திங்கள், 11 ஜனவரி, 2010

சங்கடம் வேண்டாம்; சமத்துவம் வேண்டும் - பி.சம்பத்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், டிசம்பர் 25 வெண்மணித் தியாகிகள் நினைவு தினத்தன்று ஆலய நுழைவு உட்பட தீண்டாமை ஒழிப்பு நேரடி நடவடிக்கைகளுக்கு அறைகூவல் விடுத்திருந்தது. தமிழ்நாடு முழுவதும் இப்போராட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. வாலிபர் சங்கத்தின் இப்போராட்ட அறைகூவலையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர், பத்திரிகை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தான் பெங்களூர் சென்று ஓரிரு நாட்களில் திரும்ப இருப்பதாகவும் அவ்வாறு திரும்பிய பிறகு அனைத்து அரசியல் கட்சிகளோடும் கலந்துபேசி ஆலய நுழைவு உட்பட தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

கடந்த காலங்களில் இத்தகைய முயற்சிகள் இல்லாத சூழலில் தமிழக முதல்வர் அறிவித்துள்ள நடவடிக்கை தேவையானது என்பதையும், அதனை அவர் அவசியம் நிறைவேற்ற வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கிறோம். வர்க்க லாபம், குறுகிய அரசியல் ஆதாயம், வாக்கு வங்கி நோக்கங்களுக் காக சாதியமைப்பை பாதுகாத்து அவ்வப்போது சாதி உணர்வுகளை விசிறி வந்துள்ள முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ கட்சிகள் அனைத்தும் தங்களது தவறான பாதையைக் கைவிட்டு தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

ஆனால் முதல்வர் தனது அறிக்கையில் மேற்கண்ட அறிவிப்போடு மட்டும் நிறுத்தவில்லை. அவரது அறிக்கையில் கீழ்க்கண்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

“ஆண்டவனுக்கு அருகே நின்று அவனுக்கு பூஜை செய்யும் உரிமையை திமுக அரசு பெற்றுத்தந்துள்ளது. சாதி-மத வேறுபாடுகளுக்கு சந்தனம் பூசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டம் அனுமதிக்காது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்து, ஆட்சி நடத்தும் நமக்கு சங்கடம் கொடுக்க வேண்டும் என்பதற்கு அல்ல என்று அந்தக் கொள்கையை நிறைவேற்ற வேண்டும் என்று இப்போது திடீரென நினைத்துக் கொள் பவர்கள் போல ஆலயங்கள் சிலவற்றில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருப்பது தேவைதானா என்பதைச் சிந்தித்து ஒருமித்த கருத்தோடு ஒழித்திடுவோம் சாதி-மத வேற்றுமையை என ஓரணியில் திரண்டு நின்று ஒலித்திடுவதே வன்முறைக்கு வழிவகுக்காத நன்முறையாகும்.”

சுற்றிவளைத்து வார்த்தைகளையும் வாக்கியங்களையும் அவர் அமைத்திருந்தாலும் அதன் அர்த்தம் நமக்கு விளங்காமல் இல்லை. ஆலய நுழைவு உள்ளிட்ட தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளை வாலிபர் சங்கமும், இடதுசாரி இயக்கங்களும் திடீரென நினைத்து நடத்திக் கொண்டிருப்பது போலவும், தமிழ்நாடு அரசாங்கத்திற்கு சங்கடம் ஏற்படுத்துவது அதன் நோக்கம் போலவும் முதல்வரின் அறிக்கை அர்த்தப்படுத்துகிறது. இடதுசாரிகள் வர்க்கப் போராட்டம் மட்டுமே நடத்துவதாக வக்கனை பேசி விட்டு, தாங்கள் மட்டுமே சமூக நீதிக்காகப் போராடி வருவதாக முரசொலி ஏடும், திமுகவின் சில தலைவர்களும் பேசிவருவது நாம் அறியாததல்ல. அதனால்தான் இடதுசாரிகளை திடீரென நினைத்துப் போராடுவதாக கலைஞர் சாடுகிறார்.

பெரியார் சமூக நீதியிலும் தீண்டாமை ஒழிப்பிலும் காட்டிய அக்கறையை நாம் என்றும் மறுத்ததில்லை. ஆனால் அவர் வழிவந்ததாக பறைசாற்றும் திமுகவும், நம் தமிழ்நாடு அரசும் தீண்டாமை ஒழிப்பில் உரிய அக்கறை காட்டவில்லை என்பதே நமது குற்றச்சாட்டு. கீழவெண்மணி படுகொலை மட்டுமல்ல, மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் படுகொலை, காங்கியனூர் தடியடித் தாக்குதல் போன்றவை நடந்ததும் திமுக ஆட்சியில்தான். உத்தப்புரம் சுவர் இடிப்பு, அருந்ததியர் உள்ஒதுக்கீடு, ஆலய நுழைவுப்போராட்டங்கள் போன்ற பல போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற இயக்கங்கள் நடத்திய போது தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு ஏற்படுத்தியது உண்மையும், வரவேற்கத் தகுந்ததும்தான்.

ஆனால் இவையெல்லாம் போராட்டங்கள் உருவாக்கிய சூழலிலும் நிர்ப்பந்தத்திலும் நடந்தன என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். இடதுசாரிகளின் இப்போராட்டங்கள் எல்லாம் திடீரென நினைத்து நடந்தவையல்ல. மாறாக விடுதலைப்போராட்ட நிகழ்வுகள், நீடித்த நிலப்போராட்டங்கள், வெண்மணி தியாகம், தமிழ்நாட்டில் பல பகுதிகளில் நடந்த விவசாய இயக்கப் போராட்டங்களின் தொடர்ச்சியே இவை என்பதை தமிழக மக்கள் மட்டுமல்ல, கலைஞரும் அறிவார். திமுகவையும் இதர சில முதலாளித்துவ அரசியல் இயக்கங்களையும் போல், ஆளும் வர்க்கங்களுக்குத் துணைபோகும் வகையில் சாதி ஒடுக்குமுறையை வர்க்க ஓடுக்குமுறையிலிருந்து பிரித்துப் பார்க்கும் இயக்கம் அல்ல செங்கொடி இயக்கம். மாறாக சேர்த்துப் பார்க்கும் இயக்கம். இப்பார்வையிலும் பாதையிலும் வர்க்க, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான இடதுசாரிகளின் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இனியும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். எனவே தற்போது நடத்தப்பட்டுவரும் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களுக்கு வேறு விதமான நோக்கத்தையும், நியாயத்தையும் கற்பிப்பதை திமுகவும், கலைஞரும் கைவிடுவது நல்லது.

அது இருக்கட்டும். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை திமுக அரசுதான் கொண்டுவந்தது என்றும் அதன்மூலம் தலித் சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை இருப்பதாகவும் கலைஞர் கூறுகிறார். அந்த ‘சட்டப்பூர்வ உரிமை’யை நாம் மறுக்கவில்லை. ஆனால் அது ‘செயல்பூர்வமான உரிமை’யாக இருக்கிறதா?என்பதுதான் கேள்வி. இச்சட்டம் வந்தபிறகு தலித்துகள் பல ஆலயங்களில் அர்ச்சகராக முடிந்ததா? இல்லையே. ஆலயத்திற்குள் நுழைய தலித்துகளை அனுமதிக்காதபோது அர்ச்சகராக்க ஆதிக்க சக்திகள் எப்படி அனுமதிப்பார்கள்? தற்போது அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக பயிற்சிப்பள்ளிகள் நடைபெறுகின்றனவா? எனவே சட்டப்பூர்வ உரிமைகளைப் பற்றி பேசிப் பலனில்லை. தலித்துகளுக்கும் எல்லாவிதமான சம உரிமைகளையும் அரசியல் சாசனமும் சட்டங்களும் வழங்குகின்றன. ஆனால் நடைமுறையில் இதனை தலித்துகள் பெற முடிந்ததா என்றால், இல்லை.

எனவே, தான் மட்டுமே சரியான முறையில் செயல்படுவதாகவும் மற்றவர்கள் செயல்பாட்டில்தான் கோளாறு இருப்பது போன்ற கருத்துக்களை கலைஞரும் திமுகவும் கூறுவதைத் தவிர்ப்பது நல்லது. தீண்டாமை ஒழிப்புக்கு அரசுத் தரப்பில் உணர்வுப்பூர்வமாக முயற்சியும் மற்ற இயக்கங்கள் அதற்கான நடவடிக்கையில் இறங்கும்போது துணை நிற்பதுமே இன்றைய தேவையாகும். தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள் அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதற்கான போராட்டங்கள் அல்ல, மாறாக சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டங்களேயாகும்.

தலித் உரிமைகளை மீட்பதற்கான வாலிபர்களின் போராட்டக் களம்

மதுரை


மதுரை மாநகரில் தலித் மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்திடக்கோரியும், வடிவேல்கரை தலித் இளைஞர் முருகன் மீது போடப்பட்ட பொய்வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மதுரை மாநகர், புறநகர் மாவட்டக்குழுக்கள் சார்பில் காளவாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் தலைவர் வை.ஸ்டாலின் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணை அமைப்பாளர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், இரா.இராசகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் துவக்கி வைத்து உரையாற்றினார்.

மதுரை கிழக்குத் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் என்.நன்மாறன், வாலிபர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.பாலா, மாநகர் மாவட்டச் செயலாளர் ஜா.நரசிம்மன், புறநகர் மாவட்டச் செயலாளர் உமாமகேஸ்வரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எம்.தங்கராஜ், வாலிபர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் என்.கல்பனா, மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.சரவணக்குமார், ஜான்சி ஆகியோர் கண்டன உரையாற்றினர். புறநகர் மாவட்டச்செயலாளர் எம்.கண்ணன் நன்றி கூறினார்.

இரட்டைக்குவளை முறையை விளக்கும் வகையில் சிரட்டையில் டீ தருவது போல வாலிபர் சங்கத்தினர் சித்தரிப்பு செய்திருந்தனர். முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.



தேனி


வெண்மணி நினைவு தினத்தை முன்னிட்டு வீரபாண்டியில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பெண் களுக்கு கழிப்பிட வசதி கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வீரபாண்டி பேரூராட்சி 10-வது வார்டில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக குடியிருந்து வருகின்றனர். அருகில் உள்ள பொதுக்கழிப்பிடத்தை இம்மக்கள் பயன்படுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், அருந்ததிய மக்களுக்கு புதிய கழிப்பிட வசதி செய்து தரக்கோரி, வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். மலைச்சாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் டி.வெங்கடேசன் துவக்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் ஆர். காரல்மார்க்ஸ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். போராட்டத்தை ஆதரித்து அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர் திலகவதி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்கத் தலைவர்கள் ஈ.தர்மர், த.நாகராஜ், அய்யங்காளை, காமுத்துரை, ஆர். பி.ராமர், விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தை

போராட்டத்தைத் தொடர்ந்து வீரபாண்டி காவல் சார்பு ஆய்வாளர் முன்னிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் வாலிபர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு வார காலத்தில் இடத்தை தேர்வு கழிப்பறை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.



விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள தீண்டாமைக் கொடுமைகளை அகற்றிட உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பி.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஏ.சேகர் துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எல்.முருகன் விளக்கிப் பேசினார். முடிவில் மாநில துணைச்செயலாளர் என்.முத்துராஜ் கண்டன உரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் பி.மாரியப்பன், துணைச் செயலாளர்கள் எம்.தில்லை நாயகம், பாண்டியராஜன், பி.ராஜா, செல்வம், ஜெயக்குமார், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் வீ.மாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.



புதுக்கோட்டை


குன்றாண்டார் கோயில், கந்தர்வக்கோட்டை, பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் உள்ள இரட்டை டம்ளர் முறையை ஒழிக்க வேண்டும், தலித் மக்களை ஆலயங்களுக்குள் அனுமதிக்க வேண்டும், கோவனூர் மற்றும் பல இடங்களில் உள்ள பொதுக்குளங்களில் தலித்துகள் குளிப்பதற்கு தடை விதிக்கும் ஆதிக்க சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ஸ்ரீதர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட அமைப்பாளர் எஸ்.சங்கர், மாவட்ட நிர்வாகிகள் டி.அன்பழகன், ஆர்.எஸ்.அலெக்ஸ்பாண்டியன், எஸ்.பெருமாள், எஸ்.பக்ருதீன், ஒன்றிய நிர்வாகிகள் ராமநாதன், பேரின்பநாதன், நாகராஜன், சுப்பிரமணியன், பழனிச்சாமி, தினேஷ்குமார், ராஜா, புண்ணிய மூர்த்தி, வெங்கடேசன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வாலிபர்கள் கலந்து கொண்டனர்.

வெண்மணி நினைவகம்: இன்சூரன்ஸ் ஊழியர்கள் ரூ.2 லட்சம் நிதி


தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பினர், வெண்மணித் தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் சிறப்புக் கூட்டம், திருவாரூரில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயுள் மற்றும் பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் எம்.குன்னிகிருஷ்ணன் தலைமை வகித்தார். தஞ்சை கோட்ட சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.புண்ணிய மூர்த்தி வரவேற்றார்.

கோவை கோட்ட சங்க பொதுச்செயலாளர் சுரேஷ், கோவையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக தொடங்கி இருக்கும் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் பணிகள் பற்றி குறிப்பிட்டார். விரைவில் இதேபோன்ற மையத்தைச் சென்னையிலும் தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் சாமுவேல்ராஜ், முன்னணி மேற்கொண்டுள்ள இயக்கங்களை பட்டியலிட்டார். இதில் இன்சூரன்ஸ் ஊழியர்களின் பங்களிப்பை பாராட்டினார்.

இந்திய தொழிற்சங்க மையத்தின் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர் அ.சவுந்தரராசன், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் க.சுவாமிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

வெண்மணி மண்டல கட்டடப் பணிக்கு இன்சூரன்ஸ் ஊழியர்களின் நிதியாக ரூ. 2 லட்சம், அ.சவுந்தரராசனிடம் வழங்கப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வளர்ச்சி நிதியாக ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது.

ராமகிருஷ்ணன் (பொது இன்சூரன்ஸ்) நன்றி கூறினார். கூட்டம் முடிந்ததும் அனைவரும் கீழவெண்மணி சென்று தியாகிகள் ஸ்தூபிக்கு வீரவணக்கம் செலுத்தினர். தென்மண்டல தலைவர் குன்னி கிருஷ்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

வெண்மணி தியாகிகளின் நினைவுநாள் : சிபிஎம் தலைவர்கள் வீரவணக்கம்


1968-ம் ஆண்டு டிசம்பர் 25 அன்று நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம், கீழவெண்மணியின் விவசாயத் தொழிலாளர்கள், அரைப்படி நெல் கூலியாக உயர்த்திக் கேட்டதாலும், தங்கள் குடிசைகளில் ஏற்றிய செங்கொடியை இறக்க மறுத்ததாலும், அதிகார வர்க்கத்தின் ஆணவம் பிடித்த நிலப்பிரபுத்துவக் கொடியவர்கள் கீழவெண்மணியை ரணகளமாக்கினார்கள். 44 பேரை ஒரே குடிசையில் வைத்துக் கொளுத்திச் சாம்பலாக்கினார்கள்.

உலக வரலாற்றில் நெஞ்சை உலுக்கும் கறுப்புக் கறைபடிந்த நாள் டிசம்பர் 25. அந்த வெண்மணி வீரத் தியாகிகளின் 41-ஆம் ஆண்டு நினைவு தின வீர வணக்க நாள் நிகழ்ச்சிகள் வெண்மணியில் வெள்ளிக்கிழமையன்று எழுச்சியுடன் நடை பெற்றன.

தலைவர்கள் மலரஞ்சலி

வீரவணக்க நாள் நிகழ்ச்சிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.முரு கையன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் செங்கொடியை எழுச்சிமிகு முழக்கங்களுக்கு இடையே ஏற்றி வைத்தார்.

அதைத்தொடர்ந்து, என்.வரதராஜன், மத்தியக்குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர் கோ.வீரய்யன், சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.சீனிவாசன், ஏ.லாசர், விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம், நாகை சட்டமன்ற உறுப்பினர் வி.மாரிமுத்து, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சி. பழனிவேலு, தஞ்சை மாவட்டச் செயலாளர் ஜி. நீலமேகம், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எம்.சின்னத்துரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலத் துணைச் செயலாளர் கோ.பழனிச்சாமி, நாகை மாவட்டச் செயலாளர் எம்.செல்வராஜ், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் பி.பத்மாவதி ஆகியோர் தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து, நினைவகத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி.தம்புசாமி, நாகை மாலி, பி.வைரன், எம்.நடராஜன், வி.சுப்பிரமணியன், கோவை.சுப்பிரமணியன், டி.கணேசன், ஜி.கலைச் செல்வி, மாவட்ட ஊராட் சித் தலைவர் ஜி.ஜெயராமன், தலைஞாயிறு ஒன்றியப் பெருந்தலைவர் வி.அமிர்தலிங்கம், கீழ்வேளூர் ஒன்றியப் பெருந்தலைவர் எஸ்.செல்லையன், கீழையூர் ஒன்றியப் பெருந்தலைவர் மல்லிகா சீனிவாசன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், மாணவர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஜோ.ராஜ்மோகன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கரிகாலன், பா.சரவணத்தமிழன், சாம்ராஜ், நாகை மாவட்டச் செயலாளர் வி.சிங்காரவேலு, திருவாரூர் மாவட்டச் செயலாளர் அருளரசன், எழுத்தாளர் சங்கத் தலைவர்கள் சோலை.சுந்தரப் பெருமாள், எல்.பி.சாமி, ந.காவியன், பி.செல்வராஜ், சிபிஎம் நாகை மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் திரளானோர் மலரஞ்சலி செலுத்தினர்.

நூல் வெளியீடு

தீக்கதிர் செய்தி ஆசிரியர் மயிலை பாலு எழுதிய ‘நின்று கெடுத்த நீதி’ (வெண்மணி வழக்கு - பதிவுகளும் தீர்ப்புகளும்) என்னும் நூலை மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் வெளியிட மத்தியக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

முனைவர் செ.த.சுமதி எழுதிய ‘வெண்மணிப் படுகொலைகள்’ (வரலாறும் கலை இலக்கியப் பதிவுகளும்) என்னும் நூலை கோ.வீரய்யன் வெளியிட, அ.சவுந்தரராசன் பெற்றுக் கொண்டார். இரு நூல்களையும் வெளியிட்ட ‘அலைகள்’ பதிப்பக உரிமையாளர் ‘அலைகள்’ சிவத்தை நாகை மாலி அறிமுகம் செய்து வைத்தார்.

நிறைவாக மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், இரு நூல்களையும் பற்றி உரையாற்றுகையில் இந்த இரு நூல்களும் வெண்மணியின் வரலாற்றுப் பொக்கிஷங்கள். இந்த வெண்மணி தியாக வரலாறுதான் நாளைய தேசத்தின் வரலாற்றை மாற்றப் போகிறது என்று குறிப்பிட்டார். சிபிஎம் கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் எம்.காத்தமுத்து நன்றி கூறினார்.

தீண்டாமையை கடைப்பிடிக்கும் சலூன்கடைக்கு எதிர்ப்பு

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் கொடுவாய் கிராமத்தில் தலித் மக்களுக்கு முடிதிருத்த மறுத்து தீண்டாமையைக் கடைப்பிடித்துவரும் சலூன் கடையை வாலிபர் சங்கத்தினர் ஆவேசத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சில நாட்களுக்கு முன்பு சுப்பிரமணி என்ற தலித் வாலிபர் அங்கு முடி திருத்தச் சென்றுள்ளார். அப்போது கடையில் யாரும் இல்லை. இருந்த போதிலும் சுப்பிரமணி தலித் என்ற காரணத்திற்காகவே அவருக்கு முடி திருத்த மறுத்துள்ளனர். இந்த இழிவை முடிவுக்குக் கொண்டுவர, வெண்மணி தியாகிகளின் வீரவணக்க நாளையொட்டி, அக்கடையை முற்றுகையிட்டு வாலிபர்கள் போராட்டம் நடத்தினர். வாலிபர் சங்க ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஏராளமான தலித் இளைஞர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு தீண்டாமைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முருகேஷ் தலைமை வகித்தார். வாலிபர் சங்க தலை வர்கள் ஆர்.காளியப்பன், எஸ்.முத்துகண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் பி.ராம மூர்த்தி, என்.ஆறுமுகம், பி.மோகன், வடிவேல், மணவாளன், லோகநாதன், ஜி.சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எதிர்ப்பு மறியல்

இந்நிலையில், ஆதிக்க சக்தியினரை தனிப்பட்ட முறையில் திரட்டிய மேற்படி சலுன் கடைக்காரர், அவ்வூரில் உள்ள இதர சலூன் கடைகளையும், பிற கடைகளையும் அடைக்கச் செய்து, வாலிபர் சங்கத்தினரை கைது செய்யக் கோரி திடீர் மறியலை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து அரசு நிர்வாகம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது.

போராட்டங்கள் வெற்றி

இது தவிர ஈரோடு மாவட் டம் நசியனூர், கோவை மாவட்டம் புளியகுளத்தில் சமுதாயக்கூடம் திறப்பு, விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஒன்றியம் நல்லமநாயக்கன்பட்டியில் முடிதிருத்தப் போராட்டம் போன்ற இயக்கங்களையும் வாலிபர் சங்கத்தினர் வெற்றிகரமாக நடத்தினர். மேலும் மதுரை, சென்னை, புதுக் கோட்டை, உளுந்தூர்பேட்டை, சேலம், சிவகங்கை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இவ்வியக்கங்களில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில அமைப்பாளர் பி.சம்பத், வாலிபர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆர்.வேல்முருகன், இல.சண்முகசுந்தரம், எஸ்.பாலா, லெனின், ஜா.நரசிம்மன், என்.முத்துராஜ், குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இப்போராட்டங்களில் பங்கேற்ற வாலிபர் சங்க ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ள சங்கத்தின் மாநிலத் தலைவர்கள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, எஸ்.கண்ணன் ஆகியோர், தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமை எத்தனை எத்தனை வடிவங்களில் உள்ளது என்பதை தமிழக அரசு கவனிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

டிசம்பர் 30ம்தேதி நாகை, சத்தியமங்கலத்திலும், ஜனவரியில் புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களிலும் நேரடி நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க போலீசார் தடை : வாலிபர் சங்கத்தினர் கைது

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பழையபட்டினம் கிராமம். இக்கிராமத்தில் தலித், முஸ்லிம், கிறிஸ்தவ, ரெட்டியார் சமூகங்களை சார்ந்த மக்கள் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனர்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. ஊராட்சி அலுவலகம், நூலகம் மற்றும் கட்சிக் கொடிகம்பங்கள் உள்ள அரசு இடத்தில் சிலை நிறுவப்பட்டது.

எனினும், அங்குள்ள ஒரு சமூகத்தை சேர்ந்த சிலர், அம்பேத்கர் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இச்சிலைக்கு மாலை அணிவிக்கவும் விடமாட்டோம் என்றும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இப்பிரச்சனையை தீர்க்க அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.

இந்நிலையில், வெண்மணி தியாகிகளின் வீரவணக்க நாளான டிசம்பர் 25, 2009 அன்று, டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் போராட்டத்தை வாலிபர் சங்கம் அறிவித்தது.

இப்பிரச்சனை தொடர்பாக வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறிப்பிட்ட சமூகத்தினரின் பிடிவாதத்தால் தோல்வி அடைந்தது. எனவே, போராட்டம் நடந்தே தீரும் என வாலிபர் சங்கத்தினர் கூறினர்.

இந்நிலையில் பழையபட்டினம் கிராமத்திற்குள் செல்லும் சாலைகள் அனைத்துக்கும் போலீசாரால் சீல் வைக்கப்பட்டது. கிராமத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு யாரையும் கிராமத்திற்குள் அனுமதிக் கவில்லை. விருத்தாசலத்தில் இருந்து பழையபட்டினம் கிராமத்திற்கு செல்லும் சாலைகளையும் போலீசார் மற்றும் உளவுத்துறையினர் கண்காணித்தனர்.

கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர், இரண்டு துணை கண்காணிப்பா ளர், அதிரடிப்படையினர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட போலீசார் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிப்பதை தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வாலிபர் சங்கத்தினர் வாகனங்களில் பாதிதூரம் வரை வந்து, வாகனத்தில் இருந்து இறங்கி முந்திரிக் காடுகள் வழியாக நடந்தே போராட்டக் களத்திற்கு விரைந்தனர்.

“அம்பேத்கருக்கே தீண்டாமையா? என்ற முழக்கத்துடன் பழையபட்டினம் அம்பேத்கர் சிலை அருகே விரைந்த வாலிபர் சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அதைத் தொடர்ந்து சங்கத்தினர் இரண்டு மணிநேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். வாலிபர் சங்கத்தை சேர்ந்த 200 பேரும், தலித் மக்கள் 300 பேரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்ட னர்.

காவல்துறை அதிகாரிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அரசு தடைவிதித்துள்ளது; அதனால் மாலை அணிவிக்க முடியாது என்றனர். இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் என்ன தீவிரவாதியா? எல்லோருக்கும் பொதுவானவர்தானே என்று வாலிபர் சங்கத்தினர் கேட்க அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்திற்கு வாலிபர் சங்க வட்டச் செயலாளர் பொன்.சோமு தலைமை தாங்கினார், மாவட்டத் தலைவர் என்.எஸ்.அசோகன், மாவட்டச் செயலாளர் கே.ராஜேஷ் கண்ணன், பொருளாளர் வி.ராமகிருஷ்ணன், துணை செயலாளர் பி.வாஞ்சி நாதன், விவசாயத் தொழிலாளர் சங்க வட்டச் செயலாளர் வி.சிவஞானம் உள்ளிட்டோர் கைதாகினர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் கே. கந்தசாமி, வழக்கறிஞர் சங்க தலைவர் ஏ.சந்திரசேகரன் ஆகியோரை வழியிலேயே கைது செய்தனர். வாகனத்தில் வாலிபர் சங்கத்தினர் வந்ததால் 3 வாகனங்களை பறிமுதல் செய்து, 3 ஓட்டுநர்களையும் கைது செய்தனர்.

பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால், ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மாவட்டம் முழுவதும் வாலிபர்களை திரட்டி இப்போராட்டத்தை மீண்டும் நடத்துவோம் என்று வாலிபர் சங்கம் அறிவித்துள்ளது.

நாமக்கல் அருகே வாலிபர் சங்கப் போராட்டம் வெற்றி


வெண்மணி தியாகிகள் தினமான டிசம்பர் 25 வெள்ளியன்று தீண்டாமை கொடுமைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழகம் முழுவதும் நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. இதையொட்டி திருச்செங்கோடு அருகே கொக்கராயன்பேட்டையில் வாலிபர் சங்கத்தினர் தலைமையில் தலித் மக்கள் வெள்ளியன்று எழுச்சியுடன் ஆலயம் நுழைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் பள்ளிபாளையம் அருகே இருப்பது, கொக்கராயன் பேட்டை. இங்கு பழைமை வாய்ந்த பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் பராந்தக சோழன் காலத்தில் அமைக்கப்பட்ட இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கண்காணிப்பில் உள்ள போதிலும், தலித் மக்கள் கோவிலினுள் சென்று வழிபட முடியாத நிலை இருந்தது. ஆதிக்க சாதியினர் தலித் மக்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுத்து வந்தனர். இந்த அநீதியை முடிவுக்குக் கொண்டுவர, தலித் மக்களுடன் ஆலயத்திற்குள் நுழைவோம் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவித்தது.

இந்நிலையில், கடந்த 21.12.2009- அன்று வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். அதில், அனைத்து தரப்பு மக்களும் கோயிலுக்குள் சென்று வழிபட யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை என்றும், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் ஆலய நுழைவுப்போராட்டம் நடத்த ஒத்துழைப்பு தருவ தாகவும் கோயில் நிர்வாகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து வெண்மணி நினைவு தினத்தன்று வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு தலைமையில் ஆலய நுழைவு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.ரங்கசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.பெருமாள், எம்.அசோகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சி.துரைசாமி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர்கள் ந.வேலுசாமி, எஸ்.சுரேஷ், இ.கோவிந்தராஜ் மற்றும் திரளான தலித் மக்கள் ஆலயத்துக்குள் நுழைந்து வழிபாடு செய்தனர். போராட்டத்தையொட்டி கொக்கராயன்பேட்டையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், தலித்துக்கள் கோயிலுக்குள் நுழைய ஏற்பாடு செய்த வருவாய்க் கோட்டாட்சியரை பணிநீக்கம் செய்ய வேண்டுமெனக் கூறி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கண்டனம்

இச்செயலுக்கு வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர்கள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, எஸ்.கண்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே தலித் மக்களை பயமுறுத்தும் வகையில் ஆதிக்க சக்தி யினர் அராஜகமாகப் பேசியதையும், இதனால் தலித் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இதை காவல்துறை கணக்கில் கொண்டு தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.