சனி, 14 நவம்பர், 2009

வாச்சாத்தி வழக்கு: நவ. 30-க்கு ஒத்திவைப்பு


தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம், வாச்சாத்தி கிராமத்தில் 1992-ஆம் ஆண்டு மலை வாழ்மக்களை சேர்ந்த 18 பெண்கள் வனத்துறையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட் டனர்.

இதுதொடர்பாக வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த் துறையைச் சேர்ந்த 269 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிபிஐ விசாரணைக்கும் மாற்றப்பட்டது.

அதன்பின் கடந்த 16 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, கடந்த 2009-ஜூன் மாதம் தருமபுரி அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. ஆகஸ்ட் 20, 21 தேதிகளி மாவட்ட நீதிபதி எஸ்.குமரகுரு தலைமையில் நடைபெற்ற குறுக்கு விசாரணையில் வனத்துறை யினரால் பாதிக்கப்பட்ட 18 பெண்களில், ஜெயா, சித்ரா, அமுதா, காந்தி, லட்சுமி ஆகிய ஐந்து பேர் முதல் நாளிலும், முத்துவேடி, பாப்பாத்தி, மல்லிகா, மாரிக்கண்ணு ஆகிய நான்கு பேர் இரண்டாம் நாளிலும் சாட்சியம் அளித்தனர்.

அடுத்தகட்டமாக நவம்பர் 13 அன்று நடைபெற்ற குறுக்கு விசாரணையில், எஞ்சிய செல்வி, தேன்மொழி, காந்திமதி, பாப்பாத்தி, சுகுணா, கம்சலா, பழனியம்மாள், பூங்கொடி, சரோஜா ஆகிய ஒன்பது பேர் தங்களுக்கு நடந்த கொடுமைகளை நீதிபதி முன் சாட்சியளித்தனர்.

இவ்வழக்கில் அரசுத் தரப்பு சிபிஐ வழக்கறிஞர் ஜெயபால், எதிர்தரப்பு வழக்கறிஞர் வெங்கடேசன் ஆகியோர் வாதாடினர். இதன்பின்னர் வழக்கு விசாரணையை நவcபர் 30-ம் தேதிக்கு நீதிபதி எஸ். குமரகுரு ஒத்தி வைத்தார்.

விசாரணைக்காக வாச்சாத்தி பெண்கள் வந்திருந்த போது தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாநில துணைச்செயலாளர் பி.டில்லிபாபு எம்.எல்.ஏ., விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன் மற்றும் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே. பூபதி, மாவட்டச் செயலாளர் கிரைச மேரி ஆகியோர் உடனிருந்தனர்.

தலித் மக்களின் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம், நவம்பர் 12, 13 (2009)ஆகிய தேதி களில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகா, ஒட்டப் பிடாரம் பஞ்சாயத்திற்குட்பட்ட 1533 ஏக்கர் நிலங்களை சிப்காட் இரண் டாம் கட்டத்திற்காக கையகப்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலங்களில் 70 சதவீதம் தலித் மக்களுக்கு சொந்தமானவை. இவர்களுக்கு இது மட்டுமே வாழ்வாதாரம். அந்தப் பகுதியில் நன்கு விளையும் நிலங்களும், நிலத்தடி நீர்மட்டம் போதுமான அளவும் விவசாயம் மற்றும் குடிநீருக்கு லாயக்கான நிலத்தடி நீர் உள்ள பகுதியும் இதுவே. இந்த நிலங்களின் சொந்தக்காரர்களுக்கு இதைத் தவிர வேறு வாய்ப்புகள் கிடையாது.

ஆனால் இந்த இடத்திலிருந்து அதிகபட்சமாக பத்து கிலோமீட்டர் தூரத்திலும், குறைந்தபட்சம் 4 கிலோ மீட்டர் தூரத்திலும் வனத்துறைக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது. இதில் அபூர்வ தாவரங்களோ, விலங்கினங்களோ கிடையாது. வேறு பெரிய மரங்களும் கிடையாது. வகைப்படுத்துதலில் மட்டுமே அது வனப்பகுதியாக உள்ளது. இதுதவிர அரசு தரிசு நிலங்களும் உள்ளன.

எனவே, மேற்கண்ட 1533 ஏக்கர் அளவுள்ள அந்த இடம் கையகப்படுத்தப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே ஒட்டப்பிடாரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் சிப்காட் வளாகத்திற்காக தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும்.