செவ்வாய், 27 அக்டோபர், 2009

அருந்ததியர்களின் நிலை இதுதான்

அருந்ததியர்களில் 0.16 சதவிகிதம்தான் பத்தாம் வகுப்பைத் தாண்டியவர்கள்!

தமிழகத்திலுள்ள துப்புரவுத் தொழிலாளர்களில் 95 சதவிகிதம் பேர் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். அதிலும் 33 சதவிகிதம் பெண்கள்தான்.

இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மற்ற சாதியினரின் தயவில்தான் வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.

பத்து சதவிகித அருந்ததியர்கள் கையில்தான் சிறிய அளவிலாவது நிலம் உள்ளது. கல்வி ரீதியாகவும் இந்த சமூகத்தினர் மிகவும் பின்தங்கியவர்களாக உள்ளனர்.

கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு அமைப்பு என்ற தொண்டு நிறுவனம் அளிக்கும் புள்ளிவிபரங்களின்படி, அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் 1.75 சதவிகிதம் பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். 0.16 சதவிகித அருந்ததியர்கள் மட்டுமே பத்தாம் வகுப்பைத் தாண்டியுள்ளனர். இந்த சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலான கிராமப்புற சிறுவர்கள் வயல்களில் கொத்தடிமைகளாக வேலை செய்கிறார்கள். நகர்ப்புறங்களில் ஓட்டல்கள் போன்றவற்றில் கூலி வேலைகள் செய்பவர்களாகவும் உள்ளனர்.

ஒருவேளை, பத்தாம் வகுப்பை முடித்து விட்டாலும் மேற்கொண்டு படிப்பதற்கு போதிய பொருளாதார வசதி அவர்களிடம் பெரும்பாலும் இருப்பதில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அருந்ததிய அமைப்புகளின் வலுவான இயக்கத்தால் இந்த சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மூன்று சதவிகித உள்ஒதுக்கீடு கிடைத்துள்ளது. இதை முறையாக நடைமுறைப்படுத்தக்கோரும் மக்களின் எழுச்சிக்குரல்கள் கோட்டையின் கதவுகளைத் தட்டப்போகின்றன.