெனவே 1972ம் ஆண்டு தமிழகம் சார்ந்த வழக்கிலும் இதேபோன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

எனினும் தற்போது பரம்பரை அர்ச்சகர்களுக்குச் சாதகமாக தடையுத்தரவு விதிக்கப்பட்டு வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கைச் சந்திக்க தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞரை நியமித்துள்ளதாகவும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வர உறுதியோடு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனினும் அரசின் செயல்பாடு இந்த விசயத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

குறிப்பாக கோயிலில் வேறு சாதியினர் அர்ச்சகர் ஆக தற்காலிகத் தடைதான் விதிக்கப்பட்டுள்ளது. படித்து முடித்த 207 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்காவிட்டாலும், பயிற்சி முடித்ததற்கான சான்றிதழை வழங்குவதில் வேறு தடை ஏதும் இல்லையே. ஆனால் அதைக்கூட இன்று வரை மாநில அரசு நிறுத்தி வைத்திருப்பது ஏன்? இங்கு படித்த அருண்குமார் என்பவர் மட்டும் அர்ச்சகராக தற்போது கோயிலில் பணியாற்றி வருகிறார், பிராமணர் என்பதால்!

மேலும், ஒரேயொரு ஆண்டு மட்டுமே செயல்பட்ட ஆறு அர்ச்சகர் பயிற்சி மையங்களையும் மாநில அரசு இழுத்து மூடிவிட்டது. அந்த மையங்கள் தொடர்ந்து செயல்பட்டிருந்தால் தற்போது பிற சாதி அர்ச்சகர்களாக இன்னும் 480 பேர் தேர்ச்சி பெற்றிருக்க முடியும். மொத்தம் 36 ஆயிரம் கோயில்

கள் இருக்கும் போது இந்த எண்ணிக்கை மிகவும் சொற்பமே! வழக்கை விரைந்து நடத்தி சட்டரீதியாகத் தடையைத் தகர்க்கவும், அரசியல் உறுதிப்பாட்டோடும் செயல்பட்டால்தான் இதில் வெற்றி பெற முடியும்.

ஆனால் அரசின் செயல்பாடு உறுதி மிக்கதாக இல்லை என்பதையே சம்பவங்கள் உணர்த்துகின்றன. பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் முற்றிலுமாக அகற்றப் பட்டுவிட்டதா அல்லது முள்ளின் பகுதி உள்ளேயே இருந்து புண்ணாக்கி விடுமோ? துணிந்து அகற்ற வேண்டும் முள்ளை!

(12.12.09 தீக்கதிர் கட்டுரை)

உத்தப்புரம் தலித் மக்கள் மீது தாக்குதல்- வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

உத்தப்புரத்தில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி தலித் மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இதில் தலித் மக்கள் பலர் காயமடைந்தனர். அவர்களது வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்நிலையில், உத்தப்புரம் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; தாக்குதலுக்கு மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்; வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்தவேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு தொடர்பாக தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பொதுத்துறை (சட்டம்-ஒழுங்கு) இணைச்செயலர் ஏ.பி.லலிதா தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1995-ன்படி, தமிழக முதல்வர் தலைமையில் 26 மாவட்ட ஆட்சியர்களை உறுப்பினராகக் கொண்ட கண்காணிப்புக் குழு 3.8.2006ல் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தந்த மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் நிலுவை குறித்தும், தாக்கியவர்கள் முழு தண்டனை பெற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் 15.9.2009ல் வன் கொடுமை வழக்குகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழுவைக் கூட்டி மேல் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழக அரசின் சமூக நீதி மற்றும் மனித உரிமை தொடர்பான அரசிதழ் அறிவிப்பு நகல் அனைத்து காவல் நிலையங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. வன்கொடுமை தொடர்பான வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் 23 அரசு வழக்கறிஞர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 29.7.2008 மற்றும் 30.6.2009- ல் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் உத்தப்புரம் தொடர்பாக புகார் ஏதும் வரவில்லை.

மேலும், இதுதொடர்பாக மூன்று மாதத்துக்கு ஒருமுறை சமூகநீதி மற்றும் மனித உரிமைகளுக்கான ஐ.ஜி. தலைமையில், முதன்மைச் செயலர் முன்னிலையில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனிடையே இந்த வழக்கு தொடர்பான விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்து டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. (11.12.09 தேதிய நாளிதழ் செய்திகள்)

திமுக பேரூராட்சித் தலைவரின் அராஜகம் - என்.வரதராஜனிடம் அருந்ததிய மக்கள் கண்ணீர்!

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், பழநி ஆகிய பகுதிகளில் உள்ள அருந்ததிய மக்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் என்.வரதராஜன் நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டார்.

அதனொரு பகுதியாக ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட டி.கே.என்.புதூர் அருந்ததியர் மக்களைச் என்.வரதராஜன் சந்திந்தபோது, அப்பகுதி அருந்ததிய மக்கள் கூறியதாவது:

எங்கள் தெருவிளக்கு உடைந்து உள்ளது. ஆனால் அந்த தெருவிளக்கை நாங்கள் தான் உடைத்தோம் என்று கூறி ஆயக்குடி காவல் நிலையத்தில் ஆயக்குடி திமுக பேரூராட்சித் தலைவர் கார்த்திகேயன் தூண்டுதலின் பேரில் நிர்வாக அதிகாரி புகார் கொடுத்துள்ளார். போலீசார் இந்த புகாரைப் பெற்றுக் கொண்டனர். சில தினங்களுக்கு முன்பு சப்- இன்ஸ்பெக்டர் சாந்தாலட்சுமி இரவு 12 மணிக்கு வந்து கோழி இருக்கிறதா, ஆடு இருக்கிறதா என்று கேட்டார். வீடுகளுக்குள் புகுந்து தேடினார். இதற்கு முருகேசன், சேகர், மதுரைவீரன் ஆகிய இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உடனே, நீங்கள்தான் அந்த மூன்று பேரா? வாங்க தெருவிளக்கை உடைத்ததாக உங்கள் பேரில் பேரூராட்சியிலிருந்து புகார் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறி சட்டையைப்பிடித்து இழுத்துச் சென்றார். அதன்பிறகு அவர்கள் மீது பொதுச்சொத்துக்குச் சேதம் விளைவித்ததாகக் கூறி வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் நீதிமன்றம் சென்று ஜாமீனில் மீட்டு வந்தனர். எங்கள் பிள்ளைகள் என்ன கிரிமினல்களா? உடைக்காத லைட்டை உடைத்தாக பொய்யான புகார் கூறி இப்படி இழுத்துச் செல்லலாமா? இவ்வாறு அருந்ததியப் பெண்கள் என்.வரதராஜனிடம் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

மேலும் இப்பகுதியைச் சேர்ந்த முருகேசனுக்கு, தமிழக அரசின் இலவச கேஸ் அடுப்பு வழங்கப்பட்டு இருந்ததாகவும், இந்நிலையில், முருகேசன், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னையில் நடைபெற்ற அருந்ததியர் கோரிக்கை பேரணியில் கலந்து கொண்டதால், கேஸ் அடுப்பைத் திரும்பித் தருமாறு, பேரூராட்சித் தலைவர் கார்த்திகேயன் மிரட்டியதாகவும் தெரிவித்தனர்.

அவற்றை பொறுமையாகக் கேட்ட என்.வரதராஜன், இந்த பிரச்சனை சம்பந்தமாக உரிய நடவடிக் கையை மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார்.

மேலும் கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி பகுதி அருந்ததியர் மக்களையும் என்.வரதராஜன் சந்தித்தார்.

கணக்கன்பட்டியில் வசிக்கும், 200 அருந்ததியர் குடும்பத்தினர் "எங்களுக்கென சுடுகாடு இல்லை; இறந்தவர்களை நெடுஞ்சாலையின் ஓரத்தில் தான் புதைக்கிறோம்; இப்பகுதியில் 30 சென்ட் புறம்போக்கு நிலம் உள்ளது; அந்த நிலமும் ஆக்கிரமிப்பில் உள்ளது; அதனை மீட்டு சுடுகாட்டிற்கு வழங்க வேண்டும்; கணக்கன்பட்டியின் ஒட்டுமொத்த கழிவுநீர் ஓடையும் எங்கள் பகுதியில் தான் வந்து சேர்கிறது; இதனால் பல்வேறு கொடிய நோய்களால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்; இந்த சாக்கடையில் தான் குடிநீர் குழாய் உள்ளது; அந்த சாக்கடை கலந்த நீரைத்தான் குடிக் கிறோம். இப்பகுதியில் இரண்டு கிணறுகள் திறந்த நிலையில் உள்ளதால் இதில் ஒரு குழந்தையும், வெளியூர்க்காரர் ஒருவரும் விழுந்து இறந்துள்ளனர். இதனை மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; மேலும் ஒரு வீட்டில் 4 குடும்பம் வசிக்கும் நிலை உள்ளது; எனவே எங்களுக்கு வீட்டு மனை அல்லது தொகுப்பு வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.

பச்சள நாயக்கன்பட்டியிலும் இதே போன்ற கோரிக் கைகள் எழுப்பப்பட்டன. இந்த கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று என்.வரதராஜன் உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்டச் செயலாளர் என்.பாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.முத்துச்சாமி, முன்னாள் எம்எல்ஏ என்.பழனிவேலு, பழநி நகர்மன்றத் தலைவர் வி. இராஜமாணிக்கம், பழனி நகரச் செயலாளர் எம்.குரு சாமி, பழனி ஏரியாச் செயலாளர் கே. அருள்செல்வன் உள்ளிட்டோர் என்.வரதராஜனுடன் சென்றனர்.