புதன், 10 பிப்ரவரி, 2010

ஒரே நாளில் சாதிச் சான்றிதழ்: இருளர் இன மக்கள் நன்றி

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த கரடிப்புத்தூர் கிராமத்தில், ஒரேநாளில் விசாரணை செய்து, உடனடியாக இருளர் இன மக்களுக்கு வீடு வீடாக சென்று சாதிச்சான்றிதழ் வழங்கிய அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள கரடிப்புத்தூர் ஊராட்சியில் உள்ள கோபால்ரெட்டி கண்டிகையில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள், ஆரம்பக் கல்வி, உயர்கல்வி கற்க சாதிச் சான்றிதழ் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இதில் ஒரு சிலர் உயர்கல்வி கற்றாலும், அவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவியும் கிடைப்பதில்லை. சாதிச்சான்று இல் லாமல் எந்த அரசு உதவியும் கிடைப்பதில்லை. பல குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா இல்லை. அரசு வழங்கும் வண்ண தொலைக்காட்சி பெட்டிகளும் இன்னும் வந்து சேரவில்லை.

இந்த நிலையில் அங்கு வாழும் இருளர் இன மக்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவள்ளூர் மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயதென்னரசு தலைமையில் தொடர்ந்து மனு கொடுத்து வந்தனர்.

3 மணி நேரத்தில் சாதிச் சான்று

இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஆர்டிஓ தலைமையில் அதிகாரிகள் கடந்த வாரம் கோபால் ரெட்டி கண்டிகைக்கு சென்று இருளர் இன மக்களிடம் விசாரணை செய்தனர். அதன் பிறகு அந்த இடத்திலேயே சாதிச்சான்றிதழ் தயார் செய்து 3 மணி நேரத்தில் 24 நபர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கினர்.

இரவு நேரம் ஆனதால் தீப்பந்தம் ஏந்திக் கொண்டு பொன்னேரி ஆர்டிஓ குமார் வீடு, வீடாக சென்று சான்றிதழ் வழங்கினார். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் முனியசாமி உடனிருந்தார்.

ஒரு சில மணி நேரத்திலேயே சாதிச்சான்றிதழ் வழங்கிய அதிகாரிகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

சிபிஎம் கரத்தைப் பற்றி முன்னேறுவோம்! - நீலவேந்தன் (ஆதித்தமிழர் பேரவை)

அறிவியல் அடிப்படை ஏதுமற்று முப்பது நூற்றாண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் சாதிய சமூக அமைப்பில், கீழ்நிலையில் வாழ்ந்து வரும் அருந்ததியர் மக்களின் உள் இடஒதுக்கீட்டுக்கான சமூகநீதிப் போராட்டம் கடந்த கால் நூற்றாண் டுக்கு முன்னால் முகிழ்த்து விவாதப்பொருளாகி, மக்கள் கோரிக்கையாக மாறி, உள் இடஒதுக்கீட்டு கோரிக்கையின் அடிநாதம் வெற்று சாதி உணர்வல்ல, அது சனநாயக அடிப்படையிலானது என்று தியாகத்தழும்புகளால் உருவேறிய மார்க்சிஸ்ட் கட்சியால் அரசியல் கோரிக்கையாக மாற்றப்பட்டு இன்று அருந்ததியர் மாணவர் கரங்களில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றால், இந்த கோரிக்கை கடந்துவந்த பாதை அவ்வளவு எளிதானதும் குறுகியதும் அல்ல.

பட்டியலிடப்பட்ட சாதியினருக்கென கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் இட ஒதுக்கீடு இந்திய அரசியல் சாசனத்திலேயே புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களால் உறுதி செய்யப்பட்டு விட்டாலும், பட்டியலிடப்பட்ட சாதியினருக்கென வழங்கப்பட்ட இடஒதுக்கீடு அனைத்து பட்டியலிடப்பட்ட சாதியினர்களுக்குள் சமமாக பகிர்ந்து கொள்ளப்படவில்லை. பட் டியலிடப்பட்ட சாதிகளிலேயே ஓரளவு முன்னேறிய சில சாதிகள் மட்டுமே இடஒதுக்கீட்டின் பலனை நுகர்ந்து வந்ததால், வஞ்சிக்கப்பட்ட சகோதர சாதிகள் தங்களுக்கென தனி உள்இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்தன. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய துணைக்கண்டம் முழுமையுமே இதுபோன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, அதற்கான போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.

குறிப்பாக பஞ்சாப்பிலும், ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் உள் இடஒதுக்கீட்டு கோரிக்கை வெகுவீச்சாக முன்னெடுக்கப்பட்டு, பஞ்சாபிலும் ஆந்திராவிலும் உள் இடஒதுக்கீடு சட்டமாகவே மாறியது. தமிழகத்தில் இவ்வாறாக வஞ்சிக்கப்பட்ட அருந் ததியர்கள் உள் இடஒதுக்கீடு கோரினர். தமிழகத்தில் 1984ம் ஆண்டில் கோவையில் நடைபெற்ற “இளைஞர் வழிகாட்டும் பணி” என்கிற அமைப்பின் மாநாட்டில், உள் இடஒதுக்கீடு கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் நாமறிந்த வகையில் அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டுக்கான முதல் கோரிக்கையாகும்.

பத்து ஆண்டுகளாக அருந்ததியர் மக்களுக்குள்ளாகவே சுழன்று வந்த கோரிக்கை, 1994ம் ஆண்டு வாக்கில் சமூகநீதி இயக்கங்களால் பேசப்பட்டது. 1999-2000 ஆண்டுகளில் ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அருந்ததியர் இயக்கங்களின் சக்திக்குட்பட்ட போராட்டங்களால் சக தலித் இயக்கங்களின் கவனத்தை ஈர்த்தது. 2004 - 2005 ஆண்டுகளில் ஆதித்தமிழர் பேரவை உள் இடஒதுக்கீடு கோரி மாநாடுகளையும் பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்த தொடங்கி, உள்இடஒதுக்கீடு கோரிக்கை போராட்டக்களத்துக்கு மாறியது.

2006ம் ஆண்டு செப்டம்பர் 17-ல் விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய அருந்ததியர் சமூக பொருளாதார மாநாட்டின், “அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையாக வாழும் அருந்ததியர்களின் சமூக பொருளாதார விடுதலைக்காக விவசாயிகள், தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டி போராடும்” என்கிற வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் விடுத்த அறை கூவல் அருந்ததியர் விடுதலைப் போராட்டத்தின் மைல்கல்லாகும்.

2007ம் ஆண்டு ஜூன் 12ல் சென்னை மாநகரை குலுக்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த “அருந்ததியர் சமூக பொருளாதார உரிமைப்பேரணி” சமூக அரங்கில் உள் இடஒதுக்கீட்டு கோரிக்கைக்கு வலுசேர்த்ததோடு ஆட்சியாளர்களின் காதுகளுக்கு உள்இடஒதுக்கீடு கோரிக்கை எட்டிய, வரலாற்றில் குறித்து வைக்கத்தக்க நாளாக மாறியது. பேரணி முடிவில் மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர்களை சந்திப்பதாக இருந்த தமிழக முதல்வர், தில்லிப்பயணம் காரணமாக பேரணிக்கு முன்னதாகவே தலைவர்களை சந்தித்தார். அழைப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான் என்றாலும், அதியமான், ஜக்கையன் உள்ளிட்ட அருந்ததியர் தலைவர்களை உடன் அழைத்துச்சென்ற அரசியல் பண்பாடு, ஒடுக்கப்பட்ட மக்களின்பால் மார்க்சிஸ்ட் கட்சி கொண்டிருக்கிற பூடகமும் வேடமும் இல்லாத வர்க்கப்பாசத் தை அருந்ததியர்கள் என்றென்றும் நினைவு கூரத்தக்கவர்கள்.

அதே ஆண்டில் நவம்பர் 2-ம் தேதி அருந்ததியர் உள்இடஒதுக்கீட்டுக்காக மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் அருந்ததியர்கள் மட்டுமல்லாது உழைப்பாளி மக்கள் வர்க்கப்பாசத்துடன் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டு கைதாகினர். 2008-ம் ஆண்டு சனவரி 23-ல் தமிழக அரசு ஆளுநர் உரையில், அருந்ததியர் உள்இடஒதுக்கீடு வழங்க அனைத்துக்கட்சிகளின் கூட்டம் கூட்டப்பெறும் என அறிவித்தது.

இதற்கிடையில், பல்வேறு அரசியல் கட்சிகள் ஒடுக்கப்பட்டோரை மாத்திரம் வைத்து ஒடுக்கப்பட்டோர் பிரிவு நடத்திக் கொண்டிருக்கையில், வர்க்க வெகுஜன அரங்கங்களை உள்ளடக்கி, மதுரையில் தியாகவேங்கை லீலாவதி அரங்கில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியை மார்க்சிஸ்ட் கட்சி அமைத்தது.

12.02.2008ல் தமிழக அரசு கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், தமிழக அரசு 2.35 சதவீத இடஒதுக்கீடு தர தயாராய் இருப்பதாக சொன்னபோது, 2.35 சதவீதம் நியாயமான அளவாக இருக்காது என்று ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் அவர்கள் ஆதாரங்களோடு போராடியபொழுது, அவரோடு தோள்நின்று போராடியது மார்க்சிஸ்ட் கட்சி. அதன் விளைவாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையத்திடம் ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அருந்ததியர் இயக்கங்களும் மார்க்சிஸ்ட் கட்சியும் தனித்தனியாக சந்தித்து ஆவணங்களை வழங்கின. ஆணையம் அளித்த பரிந்துரையின் பேரில் அமைச்சரவைக்குழு அமைக்கப்பட்டு அமைச்சரவைக்குழு ஏற்றுக் கொண்டபின், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மசோதாவாக முன்வைக்கப்பட்டு சட்டமாக மாறி 2009-2010ம் கல்வியாண்டிலேயே அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.

அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தின் சுருக்கமான, உண்மையான வரலாறு இவ்வாறிருக்க, கடந்த டிசம்பர் 5ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், சில அருந்ததியர் அமைப்புகள் நடத்திய பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் அருந்ததியர் உள்இடஒதுக்கீட்டு கோரிக்கையை யாரும் என்னிடத்தில் வைக்கவில்லை, அது எனக்கு நானே வைத்துக்கொண்ட கோரிக்கை என்று பேசியிருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று, அருந்ததியர் உள்இடஒதுக்கீடு குறித்து பரிசீலித்து பரிந்துரை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்படுகிறது என சட்டமன்றத்தில் பேசியது இன்றும் சட்டமன்ற நடவடிக்கைக் குறிப்புகளில் உள்ளது. ஆனால் உண்மையை மறைத்து, யாரும் என்னிடம் கோரிக் கை வைக்கவில்லை என்று சொல்லும் தமிழக முதல்வர், 2007 ஜூன் 12க்கு முன்பு இக்கோரிக்கை தொடர்பாக தமிழக அரசோ தி.மு.கவோ பேசியதாக ஆதாரம் காட்ட முடியுமா? தமிழக முதல்வரின் பாணியிலேயே நாம் பணிவோடு நினைவுபடுத்துகிறோம் 2007 ஜூன் 13ம் நாளிட்ட முரசொலி நாளிதழ் இதற்கு பதில் சொல்லும்.

இதுவே, தமிழகத்தின் சமூக அமைப்பில் அதிகாரம் பெற்று விளங்கும் மேல்..? சாதிகளில் ஒன்று நடத்துகிற பாராட்டு விழா வில், யாரும் கோரிக்கை வைக்கவில்லை என்று உண்மையை மறைக்க முடியுமா? தமிழக முதல்வரின் உண்மை மறைப்பை கண்டிக்கவும், கிராமப்புறங்களில் ஏவப்படும் வன்கொடுமைக்கு இணையான “மென்கொடுமைக்கு” எதிர்வினையாற்றவும் ஒரேவழி, அருந்ததியர் அமைப்புகள் சார்பில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவையில் சனவரி 24-ல் எடுக்கப்படும் பாராட்டு விழாவில், வெகுவாரியாக அருந்ததியர் பெருமக்கள் கலந்துகொண்டு வெற்றியடையச் செய்வதும் உண்மையான சமூகநீதிப் போராட்டத்தை கூடுதல் குறைவு இன்றி பதிவு செய்வதேயாகும்.

அருந்ததியர் விடுதலைப் போராட்டத்தின் ஒரு மைல்கல்லான உள் இடஒதுக்கீடு பெற்றுத் தந்ததற்காக மாத்திரம் நடத்தப் பெறும் பாராட்டு விழா அல்ல. ஆதிக்க சாதியென அடையாளம் காட்டப்படும் சாதியில் பிறந்து சக்கிலியர்களுக்கு ஆதரவாக இருந்ததனால் படுகோரமாக கொலை செய்யப்பட்ட தியாகி இடுவாய் ரத்தினசாமியின் வீரஞ்செறிந்த போராட்டம், அது தனிப்பட்ட ரத்தினசாமியின் குணநலன்களால் மாத்திரம் விளைந்தது அல்ல. ரத்தினசாமியை அவ்வாறு வார்த்தெடுத்த மார்க்சிஸ்ட் கட்சியின் நீண்ட நெடிய கட்சித்திட்டத்தின் விளைவே!

இன்றைக்கும் “வாழும் ரத்தினசாமிகள்” மார்க்சிஸ்ட் கட்சியில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நாம் கண்ணார பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த பாராட்டு விழா அந்த “வாழும் ரத்தினசாமிகளை” ஊக்கப்படுத்தும் ஒரு சிறு முயற்சியுமாகும்.

இரக்கப்பட்டு உச்சுக் கொட்டிய வாய்களுக்கு இடையில், தியாகத் தழும்புகளால் உருவேறிய முதிர்ந்த கரம் ஒன்று மார்க்சிஸ்ட் கட்சியாக அருந்ததியர்களை தூக்கிவிட வந்திருக்கிறது. கரத்தை வலுவாகப் பற்றிக்கொண்டு விடுதலைப் பாதையில் முன்னேறுவோம்!

- (தீக்கதிர், 24.01.2010)

அருந்ததியர்களின் இன்றைய வாழ்நிலை- ஒரு நேரடி ரிப்போர்ட்

நாமக்கல்லை அடுத்த புதுச்சத்திரம் ஒன்றியத்தில் உள்ளது திருமலைப்பட்டி ஊராட்சி. இங்கு 60 குடும்பங்கள் வசிக்கும் வண்ணாம்பாறை என்ற அருந்ததியர் கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் மக்களில் 18 வயது முதல் 30 வயது வரையுள்ள இளைஞர்கiளைத் தவிர மற்றவர்கள் விவசாய கூலி வேலைக்குத் தான் செல்கின்றனர். உள்ளூரில் வருடம் முழுவதும் வேலையிருப்பதில்லை. இதனால் கணவன், மனைவி இருவரும் வெளியூருக்கு வேலைதேடி சென்று விடுகின்றனர். வருடத்தில் சுமார் பத்து மாதங்கள் வேலைக்காக வெளியூரில்தான் தங்கி உள்ளனர். நெல் நடவு, களை எடுப்பது, அறுவடை என்றும், மஞ்சள் காட்டிற்கும், கரும்பு வெட்டுவதற்கும், நிலக்கடலை பறிப்பதற்கும் போர் வைப்பதற்கும், சோளத்தட்டு அறுக்கவும், குச்சிக்கிழங்கு பிடுங்கவும் என திருச்சி, கரூர், தஞ்சாவூர், ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் கேரளா வரை சென்று அங்கேயே தங்கியுள்ளனர். வயதான பாட்டன் பாட்டிகளின் பராமரிப்பில் குழந்தைகளை விட்டுச் செல்லும் நாடோடித் தொழிலாளர்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குழந்தைகளைப் பார்க்க வந்து செல்கின்றனர்.

இளைஞர்களும் லாரி மற்றும் ரிக் வண்டிகளுக்கு சென்று விடுகின்றனர். கர்நாடகா முதல் எபிவரை செல்லும் இவர்களும் வருடத்தில் இரண்டு அல்லது மூன்றுமுறைதான் வீட்டிற்கு வருகின்றனர். திருமணமாகாதவர்கள்தான் வெளியூர் வேலைக்கு செல்கின்றனர் என்றால், திருமணமானவர்களும் மனைவி, குழந்தைகளைத் தவிக்க விட்டு சென்றுவிடுகின்றனர். குழந்தைகள் பெறாத சிலரும் மாதக்கணக்கில் வீட்டுக்கு வருவதில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அண்டை வீட்டில் இருப்பவர்கள்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். செல்போனின் தயவால் குரலை மட்டும் கேட்கலாம், நலம் விசாரிக்கலாம் என்பதுதான் சற்று ஆறுதலான விசயம். குழந்தைகளைப் பராமரிக்க வேறு யாரும் இல்லாத
வர்கள் மட்டுமே சொந்த ஊரிலேயே இருக்கின்றனர். அவர்களும் சுற்றுவட்டாரத்தில் சுமார் 60 கிலோ மீட்டர் வரை வேலைக்கு சென்று வருகின்றனர். பெற்றோர்களை பிரிந்து வாழும் குழந்தைகளுக்கும், கணவனை பிரிந்து வாழும் மனைவிகளுக்கும் இதன் பாதிப்புகளை, பிரச்சனைகளையோ உணர்ந்தாலும், அதை சொல்லத் தெரியவில்லை. விடுபட வழியும் தெரியாமல் தலையெழுத்து என்றும், ஆண்டவன் விட்ட வழி என்றும், வலிகள், வேதனைகளோடும், வாழ்ந்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு தேசிய கிராமப்புற வேலை உத்தரவாதத்திட்டம் உதவாமல் போனதுதான் கொடுமை. அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க வந்த போது ஊரில் ஒருவரும் இல்லை. புகைப்படம் கொடுத்தும் பெயரை பதிவுசெய்து அடையாள அட்டை பெறவில்லை. இதனால் 100 நாள் வேலை உறுதித்திட்டம் இவர்களுக்கு ஏட்டில் எழுதிய சர்க்கரையாகிவிட்டது.

இது ஒருபுறம் என்றால் இங்கு வசிக்கும் 60 குடும்பங்களில் 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓலைக்குடிசைகள் தான் வீடுகள். சரியான பேருந்து வசதி இல்லை. அவசர உதவிக்கும், மருத்துவமனைக்கு செல்லவும் 3 கி.மீ நடந்து சென்று பஸ் ஏற வேண்டும். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் 4 கிலோ மீட்டர் நடந்து சென்றுதான் படிக்க வேண்டும். தேவையான தெரு
விளக்கு வசதி இல்லை. இப்பகுதியில் பெரும்பாலான கிராமங்களில் இதுதான் நிலை. அடிப்படை வசதிகளும் இல்லாமல், வாழ வழியுமில்லாமல், அரசு அறிவிக்கும் திட்டங்களிலும் பயன்பெற முடியாமல் நாடோடிகளாய் திரியும் அப்பாவி அருந்ததிய மக்கள் வாழ்வு வளம்பெறுவது எப்போது….?

சாமி கும்பிடச் சென்ற தலித் மக்கள் மீது தாக்குதல்:தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்டது உளுத்திமடை கிராமம். பல்வேறு சமூகத்தினர் வாழ்ந்துவரும் இங்கு, செங்கமடை என்ற பகுதியில், ஊருக்குப் பொதுவான அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குள் தலித் மக்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், ஆதிக்க சாதியினரின் தடையை மீறி, கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிடுவதென முடிவு செய்து, அதன்படி, கடந்த 15.1.2010 அன்று தலித் மக்கள் கோயிலுக்கு சென்றனர்.

அப்போது, செங்கமடை மனோகரன் என்பவரின் தலைமையில் ஏராளமான ஆதிக்க சாதியினர், தலித் மக்களை கொடூர மான ஆயுதங்கள் மூலம் கடுமையாக தாக்கினர். முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் தாக்குதலுக்கு உள்ளாகினர். முத்துப்பாண்டி, லட்சுமி, பஞ்சயம்மாள் ஆகியோர் உட்பட பலர் காயமடைந்தனர். முத்துப்பாண்டி என்பவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, தாக்குதல் நடத்திய ஆதிக்க சாதியினர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, அதற்கு மாறாக, தாக்குத லுக்கு உள்ளான பெண்கள் உட்பட தலித்துக்கள் பலரை, சிகிச்சை பெறக்கூட அனுமதிக்காமல் இரவோடு இரவாக கைது செய்துள்ளது. தலித் மக்கள் 11 பேர் மீது வழக்கும் பதிவும் செய்துள்ளது.

அதுமட்டுமன்றி, காவல் ஆய்வாளர், தலித் பகுதிக்கு இரவு நேரத்தில் சென்று அங்குள்ள பெண்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இதுஒருபுறமிருக்க, உளுத்திமடையில் உள்ள கடைகளில், தலித் மக்கள் பொருட்கள் வாங்க ஆதிக்க சாதியினரால் தடை ஏற் படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கெனவே இங்குள்ள டீ கடைகளில் இரட்டை டம்ளர் முறை தற்போதுவரை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவிழா காலங்களில் நாடகம் நடைபெற்றால் தலித் மக்கள் சமவரி கொடுத்தாலும், கடைசி வரிசையில் அமர்ந்து தான் பார்க்க வேண்டுமாம்; வரி தரவில்லையெனில் வீடு புகுந்து அவர்கள் வேலைக்காக பயன்படுத்தும் மண் வெட்டி, கத்தி, அரிவாள், பானை போன்ற பொருட்களை எடுத்துச் சென்று விடுவார்களாம்.

தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையால், இங்குள்ள தலித் மாணவர்கள், பள்ளிக்கு செல்லக்கூட பயந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஏனெனில், இங்கு பள்ளிக்கூடமும்கூட ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதியில்தான் உள்ளது.

இந்நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.சாமுவேல்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், தாலுகா செயலாளர்கள் ஏ.பி.கண்ணன், வி.முருகன், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பூங்கோதை, மாவட்டத் தலைவர் சி.ஜோதிலட்சுமி, மாவட்டப் பொருளாளர் எஸ்.சரோஜா, பூமிநாதன், அன்புச்செல்வன் ஆகியோர் உளுத்திமடை கிராமத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், பிரச்சனைகளைக் கேட்டறிந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் நம்பிக்கை ஊட்டினர்.

சாமி கும்பிட கோயிலுக்கு சென்ற தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது; பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீது போடப்பட்ட பொய்வழக்கை காவல் துறை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்; வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என்று, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.சாமுவேல்ராஜ், 20.1.2010 அன்று அறிக்கையொன்றையும் விடுத்துள்ளார்.

தலித் மக்களுக்கு குடிநீர் கேட்டால் தடியடியா? காவல்துறைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

தண்ணீர் கேட்டு போராடிய தலித் மக்கள் மீது தடியடி நடத்திய, வேடசந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஸ் வரனை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் என்.பாண்டி விடுத்துள்ள அறிக்கையில் இதுதொடர்பாக மேலும் குறிப்பிட்டி ருப்பதாவது:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் பாலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது, புது அழகாபுரி. இங்குள்ள ஆதி திரா விடர் குடியிருப்புப் பகுதிக்கு, கடந்த எட்டு நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை; மின்சாரம் இல்லை; இதனால், பொங்கல் நாட்களில் கூட அந்த மக்கள் நிம்மதியாக சமைத்துச் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் ஆவேசமடைந்த தலித் மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஆண்களும் பெண்களுமாக திரண்டு, புதனன்று காலையில் சாலையில் நின்று முழக்கமிட்டுள்ளனர். கூம்பூர் காவல் துறையினரும், வேடசந்தூர் காவல் ஆய்வாளரும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து பொதுமக்களோடு பேசித் தீர்வு ஏற்படுத்த முயன்றுள்ளனர்.

அப்போது அங்குவந்த வேடசந்தூர் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் மகேஸ்வரன், வாகனத்தை விட்டு இறங்கியவுடன் யாரிடமும் எந்த விசாரணையும் செய்யாமல், இவனை அடித்து தூக்கினால் எல்லாம் தீர்ந்து விடும் என்று கூறிக்கொண்டே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வேடசந்தூர் ஒன்றியச் செயலாளர் சு.பாலுபாரதியை தடியால் கடுமையாக தாக்கியுள்ளார். அவர் தாக்கிய உடன் அங்கிருந்த காவலர்களும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பாலுபாரதி மயக்கமடையவே, அவரை வாகனத்தில் தூக்கிப் போட்டுக் கொண்டு சென்றுவிட்டனர்.

அதைத்தொடர்ந்து, பாலுபாரதியை விடுவிக்காமல் கலைந்து செல்லமாட்டோம் என்று தலித் மக்கள் உறுதியுடன் இருந்துள்ளனர். இதனிடையே, திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே.பாலபாரதி, சம்பவ இடத்திற்குச் சென்று, பிரச்சனையில் தலையிட்ட பிறகு, பாலுபாரதியை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தலித் மக்கள் தண்ணீர் கேட்டதற்காக, அதற்கு தலைமை தாங்கிய வாலிபர் சங்க நிர்வாகி சு.பாலுபாரதியை மனிதாபிமானற்ற முறையில் கடுமையாக தாக்கிய வேடசந்தூர் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் மகேஸ்வரனை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டுமென மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மாவட்டச் செயலாளர் என்.பாண்டி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக முதல்வருக்கும், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் புகார் மனு அனுப்பட்டுள்ளது.

தலித் உரிமைப் பாதுகாப்புச் சட்டங்களும், ஊடகங்களும்- கி.இலக்குவன்

தலித் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னணியில் நிற்கும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அது தீண்டாமைக் கொடுமைக்கு முடிவு கட்டுதல் தொடங்கி அருந்ததியர் உள்ஒதுக்கீடு, அனைத்து ஆலயங்களிலும் தலித்துகளுக்கு அனுமதி, இரட்டைக் கிளாஸ்முறை ஒழிப்பு, தலித்துகளுக்கு மயானவசதி ஏற்படுத்தித் தருதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காகவும் போராடி வருகிறது.

தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை. ஆனால் இந்து நாளிதழின் வாசகர்களுக்காக, தலித்துகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களைப் பற்றியும் அவை முறையாக அமல்படுத்தப்படாமல் இருப்பதைப் பற்றியும் 21-12-09 இதழில் ஆசிரியர் எஸ்.விசுவநாதன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அந்த கட்டுரை, வாசகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள பிரதிபலிப்புகளையும், அவர் தமக்காக ஒதுக்கப்பட்டுள்ள பத்தியில் (28-12-09-இந்து நாளிதழ்) பதிவு செய்துள்ளார்.

தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிப்பதற்குக் காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினால், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒருவகையான விளக்கத்தை அளிக்கின்றனர். தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான சட்டங்கள் போதுமானவையாக இல்லை என்பது அவர்கள் முன்வைக்கும் வாதம். ஆனால் அது உண்மையல்ல. பார்க்கப்போனால் எஸ்.சி, எஸ்.டி.பிரிவினருக்கு இழைக்கப்படும் வன்கொடுமைக்கு எதிரான சட்டம் ஒரு வல்லமைமிக்க சட்டமே. அந்த சட்டத்தைப் பயன்படுத்தி தலித்துகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது மட்டு மின்றி, அந்த சட்டத்தை அமல்படுத்த மறுக்கும் அதிகாரிகளின் மீதும்கூட நடவடிக்கை எடுக்க முடியும். சில சூழ்நிலைகளில் மாவட்ட ஆட்சியாளர் மீதுகூட நடவடிக்கை எடுக்கலாம். எனவே குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகள் கிடைக்காமலிருப்பதற்கு காரணம், சட்டத்திலுள்ள பலவீனம் அல்ல.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 17வது பிரிவு தீண்டாமைக்குத் தடைவிதிக்கிறது. அரசியல் அமைப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டுகள் கழித்து, 1955ல் தீண்டாமைக் குற்ற சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இச்சட்டம் கோயில் தீண்டாமைச்சட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் ஆலயங்களுக்குள் தலித்துகளை அனுமதிக்க மறுப்பதானது தீண்டாமைக் கொடுமைகளுக்குள் ஒரு மிகப்பெரும் கொடுமையாக உள்ளது. தீண்டாமைக்கு ஆதரவாகப் பேசுவதையும் அதை நடைமுறையில் அனுசரிப்பதையும் தண்டனைக்குரிய குற்றங்களாக 1955 சிவில் உரிமைகள் சட்டம் ஆக்கியுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டம் தீண்டாமைக்குத் தடை விதித்துள்ளதை அடுத்து மக்கள் பெறக் கூடிய உரிமைகளும் சிவில் உரிமைகளாக அச்சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் வேறு பல உரிமைகளும் இந்த சிவில் உரிமைகள் சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

1989ல் ராஜீவ்காந்தி ஆட்சிக்காலத்தில், 1989 எஸ்சி, எஸ்டி பாதுகாப்புச்சட்டம் கொண்டு வரப்பட்டது. தலித்துகளுக்கு எதிராக பல்வேறு வடிவங்களில் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், அவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலும் 1989 சட்டம் அமைந்திருந்தது. அது முறையாக அமல்படுத்தப்பட்டிருந்தால் களச்சூழலில் அது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.

தலித்துகளுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளுக்கு எதிராகத் தொடரப்படும் வழக்குகளின் அவல நிலையை மத்திய அரசின் முன்னாள் செயலாளர்களில் ஒருவரான பி.எஸ்.கிருஷ்ணன் பின்வருமாறு விளக்கியுள்ளார். 1999 முதல் 2003 வரையிலான காலத்தில் தலித்துகள் அளித்த புகார்களில் 50 முதல் 60 சதவீதம் வரையிலானவைக்குத்தான் குற்றப்பத்திரிகைகள் அளிக்கப்பட்டன. அவற்றில் விசாரணை நிலையை எட்டியவை 8 முதல் 21 சதவீதம் வரையிலானவையே. விசாரிக்கப்பட்ட வழக்குகளிலும் 11 முதல் 13 சதவீதம் வரையிலானவற்றில்தான் தண்டனைகள் வழங்கப்பட்டன. நீதிமன்றத்துக்குச் சென்ற அனைத்து வழக்குகளையும் அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால், 1 முதல் 2 சதவீதம் வழக்குகளில்தான் தண்டனைகள் வழங்கப்பட்டன (ஆதாரம்: பிரன்ட்லைன் 4-12-09)

வேலை அளிக்க மறுப்பது போன்ற பொருளாதாரக் குற்றங்களையும், சமூகப்புறக்கணிப்பு போன்றவற்றையும் தண்டனைக் குரிய குற்றங்களாக்கக்கூடிய விதிகள் 1989 சட்டத்தில் இடம்பெறவில்லை. ஆனால் இதற்கான அடிப்படைத் தவறு சட்டத்தில் இருப்பதாகக் கூறமுடியாது. சமூக அமைப்பில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சிந்தனைகளும் கோட்பாடுகளுமே இவற்றைத் தீர்மானிக்கின்றன. அதன் தாக்கத்துக்கு உட்பட்டவர்களாகவே காவல்துறையும் அதிகார வர்க்கமும் இருந்து வருகிறது.சமூக அக்கறையுள்ள இதழியலாளர்களுக்கு இது பெரும் சவாலாக உள்ளது என்று விசுவநாதன் சுட்டிக்காட்டுகிறார்.

சமூக ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளைப் பற்றிய செய்திகளை மட்டும் வெளியிடுவதுடன் ஊடகங்கள் நின்று விடக்கூடாது. சமூக நீதி மற்றும் முற்போக்கான சமூக மாற்றங்களுக்கான பிரதிநிதிகளாக ஊடகங்கள் பணிபுரிய வேண்டும் என்றும் விசுவநாதன் வலியுறுத்தி யுள்ளார்.

தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆண்டவனுக்கு அருகே நின்று பூஜை செய்யும் உரிமையை திமுக அரசு பெற்றுத் தந்துள்ளது என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார். ஆனால் அந்த அறிவிப்பிற்கு நேர் எதிராக கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் திருக்கோ விலூர் வட்டம் காங்கியனூரில் நடைபெற்றுள்ளது. தலித் மக்களைத் திரட்டி ஆலய நுழைவுக்கு சென்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மற்றும் சிபிஎம் தலைவர்களைத் தடுத்து நிறுத்தியதோடு காவல்துறையினர் தடியடியும் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மாவட்ட காவல்துறை, வருவாய் துறையினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை இதுவரைக்கும் எடுக்கப்படவில்லை. ஆனால் உரிமையை நிலைநாட்டச் சென்றவர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.

கல்வராயன்மலை, வாரம் ஊராட்சி மன்ற உறுப்பினர் தி.தேவராஜ் பழங்குடி இனத்தை சார்ந்தவர். இவரது படுகொலையில் உண்மை குற்றவாளி கைது செய்யப்படவில்லை. பாணப்பட்டு கிராமத்தில் தலித் இளைஞர் பி.சிவபாலன் கொலையை காவல்துறையே தற்கொலை என திசை திருப்புகிறது.

எனவே, காங்கியனூரில் போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும்; தேவராஜ் படுகொலையில் உண்மை குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்; சிவபாலன் கொலைச் சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; சிறப்பு உட்கூறு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை முழுமையாக தலித் மற்றும் பழங்குடியின மக்க ளுக்கே செலவிட வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில அமைப்பாளர் பி.சம்பத் கண்டன உரையாற்றினார். ஆர்.ராமமூர்த்தி சாரங்கன் (வழக்கறிஞர் சங்கம்), ஜி.ஆனந்தன் (சிபிஎம்), சி.நிக்கோலஸ் (அம்பேத்கர் பேரவை), எல்.யேசுமரியான் (அம்பேத்கர் நூற்றாண்டு இயக்கம்), ஏ.கோதண்டம் (பார் கவுன்சில்), வி.உதயகுமார், பி.குமார் (சிஐடியு), டி.ஏழுமலை, ஆர்.தாண்டவராயன், என்.சுப்பிரமணியன் (விவசாயிகள் சங்கம்), கே. கலியன், பி.சுப்பிரமணியன் (விதொச), ஆர்.கண்ணப்பன், எம்.செந்தில் (வாலிபர் சங்கம்), ஏ.சக்தி, எஸ்.கீதா (மாதர்), ஜெ.முகமது அனஸ், யு.கார்க்கி (மாணவர்), ஆர்.மதி (அருந்ததியர் சங்கம்) மற்றும் பலர் பேசினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் முத்துக்குமரன் தலைமை வகித்தார்.

குருமன்ஸ் பழங்குடி மக்களுக்கு இனச்சான்று வழங்குக : பி.டில்லிபாபு

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கோட்டத்தில் வாழ்ந்து வரும் குருமன்ஸ் பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் (எஸ்டி) வழங்க வேண்டும் என்று பி.டில்லிபாபு எம்எல்ஏ வலியுறுத்தினார்.

இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு தலைமைச் செயலாளரை சந்தித்து அவர் மனு அளித்தார்.

அதன் விபரம் வருமாறு:-

தமிழகத்தில் பழங்குடியின பட்டியலில் குருமன்ஸ் பிரிவு வரிசை எண். 18ல் உள்ளது. இவர்களுக்கு குருமன்ஸ் பழங்குடி இனச் (எஸ்.டி) சான்றிதழ் அரூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் வழங்கப்பட்டு வருகின்றன.

வேலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே, சான்றிதழ் பெற்றிருக்கும் பெற்றோர்களுக்கு மெய்த்தன்மையறிந்து பின்னர் அவர்க ளது பிள்ளைகளுக்கு சாதிச்சான்று வழங்கப்படும் என்று அதிகாரி அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில், திருப்பத்தூர், கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர், வாணியம்பாடி தாலுகாகளில் கடந்த 2.5.07 அன்று மாவட்ட விழிப்புணர்வு குழு மூலம் மெய்த்தன்மையறிந்து சான்றிதழ் வழங்கலாம் என்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து விழிப்புக்குழுவில் உறுதிசெய்யப்பட்ட நபர்களது பிள்ளைகளுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்கிட கோரி மனு செய்ததில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் நந்தகுமார் முன்னுக்குப் பின் முரணான தகவல்களுடன் பதில் சொல்வதும், உள்நோக்கத்துடன் திட்டமிட்டே சாதிச்சான்றிதழ் வழங்கிட மறுத்தும் வருகின்றார்.

மேலும், “மாவட்ட விழிப்புக்குழுவின் மெய்த்தன்மை குறித்த அறிக்கை அடிப்படையில் மட்டும் சார் ஆட்சியரால் சாதிச் சான்று மேற்கண்ட நபர்களுக்கு வழங்க இயலாது” என்பது - பழங்குடியினருக்கான இந்திய அரசியல் சட்ட உரிமையை மறுப்பதாகும். மேலும், தமிழக அரசு ஆணைகளை காலில்போட்டு மிதிக்கும் செயலாகும்.

சென்னை உயர்நீதி மன்றம் சமீபத்தில் பெற்றோர்கள் எஸ்டி இனச்சான்றிதழ் பெற்றிருந்தால் அவர்களது பிள்ளைகளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு பிறகும் திருப்பத்தூர் சார் ஆட்சியரிடத்தில் கடந்த 5 மாத காலத்திற்கு மேலாக சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் என்ற அடிப்படையி லும் 3 முறை நேரில் சென்று வலியுறுத்தி பேசியுள்ளேன்.

ஆனால், கோட்டாட்சியர் திட்டமிட்டு குருமன்ஸ் இனத்திற்கு எஸ்.டி. சான்றிதழ் தர மறுத்து வருவது சாதிய இன உணர்வோடு அவர் பணியாற்றுகிறாரா? என்ற சந்தேகத்தை அப்பகுதி பழங்குடி மக்களின் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, இதே போன்று உறுதி செய்யப் பட்ட 28 பேர்களது வாரிசுகளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டுமென்று, 12.12.09 அன்று போராட்டத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சியருக்கு வலியுறுத்தப்பட்டது. அப்போது 1 மாதக் காலத்திற்குள் சாதிசான்றிதழ் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியரே தெரிவித்துள்ளார்.

எனவே, தலைமைச் செயலாளர் இப்பிரச்சனையில் தலையிட்டு, விசாரணை செய்து குருமன்ஸ் இனமக்களுக்கு குறிப்பாக வேலூர் - திருப்பத்தூர் கோட்டத்தில் சாதிச்சான்றிதழ் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குறவன் இன மக்களுக்கு சாதிச் சான்றிதழில் வஞ்சகம்

குறவன் இன மக்களுக்கு வழங்கப்பட்ட சாதிச்சான்றிதழில் கல்விச் சலுகைகளுக்கு மட்டுமே என குறிப்பிடப்பட்டு உள்ளதால், அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற இச்சான்றிதழை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது; எனவே, அனை வருக்கும் வழங்குவது போல சாதிச்சான்று வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநில அமைப்பாளர் ஏ.வி.சண்முகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளருக்கு மனு அனுப்பினார்.

அந்த மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது:

வேலூர் மாவட்டம், வாலாஜா நகரத்தில் வாழும் குறவன் இன மக்களுக்கு குறவன், எஸ்.சி. சாதிச்சான்று கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு வட்டாட்சியர் 2009 ஏப்ரல் மாதம், குறவன் எஸ்.சி. சாதிச்சான்று வழங்கினார். ஆனால் அந்த சாதிச்சான்றிதழில் இச்சான்று கல்வி சலுகைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மற்ற தாலுகாக்களில் எங்குமே இதுபோல் வழங்காத பட்சத்தில், வாலாஜா வட்டாட்சியர் மட்டும் இதுபோல் சான்று வழங்கியுள்ளதால், எங்களது பிள்ளைகள் வேலைவாய்ப்பில் பதிவு செய்திடவும், அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு இந்த சான்றிதழைப் பயன்படுத்தவும் முடியாத நிலையில் உள்ளோம்.

எனவே, இந்த சான்றிதழில் உள்ள கல்விச் சலுகைகளுக்கு மட்டும் என்று எழுதியுள்ளதை மாற்றி, அனைவருக்கும் வழங்கு வதுபோல், சாதிச்சான்று வழங்கிட ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஏ.வி.சண்முகம் குறிப்பிட்டிருந்தார்.

பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்குக! : தலைமைச் செயலாளரிடம் டில்லிபாபு எம்எல்ஏ மனு

தமிழகத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் 36 வகையான பழங்குடியின மக்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பழங்குடியின சாதிச்சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட இவர்களுக்கு உடனே எஸ்.டி இனச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அரசு தலைமைச் செயலாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு செவ்வாயன்று (12.01.2010 )மனு அளித்தார்.

பழங்குடி இன மக்களில், குறிப்பாக குருமன்ஸ், கொண்டாரெட்டி, காட்டு நாயக்கன், மலைவேடன், ஆதியன் போன்ற பிரிவினர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக வேலூர், மேட்டூர், வாணியம்பாடி, பாலக்கோடு ஆகிய மாவட்டங்களில் சாதிச்சான்றிதழ் வழங்க மறுக்கப்படுகிறது. அதேபோல், மதுரை மாவட்டத்தில் மலைவேடன், விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி பகுதிகளில் காட்டு நாயக்கன் திருவாரூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் ஆதியன் போன்ற பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் புதியதாக வழங்கப்படுவதில்லை. மேலும், பெற்றோர்கள் கடந்த காலங்களில் பழங்குடியின (எஸ்.டி) சாதிச்சான்றிதழ் பெற்றிருந்தால் மெய்த்தன்மையறிவது என்றும் சான்றிதழ் சரிபார்ப்பது என்றும் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் பழங்குடியினர், பெண்கள், உயர்கல்வி படிப்பதும், வேலைக்குச் செல்வதும் அரிதாகவே காணப்படுகிறது. அரசின் உதவித்திட்டங்களை பெற முடியாமல் பரிதவிக்கின்ற நிலை நீடிக்கின்றது.

மாவட்ட விழிக்கண்குழு கமிட்டி, எஸ்.டி., சான்றிதழ், மெய்த்தன்மையறிந்து மூவர் குழு இறுதியாக செய்திட்ட பிறகு, சான்றிதழ் பெற்றுள்ள பெற்றோர்களது பிள்ளைகளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கிட விண்ணப்பித்தால் திருப்பத்தூர் - சிவகாசி போன்ற கோட்டங்களில் பணியாற்றும் சாராட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் திட்டமிட்டே சான்றிதழ் தரமறுக்கின்றனர்.

அதேபோல், குறவன் இனமக்களுக்கு வழங்கப்படும் ஆதிதிராவிடர் இனச் சான்றிதழ் - வேலூர் மாவட்டத்தில் வாலாஜா, அரக்கோணம், திருப்பத்தூர் போன்ற வட்டங்களில் பல மாதங்களாக இழுத்தடிக்கப்படுகிறது. மேலும், வாலாஜாவில் வழங்கியுள்ள நிரந்தர இனச்சான்றிதழ், பள்ளி படிப்பிற்காக மட்டும் இச்சான்றிதழ் என்று எழுதப்பட்டுள்ளதை வாபஸ் பெற வேண்டும். பெற்றோர்கள் சாதிச்சான்றிதழ் பெற்றுள்ள பிள்ளைகளுக்கு உடனடியாக 15 நாட்களிலேயே சாதிச்சான்று வழங்கிட வேண்டும். குறவன் இனமக்களுக்கு (பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் ஆதிதிராவிடர் இனச் சான்றிதழை வேலூர், (அரக் கோணம், வாலாஜா ) திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உடனடியாக வழங்கிட வேண்டும்.

மாணவர்களுக்கான சாதிச்சான்றிதழ் தருமபுரி மாவட்டத்தில் வழங்கப்படுவது போல அந்தந்தப் பள்ளிகளிலேயும் சாதிச்சான்றிதழ் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கிட திட்டமிட்டு மறுக்கும் ஒரு சில அதிகாரிகள் குறித்து அரசு - அரசாணை மேற்கொண்டு பரிசீலனை செய்திட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டில்லிபாபு தலைமையில் தமிழ்நாடு பழங்குடியினர் கூட்டமைப்புத் தலைவர் சிவலிங்கம், குறவன் பழங்குடியின மக்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் ஏ.வி.சண்முகம், குருமன்ஸ் சங்க பொதுச் செயலாளர் பி.வீரபத்திரன், கொண்டாரெட்டிஸ் சங்க பொதுச்செயலாளர் பிரகாஷ், ஜி.பெருமாள், ஜீ.அரங்கநாதன் ஆகியோர் கொண்ட குழு மனுவை அளித்தது.