வியாழன், 11 பிப்ரவரி, 2010

ஒன்றுபடுத்தியதும் வென்று காட்டியதும் மார்க்சிஸ்ட் கட்சிதான்! - அருந்ததியர் இயக்க தலைவர்கள் புகழாரம்

அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு கோரி 25 ஆண்டுகாலம் போராடினாலும் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போராட்டம்தான் வெற்றியைத் தந்தது. பல்வேறு அருந்ததியர் இயக்கங்களை ஒன்றுபடுத்திப் போராடியதும், கோரிக்கையை வென்று காட்டியதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் என்று அருந்ததியர் அமைப்புகளின் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.

பல்வேறு அருந்ததியர் அமைப்புகளின் சார்பில் கோவையில் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில், அருந்ததியர் இயக்கங்களின் தலைவர்கள் பேசியதாவது:

ஆதித்தமிழர் சனநாயகப் பேரவையின்
மாநில அமைப்பாளர் அ.சு.பவுத்தன் :
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல, இன்று அருந்ததியர் மக்கள் எழுச்சி கொண்டு வருகிறார்கள். பல்வேறு அரசியல் இயக்கங்கள் ஓட்டைப்பெற மட்டுமே அருந்ததியர் மக்களைப் பயன்படுத்தி வந்தபோது மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே உண்மையான அக்கறையுடன் போராடியது. குழுக்களாகப் போராடிக்கொண்டிருந்த எங்களை ஒரே அரங்கத்தில் அமர்த்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். 1989-ல் வன்னியர் சமூகம் 105 சாதிகளை ஒன்றுதிரட்டி 27 சதவிகித பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்காக போராடியது. ஆனால் அருந்ததியர் இடஒதுக்கீட்டை தலித் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பள்ளர், பறையர் அமைப்புகளே எதிர்ப்பதுதான் வேதனையானது.

ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின்
மாநில அமைப்பாளர் கோவை ரவிக்குமார்:
கடைநிலைச் சாதியினரை விடுவிப்பதே முதல்பணி என்று போராடிய மார்க்சிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவிக்கிறோம். கையால் மலம் அள்ளும் மனிதாபிமானமற்ற சமுதாயக் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஒரு மாமனிதர் விரும்பி னார். அதற்குத் தடைவிதித்த முதல் மாநிலம் மேற்குவங்கம். அந்த மாமனிதர் ஜோதிபாசு. அவருக்கு எங்கள் வீரவணக்கத்தை தெரிவிக்கிறோம். சிலநாட்களுக்கு முன்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது, ஆண்டானுக்கு அடிமைகள் எடுத்த விழா. இந்த விழா தனது சகதோழனை தோளில் தட்டிப் பாராட்டுவது.

அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின்
மாநில அமைப்பாளர் கு.ஜக்கையன்:
உள்ஒதுக்கீடு அறிவித்தவுடன் தோழர் சம்பத்திடம் பாராட்டுவிழா நடத்துகிறோம் என்று அனுமதி கேட்டேன். அப்படி ஒரு விளம்பரம் தேடும் வேலை வேண்டாம் என்றார். ஆனால் தமிழக முதல்வர் தன்னிடம்தானே கோரிக்கை வைத்து நிறைவேற்றியதாகச் சொன்னார். எனவே உண்மையை ஊருக்குச் சொல்லவே இந்த விழா. சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பென்சன் வழங்கப்பட்டபோது என்.சங்கரய்யா, நல்லகண்ணு போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் வாங்க மறுத்தனர். பென்சனுக்காகவா போராடினோம் என்று மார்தட்டிய பாரம்பரியத்தைக் கொண்டது கம்யூனிஸ்ட் இயக்கம். உள் இடஒதுக்கீடு கேட்டு நடந்த போராட்டத்தில் திண்டுக்கல் மறியலில் பங்கேற்று ஆளும் அரசுக்கு நெருக்கடி தந்தவர் தோழர் என்.வரதராஜன்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் இளைஞர்களை ஆகர்ஷித்த பகத்சிங்கிடம் கடைசி ஆசை என்னவென்று கேட்டார் கள். அதற்கு பகத்சிங், “சிறையில் பணிபுரியும் பேபி என்னும் பெண்மணி கையால் இரண்டு துண்டு ரொட்டி வேண்டும்,” என்று கேட்டார். சிறை முழுவதும் தேடிவிட்டு அப்படி ஒரு பெண் இல்லை என்று தெரிவித்தனர். அதற்கு பகத்சிங் கூறினார்: “கைதிகளின் கழிவறைகளில் மலம் அள்ளும் பணி செய்கிறார் பேபி,” என்று. அவர் இந்நாட்டின் உண்மையான புரட்சித்தலைவர் ஆவார். காந்தி தனக்கு அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் துப்புரவுப்பணியாளனாகப் பிறக்க வேண்டும் என்று கூறினார். இதனை அம்பேத்கரிடம் சொன்னபோது, “அடுத்த பிறவியும் இருக்க வேண்டும், அப்போதும் அவர்கள் துப்புரவுப்பணியைச் செய்து கொண்டிருக்க வேண்டும் என்று காந்தி விரும்புகிறாரோ?’’ என்னவோ என்றார். இன்று சிலர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை நீக்க வேண்டும் என்கின்றனர். அது அவர்களால் முடியாது. முதுகுளத்தூர் கலவரத்தில் உண்மை நிலையை வெளியுலகிற்குச் சொன்ன தினகரன் எனும் செய்தியாளர் தேவர் சாதியைச் சேர்ந்தவர்தான். தலித் மக்களுக்காகப் போராடி வீழ்ந்த திருப்பூர் இடுவாயைச் சேர்ந்த சிபிஎம் தோழர் ரத்தினசாமி, கவுண்டர் சாதிதான். தலித் மக்களின் விடுதலை என்பது முற்போக்கு எண்ணம் கொண்ட ஜனநாயக முற்போக்கு எண்ணம் கொண்டோர் இணையும்போதுதான் சாத்தியப்படும்.

அருந்ததியர் மக்கள் முன்னேற்றக்கழக
மேற்கு மண்டலச் செயலாளர் ராதாமணி:
எதுவுமேயில்லை என்று ஒதுக்கப்பட்டோருக்கு உதவுவது மார்க்சிஸ்ட் கட்சிதான். சேரிகளை மாற்றாத திராவிடம்தான் இதுவரை ஆண்டு வருகிறது. எனவே சமூக அடிமைத்தனத்தை மாற்ற வேண்டும் என்று போராடி வரும் மார்க்சிஸ்ட் கட்சி யைப் பாராட்டுவதில் பேரானந்தப்படுகிறோம்.

தலித் விடுதலைக்கட்சியின் மாநிலப்
பொதுச்செயலாளர் செங்கோட்டையன்:
இன்றைக்கு துணை முதல்வர் வருகைக்காக கருமத்தம்பட்டி முதல் கோவை வரை போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். அதனால் என்னால் சரியான நேரத்திற்கு வர இயலவில்லை. 1964 முதல் மார்க்சிஸ்ட் கட்சியின் பி.எஸ்.(பி.சம்பத்)போன்ற தோழர்கள் சேரி மக்களிடம் இறங்கிப்பணி செய்து வருகிறார்கள். அப்படிச் செய்த இடங்களில் எல்லாம் இன்று கம்யூனிஸ்டுகளுக்குப் பேராதரவு இருக்கிறது. சாதியத்தை வேரறுக்கும் சக்தி மார்க்சியத்திற்கே உண்டு. எனவே இடதுசாரிகளுடன் இணைந்து நின்று சமூகக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்.

பாராட்டு விழாவில் மக்கள் முன்னேற்ற முன்னணி பொதுச்செயலாளர் பால்ராசு, தந்தை பெரியார் - டாக்டர் அம்பேத்கர் மக் கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் எம்.ஆர்.கிருஷ்ணன், அருந்ததியர் மனித உரிமை அமைப்பின் மாநில அமைப்பாளர் ஆர்.ஆர். கருப்புச்சாமி, வீர அருந்ததியர் பேரவை பொதுச்செயலாளர் ஓ.ரங்கசாமி, அருந்ததியர் விடுதலை முன்னணி நிறுவனர் என்.டி.ஆர். ஜெகஜீவன்ராம், ஜனநாயக மக்கள் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் கோ.சென்னியப்பன், தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்க மாநிலப் பொதுச்செயலாளர் வி.பி.பன்னீர்செல்வம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட் டோர் உரையாற்றினர்.

மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த அருந்ததிய மக்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாராட்டுவிழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

“அருந்ததியர் விடுதலை என்பது உழைக்கும் மக்களின் விடுதலையுடன் இணைந்ததே” - என்.வரதராஜன் பேச்சு

சமூகத்தின் அடித்தளத்தில் அடக்கப்பட்டிருக்கும் அருந்ததியர் மக்களின் விடுதலை என்பது உழைக்கும் மக்களின் விடு தலையோடு இணைந்ததே என கோவையில் அருந்ததிய அமைப்புகளின் சார்பில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் என்.வரதராஜன் பேசினார்.

கோவை புதுசித்தாபுதூரில் ஞாயிறன்று (24.01.2010) நடைபெற்ற பாராட்டுவிழாக் கூட்டத்திற்கு வழக்கறிஞர் வெண்மணி தலைமை வகித் தார். விழாவில் ஏற்புரையாற்றிய என்.வரதராஜன் மேலும் பேசியதாவது:-

உலக சமுதாயத்தையே மாற்றும் ஆற்றல்மிக்க- மாமனிதர் மார்க்சின் அற்புதமான தத்துவத்தைக் கொண்டது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மார்க்ஸ் தனது தத்துவத்தை விளக்கும்போது ‘தந்தை, தாய் எனும் உரிமை பாராட்டி தனது குழந்தையைக் கூட சுரண்ட மார்க்சியம் அனுமதிக்காது’ என்றார். அதனடிப்படையில் நாம் சுரண்டலுக்கு எதிராக வீரம் செறிந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம்.

நமது கிராமப்புறங்கள் இன்று அழிந்து போன நந்தவனங்களாய் காட்சி தருகின்றன. வங்கிகளில் கடன் பெற முடியாததால் கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கிச் சீரழிகிறார்கள். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் விவசாயிகளுக்கு 4 சதவிகித வட்டியில் கடன் வழங்க சிபாரிசு செய்தார். ஆனால் ஆள்வோர் அதை அமலாக்கவில்லை.

“தலித் மக்களின் விடுதலை என்பது அருந்ததியரின் விடுதலையோடு இணைந்தது. இன்று கோவையில்கூட என்னைச் சந்தித்த அருந்ததிய இளைஞர்கள், தங்களுக்கு சலவை செய்யவும், முடிவெட்டவும் மறுக்கப்படுவதாக தெரிவித்தனர். “பெரியார் பிறந்த மண்ணில் இன்னும் தீண்டாமையோ, ஒடுக்குமுறைகளோ குறையவில்லையே. அதனைப் போக்க 5 முறை முதல்வர் ஆன கருணாநிதி ஏதேனும் செய்தாரா? கடுமையான கிளர்ச்சிகளுக்குப் பிறகு பாதாளச் சாக்கடை அடைப்பை நீக்க சென்னையில் மட்டும் இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதையே 50 நகரங்களுக்கும் விரிவுபடுத்து, சுடுகாட்டில் பிணம் புதைக்கும், எரிக்கும் வேலைகளைச் செய்யும் மக்களை மயான உதவியாளராக்கி அரசு ஊழியராக அறிவித்திட வேண்டும்; கையால் மலம் அள்ளும் கொடுமைக்கு முற்றுப்புள்ளிவை, தரிசு நில விநியோகத்தினை அருந்ததிய மக்களுக்கு வழங்கு என்று அருந்ததிய அமைப்புகளை இணைத்துக்கொண்டு கடும் போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நடத்தும். நீண்ட நெடிய போராட்டங்களால் அமலான மூன்று சதவிகித உள்ஒதுக்கீடு கூட முழுமையாக அமலாகவில்லை அதனை உயர்நீதிமன்றம் சென்று போராடிப் பெறவேண்டிய நிலை உள்ளது.

தீண்டாமை- வன்கொடுமைக்கு தீயிடும் போராட்டத்தில் அருந்ததியர்கள் முதல் படியில் நிற்க வேண்டும். அதற்கு மார்க்சிஸ்ட் கட்சி துணைநிற்கும். நாம் ஒன்றிணைந்து வீறுகொண்டு முன்னேறுவோம். இவ்வாறு என்.வரதராஜன் பேசினார்.

தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் இணைத்திடுக!- திருச்சியில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தலித் கிறிஸ்தவர்களைத் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருச்சி ரயில்வே ஜங்சன் ரவுண்டானா அருகில் திங்களன்று (25.01.2010) காலை எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சிராப்பள்ளி மாவட்டச் செயலாளர் எஸ்.ஸ்ரீதர் தலைமை வகித்தார் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் எம்.ஜெயசீலன் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், ஆயர் பேரவையின் எஸ்.சி., எஸ்.டி கமிஷன் மாநிலச் செயலாளர் இசட்.தேவ சகாயராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

டி.கே.ரங்கராஜன் எம்.பி. பேசுகையில், மத்திய அரசால் அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை வந்தும் கூட அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை; 60 ஆண்டுகளாக தலித் கிறிஸ்தவர்கள் தாழ்த்தப்பட் டோர் பட்டியலில் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றனர்; இவர்களை பிற்படுத்தப்பட்டவர்களும் ஏற்றுக்கொள்வதில்லை; தாழ்த்தப்பட்டவர்களும் ஏற்றுக் கொள்வதில்லை; இந்நிலையில், தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களுடன் இணைந்து போராடும் இதற்கு அனைத்துப்பகுதி மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். முடிவில் மாநகரச் செயலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ்.இந்துராஜ், சி.மாசிலாமணி, எஸ்.சந்திரன், ஆர்.ராஜா, வி.வி.கிருஷ்ணமூர்த்தி, கே.சி.பாண்டியன், கே.சிவராஜ், வி.சிதம்பரம், எஸ்.ரங்கராஜன், ஏ.பழனிச்சாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் எம்.அண்ணாதுரை நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தலித் கிறிஸ்தவர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி தூத்துக்குடி மாவட்டத்தில் அமைப்பு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தூத்துக்குடி மாவட்ட அமைப்புக் கூட்டம், தூத்துக்குடியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.ரசல் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கனகராஜ் வாழ்த்துரை வழங்கினார். 70 பேர் கொண்ட அமைப்புக்குழு, கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.இசக்கிமுத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

கழுகுமலை வேலாயுதபுரம் கிராமத்தில் இலவச டி.வி. மறுக்கப்பட்டுள்ள 13 அருந்ததியர் குடும்பங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக இலவச டி.வி. வழங்க வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் தீண்டாமை நிலவும் கிராமங்களை கண்டறிந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அலட்சியம் காட்டும்பட்சத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம் நடத்தும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில அமைப்பாளர் பி.சம்பத் பேசுகையில், இரட்டை டம்ளர், சலூன்களில் இரண்டுசேர், சலவையகத்தில் இரண்டு பீரோ, கோயிலில் நுழைய அனுமதி மறுப்பு, பொது மயானப் பாதை போன்ற பல பிரச்சனைகள் மாவட்டத்தில் நிலவும் நிலையில், அவற்றுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவோம் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அருந்ததிய அமைப்புக்கள் நடத்திய பாராட்டு விழா

சமுதாயத்தின் அடித்தட்டில் அழுந்திக் கிடக்கும் அருந்ததியர் மக்களுக்காக போராட்டக்களம் கண்டு 3 சதவிகித உள்ஒதுக்கீட்டை வென்றெடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, அருந்ததியர் அமைப்புகள் உணர்வுப்பூர்வமாக பாராட்டு விழா நடத்தினர்.

இந்த விழாவில் கண்களில் நம்பிக்கை ஒளியோடு பல்லாயிரக்கணக்கான அருந்ததியர் மக்கள் குடும்பம், குடும்பமாகக் கலந்து கொண்டனர்.

தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அருந்ததியர் அமைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாகப் போராடி வந்தன. இந்நிலையில் அந்த மக்களின் கோரிக்கையை வென்றெடுப்பதற்காக தோளோடு தோள்சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்லாயிரக்கணக்கான மக்களை அணி திரட்டி போராட்டக்களம் கண்டது. இதன் விளைவாக கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து 3 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது.

இதையடுத்து, தங்கள் வாழ்வாதாரக் கோரிக்கையை போராடி வென்றெடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாராட்டு விழா நடத்துவதென அருந் ததியர் அமைப்புகள் முடிவு செய்தன.

இதனடிப்படையில் கோவை காந்திபுரம் புது சித்தாபுதூரில் ஞாயிறன்று இந்த விழா நடந்தது. இதில் எழுத்தாளர் பிரபஞ்சன், அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் மாநில அமைப்பாளர் கு.ஜக்கையன், ஆதித்தமிழர் விடுதலை முன்னணி மாநில அமைப்பாளர் இரவிக்குமார், ஆதித்தமிழர் சனநாயகப் பேரவை மாநில அமைப்பாளர் அ.சு.பவுத்தன், மக்கள் முன்னேற்ற முன்னணி பொதுச் செயலாளர் பால்ராசு, அருந்ததியர் மக்கள் முன்னேற்றக் கழக மேற்கு மண்டலப் பொறுப்பாளர் ராதாமணி, தலித் விடுதலைக் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இரா.மூர்த்தி, தந்தை பெரியார் டாக்டர் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் நீலகிரி எம்.ஆர்.கிருஷ்ணன், அருந்ததியர் மனித உரிமை அமைப்பின் மாநில அமைப்பாளர் ஆர்.ஆர்.கருப்புச்சாமி, வீர அருந்ததியர் பேரவைப் பொதுச்செயலாளர் ஓ.ரங்கசாமி, அருந்ததியர் விடுதலை முன்னணி நிறுவனர் என்.டி.ஆர்.ஜெகஜீவன்ராம், ஜனநாயக மக்கள் இயக்கத் தலைவர் கோ.சென்னியப்பன், தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்க மாநிலப் பொதுச்செயலாளர் வி.பி.மணி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பேசினர்.

விழாவில் சத்தியமங்கலம் சாக்கிய கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் ஏற்புரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளருமான பி.சம்பத், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் பேசினர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.தங்கவேல், என்.சீனிவாசன், மாவட்டச் செயலாளர்கள் யு.கே.வெள்ளிங்கிரி, கே.காமராஜ், ப.மாரிமுத்து, எம்.ராஜகோபாலன், ஏ.ரங்கசாமி, ஆர்.பத்ரி, மாநிலக்குழு உறுப்பினர் கே.சி.கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பங்கேற்ற அருந்ததியர் அமைப்பினர் தங்கள் கொடிகளை ஏந்தி உற்சாகமாக வந்திருந்தனர்.