சனி, 12 டிசம்பர், 2009

போராட்ட வரலாற்றை மறைக்கலாமா? - பி.சம்பத்


“....நீங்கள் பேசும் போது சொல்லிக் கொண்டீர்கள். நீங்கள் என்னிடம் கோரிக்கை வைத்ததாகவும் அதை நான் நிறைவேற்றிக் கொடுத்ததாக வும் பேசும் போது துரைச்சாமியும், ரவிச்சந்திரனும் சொன்னார்கள். நான் சொல்லுகிறேன். நீங்கள் யாரும் கோரிக்கை வைத்து நான் கொடுக்க வில்லை. இப்படிச் சொல்வதற் காக நீங்கள் என்னை மன்னிக்க வேண் டும். நானே கோரிக்கை வைத்து, நானே நிறைவேற்றிக் கொண்ட திட்டம்தான் இந்தத் திட்டம். நான் யாரிடத்தில் கோரிக்கை வைப்பது? என்னிடத்திலே தான் கோரிக்கை வைக்க வேண்டும்....”

..... அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியதற்காக, சென்னையில் ( 5.12.09)நடைபெற்ற பாராட்டு விழாவில், தமிழக முதல்வர் கலைஞர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது.

இந்த உரையில் கலைஞரும், திராவிட இயக்கமும், சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றியப் பணிகளை உணர்ச்சி கரமாக எடுத்துரைத்துள்ளார். அருந்ததியர் மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண் டும் என்ற கோரிக்கையை ஏற்று, 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளதை நாம் ஏற்கனவே வரவேற்றுள்ளோம்.

ஆனால் இந்த உள்ஒதுக்கீடு பெற நடைபெற்ற போராட்டங்களைப் பற்றி எதுவுமே குறிப்பிடாமல், எல்லாமே தனது சாதனையாகவும் தனது இயக்கத்தின் சாதனையாகவும் விவரிப்பது என்ன தார்மீக நியாயம் என நமக்கு விளங்கவில்லை. அருந்ததியர் உள்ஒதுக்கீடு என்பது இப்போதைய திமுக ஆட்சியில் மட்டும் முன்வைத்து பெறப்பட்ட கோரிக்கையல்ல. 25 ஆண்டு களுக்கு மேலாக அருந்ததியர் அமைப்புக்களும், அருந்ததியர் மக்களும் அதற்காக எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளனர். இப்போராட்டங்கள் எதுவும் ஆளும் வர்க்கங்களாலும் அரசாங்கத்தாலும், ஏன் இதற்கு முந்தைய திமுக ஆட்சிக் காலங்களிலும் கண்டுகொள்ளப்படவே இல்லை. ஊடகங்களும் கூட அருந்தியர் மக்களின் கோரிக்கைக்கு உரிய நியாயமோ முக்கியத்துவமோ தரவில்லை.

அருந்ததியர் மக்களின் நீண்ட நெடும் போராட்டங்களை ஆய்வுசெய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 2 ஆண்டுகளுக்கு முன்பே அம்மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது. 2007 ஜூன் 12-ம் நாள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருந்ததியர் மக்களைத் திரட்டி கோட்டை நோக்கிப் பேரணியை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது. அருந்ததியர் அமைப்புகளின் தலைவர் களோடு தமிழக முதல்வரை அன்றைய தினமே மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சந்தித்தார்கள். சிறப்பான கலந்துரையாடலுக்குப் பிறகு தமிழக முதல்வர், அருந்ததியர் மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க கொள்கையளவில் ஏற்றுக்கொள்வதாக அப்போது அறிவித்தார். மார்க்சிஸ்ட் கட்சியும் அருந்ததியர் அமைப்புகளும் கேட்டுக் கொண்டதற்கிணங்க இக்கோரிக்கையை ஆய்வு செய்து சிபாரிசு அளிக்க ஒரு கமிஷன் அமைக்கவும் ஏற்றுக்கொண்டார். இதன் பிறகு இது அமலாக காலம் கடக்கவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மாநாடுகள், 100 இடங்களில் தர்ணா, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாநிலம் தழுவிய மறியல் என பலகட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் பிறகு நீதியரசர் ஜனார்த்தனம் கமிஷன் அமைக்கப்பட்டு அதன் சிபாரிசாக 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க அறிக்கை தரப் பட்டது.

இதன் பிறகு கோட்டையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அனைத்துக் கட்சிகளும் இந்த உள்ஒதுக்கீடுக்கு ஒப்புதல் தெரிவித்தன. அதன் பிறகு சட்டமன்றத்தில் 3 சதவீத உள்ஒதுக்கீடுக்கான சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டு சில மாதங்களுக்குப் பிறகு இதற்கான அரசாணை வெளிவந்தது. இந்த உள்ஒதுக்கீட் டில் சில அருந்ததியர் பிரிவினர் விடுபட்டுள்ளதால் அவர்களையும் இணைத்து உள்ஒதுக்கீடு அளவை உயர்த்த வேண்டும் என்ற உணர்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அருந்ததியர் அமைப்புகளுக்கும் இருந்தது. ஆயினும் 3 சதவீத உள்ஒதுக்கீடு? முதல் கட்ட வெற்றி என்ற நிலை எடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக அரசின் முன்முயற்சிக்கும், முடிவுக்கும் வரவேற்பு தெரிவித்தது. இதற்காக நீண்ட காலம் போராடிய அருந்ததியர் மக்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்தும், தனித்தும் போராடிய அருந்ததியர் அமைப்புகளுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு தெரிவித்தது. அருந்ததியர் உள்ஒதுக்கீடு பற்றிய பிரச்சனையில் இவை தான் வரலாற்று ரீதியான உண்மைகள். தமிழக முதல்வரும், சில பத்திரிகையாளர் சந்திப்புகளில் அருந்ததியர் உள்ஒதுக்கீடு பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சி காட்டிய ஆர்வத்தையும் தலையீட்டையும் ஏற்றுக்கொண்டார்.

ஆனால் 5.12.2009-ந் தேதிய பாராட்டு விழாவில் அருந்ததியர் மக்களின் போராட்டங்களைப் பற்றியோ, அருந்ததியர் அமைப்புக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய இயக்கங்களைப் பற்றியோ எதுவும் குறிப்பிடாமல், எல்லாமே தனது சாதனையாகவும் தனது இயக்கத்தின் சாதனையாகவும் பறைசாற்றிக் கொண்டார். எந்தக் கட்சியும் அதன் தலைவரும் அரசியல் ஆதாயம் தேட முனைவதில் தவறில்லைதான். ஆனால் அதற்காக ஒடுக்கப்பட்ட அருந்ததியர் மக்களின் போராட்ட வரலாற்றையும் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அருந்ததியர் அமைப்புகளின் பங்கையும் பற்றியும் கோடிட்டுக்கூடக் காட்டாமல், தானே கோரிக்கை வைத்ததாகவும், தானே நிறைவேற்றிக் கொண்டதாகவும் பறைசாற்றுவது அவருக்கும், அவரது இயக்கத்திற்கும் சுயபெருமையாக இருக்கலாம். ஆனால், ஆளுங்கட்சியின் ஏற்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட இந்த பாராட்டு விழாவில் பங்கேற்றவர்கள் கூட முதல்வரின் கூற்றை முற்றாக ஏற்றிருக்க மாட்டார்கள்.  (7.12.09)


(கட்டுரையாளர்: அமைப்பாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி,
மாநிலச் செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்).

தீண்டாமை ஒழிப்பும் ஜனநாயகப் புரட்சியும்! - பி. சம்பத்


டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்தியாவின் தலைசிறந்த சமூக நீதிப் போராளி. புரட்சிகரமான சிந்தனையாளர். இந்துத்துவா கோட்பாடுகளைத் தோலுரித்துக் காட்டியவர். சாதியமைப்பு ஒழிய சீற்றத்துடன் போராடியவர். தீண்டாமை ஒழியவும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பெற்றிடவும் எழுச்சி மிக்க போராட் டங்களை நடத்தியவர். இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் சாதியடிமைத்தனத்திற்கு எதிராகவும், தீண்டாமை ஒழிப்பிற்காகவும் அவர் நடத்திய போராட்டமும், வெளிப்படுத்திய கருத்துகளும் இந்திய மக்கள் மத்தியிலும் அரசியல் இயக்கங்கள் மத்தியிலும் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தின. இதனால் தான், இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் அரசியல் சாசனத்தை உருவாக்கும் தலைமைப் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டபோது தேசமே அதனை அங்கீகரித்தது. இந்தியாவின் சட்ட அமைச்சராகவும் அவர் திறம்பட செயல்பட்டார்.

இந்தியச் சமூகத்தின் அடித்தட்டு மக்கள் மத்தியில் அவரது சிந்தனைகளும் கருத்துக்களும் ஆழமான கிளர்ச்சி உணர்வுகளை ஏற்படுத்தின. இன்றளவும் ஏற்படுத்தி வருகின்றன. எல்லா சமூக நீதிக்கான அமைப்புகளும் ஜனநாயக இயக்கங்களும் மனித உரிமையில் அக்கறையுள்ள அனைவரும் ஏகோபித்த முறையில் அம்பேத்கரை உயர்த்திப் பிடிப்பதை இன்றளவும் காண முடிகிறது. அரசியல், பொருளாதாரம், சமூகம் போன்ற பல துறைகளிலும் ஏராளமான நூல்களைக் கற்றிருந்த மேதையாக அவர் விளங்கினாலும் அடித்தட்டு மக்களின் குறிப்பாக தலித் மக்களின் நலன்கள் மற்றும் உரிமைகள் குறித்து ஆவேசமான அக்கறையுடன் செயல்பட்டார். தனது பணிகள் பற்றி அம்பேத்கர் அவர்களே குறிப்பிடுவதாவது;

“உலகிலுள்ள அடிமைச் சமூகங்கள் அனைத்துக்கும் நானே தலைவர் என்று கூறவில்லை. தீர்க்கப்பட வேண்டிய வேறு பல பிரச்சனைகள் கொடுமைகள் நம் நாட்டில் இல்லையென்றும் நான் கூறவில்லை. ஆனால் மனிதன் தன் வாழ்நாளில் எந்த அளவுக்குப் பணியாற்ற முடியும் என்பதை உணர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன்”.

இந்தியாவில் நிலவும் சாதிய ஒடுக்கு முறைகளுக்கும் தீண்டாமைக் கொடுமைகளுக்கும் இந்து மதமும் இந்துத்துவா கோட்பாடுகளும் சித்தாந்த அஸ்திவாரமாக விளங்குவதைக் கண்ட அம்பேத்கர் அவற்றைக் கடுமையாகச் சாடினார். பெண் அடிமைத்தனத்தையும், சாதிய அடிமைத்தனத்தையும் வலியுறுத்தும் புராணங்களும், இதிகாசங்களும் கட்டுக்கதைகள் என்றார். மனுநீதியை உருவாக்கிய மனு மட்டும் தன் கைகளில் கிடைத்திருந்தால் அவனை அப்படியே கடித்துக் குதறியிருப் பேன் என அதன் மீதான தன் வெஞ்சினத்தை வெளிப்படுத்தினார். இத்தகைய கருத்துப் பிரச்சாரம் மட்டுமல்லாமல் தலித் மக்களை அணி திரட்டி ஆலய நுழைவு, பொதுக் குளங்களில் குளிக்க வைப்பது உள்பட தீவிரமான தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களையும் நடத்தினார். இதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் அவர் உத்வேகமூட்டும் ஆவேசமான சக்தியாக மாறினார்.

டாக்டர் அம்பேத்கர் அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் தலைமைப் பொறுப்பை உணர்வுப்பூர்வமாக ஏற்றார். அரசியல் சாசனத்தின் மூலம் தீண்டாமை ஒழிப்பையும் சாதிய ஒடுக்குமுறைகளையும் முடிவுக்கும் கொண்டு வர முடியும் என நம்பினார். 1950இல் இந்திய அரசியல் சாசனத்தை முன்மொழியும் போது தீண்டாமை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக கம்பீரமாக அறிவித்தார். அதனை மீறி யாரேனும் தீண்டாமையைக் கடைப்பிடித் தால் அவர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கும் சட்டங்களும் கொண்டு வரப்பட் டன. ஆனால் அந்தோ! அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. அம்பேத்கர் தனது வாழ்நாளில் இறுதி நாட்களில் இதற்காக தனது மனவேதனையை வெளிப்படுத்தினார். தீண்டாமை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டு விட்டதாகக் கூறியதற்காக தான் வருந்துவதாகவும், தலித் மக்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் எழுச்சிமிக்க போராட்டங்கள் மூலமே அது சாத்தியமாகும் என உறுதிபட அறிவித்தார்.

சாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு என்பது இந்தியாவில் உள்ள இடதுசாரி மற்றும் ஜனநாயக இயக்கங்களின் மிகப் பிரதானமான கடமையாகும். இந்திய ஜனநாயகப் புரட்சியின் பிரிக்க முடியாத அம்சமாகவும் இது விளங்குகிறது. டாக்டர் அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுவதும் இதற்காக கடுமையாகப் போராடினார். ஆனால் இக்கடமைகளை நிறைவேற்ற நிலப்பிரபுத்துவ ஒழிப்பும், நில விநியோகமும் பிரதான தேவையாக உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியத் தலைவர்களில் ஒருவரான தோழர் பி.டி. ரணதிவே கூறுவதாவது;

“தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய புகழ் பெற்ற பெரும் வீரர் அம்பேத்கர். ஆரம்பக் காலத்தில் உயர் சாதியினரின் கபடத்தனங்களை அம்பலப்படுத்திக் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகத் தாக்கினார். அதற்குப் பின் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலமும், தனி குடியிருப்புகளும் கோரினார். இதை ஒரு விவசாயப் புரட்சியின்றி, ஜனநாயகப் புரட்சியின்றி சாதிக்க முடியாது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் கொடுப்பதன் மூலம் அவர்கள் பண் ணையடிமைகளாக மற்ற சாதியினரைச் சார்ந்து நிற்கும் நிலையைத் தவிர்க்கலாம்.”.

இப்புரிதலோடு தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு போராட்டங்களை முன் எடுத்துச் செல்வோம்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கமும், இடதுசாரி இயக்கங்களும் தேச விடுதலைக்காக மட்டும் அல்ல. இந்திய ஆளும் வர்க்கங்களின் வர்க்கச் சுரண்டலை ஒழிக்கவும், தலித் - பழங்குடி மக்களின் சமூக விடுதலைக்காகவும் எண்ணற்ற போராட்டங்கள் நடத்தியுள்ளன. இடதுசாரி இயக்கங்கள் இன்று வலுவானதாக உள்ள மேற்குவங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் நிலங்களில் சாதிய மோதல்களோ, ஒடுக்குமுறைகளோ இல்லை என்பதைக் கண்கூடாக காண முடியும். குறிப்பாக மேற்குவங்க மாநி லத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரி இயக்கங்களும் நடத்திய போராட்டங்களாலும், இடதுசாரி அரசின் சாதனையாலும் 19 லட்சம் பேருக்கு 10 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலம் விநியோகிக்கப்பட்டு உள்ளது. இவர்களில் 12 லட்சம் பேர் தலித்துகள் மற்றும் பழங்குடியினர்கள் ஆவர். இவ்விருவரும் சேர்ந்து மாநில மக்கள் தொகையில் 27 சதவிகிதமாக இருந்த போதிலும், அதைவிட மிகக் கணிசமான சதவிகிதத்தில் தலித் மக்கள் நிலம் பெற்றிருப்பதை காண முடியும். இம்மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மீது எவ்வித வன்கொடுமைத் தாக்குதலும் நடைபெறவில்லை என இந்திய அரசின் தலித் பழங்குடியினர் நல்வாழ்விற்கான ஆணையரே கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கீழத்தஞ்சை மாவட்டத்தில் (இன்றைய நாகை, திருவாரூர்) கிராமப்புற கணிசமான தலித் விவசாயத் தொழிலாளர்களுக்கு இதர மாவட்டங்களை விட அதிகமான கூலியும், இதோடு இழிவான பல தீண்டாமை வடிவங்கள் ஒழிக்கப்பட்டதும் நம் முன் உள்ள சாட்சிய மாகும். சமீப காலங்களில் தொடர்ச்சியான பல தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள் நடத்தி அதில் வெற்றி பெற்று வருகிறோம். (பாப்பாபட்டி, கீரிப்பட்டி, உத்தப்புரம், அருந்ததியர் உள்ஒதுக்கீடு, பல கிராமங்களில் ஆலய நுழைவு, இரட்டைக் குவளை முறை ஒழிப்பு உள்ளிட்ட போராட்டங்கள்)

தலித் - பழங்குடி மக்களில் மிக மிகக் கணிசமானவர்கள் ஏழை உழைப்பாளிகள். இந்திய பாட்டாளி வர்க்கத்தின் பிரிக்க முடியாத பகுதியினர். இப்பார்வையோடு இம்மக்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்கான போராட்டங்களை வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பணிகளையும் போராட்டங்களையும் மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்த தோழர் பிரபாகர் சான்ஸ்கிரி, பின்வருமாறு பிரகடனப்படுத்துகிறார்.

“...சாதிய முறைக்கான பொருளாதார அடிப்படை கரைந்து கொண்டிருக்கும் நேரத்தில், அந்தச் சாதிய முறையானது சமூக மேல்கட்டுமானத்தை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண் டுள்ளது. அங்கே அது, சுரண்டும் வர்க்கங்களாலும் அவற்றின் அரசியல் அமைப்பாளர்களாலும் பேணிக் காக்கப்படுகின்றது. ராஜாராம் மோகன்ராய் போன்றவர்களால் துவக்கப்பட்டு ஜோதிபாபூலே மற்றும் அம்பேத்காரால் சாதிய முறையை ஒழித்துக் கட்டுவது என்ற எழுச்சிகர உள்ளடக்கம் கொடுக்கப்பட்டுள்ள சமூகச் சீர்த்திருத்த இயக்கமானது, மக்கள் ஜனநாயகப் புரட்சியின் பகுதி என்ற முறையில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கடமைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டுத் தொழிலாளி வர்க்கத்தின் கட்சியால் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.”

இப்பார்வையில் சமூகச் சீர்திருத்த இயக்கங்களையும் குறிப்பாக தீண்டாமை ஒழிப்பையும் வலுவாக முன்னெடுத்துச் செல்வோம்.     (5.12.09)

(கட்டுரையாளர்: அமைப்பாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி,
மாநிலச் செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்).

இருப்பதைப் பறிக்கும் மத்திய பணியாளர் தேர்வாணையம் - யு.கே.சிவஞானம்

“ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட மிக உயரிய அரசுப்பணிகளுக்கான தேர்வுகளில் முக்கியமான மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை, யு.பி.எஸ்.சி. ஒப்புக் கொள்கிறது. தற்போதுள்ள துவக்கக்கட்டத் தேர்வுக்குப் பதிலாக செயல்திறன் தேர்வைக் கொண்டுவர வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளோம்; அதேபோல் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படும் வாய்ப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.” என்று கூறியிருப்பவர் வேறு யாருமல்ல, மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின்(யு.பி.எஸ்.சி) தலைவர் டி.பி.அகர்வால்தான்.

1990களின் பிற்பகுதி மற்றும் இந்த நூற் றாண்டின் துவக்கப்பகுதி ஆகியவை, டாலர் கனவுகளோடு படிப்புகளை முடித்தவர்களின் காலமாக இருந்தது. அண்மையில் ஏற்பட்டுள்ள அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி மற்றும் அந்த நெருக்கடியின் அடுத்த பரிமாணமான சர்வதேசப் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் மீண்டும் அரசு, பொதுத்துறை மற்றும் வங்கி வேலைகள் பக்கம் பலரின் கண்களும் பதிந்துள்ளன. அதில் கணிசமானவர்கள் “கலெக்டர் ஆகப்போறோம்” என்ற எண்ணத்தையும் மனதில் ஏற்றிக் கொண்டவர்களாக உள்ளனர்.

நாட்டின் உயர்பதவிகளை வகிக்கப்போகும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளைத் தேர்வு செய்யப்போகும் தேர்வு முறையில் மாற்றம் வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஏற்கெனவே அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி முறைகளை மேலும் செழுமைப்படுத்த வேண்டும் என்பதுதான் பல வல்லுநர்களின் கருத்துமாகும். ஆனால் அகர்வால் அளித்துள்ள பரிந்துரைகள், இருப்பதையும் பறித்துக் கொண்டுவிடுவது போன்றுதான் உள்ளது. இந்தக் கருத்துக்கள் ஏதோ போகிற போக்கில் தெரிவிக்கப்பட்டவை அல்ல. குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீல் பங்கேற்ற கூட்டமொன்றில் அவர் முன்னிலையிலேயே வைக்கப்பட்டவைதான்.

தற்போதைய தேர்வுமுறையில் துவக்கக் கட்டத் தேர்வில் பொதுப்பாடம்(ஜெனரல் ஸ்ட டிஸ்) மற்றும் விருப்பப்பாடம் ஆகிய இரண்டு தாள்கள் உள்ளன. இதில் முதல்தாள் அனை வருக்கும் பொதுவானதாகவும், இரண்டாவதாக, மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அளித்துள்ள பட்டியலிலிருந்து தங்களுக்கு விருப்பமான பாடத்தை தேர்வு எழுதுபவர்கள் தேர்வு செய்து கொள்ளும் வகையிலும் தற்போதைய முறை உள்ளது. புதிதாகக் கொண்டுவர வேண்டும் என்று அகர்வால் போன்றவர்கள் விரும்புவது கிட்டத்தட்ட வங்கித் தேர்வுகளைப் போன்ற முறையைத்தான். வங்கிப் பணியின் தன்மைக்கு வேண்டுமானால் செயல்திறன் தேர்வு பொருத்தமாக இருக்கலாம். ஆனால் பன்முகத்தன்மை கொண்ட சிவில் சர்வீஸ் தேர்வுக்கு புதிய பரிந்துரைகளைவிட தற்போதுள்ள முறையே நல்லது. இவர்கள் கூறும் செயல்திறன் வினாக்கள் பொதுப்பாடத்தில் கேட்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய முறை இருப்பதால் பொறியியல், மருத்துவம், விவசாயம் ஆகிய தொழில் சார்ந்த படிப்புகள் படித்தவர்களோடு அறிவியல், கலை, இலக்கியம் ஆகிய பாடங்களைப் படித்தவர்களும் தங்களுக்குப் பிடித்த பாடத்தைத் தேர்வு செய்துகொள்ள முடிகிறது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என்று அனைத்துத் தரப்பினரும் இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்யத் தயங்காத நிலையை இது உருவாக்கியுள்ளது. அண்மைக்காலங்களில் இந்த சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பங்கேற்று வெற்றிபெறுபவர்களில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இதை உறுதிப்படுத்துகிறது.

தேர்வாணையத் தலைவர் அகர்வால் சொல்லும் செயல்திறன் தேர்வு என்பது ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் ஆகிய படிப்புகளுக்கு செல்பவர்களுக்காக நடத்தப்படுவதாகும். அத்தகைய தேர்வுகளில் நகர்ப்புறத்தைச் சேர்ந்த பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் வெற்றி பெறுகிறார்கள் என்பதே நடைமுறை உண்மை. இதே தேர்வு முறையை சிவில் சர்வீசஸ் தேர்வுக்கும் கொண்டு வந்தால், குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டுமே அது பலனைத் தருவதாக அமைந்து விடும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பும் இத்தகைய மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சி நடைபெற்றது. கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டதால் இதைக் கைவிட நேர்ந்தது என்பது கடந்தகால அனுபவம்.

இது ஒருபுறம். மறுபுறத்தில் வாய்ப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் அகர்வால் பரிந்துரைக்கிறார். அவர் பேசியது நவம்பர் 14 அன்று. இதன் பின்னணியை ஆய்வது இங்கு பொருத்தமாக இருக்கும். பொதுப்பிரிவினருக்கு நான்கு வாய்ப்புகளும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஏழு வாய்ப்புகளும், தலித் மற்றும் பழங்குடியினருக்கு வாய்ப்புகளுக்கான வரம்பு இல்லாமலும் தற்போது உள்ளது. வாய்ப்புகளைக் குறைக்க வேண்டும் என்று இவர் யாரைக் குறி வைக்கிறார் என்பதை சொல்ல வேண்டியதே இல்லை. நிச்சயமாக சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரைக் குறிவைத்தே இவரது பேச்சு இருக்கிறது.

தலித்துகள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் இந்த சலுகைகளை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் கதவுகளை ஆதித்ய குமார் என்பவர் தட்டினார். அதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அல்டாமஸ் கபீர் மற்றும் சிரியாக் ஜோசப் ஆகியோர், தலித் மற்றும் பழங்குடியினருக்கு அரசியல் சாசனப்படி கூடுதல் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளதை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. இச்சலுகைகள் அரசியல் சட்டப்பிரிவு 16(4)ன்படி சரியானதுதான்.

இட ஒதுக்கீடு என்பது சட்டரீதியாக வழங்கப்பட்டுவிட்டாலும் அதை நடைமுறைப் படுத்துவதில் இன்னும் ஏராளமான முட்டுக் கட்டைகளை ஒடுக்கப்பட்ட மக்கள் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் இருப்பதையும் பறித்துவிட்டு “சமமான” நிலையை உருவாக்கப்போகிறோம் என்று அகர்வால் போன்ற பெருங்குடிமகன்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சமூகநீதிப் பாதையில் இதுபோன்ற பெரும் தடைகளை நாடு சந்தித்துக் கொண்டே இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கள் எழும்பாமல் வாய்க்குள்ளேயே அடங்கி விடும் என்று இவர்கள் நினைத்தால் ஏமாந்தே போவார்கள். (தீக்கதிர், 5.12.09)

(கட்டுரையாளர், மாவட்ட அமைப்பாளர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, கோவை)