செவ்வாய், 5 ஜனவரி, 2010

சாதியக் கொடுமைகளை முறியடிக்க முற்போக்கு சக்திகள் இணைந்து போராட வேண்டும் - என்.வரதராஜன் அழைப்பு


நாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் கடந்த பின்னரும் சாதியக் கொடுமைகள் ஆழமாகிக் கொண்டிருக்கின்றன; அவற்றை எதிர்கொண்டு முறியடிக்க முற்போக்கு சக்திகள் கைகோர்த்துப் போராட வேண்டியுள்ளது என்று கோவையில் என். வரதராஜன் கூறினார்.

தந்தை பெரியாரின் 36 வது நினைவுதினத்தை யொட்டி வியாழனன்று நடந்த நிகழ்ச்சியில் கோவை காந்திபுரம் நகரப்பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் சாதியக் கொடுமைகளுக்கு எதிராக கடும் போராட்டம் நடத்தியவர் பெரியார். தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து வைக்கம் வரை சென்று போராடினார். பெண்ணடிமைத் தனத்திற்கு எதிராக அழுத்தமான கருத்துக்களை முன்வைத்தவர்; சமத்துவத்தை வலியுறுத்தியவர். இந்திய நாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் கடந்த பின்னரும் இத்தகைய கொடுமைகள் இன்னும் ஆழமாகிக் கொண்டிருக்கிறது. இன்று அக்கொடுமைகளை எதிர்கொண்டு முறியடிக்க ஜனநாயக முற்போக்கு சக்திகள் கைகோர்த்துப் போராட வேண்டியுள்ளது. அந்த உணர்வின் அடையாளமாக இன்று பெரியார் நினைவினை கடைப்பிடிக்கிறோம், என்றார்.

நிகழ்ச்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் யு.கே.வெள்ளிங்கிரி, மாநிலக் குழு உறுப்பினர் கே.சி.கருணாகரன், தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் சி.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கருப் பையா, சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகிகள் வி.பெருமாள், வழக்கறிஞர் வெண்மணி, வி.சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

வெண்மணித் தியாகிகள் புகழ் நிலைக்கட்டும் ! - அ.சவுந்தரராசன்

1968 டிசம்பர் 25. எத்தனை ஆண்டுகளாயினும் எண்ணுந்தோறும் நெஞ்சம் கொதிக்கும் வெங்கொடுமை நடந்த நாள். அன்றுதான் கீழ் வெண்மணி என்ற கிராமத்தில் ஒரு குடிசை வெந்து தணிந்தது. அதனுள்ளே இருந்த 44 மனித உயிர்கள் உடல்கருகி செத்து மடிந்தன. ஆண்டைகளின் அடியாள் கூட்டம் போலீஸ் துணையோடு குடிசையைக் கொளுத்திக் கொல்லிக்கட்டைகளாய் கோரக் கூத்தாடி குதித்தது. தமிழகம் வெட்கித் தலைகுனிந்து வெதும்பி நின்றது.

ஆண்டவன் அருளிய வேதங்களின் வழியாய், ‘புனிதம்’ பெற்று வந்த வருணாசிரமத்தின் கடைநிலை மக்கள் தீண்டவும் தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டார்கள். அந்த மக்கள் தஞ்சைத்தரணியில் உழவுப் பணி செய்யும் கூலிக்கூட்டத்தவர்கள். எத்தனையோ தலைமுறை முடிந்தபிறகும் முடிவுறாத இந்தத் தீண்டாமைத் தீமைக்கு எதிரான கலகக்கொடியை கம்யூனிஸ்டுகள் உயர்த்தினார்கள்.

அடிமைத்தனத்தை உடன்பிறப்பாய் கருதி அதற்கு உடன்பட உதிரத்தில் ஏற்றப்பட்ட அந்த மக்களுக்கு, செங்கொடி புதுப்பார்வை யைத் தந்தது. பிறப்பால் ஏற்றத்தாழ்வும், இழிவும் கற்பிப்பதைக் காரித்துப்பச் சொன்னது செங்கொடி. அந்த மக்களை அணிதிரட்டும் அரும்பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பி. சீனிவாசராவ் என்ற செஞ்சட்டைப் போராளி, “ உன்னை அடித்தால் திருப்பி அடி” என்று அவர்களது அடிமைத்தன உதிரத்தை எதிர்திசையில் பாயவைத்தார். காலில் செருப்பணிவது, தோளில் துண்டு போடுவது என்று ஒவ்வொரு தீண்டாமை வடிவத்திற்கும் முடிவுரை எழுதப்பட்டது.

ஒன்றுபட்ட உறுதிகொண்ட வலிய படையாய் அந்த மக்களை மாற்றிட விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டது.

அந்த மக்களை அடக்கி, ஒடுக்கி, சாட்டையை சொடுக்கி இன்பந்துய்த்து வந்த மிராசுக்கூட்டத்திற்கும், ஜாதி வெறியர்களுக்கும் இந்த பரிணாம வளர்ச்சி வயிற்றைக் கலக்கியது. இந்த மக்களுக்கும், சங்கத்திற்கும், செங்கொடிக்கும் எதிராய் கொடிய வன்முறைகள் ஏவிவிடப்பட்டன. எண்ணற்ற தோழர்கள் காயம்பட்டார்கள், களப்பலியானார்கள். எனினும் இழப்பதற்கு இழிவைத்தவிர வேறேதுமற்ற அந்த இரும்புநிறக்கூட்டம் உருக்கு நிகர் உறுதியைக் காட்டியது.

உழுபவனுக்கு நிலம் வேண்டும், உழைப்பதற்கு நியாயக்கூலி வேண்டும், பண்ணையடிமை முறை மாற வேண்டும் என முழங்கிய இந்த மக்களின் வீராவேசம் தஞ்சையை உலுக்கியது.

எப்படியும் இந்த மக்களை ஒடுக்கியே தீருவது என்று கங்கணங்கட்டிக் கொண்ட மிராசுகளின் கூட்டம் தங்களுக்கு என நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டது.

1968ல் கூலி உயர்வுக்கான போராட்டம் சூடுபிடித்த போது இறுதியில், நாள் கூலியாக அரைப்படி நெல் அதிகம் வேண்டும் என வேண்டப்பட்டது. அரைப்படி என்ன, 6 படி கூட உயர்வு தரத்தயார், ஆனால் செங்கொடியை இறக்கிவிட்டு, எமது சங்கத்தின் மஞ்சள் கொடிகளை ஊர்களில் பறக்கவிட வேண்டும் என்று மிராசுகள் கொக்கரித்தார்கள். கூலி உயர்வைக் கொட்டிக்கொடுத்தாலும் எங்களின் செங்கொடியை தாழ்த்தும் பேச்சிற்கே இடமில்லை என்று வியர்வைக்கூட்டம் நச்சென்று பதிலுரைத்தது.

அந்த வகையான ஒரு கிராமம்தான் கீழ் வெண்மணி. மிராசுகளின் தலைவன் இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் பண்ணைக் கருகில் இருந்த தலித் குடியிருப்பு.

1968 டிசம்பர் 25 இரவு அடியாள் கூட்டம் எதிர்பாராத தருணத்தில் திடீர்தாக்குதலை நடத்தி 44 மனித உயிர்களை உயிரோடு சாம்பலாக்கியது.

ஆண்டாண்டு காலமாய் அடங்கிக்கிடந்தவர்கள் உரிமை வேட்கை கொண்டால், ஆண்டைகள் கூட்டமும், அவர் சார்பாய் ஆளுங் கூட்டமும் என்னவெல்லாம் ஊழிக் கூத்தாடுவார்கள் என்பதற்கு வெண்மணியில் வெந்து மடிந்த மக்கள் சான்றாக இருக்கிறார்கள்...

எத்தனைக் கொடுமைகள் இழைத்தபோதும், கண்மணிகள் பலர் களப்பலியான போதும் செங்கொடியேந்திய வீரப்புதல்வர்களின் உறுதிகுலையாது என்பதற்கும் அந்த வெண்மணிதான் சான்று. இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் அழிந்தார்களே தவிர, உரிமைப்போராளிகள் உறுதிபட முன்னேறியே வருகின்றனர்.

தலித் மக்களை ஒரு தலித் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்று, அந்த மக்களுக்கு அரசியலிலும் தனிச்சேரி அமைக்கும் முயற்சி நடக்கிறது. ஜாதி அடையாளத்தோடு தலையெடுக்கும் அமைப்புகளுக்கு உண்மை பலம் வராது. சமூக ஒடுக்குமுறைகளை எதிர்க்கும் ஜனநாயக எண்ணங்கொண்ட எல்லா மக்களையும் இணைத்துத்தான் தீண்டாமை போன்ற கொடுமைகளை ஒழிக்க முடி யும். தஞ்சையில் தலித் மக்களை எழுச்சியூட்டி எதிர்வினையாற்றச் செய்தவர்கள் பிறப்பால் தலித்துகள் மட்டும் அல்ல. நிலம்,கூலி, மரியாதை என அங்கே சாதிக்கப்பட்டவை வேறு எங்கும் சாதிக்கப்படவும் இல்லை.


உழைப்பவர் யாவரும் ஓர் குலம் என்று முழங்கி தமிழகத் தொழிலாளி வர்க்கம் கீழ் வெண்மணி தியாக திருப்பூமியில் ஒரு கம்பீரமான நினைவாலயத்தை எழுப்பி வருகிறது. முற்றிலும் கருங்கற்களால் இந்த நினைவாலயம் எழுப்பப்பட்டு வருகிறது. இந்தக் கட்டிடத்தில் ஒரு செங்கல்கூட இருக்காது.

இந்த நினைவாலயத்தை எழுப்பத் தொடங்கிய போது செய்யப்பட்ட மண் பரிசோதனை எங்களைத் துணுக்குற செய்தது. லட்சக்கணக்கான ஆண்டுகளாக ஆற்று நீர்பாய்ந்த இந்த பூமியில் 55 அடி ஆழம் வரை மண் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கிறது. எனவே 55 அடி ஆழத்திலிருந்து 110 கான்கிரீட் தூண்களை தரைக்குக்கொண்டுவந்து அதன் மீதுதான் நமது நினைவாலயம் எழுகிறது. இதுவரை மண்ணுக்குக் கீழேயே எமது திட்டத்தில் பாதிக்கு மேல் செலவாகிவிட்டது. உயிர் கொடுத்து உரிமைப் பயிர் விளைவித்த அந்த செம்புலத்தில் நாம் எண்ணியதை எண் ணியபடி செய்து முடித்தாக வேண்டுமல்லவா? இதற்குப் பணம் ஒரு தடையாகலாமோ?

சிஐடியு சங்கங்களும், சம்மேளனங்களும், அரசு ஊழியர் சங்கமும், எல்ஐசி, பிஎஸ்என்எல், ஆசிரியர், வங்கி போன்ற அரங்கங்களின் தொழிற்சங்க அமைப்புகளும் அளித்த நன்கொடையில் வேலைகள் நடக்கின்றன. மேலும் பணம் வேண்டும் எனக்கூறியவுடன் அரசுப்போக்குவரத்து சம்மேளனம் கல்தானம் என்று ரூ. 6 லட்சத்தை கோட்டாவிற்கு மேல் அள்ளித்தந்தது. தருமபுரி, திருவண்ணாமலை போன்ற சிறிய மாவட்டங்கள் கூட இலக்கைத்தாண்டி தந்துள்ளன. திருப்பூரில் ஆர்.ஈஸ்வரன் என்ற தோழர் தனது பணிக்கொடை பணமான ரூ. 50 ஆயிரத்தை தந்து மகிழ்ந்தார். இப்படி தனிநபர் பட்டியலும் மிகப் பெரியது.

ரூ. 5000 வழங்குவோரின் பெயர் வெண்மணியில் கல்வெட்டில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்ட பிறகு பலர் பணம் அனுப்பி வருகின்றனர். ஒவ்வொரு சங்கமும், போக்குவரத்தில் ஒவ்வொரு பணிமனையும், மின்சாரத்தில் ஒவ்வொரு கிளையும் ரூ. 5000 செலுத்தவும், கல்வெட்டில் இடம்பெறவும் முடிவு செய்துள்ளன.

திருப்பூரைச் சேர்ந்த ஜி.எம்.லோகநாதன், ஆர்.ஆறுமுகம் ஆகிய இரண்டு தோழர்கள் மட்டும் முகப்புக் கதவைத் தங்களின் சொந்த செலவில் செய்து தருகிறார்கள். இந்த முகப்புக் கதவின் செலவு மட்டும் ரூ. 2 லட்சம். இந்த வர்க்க உணர்வை எந்த வார்த்தைகளில் பாராட்டுவது? இதைப்போலவே இதர ஜன்னல்கள், கதவுகளைத் தர பலர் முன்வர வேண்டும்.

2010, மே 30 சிஐடியுவின் 40-வது அமைப்பு தினம் ஆகும். இந்த 40-வது அமைப்பு தினத்தில் வெண்மணி நினைவாலய கட்டிடத்தின் திறப்பு விழாவை தமிழகத் தொழிலாளர்களும், விவசாயிகளும், இடதுசாரி போராளிகளும் இணைந்து நடத்தப்போகிறோம்.

வெண்மணி நினைவாலய மலர் ஒன்று வெளியிடப்படுகிறது. அதற்கான விளம்பரங்களை நிறைவு செய்ய ஒவ்வொருவரும் உதவ வேண்டும்.

இந்த நினைவாலயத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பல நாட்கள் தங்கி பயிற்சி பெறும் முகாம்கள் நடத்திட, இங்கே தமிழக உழைப்பாளி வர்க்கம் சந்தித்த இதர போர்க்களங்களைப் பற்றி ஆய்விற்கான ஏற்பாடுகளைச் செய்திட,

தீண்டாமைக் கொடுமைகளின் கோர வடிவங்களை இந்தத் தலைமுறை அறியத்தக்க சித்திரக்கூடம் உருவாக்கிட,

உழைக்கும் வர்க்க கலைப்பட்டறைகளின் களமாக இதை மாற்றிட,

நினைவாலயப்பகுதி முழுவதும் சோலையாகவும், தோப்பாகவும் பொலிவு பெற்றிட,

மக்கள் வந்து செல்லும் தலமாய் தனிப்புகழ் எய்திட,

பெரும் கட்டமைப்பு வசதிகளை இங்கே உருவாக்க வேண்டியுள்ளது.

தொழிலாளர் - விவசாயிகளின் ஒற்றுமைத் தேர் வர்க்கப் போர் களத்தில் முன்னேறட்டும்!

இந்த ஆண்டு வெண்மணித் தியாகிகளின் நினைவை நிதி வழங்கிப் போற்றிடுவோம்! கம்பீரமாய் நினைவாலயம் கட்டி முடித்திடுவோம்! வெண்மணித் தியாகிகள் புகழ் நின்று நிலைக்கட்டும்!

கட்டுரையாளர் : பொதுச்செயலாளர்,

சிஐடியு, தமிழ்நாடு மாநிலக்குழு

அலட்சியம் செய்யப்படும் ஆதிதிராவிட மாணவர்கள் - தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆய்வில் அம்பலம்


ஆலந்தூர் நகராட்சிக்கு உட்பட்டது ஆதம்பாக்கம். இங்குள்ள அம்பேத்கர் சிலை அருகே உள்ளது திருவள்ளுவர் நடுநிலைப்பள்ளி. இந்த பள்ளி 1956ம் ஆண்டு நடராஜன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. கிராம நத்தம் ஊர்ப் புறம்போக்கில், சுமார் 10 கிரவுண்ட் பரப்பளவில் அமைந்துள்ளது. எனினும் முறையாக பராமரிக்கப்படாததால் பாழடைந்து கிடக்கிறது.

1200 மாணவர்கள், 32 ஆசிரியர்களுடன் செயல்பட்டு வந்த இந்தப் பள்ளியில் தற்போது 133 மாணவர்களும், 6 ஆசிரியர்களும் உள்ளனர். இவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் ஆதிதிராவிடர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பள்ளி தொடங்கப்பட்டது முதல் அரசு உதவிபெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. 20 வருடங்கள் வரை பள்ளியை பராமரித்து வந்த நடராஜன், 1977ம் ஆண்டு பெரம்பூரைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவருக்கு பள்ளி நிர்வாகத்தை மாற்றிக் கொடுத்தார். 15 வருடங்கள் பள்ளியை நடத்தி வந்த ஜார்ஜ் மறைந்தார். இதன்பின்னர் அந்த பள்ளி உதவி கல்வி அதிகாரியின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது.

இந்நிலையில் 1995-ம் ஆண்டு கே.பி.வித்யாதரன்-பழனிமுத்து ஆகியோர் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் பள்ளியை நடத்தும் உரிமையை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

“இந்த பள்ளியை தரம் உயர்த்த எந்த முயற்சியும் வித்யாதரன் மேற்கொள்ளவில்லை. 2004-ம் ஆண்டு பள்ளியில் கட்டிடம் கட்ட ஆலந்தூர் நகராட்சி 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. அதனை வித்யாதரன் ஏற்க மறுத்துவிட்டார்.

பள்ளியை மூடிவிட்டு அந்த இடத்தை விற்பதற்கு வித்யாதரன் மறைமுகமாக முயற்சி மேற்கொண்டார். அதற்காக சில கட்டிடங்களை புதிதாக கட்டப்போவதாக கூறி இடித்தனர். ஆனால் கட்டிடம் எதுவும் கட்டவில்லை. வேறு சில முறைகேடுகளிலும் வித்யாதரன் ஈடுபட்டார். அவர் மீது பொது மக்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து அதி காரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர் மீது அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க முயற்சித்தனர்.

இந்நிலையில், 2007 ஏப்ரல் 11-ம் தேதி பள்ளி நிர்வாகம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எத்திராஜனிடம் சென்றது. இவரும் பள்ளியை தரம் உயர்த்த எந்த முயற்சியும் எடுக்காத நிலைதான் உள்ளது என்று சிபிஎம் ஆலந்தூர் பகுதிச் செயலாளர் கே. பாலச்சந்தர் கூறினார்.


இந்தச்சூழ்நிலையில் அந்தப் பள்ளியை 22.12.2009 அன்று தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் பி.சம்பத் ஆய்வு செய்தார். இந்த பள்ளியை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை மனுவை, அவரிடம் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்களும், பொதுமக்களும் கொடுத்தனர்.

“எத்திராஜன் பொறுப்பேற்ற பிறகும் புதிதாக கட்டிடம் கட்டவில்லை. தற்போது உள்ள ஓடு போட்ட ஷெட்டுகளும் மழை பெய்தால் ஒழுகுகிறது. தலைமை ஆசிரியருக்கு கூட தனி அறை இல்லை. சத்துணவு சாப்பாடு செய்யவோ, அரிசி பருப்புகளை வைக்கவோ தனித்தனி அறைகள் கிடையாது. ஆசிரியர்கள் உட்கார ஊர் மக்கள் சார்பில் நாற்காலிகள் வாங்கி கொடுத்தோம்.

சிறு மழை பெய்தால் கூட பள்ளிக்குள் வெள்ளம் வந்துவிடும்; அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுகள் பள்ளிக்குள் வந்துவிடுகிறது. மழைக்காலங்களில் குட்டையாக காட்சி அளிக்கும் பள்ளிக்கூட மைதானத்திற்கு ஊர்மக்கள் சேர்ந்து, அவ்வப்போது மண் கொட்டி சிறிது மேடாக்கி வைத் திருக்கிறோம். பள்ளிக்கென்று ஒரு காவலாளியும் கிடையாது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு கையூட்டு பெற்றுக் கொண்டு புதிதாக இரண்டு ஆசிரியர்களை எத்திராஜன் நியமித்தார். அதனை மாவட்ட கல்வி அதிகாரி ஏற்கவில்லை. ஆகையால், பள்ளியில் உள்ள 6 ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்து தலா 5 ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்.

இந்த பள்ளியின் எல்லைக்கு உட்பட்டு 9 ஆயிரம் மக்களை கொண்ட 2371 குடும் பங்கள் உள்ளன. இவர்களில் குறைந்தது 2 ஆயிரம் பேராவது மாணவர்களாக இருப்பார்கள். ஆசிரியர்கள் நன்றாக கற்பித்தாலும், குடிதண்ணீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை என்று கூறி பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க மறுக்கிறார்கள்.

கடந்த 25 வருடமாகவே பள்ளி மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்ய அதிகாரிகள் வருகிறார்கள்; ஆய்வு செய்கிறார்கள். இந்த மாதம் 18ம் தேதி கூட ஆண்டு ஆய்வு நடந்தது. ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை. பள்ளி இருக்க இருக்க தரம் தாழ்ந்துகொண்டேதான் செல்கிறது.

இந்த பள்ளியை அரசு ஏற்க வேண்டுமென்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த இறையன்பு அப்போது பரிந்துரைத்தார். ஆனால் அரசு மெத்தனமாக உள்ளது. இந்த பள்ளி உருப்பட ஒரே தீர்வு அதை அரசு ஏற்க வேண்டும் என்பதுதான்.

பள்ளியைச் சூறையாட மறைமுக முயற்சிகள் நடைபெறுகிறது. அதிகாரிகளும் இவர்களுக்கு உடந்தையாக உள்ளனர். இதனை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

பின்னர் அவர்களிடம் பேசிய பி.சம்பத், இந்த பிரச்சனையை முன்னுரிமை கொடுத்து கவனிப்பதாவும், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், உறுதி அளித்தார்.

இந்த ஆய்வின்போது தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சிபிஎம் நிர்வாகிகள் இளம்வழுதி, ரங்கன், வாலிபர் சங்கத் தலைவர்கள் கே.ஏ.சந்தோஷ், அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஜனவரி 8-ம் தேதிக்கு வாச்சாத்தி வழக்கு ஒத்திவைப்பு

தருமபுரி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் வாச்சாத்தி வழக்கு வரும் ஜனவரி 8ம் தேதி குறுக்கு விசாரணை நடத்த ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 20, 21, ஆகிய தேதிகளில் நடைபெற்ற குறுக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட 18 பெண்களில் 9 பேர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை சாட்சியாக அளித்தனர். பின்னர் நவம்பர் 13 அன்று நடைபெற்ற குறுக்கு விசாரணையில் மீதமுள்ள 9 பெண்கள் சாட்சியமளித்தனர்.

பின்னர் இவ்வழக்கில் டிசம்பர் 23 அன்று குறுக்கு விசாரணை மாவட்ட நீதிபதி எஸ். குமரகுரு தலைமையில் நடை பெற்றது. அரசு தரப்பு சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் ஜெயபால், எதிர்தரப்பு வழக்கறிஞர் வெங்கடேசன் ஆகியோர் ஆஜராகினர். சிறைவார்டன் மா. லலிதாபாய் சாட்சியமளித்தார். அப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் தனக்கு நேர்ந்த கொடுமைகளை தன்னிடம் கூறியதாக கூறினார். பாதிக்கப்பட்ட பெண்கள் சிறை சூப்பிரண்ட்டிடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கூறியதாகவும் அவர் கூறினார்.

பின்னர் நீதிபதி இவ்வழக்கில், ஜனவரி 8 அன்று குறுக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டார். அன்று மாவட்ட வனக்காவல் அதிகாரி துரைசாமி சாட்சியமளிக்கவுள்ளார். இவ்வழக்கில் எதிர்தரப்பு வழக்கறிஞராக விஜயராகவன் குறுக்கு விசாரணை நடத்துகிறார்.

டிச.25 அன்று தமிழகம் முழுவதும் 31 மையங்களில் தீண்டாமைக்கு எதிராக நேரடி நடவடிக்கை வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் தகவல்

வெண்மணி தியாகிகள் நினைவு தினமான டிசம்பர்25 அன்று தீண்டாமைக்கு எதி ராக 31 இடங்களில் ஆலய நுழைவு உள்ளிட்ட நேரடி நடவடிக்கைகளில் ஈடு படப்போவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் அறிவித்தார்.

இது தொடர்பாக 23.12.09 அன்று சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது வருமாறு:

தமிழகத்தில் 7ஆயிரம் கிராமங்களில் தீண்டாமை கொடுமை நிலவுகிறது என்று அரசே ஒப்புக்கொண்டுள்ளது. ஆலயங்களுக்குள் செல்லத் தடை, திருவிழாவில் பங்கேற்கத் தடை, தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை முறை, பொதுப்பாதையில் நடக்கத் தடை, செருப் பணிந்து நடக்கத் தடை, குளத்தில் குளிக்கத் தடை, குடிநீர் எடுக்கத் தடை, பொதுக்கடையில் முடிவெட்டிக் கொள்ள தடை, சைக்கிளில் செல்லத் தடை, மயானப் பாதையில் செல்ல தடை, மயானத்திற்கு ஒதுக்கிய இடம் ஆக்கிரமிப்பு என எண்ணற்ற வடிவங்களில் தீண்டாமை நிலவுகிறது. நகரங்களில் கூட வாடகை வீடு பெறுவது இயலாததாக இருக்கிறது.

ஆகவே, மாநில அரசு தீண்டாமையை ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பொது நடவடிக்கைகளிலும் தலித் மக்களை அனுமதிக்க வேண்டும். வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் முழுமையாக அமலாக்க வேண்டும். சிறப்பு உட்கூறு திட்ட நிதியை முழுமையாக செலவிட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.

44 விவசாயத் தொழிலாளர்களான தலித் மக்கள் எரித்து கொல்லப்பட்ட வெண்மணி நினைவு நாளான டிசம்பர் 25 அன்று 21 இடங்களில் நேரடி நடவடிக்கையும், 10 இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டை ஈஸ்வரன்கோவில் ஆலய நுழைவு போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ் பாபுவும், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, கோவனூர் பகுதிகளில் பொதுக்குளத்தில் குளிக்கும் போராட்டத்திற்கு செயலாளர் எஸ்.கண்ணனும், திருப்பூர் வேலம்பாளையத்தில் மயானத்திற்கு பாதை கேட்டு நடைபெறும் போராட்டத்திற்கு பொருளாளர் எஸ்.முத்துக்கண்ணனும் தலைமை தாங்குகின்றனர்.

மதுரை ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், வடசென்னையில் எஸ்.கே. மகேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

ஆலய நுழைவு போராட்டம், மயான ஆக்கிரமிப்பை அகற்றுதல், செருப்பணிந்து செல்லுதல், பொதுக்குளத்தில் தண்ணீர் எடுத்தல், அம் பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது, பொதுக் கடையில் சென்று முடிவெட்ட கோருவது, கழிப்பிடத்திற்குள் செல்வது, மாநகராட்சி சமூக நலக்கூடத்தை திறந்து விடுதல் என போராட்டங்கள் நடைபெறுகின்றன.

ஈரோடு மாவட்டம் நசியனூர், தொகுப்பு வீடு கட்ட ஒதுக்கிய தொகையை திருப்பி அனுப்பிய பஞ்சாயத்து தலைவரை கண்டித்தும், சுடுகாடு ஆக்கிரமிப்பை எதிர்த்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணம் நடைபெறுகிறது.

இவ்வாறு எஸ்.கண்ணன் கூறினார்.

இச்செய்தியாளர் சந்திப்பின் போது மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.

வாலிபர் சங்கப் போராட்டத்தால் அருந்ததியருக்கு முடிவெட்டப்பட்டது


இராஜபாளையம் அருகே அருந்ததியர் மக் களுக்கு முடிதிருத்தம் செய்ய, சாதி ஆதிக்க வெறியர்கள் விதித்திருந்த தடை உடைக் கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின், புதனன்று முதன் முறையாக அருந்ததியருக்கு முடிதிருத்தம் செய்யப்பட் டது.

இராஜபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் அருந்ததியர் மக்களுக்கு முடிதிருத்தம் செய்ய சாதி ஆதிக்கவெறியர்கள் தடை விதித்திருந்தனர். இதை எதிர்த்து, அக்கிராமத்தில் நடைபெற்ற- ஊர்ப்பெரியவர்கள், இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில், வாலிபர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் என்.முத்துராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.சாமுவேல்ராஜ், கிழக்கு ஒன்றியச் செயலாளர் மாரியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன் றியச் செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், தீண்டாமை கொடுமைக்கு எதிராக போராட்டத்தில் ஈடு படுவது என்று முடிவு செய்யப்பட்டு, அதைத்தொடர்ந்து, முதற்கட்டமாக வட்டாட்சியர் காளிமுத்துவிடம் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் வருவாய்த் துறை அலுவலர் விசாரணை செய்ததில், அருந்ததியர் மக்களுக்கு முடிவெட்ட மறுப்பது உண்மைதான் என்று ஊர்ஜிதம் செய்யப்பட் டது.

ஆகவே, 21-12-2009 அன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் சவரத் தொழிலாளி தமிழரசன், வட்டாட்சியர், காவல்துறை ஆய்வாளர் கார்த்திகைசாமி, அருந்ததியர் மக்கள், வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்ற சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அதில் முடிதிருத்தும் தொழிலாளி தமிழரசன் அன்றைய தினமே அருந்த தியர்களுக்கு முடிதிருத்த எழுத்துப் பூர்வமாக சம்மதம் தெரிவித்தார்.

இந்நிலையில் தலித்மக்கள் முடிதிருத்தத்திற்காக காத்திருந்தபோது, ஆதிக்க சாதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர், சவரத் தொழிலாளி தமிழரசனுக்கு அதிக அளவில் மதுவை வாங்கிக் கொடுத்து, அவரை நிதானமற்ற நிலையில், தலித் மக்கள் முன்பாக நிறுத்தி, இனி எப்படி முடிவெட்டுறீங்கன்னு பாப்போம்டா... என ஆதிக்க வெறியோடு கூறிவிட்டு சென்றார்.

ஏற்கனவே, வேலுச்சாமி அன்று காலை தலித்மக்கள் குடியிருப்புப் பகுதிக்கு வந்து சாதியைச் சொல்லி திட்டியதோடு, புகார் மனுவைத் திரும்பப்பெற வேண்டும் என மிரட்டிச் சென்றுள்ளார்.

எனவே, போராட்டக் குழுவினர் வேலுச்சாமியை தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும், சமாதான உடன்பாட்டை மீறிய தமிழரசன் மீதும் தனித் தனியாக புகார் அளித்தனர்.

இதன்பின் தமிழரசன் இரவு 9 மணியளவில், காவல் நிலையத்தில் வைத்து முடிவெட்ட சம்மதம் தெரிவித்தார். அதன்படி முனியாண்டி என்ற அருந்ததியருக்கு முடிதிருத்தம் செய்தார். பல வருடங்களாக உரிமை மறுக்கப்பட்ட தலித் மக்களுக்கு வாலிபர் சங்கம் நடத்திய போராட்டம் மூலம் உரிமை கிடைத்ததால் அருந்ததியர் மக்கள் மகிழ்ந்தனர்.

வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எல்.முருகன், மாவட்டப் பொருளாளர் பி.பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் சசிக்குமார், ஜெயக்குமார், ஊர் நாட்டாமை கருப்பன், மார்க்சிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ஜி.கணேசன், சண்முகவேல், முனியாண்டி, அம்மமுத்து, மாரிமுத்து ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

சாதிய மனோபாவத்தில் காவல்துறை நெல்லை ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி புகார்


சாதிய உள்நோக்கத்துடன் 3 கிராம தலித் மக்கள் மீது தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவதைக் கண்டித்து, நெல்லையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரி டம் மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் ஜெயராமனிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் வீ.பழனி தலைமையில் மேலக்கரை, அழகநேரி, சத்திரம்புதுக்குளம் பகுதிகளை சேர்ந்த மக்கள் கொடுத்துள்ள அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது :

தச்சநல்லூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கிராமங்களான மேலக்கரை, அழகநேரி, சத்திரம்புதுக்குளம் ஆகிய கிராமங்களில் தலித் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சில குற்றச் சம்பவங்கள் குறித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது தச்சநல்லூர் போலீசார் சாதிய உணர்வோடு உள்நோக்கம் கொண்டும், தலித் மக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் ஜாமீனில் வெளியே வர முடியாத செக்ஷனில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நியாயம் வழங்க வேண்டும்

இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.கிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.தியாகராஜன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் க.ஸ்ரீராம், தி.சந்திரசேகரன் மற்றும் கு.பழனி, வண்ணமுத்து உள்பட ஏராளமானோர் மனு அளிப்பில் கலந்து கொண்டனர்.

-(22.12.2009 அன்று செய்தியானது)

நெறிக் குறவர்களுக்கு பட்டா வேண்டும் - ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் நெறிக்குறவர்களின் வசிப்பிடங்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மா.சந் திரசேகரனிடம் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது.

மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன், திருத்துறைப்பூண்டி நகரச் செயலாளர் எம்.பி.கே.பாண்டியன், நெறிக்குறவர் சமூக மாவட்ட அமைப்பாளர் நாகூரான் ஆகியோர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது :

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, இடும்பாவனம், நீடாமங்கலம், பெரும்பண்ணையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான நெறிக்குறவர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான நலவாரியமும் செயல்பட்டு வருகின்றது. ஆனாலும், இவர்களின் வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் கிடையாது.

மேலும், நீண்ட காலமாக மாவட்டத்தில் பரவலாக வசித்து வரும் இவர்களுக்கு இலவச மனையோ, மனைப்பட்டாவோ இன்றுவரை வழங்கப்படவில்லை. இம்மக்கள் இதுகுறித்து பலமுறை கோரிக்கைகள் எழுப்பியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

எனவே, இவர்களுக்கு குடிமனைப்பட்டா, தொழில்புரிந்திட கூடுதல் கடனுதவி போன்றவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்கிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் வலியுறுத்தப்பட்டது.

-(21.12.2009 அன்று செய்தியானது)

மதுரையில் சிபிஎம் தலைமையில் பழங்குடி மக்கள் போராட்டம்


மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் எல்.கே.பி. நகர் பகுதியில் காட்டுநாயக்கன், சோழகர், ஆதியன் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சாட்டையடித்தும், குறிசொல்லியும் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் குடும்ப அட்டை வேண்டி மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு ஓராண்டிற்கு முன்னர் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் விசாரணை நடத்தி அட்டை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால், ஓராண்டு காலமாகியும் ஒருவருக்குக் கூட அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல் சாதிச்சான்றிதழ் வழங்குவதிலும் மாவட்ட நிர்வாகம் மெத்தனமாக உள்ளது.

இதையடுத்து, குடும்ப அட்டை, சாதிச்சான்று வழங்கக்கோரி, சக்கி மங்கலம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், காட்டுநாயக்கன், சோழகர், ஆதியன் சமூக மக்கள் காலை 10.30 மணிக்கு பூம்பூம் மாடுகளுடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எனினும் காலை 11.45 மணி வரை கிராம நிர்வாக அலுவலகத்தை அதிகாரிகள் திறக்கவில்லை.

போராட்டம் குறித்து எல்லப்பன் என்பவர் கூறுகையில், சாதிச்சான்று தர கலெக்டர் மறுப்பதால், எங்கள் சமூக குழந்தைகள் படிப்பைத் தொடர முடியாமல் சாட்டையடித் தொழிலுக்கு செல்கின்றனர். குறிசொல்லி பிழைப்பு நடத்துகின்றனர். நாங்கள் பிச்சை எடுப்பதாகக் கூறி எங்களை இழிவுபடுத்துகிறார்கள். சாதிச்சான்றிதழ் கொடுத்தால் எங்கள் குழந்தைகள் உயர்கல்விக்குச் செல்வார்கள். ஏனவே சாதிச்சான்றிதழ், ரேசன் அட்டை வழங்கும் வரை, எங்களது போராட்டம் தொடரும் என்றார்.

போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் தலைமை வகித்தார். சேகர், பசுபதி, முருகன், மணிமேகலை, சுமதி, அய்யுரு, கருப்பசாமி ஆகியோர் பேசினர்.

-(21.12.2009 அன்று செய்தியானது)

அருந்ததியர்கள் மீது பொய்வழக்கு வாபஸ் கோரி சிபிஎம் போராட்டம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியில் தலித் அருந்ததியர் மக்கள் மீது காவல்துறை பொய் வழக்கு போட்டதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபயணம் - ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பந்தல்குடி முதல் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ அலுவலகம் வரையிலான நடைப்பயணத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.சந்திரமோகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியன் நடைபயணத்தைத் துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.தாமஸ், எஸ்.பூங்கோதை ஆகியோர் பேசினர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.சாமுவேல்ராஜ் கண்டன உரையாற்றினார். அண்ணாத்துரை, கணேசன், செல்லத்துரை ஆகியோர் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

-(21.12.2009 அன்று செய்தியானது)

அசமத்துவம் நிலவும் நாட்டில் "பொதுத்திறமை" என்பது சாத்தியமல்ல! - பி.சம்பத் பேச்சு

கோவையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் பேசியதாவது:

வெற்று மனித நேயங்கள் ஒருபோதும் சமத்துவத்தை கொண்டு வராது. தமிழக முதல்வர் ‘தாழ்த்தப்பட்ட மக்கள் அடித்தட்டு மக்களல்ல, அடித்தளமானவர்கள்’ என்கிறார். அடித்தளமானவர்கள் என்றால் சமூகப் பொருளாதாரத் துறையில் அவர்களா ஆதிக்கம் செலுத்துகிறார்கள்?

இடதுசாரிகளின் சமூகப் பார்வையை புரிந்து கொள்ளாதவர்கள், வர்க்கப் போராட்டம் நடத்துவோருக்கு சமூகப் பிரச்சனையில் என்ன அக்கறை? என்று கேட்கின்றனர். இந்தியா

வில் வர்க்கமும், சாதியும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. இந்திய தலித் மக்களில் 99 சதவிகிதம் பேர் சொத்துக்களற்ற பாட்டாளி மக்கள். அதனால்தான் இரண்டையும் இணைத்துப் போராடுகிறோம்.

நமது நாட்டில் நிலவும் அசமத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் ‘பொதுத் திறமை’ என்று பேசுகிறார்கள். அது எப்படி சாத்தியம்? வளர்ப்பு, சூழல், வாய்ப்பு இணைந்தது தானே திறமை. பெற்றோர் படித்திருந்தால் தான், தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பார்களாம். அப்படியானால் தலித் மக்கள் எப்படிக் கல்வி பெற முடியும்?

கோவையில் துவங்கியுள்ள இந்த கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் அமைப்பு. இந்த அம்பேத்கர் மையம் செய்யும் பணி, அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய பணி. சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் இந்த மையத்தை பொறுப்பேற்றுத் தொடங்கும் அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கமும், அதன் ஊழியர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

தலித் மக்களின் 18 சதவிகித இடஒதுக்கீடு என்பது பொதுப்போட்டியில் தேர்வுசெய்த பின்னர்தான். ஆனால் 18 சதவிகிதம் இடஒதுக்கீடு போக பொதுப்போட்டியில் தலித்துகள் போட்டியிட முடியும் என்பதே மறுக்கப்படுகிறது. மறக்கடிக்கப்படுகிறது. எனவே நாம் நமது உரிமை

களைப் பெறுவதில் எப்போதும் விழிப்போடிருக்க வேண்டும்.

இவ்வாறு பி.சம்பத் பேசினார்..

டிச.30 - மாத்தூரில் கோயில் நுழைவுப் போராட்டம்- வாலிபர் சங்கம் அறிவித்தது

செம்பனார்கோயில் ஒன்றியம், மாத்தூரில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குள் நுழையும் உரிமை தலித் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது என்றும், மீறினால் மிகப்பெரிய கலவரம் ஏற்படும் என்று தலித் மக்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் களஆய்வில் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

இத்தகவலை மனு மூலமாகத் தமிழக முதல்வர் நாகை மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலக்குழு, நாகை மாவட்டத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவற்றுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

வாலிபர் சங்க நாகை மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின் தலைமையில் ஏ.ரவிச்சந்திரன், பி.ஏ.ஜி.சந்திரசேகரன், கே.பி.காரல் மார்க்ஸ், வி.எம்.சரவணன், ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் செம்பனார்கோயில் ஒன்றியம், மாத்தூரில், டிசம்பர் 13ம் தேதி தலித் மக்களின் நிலை யைப் பற்றி களஆய்வு செய்தனர்.

அதன் நிறைவில் அவர்கள் விடுத்த அறிக்கை வருமாறு:

மாத்தூரில் உள்ள மாரியம்மன் கோயில், மிகப்பழமையான ஒன்றாகும். 1998-ஆம் ஆண்டு இது புதுப்பிக்கப்பட்டது. சாதி இந்துக்களும், தலித் மக்களும் கோயிலுக்கு நிதி கொடுத்து வருகின்றனர். ஆனால், தலித் மக்களுக்கு கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்யும் உரிமை மட்டும் நெடுங்காலமாய் மறுக்கப்பட்டு வருகிறது. இதனை மீறினால் சாதி இந்துக்களினால் பெரிய கலவரம் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா மற்றும் தீ மிதி நிகழ்ச்சிகளுக்காக, வீதிகளைச் சுத்தம் செய்தல், தீ மிதிக்கான மரம் வெட்டுதல், திருவிழாக்காலங்களில் விளக்குகளைத் தூக்குதல் போன்ற வேலைகளுக்கு மட்டும் தலித் மக்களை, சாதி இந்துக்கள் பயன்படுத்து கின்றனர். ஆனால், கோயிலுக்குள் செல்லவோ, தீ மிதிக்கவோ தலித்துகளுக்கு உரிமை இல்லை.

எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மாத்தூரில், எவ்வித அச்சமும் இடர்பாடும் இல்லாமல் தலித் மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபடும் உரிமையை விரைவில் பெற்றுத் தர வேண்டும்.

அவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டது.

மேலும், டிசம்பர் 30 அன்று மாத்தூரில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

-(21.12.2009 அன்று செய்தியானது)

மலிவான விளம்பரம் தேடும் முதல்வர்: இரா.அதியமான் குற்றச்சாட்டு

கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில், டாக்டர் அம்பேத்கர் கல்வி, வேலை வாய்ப்பு பயிற்சி மையம், டிசம்பர் 20-ம் தேதி தொடங்கப்பட்டது.

இம்மையத்தின் தொடக்க விழாவுக்கு காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் கோவைப் பகுதி பொதுச் செயலாளர் வி.சுரேஷ் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் வி.பெருமாள் வரவேற்றார். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில், மையத்தை வாழ்த்தி, ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் இரா.அதியமான் பேசியதாவது:

அருந்ததியர் மக்களின் 25 ஆண்டுகாலப் போராட்டம், அருந்ததிய ஜனநாயக இயக்கங்களின் குரல், மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்குப் பின்னரே அருந்ததிய மக்களுக்கு உள்இட ஒதுக்கீடு கிடைத்தது. ஆனால், வள்ளுவர் கோட்ட விழாவில் பேசிய முதல்வர் தன்னிடம் தானே கோரிக்கை வைத்து நிறைவேற்றியதாகக் கூறுகிறார். அவர் சொன்னதுபோல் வலசை ரவிச்சந்திரனோ, துணை சபாநாயகர் துரைசாமியோ கோரிக்கை வைக்கவில்லை என்பது உண்மையாக இருக்கலாம், ஆனால் அதியமானோ, ஜக்கையனோ கோரிக்கை வைக்கவில்லையா? முதல்வர் இப்படிப் பேசியதன் மூலம் அருந்ததிய மக்கள் முகத்தில் கரிபூசிவிட்டார். எங்களுக்கு சலுகையோ பிச்சையோ தேவையில்லை. எங்கள் உரிமைகளைத் தாருங்கள் என்றுதான் கேட்கிறோம்.

மத்திய அரசின் தலித் சிறப்பு உட்கூறுத்திட்ட நிதியைத் தாருங்கள் என்கிறோம். ஆனால், ’பெண்சிங்கம்’ திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதியதால் கிடைத்த ரூ. 66 லட்சத்தை அருந்ததிய மாணவர்களுக்கு ஆளுக்கு ரூ. 5 ஆயிரம் கொடுக்கிறார். இதனால் பிரச்சனை தீர்ந்துவிடுமா? மருத்துவப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஐந்தாயிரம் எல்லாம் பாக்கெட் மணிதானே? எங்களை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள்? அரசாங்க பணத்தை. மக்கள் வரிப்பணத்தை வழங்க வேண்டியதுதானே? எங்களை ஏன் கொச்சைப் படுத்துகிறீர்கள்?

திருச்செந்தூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், உள் ஒதுக்கீடு சரியாக அமலாக வில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் என்.வரதராஜன் குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்த முதல்வர் நீண்டகாலமாக இருந்த கோரிக்கையை நிறைவேற்றினேன் என்றார். பிறகு எப்படி வள்ளுவர் கோட்டத்தில் மட்டும், நானே கோரிக்கை வைத்து நிறைவேற்றி னேன் என்கிறார். சிலர்கூறுவது போல் மற்ற கட்சிகளின் ஆதிதிராவிடர் நலப்பிரிவு அல்ல தீண்டாமை ஒழிப்பு முன்னணி. ஏனென்றால் மற்ற கட்சியின் பிரிவுகளில் அந்தந்த சாதியினரே தலைவர்களாக இருப்பார். இங்கு அனைத்து சமூகத்தவரும் தலைவர்களாக இருந்து குரல் கொடுப்பார்கள். அதை மிகச்சரியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திக் காட்டுகிறது.

இவ்வாறு இரா.அதியமான் பேசினார்.

நிகழ்ச்சியில் தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கே. சுவாமிநாதன், அருந்தமிழர் விடுதலை இயக்க மாநில அமைப்பாளர் கு.ஜக்கையன், ஆதித்தமிழர் விடுதலை முன்னணி மாநில அமைப்பாளர் கோவை ரவிக்குமார், கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் யு.கே.சிவஞானம், பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.கணேஷ் மற்றும் வழக்கறிஞர் வெண்மணி, பகுஜன் சமாஜ் கட்சி யின் மாநிலச் செயலாளர் இராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பயிற்சி மையத்திற்கு தலித்முரசு பத்திரிகை விற்பனையாளர் வேணுகோபால் ரூ. ஆயிரம் நிதி வழங்கினார்.

வலங்கைமான் வட்டத்தில் தீண்டாமை

வலங்கைமான் பேரூராட்சி- நான்காவது வார்டு வளையமாபுரத்தில், பேரூராட்சிக்குச் சொந்தமான பாதை வழியாக, இறந்த தலித் மக்களின் உடலை எடுத்துச் செல்ல ஆதிக்க சக்திகள் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றனர். மேலும், இந்த வட்டத்தில் குடிமனைப்பட்டா மற்றும் குடும்ப அட்டைகள் போன்றவை கிடைக்காமலும் தலித்மக்கள் அவதிப்படுகின்றனர்.

எனவே இந்தக் கொடுமைகளை எதிர்த்து ஜனவரி 8 அன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதென, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் அறிவித்துள்ளன. கட்சியின் மூத்தத் தலைவர் கோ.வீரையன், முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

-(19.12.2009 அன்று செய்தியானது)

தலித் மக்களுக்கான சிறப்பு நிதியை முறையாக செலவிடாத புதுவை அரசு

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஆலோசனைக்குழு கூட்டம், எல்.கலிவரதன் தலைமையில் நடைபெற்றது. முன்னணியின் புதுவை அமைப்பாளர் ஜி.ராமசாமி, நிர்வாகிகள் ராஜாங்கம் நிலவழகன், கொளஞ்சியப்பன்-தவமணி, லெனின், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், சிறப்பு உட்கூறு திட்ட நிதியை புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசு முறையாக செலவு செய்யாமல் வேறு திட்டங்களுக்கு திருப்பி விடுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி அரசு ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக மத்திய அரசிடம் நிதிபெற்று திட்டமிட்டு செலவிடுவதாக பெருமையடித்துக் கொள்கிறது. ஆனால் திட்ட நிதியை, உரிய காலத்தில் முறையாக செலவு செய்வதில்லை என மாநில பொதுக்கணக்குக் குழு புதுச்சேரி அரசு மீது குறைகூறியுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. இந்தப் போக்கு பட்ஜெட், திட்டம், நிதி ஒதுக்கீடு அரசின் செயல்பாடு ஆகியவை கேள்விக்குறி ஆகியுள்ளது.

மேலும், ஆதிதிராவிட நலத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 8.32 சதவீதம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் திட்ட நிதியில் 4.52 சதவீதம்தான் தலித் மக்களுக்கு சென்றிருக்கிறது. இது, தலித் மக்களின் வளர்ச்சியில் புதுவை அரசு கொண்டிருக்கும் அலட்சியமான பார்வையை அம்பலப்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டதோடு, புதுச் சேரி காங்கிரஸ் அரசும், தலித் சார் துறையும் உடனடியாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

எஞ்சிய சில மாதங்களில், திட்டத்தின் 95 சதவீத நிதியை செலவு செய்யும் வாய்ப்பே இல்லை. அவ்வாறு அவசர கதியாக செலவு செய்யுமேயானால் பெரும் ஊழல் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, எச்சரிக்கையோடும் முறைகேடுகள் இன்றி தலித் மக்களுக்கான திட்ட நிதியை செலவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.

கரையாம்பத்தூர் பகுதியில் ஆண்டாண்டு காலமாக நூற்றுக்கும் மேற்பட்ட தலித்மக்கள் சிறுசிறு பகுதியில் விவசாயம் செய்து வரும் நிலையில், அத்தகைய நிலங்களை அம்மக்களுக்கே பட்டா செய்து தரவேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

-(19.12.2009 அன்று செய்தியானது)