புதன், 24 மார்ச், 2010

தாழ்த்தப்பட்டோர் புள்ளி விவரங்கள் இல்லை: தேசிய ஆணையம் தகவல்

“தாழ்த்தப்பட்டோர் குறித்த புள்ளி விவரங்கள் தமிழக அரசிடம் இல்லை” என்று தாழ்த்தப்பட்டோ ருக்கான தேசிய ஆணையம் புகார் தெரிவித்துள்ளது.
தேசிய ஆணையத்தின் துணைத்தலைவர் என்.எம்.காம்ப்ளே, உறுப்பினர் மகேந்திரபோத் ஆகியோர் அடங்கிய குழு வியாழக்கிழமை சென்னை வந்தது.
தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, பல்வேறு துறைகளின் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் கூட்டாக அவர்கள் அளித்த பேட்டி:
“தாழ்த்தப்பட்டோருக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கி பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அவற்றை செயல்படுத்தும் விதம் குறித்து மாவட்ட அளவிலோ அல்லது துறை ரீதியிலோ புள்ளி விவரங்களை வைத்திருக்கவில்லை. மாநில அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் எத்தனை பேர், அவர்களில் எத்தனை பேருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் இல்லை.
அரசுத் துறைகளில் பணியாற்றும் தாழ்த்தப்பட்டோர் ஊழியர்களுக்கான சங்கங்களுக்கும், அரசுக்கும் இடையே கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ள துணைச்செயலாளர் அளவிலான தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் அதுபோன்ற அதிகாரி நியமிக்கப்படவில்லை. பின்னடைவு காலிப் பணியிடங்களை சிறப்பு வேலை நியமனத்தின் மூலம் நிரப்ப வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அரசுத் துறைகளில் பின்னடைவுக் காலிப்பணியிடங்கள் ஏதுமில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கல்வித் துறையில் குறிப்பாக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் எத்தனை பேர் பணிபுரிகின்றனர் என்ற தகவல் அரசிடம் இல்லை. கல்வித் துறையில் மொத்தமாக 5 சதவீதம் பின்னடைவு காலிப் பணியிடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த, முற்போக்கான மாநிலமாக கருதப்படும் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் குறித்த புள்ளி விவரங்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட நிலங்களில் ஆதிக்க சாதியினர் ஆக்கிரமிப்புச் செய்துள்ளனர். அவற்றை அகற்றி உரியவர்களுக்கு நிலங்களை வழங்கும் பணியில் அரசு அக்கறை காட்டவில்லை. ஆக்கிரமிப்பு தொடர்பாக, இதுவரை 8 ஆயிரம் புகார்கள் உள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றங்களையும் நாட முடியாமல் உள்ளனர்.
தாழ்த்தப்பட்டோர் நலன் தொடர்பாக முதல்வர் தலைமையில் விழிப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் கமிட்டி ஆண்டுக்கு இருமுறையாவது கூட வேண்டும். ஆனால், சம்பந்தப்பட்டவர்களை தனித்தனியாக முதல்வர் சந்திப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதிலிருந்து, ஏற்கெனவே அமைக்கப்பட்ட கமிட்டி செயல்படாமல் இருப்பது தெரிகிறது.
மனிதக் கழிவை மனிதனே அள்ளும் நிலை இல்லை என்று தமிழக அரசு தெரிவிக்கிறது. ஆனால், அந்த நிலைமை தமிழகத்தில் இருப்பதற்கான புகைப்பட ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன”. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சலவைத்தொழிலாளர்கள் கோட்டை நோக்கி பேரணி

தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் தங்களைச் சேர்க்க வலியுறுத்தி, சலவைத் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமையன்று (19.2.2010) கோட்டை நோக்கி பேரணி நடத்தினர்.
தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு),  தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம்,  தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் மத்திய சங்கம், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் பேரவை,  அண்ணா சலவைத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட 10 அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி உள்ளன.
இந்தக்குழு சார்பில், இந்தியாவில் 17 மாநிலங்களிலும், தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும் சலவைத் தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே போன்று தமிழகம் முழுவதும் உள்ள சலவைத் தொழிலாளர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; நலவாரிய பதிவுக்கு வருவாய்த்துறை ஆய்வு செய்வதை கைவிட வேண்டும்; புதிய உறுப்பினர்களை பதிவு செய்வதோடு, அடையாள அட்டை வழங்க வேண்டும்; பழைய சலவைத்துறைகளை புதுப்பிக்க வேண்டும்; புதிதாக சலவைத்துறைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பேரணி நடைபெற்றது.
பேரணியில் வி.கருப்பையா, பாபு (சிஐடியு), சுப்பிரமணி, சக்கரை (மத்திய சங்கம்) உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 11- அன்று, தில்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும்  ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள்: தேசிய ஆணையத்திடம் முறையீடு

தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத்திடம் தீண் டாமை ஒழிப்பு முன்னணி முறையீடு செய்தது.
பூட்டாசிங் தலைமையிலான தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையம் வியாழனன்று (18.2.2010) சென்னைக்கு வருகை தருவதாக அறிவித்திருந்தது. பூட்டா சிங் வர இயலாத நிலையில், அதன் துணைத்தலைவர் தலைமையில் ஆணையம் வருகை தந்தது. பல தலித் அமைப்புகளின் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன் னாள் நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமானவர்கள் ஆணையத்தை சந்திக்க வந்திருந்தனர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மாநில அமைப்பாளர் பி.சம்பத், சட்டமன்ற உறுப் பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், பி.டில்லிபாபு, ஜி.லதா ஆகியோர் சென்றனர்.
பல அமைப்புகள் சார் பாக ஆணையத்திடம் ஏராளமான முறையீடு களும், மனுக்களும் அளிக் கப்பட்டன. ஆலோசனை யை வரவேற்றுப் பேசிய ஆணையத்தின் உபதலைவர் இந்தியாவில் தீண்டாமை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில், “தீண்டாமை ஒழிப்பு முன்னணி” போன்ற அமைப்புகள் செயல்படுவது பற்றி வியப்புடன் வினவினார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆணையத்திடம் விரிவான மனு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய மாநில அமைப்பாளர் பி.சம்பத், “தமிழ்நாட்டில் ஏராளமான வடிவங்களில் பல்லாயிரம் கிராமங்களில் தீண்டாமைக் கொடுமைகள் நீடிப்பதாகவும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தலித் அமைப்புகள், ஜனநாயக அமைப்புகள் அவற்றை ஒழிப்பதற்காகவும், அரசை நிர்ப்பந்திப்பதற்காகவும் போராட்டங்களை நடத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஜி.லதா
சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா பேசும்போது, “விழுப்புரம் மாவட்டம் காங்கியனூர் திரௌபதியம்மன் கோவிலுக்கு தலித் மக்களை அழைத்துச் செல்லும் போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமல்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் தன்னை கொடூரமாகத் தாக்கி காயப்படுத்தியதையும், இதர தலித் மக்கள் தாக்கப்பட்டதையும் உணர்ச் சிப்பூர்வமாக எடுத்துக்கூறி, அமல்ராஜ் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வற்புறுத்தினார்.
தலித் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை 18 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக உயர்த்துவது, தலித் - பழங் குடி மக்களுக்கான ஆணையம் ஒன்றை தேசிய ஆணையம் போல உரிய அதிகாரம் வழங்கி அமைப்பது, தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பல்லாயிரம் பின்னடைவுக் காலியிடங்களை நிரப்புவது, தலித் உப திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள், மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்காதது, ஒதுக்கிய நிதியில் மாநில அரசு முறை யாகச் செலவிடாதது, உத்தப்புரத்தில் ஆதிக்க சக்திகள் நிர்ப்பந்தம் காரணமாக டி.கே.ரங்கராஜன் எம்.பி., நிதி ஒதுக்கியும், தமிழக அரசு பேருந்து நிறுத்த நிழற்குடை அமைத்துத்தர மறுப்பது, உத்தப்புரத்தில் தலித் மக்களை அரசமர வழிபாட்டிற்கு அனுமதி மறுக்கும் நிலை தொடர்வது, அருந்ததியர் உள்ஒதுக்கீடு உத்தரவை வேலை வாய்ப்பில் முழுமையாக தமிழக அரசை அமல்படுத்தக் கோருவது, மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமைக்கு தமிழகத்தில் முடிவு கட்டுவது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களை தமிழகத்தில் உறுதியுடன் அமல்படுத்தக் கோருவது, திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் கிராமத்தில் தலித் மக்கள் சுடுகாட்டிற்கு பாதை இல்லாததால், பிணத்துடன் ஆற்றில் நீந்தி அடக்கம் செய்யப்படும் கொடுமைக்கு முடிவு கட்டி, பாலம் அமைத்துக் கொடுப்பது அல்லது மாற்று சுடுகாடு ஏற்பாடு செய்து தருவது போன்ற கோரிக்கைகள் மனுவாகவும், நேரடியாகவும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியால் ஆணையத்திடம் அளிக்கப்பட்டது.
.இப்பிரச்சனைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆண்டுகள் எட்டானாலும் அழுகிப் போகாதாம் ‘மனைப்பட்டா’

“இப்போ என்ன கெட்டா போச்சு, காசு கப்புத் தந்தாத்தானே கத நடக்கும். சும்மா வெறுங்கையிலேயே முழம் போட முடியுமா, என்ன? ஒன்னும் கவலப்படாதீங்க, உங்க பட்டா ஒன்னும் அழுகிப் போயிறாது” என்று ஓர் உடன்பிறப்பு உபதேசித்திருக்கிறார் கோவை இருகூரில். தலைமுறை கடந்த போராட்டம் என்றாலும் தளராத நம்பிக்கையோடு பட்டாக்களை கையில் வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள் பாமர தலித் மக்கள்.
ஆம். இடத்தைக் கண்டுபிடிக்கப் போராட்டம், அதைக் கையகப்படுத்த போராட்டம், அதை மனைப்பட்
டாக்களாகப் பெறப் போராட்டம் என்று 1984 முதல் போராடி, ஒரு வழியாக 2002ம் ஆண்டில் 294 பட்டாக்
களைப் பெற்றிருக்கிறார்கள் இருகூர் தலித்மக்கள். அதன் பின்னர் எட்டு ஆண்டுகளாக ‘என் பட்டாவுக்கான இடம் எங்கே?’ என்று அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். இதற்கிடையில் திருப்பூர் வருவாய் மாவட்டம், கோவை வருவாய் மாவட்டமாகி, பல்லடம் தாலுகாவை சூலூருக்கும் மாற்றியாகி விட்டது. மாதம் ஒரு தாசில்தார், வருடம் ஒரு கலெக்டரிடம் மனு, இடையில் வழக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்று அல்லாடிக் கொண்டுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் தே.செந்தில்ராஜ் கூறுகிறார்.
இருகூர் ஈஸ்வரன் கோயில் மானிய பூமியை கோவில் குருக்கள் ராமானுஜ ஐயரும் அவரது சகோதரர்களும் தான் அனுபவித்து வருகிறார்கள் என்று 1984ல் அறிந்தோம். அதனை வீடில்லாத ஏழை தலித் மக்களுக்கு வழங்குன்னு அரசிடம் கோரிக்கை வச்சோம். மானிய பூமி அரிஜன நத்தமா வகை மாற்றமாச்சு, அறநிலையத் துறையிலிருந்து ஆதிதிராவிடர் நலத்துறைக்கு மாற்றமாச்சு, 4(1) அறிவிக்கை வெளியிட்டு நிலத்தையும் எடுத்தாச்சு. அப்போ ராமானுஜ ஐயர் கோர்ட்டுக்குப் போனார், அரசாங்கத்துக்கே சாதகமாகத் தீர்ப்பாச்சு. ஆனால் ஆட்சி மாறுனதால 1994ல் இருந்த பட்டியல மாத்திட்டு, 1996ல் புதுப்பட்டியில் போட்டாங்க அதிமுக காரங்க. 2002ல திமுக ஆட்சியல இன்னொரு மனைப்பட்டா குடுத்தாங்க. அரிஜன சேவா சங்கம் மூலமா போட்ட கேசுல 15 பேரை சேர்த்துக்கனும்னு உயர்நீதிமன்றமும் சொல்லியிருக்கு. ஆனா அரசு அதிகாரிங்க காலதாமதப்படுத்திட்டே இருந்ததால ‘1994 பட்டியல ஒத்துக்கணும்னு’ அதிமுக பிரமுகர் பழனிச்சாமி கேஸ் போட, அதையே காரணமா வச்சு, எட்டு வருசமா இடத்த அளந்து தர மாட்றாங்க. மொத்தம் 8.5 ஏக்கரா பூமி ஒன்னத்துக்கும் உதவாம இருக்கு. கருவேல மரந்தான் தோப்பா வளர்ந்திருக்கு என்று ஆவேசமாய் வெடிக்கிறார் செந்தில்ராஜ்.
ஆதிதிராவிடர், பள்ளர், பறையர், வள்ளுவர், அருந்ததியர் என 294 மனைப் பட்டாக்கள் பெற்ற தலித் மக்கள் இன்னும் பலர் வாடகை வீடுகளிலேயே வசிக்கிறார்கள். இதனிடையே 1984ல் கோரிக்கை வைத்த போது இருந்த எண்ணிக்கையை விட இந்த 26 ஆண்டுகளில் இன்னுமொரு பங்கு பட்டா கோரிக்கை வேறு எழுந்துள்ளது. பல்லடம் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் ‘வழக்கில் தடையாணை ஏதுமில்லை என்பதால் பட்டாதாரர் குடியேறத் தடையேதுமில்லை’ என்று பதிலளிக்கிறார். கோவை ஆதிதிராவிடர் நலத்துறை வெங்கடேஷ் சமீபத்தில் அளித்துள்ள பதிலில், ‘பழனிச்சாமி என்பவர் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வந்த பின்தான் நில அளவை செய்ய முடியும்’ என்கிறார். ஆனால் பட்டாக்களைப் பெற்ற மக்களுக்கோ சொந்தமாய் ஒரு குடிசை அமைக்கும் கனவுகூட கைகூடவில்லை.
இதனிடையே இப்பிரச்சனையைத் தீவிரமாக கையிலெடுத்து களமிறங்கியுள்ளது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி. முதற்கட்டமாக மக்களைச் சந்தித்து, பின்னர் கோரிக்கை மனு ஒன்றை மாவட்ட ஆட்சியர் பு.உமாநாத்திடம் அளித்து பேசியுள்ளனர். அவர்களிடம், பிரச்சனையை விசாரித்து ஒரு வாரத்தில் பதிலளிப்பதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளார். உறுதியான நடவடிக்கை ஏதுமில்லாத பட்சத்தில் தீவிரமாக களமிறங்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி முடிவு செய்துள்ளது.
பட்டா வைத்துள்ள மாகாளியம்மன் கோவில் வீதி ராதிகா மற்றும் மதுரை வீரன் கோவில் வீதியில் சிலரைச் சந்தித்த போது, கைக்கெட்டிய பட்டா கவைக்கு உதவாத கையறு நிலையை ஆதங்கத்தோடு தெரிவித்தனர். எது எப்படியிருந்தாலும் பல்லாயிரம் பேருக்கு பட்டாக்கள் அளித்ததாகக் கூறும் அரசு, வழங்கிய பட்டாக்களின் நிலை என்ன என்பதையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தாளில் ‘சர்க்கரை’ என்று எழுதி விட்டாலே இனித்து விடும் என்ற போக்கில் நடந்து கொள்வது ஏழைகளுக்கு நீதி வழங்குவது ஆகாது. (ந.நி)

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்வதா? - கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி

குடிசை மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கவில்லை என்றால் சட்டமன்றம் முன்பு வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதியன்று ‘பட்டினிப்போராட்டம்’  நடைபெறும் என 14-02-2010 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அறிவித்துள்ளதை கடுமையாக விமர்சித்து முதல்வர் கலைஞர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். போராட்டம் ஏன் என்பதை தெளிவுபடுத்திட வேண்டிய அவசியம் உள்ளது.
இக்கட்டுரையாளரை, கட்சியின் மாநிலக்குழு மாநிலச்செயலாளராக தேர்ந்தெடுத்தமைக்காக கலைஞர் வாழ்த்து தெரிவித்திருந்தார். தமிழகத்திலுள்ள மூத்த தலைவர்களில் முக்கியமானவரிடமிருந்து வாழ்த்துச் செய்தி கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. எனவே, உடனடியாக என் சார்பிலும், கட்சியின் மாநிலக்குழு சார்பிலும் கலைஞருக்கு நன்றி தெரிவித்தோம்.
பல ஆண்டுகளாக குடியிருக்கும் குடிசை வாசிகளுக்கு பட்டா கோரி பல கட்ட இயக்கங்கள் நடத்திய பிறகும் பட்டா கிடைக்காததால்தான் ஏப்ரல் 19-ல் போராட்டம் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கடைசியாக நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளில், மார்ச் 13-ஆம் தேதியன்று புதிய சட்டமன்ற வளாகம் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். நாங்கள் போராட்டம் நடத்தப்போவது ஏப்ரல் 19-ம் தேதியன்று. அதாவது வளாகம் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகுதான் போராட்டம் நடைபெறும். இந்நிலையில், போராட்டத்தால் வளாகத் திறப்பு விழாவிற்கு இடையூறு உள்ளது போல் கலைஞர் சொல்வதின் உள்நோக்கம் என்ன? போராட்டத்தை திசை திருப்புவதா?
போராட்டத்தின் நோக்கம் என்ன?
கோயில் நிலத்தில் குடியிருப்போர், அரசு புறம்போக்கு இடத்தில் குடியிருப்போர், மாநில அரசு மற்றும் மாநகராட்சி இடத்தில் குடியிருப்போர், நத்தம் புறம்போக்கில் குடியிருப்போர், தனியார் டிரஸ்ட் நிலத்தில் குடியிருப்போர் என சுமார் 10 லட்சம் குடும்பங்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சொந்த வீடில்லாமல் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரமான வீட்டுமனைபட்டா கோரிதான் ஏப்ரல் 19-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள பட்டினிப்போர். இவர்கள் கோரிக்கைகளுக்காகத்தான் ஏப்ரல் 19-ல் பட்டினிப்போர்.
இந்த 10 இலட்சம் பேரின் கோரிக்கைகளை பகுதிவாரியாக  விளக்குவதற்கு ஏடு இடம் தராது என்றாலும், உதாரணத்திற்கு ஓரிரு பகுதிகளைப் பரிசீலிப்போம்.
மேலே இருக்கின்ற படத்தை உன்னிப்பாகப் பாருங்கள். அந்தக் கட்டிடத்தில் மூவர் ணக்கொடியின் கீழ் ஆதிதிரா விடர் பொதுநலச்சங்கம் என்ற வாசகங்களைப் பார்க்கலாம். அந்த வாசகத்திற்கு மேல் தோற்றம் 1947 என்று உள்ளது. சங்கம் உருவாகி சுமார் 62 ஆண்டுகள் ஆகின்றன. இது அம்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சர்வே எண்.72க்குட்பட்ட மங்களபுரம். 10-2-2010 அன்று, நானும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் டி.கே.சண்முகம், அம்பத்தூர் நகரச் செயலாளர் லெனின் சுந்தர் ஆகியோர் அப்பகுதி மக்களை சந்தித்தோம். தங்களுக்கு பட்டா வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை மனுவை அவர்கள் அளித்தனர்.
மங்களபுரத்தில் சுமார் 780 குடும்பங்கள் உள்ளன. மக்கள்தொகை சுமார் 3 ஆயிரம். இதில் 97 சதவிகிதம் தலித் மக்கள். இது கிராமநத்தம் பகுதி. கால்கடுக்கச் சென்று அதிகாரிகளை சந்தித்தது தான் மிச்சம். சுமார் நூறாண்டுகளுக்கு மேல் வசிக்கும் மங்களபுரத்தில் உள்ள குடும்பங்களுக்கு இதுநாள் வரையிலும் பட்டா வழங்கப்படவில்லை.
பாடிப்புதுநகர்
அம்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட (சர்வே எண். 253/14) பாடிப்புதுநகரில் சுமார் 900 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு குடிசை மாற்று வாரியம், மனை ஒதுக்கீடு செய்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக தங்களுக்கு பட்டா வேண்டுமென்று வலியுறுத்துகிறபோது, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், பாடிப்புதுநகர் இடம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது. வருவாய்த்துறை எங்களிடம் ஒப்படைக்காமல் பட்டா வழங்க முடியாதென கூறுகிறார்கள். வருவாய்த் துறைக்கு குடிசை மாற்று வாரிய தலைவர் பலமுறை கடிதம் எழுதியும் எதுவும் நடக்கவில்லை.  இவ்வாறு ஒவ்வொரு பகுதியிலும் பட்டா கிடைக்காத பல சோகக்கதைகள் உண்டு. இதற்கு கலைஞரின் பதில் என்ன?
இவ்வாறு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டா கிடைக்காத அவல நிலை உள்ளது. இதைப்போலவே கோயில் இடத்தில் குடியிருப்போருக்கு அரசாணை 456-ன் படி தரை வாடகை விதிக்கப்பட்டு, குடியிருப்போர் விழி பிதுங்கி நிற்கின்றனர். அதிகமான வாடகை விதிக்கப்பட்டு, வாடகை கட்ட முடியாமல் சிரமப்படுவோர் மேல்முறையீடு செய்ய வேண்டுமென்றால், வாடகை பாக்கியை செலுத்திட வேண்டும். வாடகை பாக்கி பல லட்சம் வருவதால் வாடகை செலுத்த முடியவில்லை. ஆனால் கோயில் நிர்வாகம் 456 அரசாணைப்படி 70-80 ஆண்டுகள் அங்கேயே வசித்து வரும் இவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என அறிவித்து வெளியேற்றிட முயற்சித்து வருகிறது.
தோழர் மணலி கந்தசாமி, தனது அரசு உத்தரவிட்டதை பாராட்டினார். ஆனால் மார்க்சிஸ்ட்கள் பாராட்ட மறுப்பது மட்டுமன்றி போராட்டம் வேறு நடத்துகிறீர்களே என்ற ஆதங்கம் முதல்வரின் அறிக்கையில் பளிச்சென தெரிகிறது. பாராட்டத்தக்க காரியங்களை கலைஞரின் அரசு மேற்கொண்ட போதெல்லாம் - அந்த நடவடிக்கையை சிபிஐ(எம்) பாராட்டத் தவறியதில்லை. ஆனால் இன்றைக்கும் பல லட்சம் குடும்பங்கள் பட்டா இல்லாமல் அனுதினமும் அஞ்சி அஞ்சி வாழும் நிலையில், பொறுப்பு வாய்ந்த எந்த இயக்கமும் ஏழை மக்களை பாதுகாத்திட அரசை நிர்ப்பந்திக்க போராட்டம் நடத்துவது தவிர்க்க இயலாது என்பது அறிந்த ஒன்றே. இந்த அடிப்படை அரசியல் கடமையைத்தான் சிபிஐ(எம்) மேற்கொண்டு வருகிறது என்பதை தெரிவிக்கிறேன்.
1946-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்தியாவிற்கு சுதந்திரம் தர வேண்டுமென்று, அட்லி பிரதமராக இருந்தபோது முடிவெடுத்தார்கள். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரத்திற்காக போராடிய கண் ணீரும் செந்நீரும் சிந்திய காந்திக்கும், நேருவிற்கும், கம்யூனிஸ்ட்டுகளுக்கும் பெருமை சேராது. இந்தியாவிற்கு சுதந்தி ரம் கிடைத்ததன் பெருமை இங்கிலாந்து பிரதமர் அட்லிக்கே போய்ச்சேரும் என்றால் கலைஞர் ஏற்றுக் கொள்வாரா?
கீழத்தஞ்சையில் பண்ணையடிமையை ஒழிக்க 1952-ஆம் ஆண்டு ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது பண்ணையாள் பாதுகாப்புச்சட்டம் கொண்டு வந்தார். பண்ணையடிமையை ஒழிப்பதில் உயிர்த்தியாகம் செய்த களப்பால் குப்புவுக்கோ, வாட்டாக்குடி இரணியனுக்கோ, சிவராமனுக்கோ, இவர்களுக்கெல்லாம் தலைமை தாங்கிய பி.சீனிவாசராவுக்கோ எந்த பங்கும் இல்லை. பண்ணையடிமையை ஒழித்த பெருமையெல்லாம் இராஜாஜியை சாரும் என்றால் யாராவது ஏற்றுக் கொள்வார்களா? கீழத் தஞ்சையில் தலித் மக்கள் குடியிருக்கும் மனைகளை குடியிருக்கும் விவசாயிகளுக்கே சொந்தமாக்க வேண்டுமென்று கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய போராட்டம், அவர்கள் செய்த தியாகம், அதுதான் அன்றைய திமுக அரசு சட்டம் கொண்டு வர நிர்ப்பந்தமாக அமைந்தது.
தமிழகத்தில் குடிசை மக்களுக்கு மனைப்பட்டா கேட்டால் வங்கத்தையும், கேரளத்தையும் காட்டுகிறார். திமுக வுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு இது தான் கலைஞர் தரும் பதிலா? பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்குக்கு விலையைச் சொல்வதா?
- ஜி.ராமகிருஷ்ணன்,
மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)
தமிழ்நாடு மாநிலக்குழு

மார்ச் 1- விவசாயிகள் மறியலில் மலைவாழ் மக்களும் பங்கேற்கின்றனர்

அனுபவ நிலத்திற்கு பட்டா - மனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கை களை வற்புறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மார்ச் முதல் தேதி தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகம்  முன்பு நடத்த உள்ள மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் பங்கேற்பது என சங்கத்தின் மாநிலக்குழு  முடிவு செய்துள்ளது. இம்மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்களை ஈடுபடச் செய்திட முயற்சிகளை மேற்கொள்வதென சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் எஸ்.பழனிச்சாமி தலைமையில் அரூரில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு எம்.எல்.ஏ, மாநிலப் பொருளாளர் எம்.அழகேசன் உட்பட மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
மலைப் பகுதிகளில் பட்டா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடை ஆணை 1168-ஐ ரத்து செய்து பட்டா வழங்க வேண்டும்; வன உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்; ஆதிவாசி மக்களுக்கு நில உரிமையும் - வன உரிமையும் வழங்க வகை செய்யும் வன உரிமைச் சட்டம் 2006-ஐ நடைமுறைப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்; சென்னை உயர்நீதிமன்றம் இச் சட்டத்தின் கீழ் பட்டா கொடுக்க விதித்துள்ள தடை உத்தரவை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; மலையடிவாழ் பகுதிகளில் வனவிலங்குகளால் வேளாண் உற்பத்தி அழிக்கப்படுவதும், மனித உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வரும் நிலையில், இத்தகைய பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதிலும் அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் நடந்து கொள்கின்றனர்; வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறாமல் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை உணவுப் பயிர்களில் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
குறுமன்ஸ் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடிப்பு
தமிழ்நாட்டில் குறுமன்ஸ், காட்டு நாயக்கன், மலைவேடன், கொண்டாரெட்டி ஆகிய பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கப்படுவது இல்லை. இதுகுறித்து அனைத்து மாவட்ட அதிகாரிகளிடமும் நேரில் புகார் செய்தும், பல கட்ட போராட்டங்களை நடத்தியும் தீர்வு காணப்படுவதற்குப் பதிலாக கோட்டாட்சியர்கள் சிக்கலான உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கோட்டாட்சியர் மாவட்ட விழிப்புணர்வு குழுவால் மெய்த்தன்மை உறுதி செய்யப்பட்ட 21 நபர்களின் வாரிசுகளுக்கு குறுமன்ஸ் சான்றிதழ் தர மறுத்து உத்தரவு வெளியிட்டுள்ளார். சிவகாசி கோட்டாட்சியர், காட்டு நாயக்கன் சமுதாயத்தை சார்ந்த 15 நபர்களின் மனுக்களை நிராகரித்து நிரந்தர உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை மாநகரில் பல தலை முறைகளாக வசித்துவரும் பழங்குடியினத்தவருக்கு கூட சான்றிதழ் மறுக்கப்படுகிறது.
கல்வியாண்டு முடியும் நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்து வெளியே வரும் மாணவர்களின் எதிர்காலம் இருண்ட நிலைக்கு தள்ளப்படும் ஆபத்து இதனால் ஏற்பட்டுள்ளது. மேற்குறித்த பிரச்சனையில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு பொருத்தமான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு தமிழக அரசை மலைவாழ் மக்கள் சங்க மாநிலக்குழு கோருகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் மாற்றம்
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராக பெ.சண்முகம், மாநில பொதுச்செயலாள ராகபழனிச்சாமி, துணைச் செயலாளர்களாக ஆ.பொன்னுசாமி, அண்ணாமலை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆற்றில் நீந்தி சென்று பிணங்களை புதைக்கும் துயரம்

பழனி அருகேயுள்ள பாலசமுத்திரத்தில் ஆற்றை நீந்திக் கடந்து, பிணங்களை புதைக்கும் அருந்ததிய மக்களின் துயரத்தைக் கேள்விப்பட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தூதுக்குழு அம்மக்களை சந்தித்தது.
அது பற்றிய விபரம் வருமாறு:
பழனி அருகேயுள்ளது பாலசமுத்திரம் பேரூராட்சி. இந்த ஊரில் 1-வது வார்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருந்ததிய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இன்று வரை தீர்க்க முடி யாத பிரச்சனையாக உள்ளது மயான பிரச்சனை. ஊரில் யாராவது இறந்து போனால் அந்த பிணத்தை அருகில் உள்ள ஆற்றில் நீந்திச் சென்றுதான் ஆற்றின் அக்கறையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்வார்கள். இந்த ஆற்றில் எப் போதும் கழுத்தளவு தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். இதே போல அருகேயுள்ள குரும்பபட்டியில் வசிக்கும் அருந்ததிய மக்களும், இராமநாதநகர் மக்களும், குறவன்பாறை ஆகிய பகுதி மக்களும் நீந்திச் சென்றுதான் இந்த மயா னத்தில் பிணங்களை அடக்கம் செய்வார்கள். இது சம்பந்தமாக இப்பகுதி அருந்ததிய மக்கள் பல முறை அரசு அதிகாரிகளிடம் மனுக் கொடுத்தும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் சில ஆங்கில மற்றும் தமிழ்ப் பத்திரிகைகளில் செய்தி வந்தது. இந்த செய்தியைக் கேள்விப்பட்டவுடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.பாண்டி, பழனி ஏரியாச் செயலாளர் கே. அருள்செல்வன், பழனி நகர்மன்றத் தலைவர் வி.ராஜமாணிக்கம் ஆகியோர் கொண்ட தூதுக்குழுவினர் 1-வது வார்டு பாலசமுத்திரம் மக்களை நேரில் சந்தித்து இந்தப் பிரச்சனை சம்பந்தமாக விசாரித்தனர். இதனையடுத்து ஆற்றின் அக்கறையில் உள்ள சுடுகாட்டையும் சென்று பார்வையிட்டு வந்தனர்.
பின்னர் இப்பிரச்சனை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தலைவர்கள் கூறினர்.
அதனடிப்படையில், அருந்ததிய மக்களுக்கு மயானம் கிடைத்திட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பி.சம்பத் அரசை வலியுறுத்தியுள்ளார். (18.2.2010 தீக்கதிர் செய்தி)

சிபிஎம் தொடர் முயற்சியால் தலித் மக்களுக்கு மின்சாரம் கிடைத்தது

தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசியின் தொகுதிக்கு உட்பட்ட பூதகுடியில், அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெற்றும், மின் வசதியில்லாததால் அதைப் பயன்படுத்த முடியாத நிலையில் ஒரு பகுதி தலித் மக்கள் இருந்தனர்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இப்பிரச்சனை தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளையும், மாவட்ட நிர்வாகத்தையும் அணுகி தொடர்ந்து முறையிட்டதன் அடிப்படையில், ஓராண்டாக தவித்த மக்களுக்கு, ஒரு வழியாய் மின்சாரம் கிடைத்துள்ளது. மின்வாரிய அதிகாரி கள் புதனன்று மின்கம்பங்களை நட்டு, மின்சார இணைப்பு வழங்கினர்.
இதில், இலவச மின்சாரம் பெற்ற தலித் மக்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

கொடுவாயில் தலித்துக்களுக்கு முடிவெட்டிவிட மறுக்கும் கொடுமை

பொங்கலூர் ஒன்றியம் கொடுவாயில் தலித்துகளுக்கு முடிதிருத்த மறுக்கும் தீண்டாமையைக் கைவிட வலியுறுத்தி பொதுக் கூட்டம் நடைபெற்றது. திங்களன்று (15.2.2010) தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடந்த இப்பொதுக் கூட்டத்துக்கு சிஐடியு பனியன் சங்கச் செயலாளர் ஜி.சம்பத் தலைமை தாங்கினார்.
தலித் மக்களுக்கு எதிராக தீண்டாமையைக் கடைப்பிடிப்பது சட்டப்படி குற்றம். குறிப்பாக கொடுவாயில் ராகம் சலூன் என்ற முடிதிருத்தும் கடையில் தலித் இளைஞர்களுக்கு முடிதிருத்த கடை உரிமையாளர் மறுப்பதற்கு எதிராக கடந்த டிசம்பர் 25, 2009 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மறுபுறத்தில், இந்த தீண்டாமையை நியாயப்படுத்தி, கொடுவாயைச் சேர்ந்த வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மூன்றே நாட்களில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று திருப்பூர் வட்டாட்சியர் உறுதியளித்தார். எனினும் 50 நாட்கள் கடந்த பின்னும் பழைய நிலை நீடிக்கிறது. முடிதிருத்த மறுக்கும் தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நிர்வாகமும், காவல்துறையும் வாக்குறுதி அளித்தபடி நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்து வருகின்றன. இனியும் இதே நிலை தொடர்ந்தால் போராட்டம் தொடரும் என்று பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் கடுமையாக எச்சரித்தனர்.
மேலும் தீண்டாமை கொடுமைக்கு எதிராக- ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டும் என்றும் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், திருப்பூர் எம்.எல்.ஏ. சி.கோவிந்தசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் பி.ராமமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.மோகன், விவசாயிகள் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.லோகநாதன், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் எஸ்.கந்தவேல் ஆகியோர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.

பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பாமல் தலித் மக்களுக்கு தமிழக அரசு அநீதி! - எஸ்.கே.மகேந்திரன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

பின்னடைவு பணி யிடங்களை நிரப்பாமல் தலித் மக்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்  எஸ்.கே.மகேந்திரன் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.
அருந்ததியருக்கான உள்ஒதுக்கீட்டை அனைத்து அரசுத்துறைகளிலும் அமல்படுத்த வலியுறுத்தி திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்  தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவற்றின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று எஸ்.கே.மகேந்திரன் எம்எல்ஏ மேலும் பேசியதாவது:
அருந்ததியருக்கான  உள்இடஒதுக்கீடு அரசாணை வெளியிட்ட பின்னரும் பல துறைகளில் இன்னும் அருந் ததியருக்கான  உள்இடஒதுக்கீடு அமலாக்கப்படவில்லை. குறிப்பாக கடந்த ஆண்டு இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் நடந்த போது ஒதுக்கீடு வழங்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் தலையிட்ட பின்புதான் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
மாநில அரசுகள் சட்டத்தை போடுவதுடன் அதை முறையாக அமலாக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு எந்த துறையிலும் முறையாக அமலாக்கப்பட வில்லை. சமீபத்தில் தமிழகத்தில் உள்ள 71 துறைகளில் மட்டும் ஆய்வு செய்தபோது தாழ்த்தப்பட்டவர்களுக்கான பின்னடைவு பணியிடங்கள் 21 ஆயிரம் என கண்டறியப்பட்டது.
மீதமிருக்கக் கூடிய துறைகளில் ஆய்வு செய்தால் 50 ஆயிரத்தை தாண்ட வாய்ப்பு உள்ளது. இது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட கூடிய சமூக அநீதி. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மட்டும் 7ஆயிரத்து இருநூறு பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
இதுபோன்ற பின்னடைவு பணியிடங்களை முழுமையாக நிரப்பும் போதுதான் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், அருந்ததியர்களுக்கும் சமூக நீதி வழங்கப்பட்டதாக அர்த்தம்.
இவ்வாறு எஸ்.கே.மகேந்திரன் எம்எல்ஏ பேசினார்.

சாதிவெறியர்களை கைதுசெய்யக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி மறியல்- 150 பேர் கைது

ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது கொசவபட்டி. இப்பகுதி சிபிஎம் கிளைச் செயலாளராக இருப்பவர் பி.செல்வராஜ். இவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். காப்பிளியபட்டியில் தண்ணீர் வழங்குவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் ஊராட்சித் தலைவர் இளங்கோவன் மற்றும் ஆதிக்க சாதியினர் இவரை அழைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பி.செல்வராஜ் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 10 நாட்கள் சிகிச்சை பெற்றார். ஆனால், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவர் இளங்கோவன் மற்றும் ஆதிக்க சாதியினர் மீது வழக்குப் பதிய மறுத்து விட்டனர். மாறாக, புகார் கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர் மீதே பொய்வழக்கு போட்டனர்.
இதையடுத்து, போலீசாரின் இந்த அராஜக நடவடிக்கையைக் கண்டித்து செவ்வாயன்று(16.2.10) ஒட்டன்சத்திரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறியல் நடைபெற்றது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.ஆர்.கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் வி.குமரவேல், எம்.கருணாகரன், தாலுகா செயலாளர் சின்னக்கருப்பன், தாலுகா குழு உறுப்பினர்கள் எஸ்.பி.இராமசாமி, பழனியப்பன், பெருமாள் உள்ளிட்ட 150 பேர் மறியலில் கலந்து கொண்டனர். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளருமான பி.சம்பத், மாவட்டச் செயலாளர் என்.பாண்டி ஆகியோர் மறியலை ஆதரித்துப் பேசினர்.இந்த மறியலில் கலந்து கொண்ட 150 பேரையும் ஒட்டன்சத்திரம் போலீசார் கைது செய்தனர் .

வெள்ளத்தாலும் பாதிக்கப்படும் தலித்துகள்!

சமூக ரீதியான ஒடுக்குமுறைகளை காலம் காலமாக சந்தித்து வரும் தலித் மக்கள், இயற்கைப் பேரழிவுகளாலும் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர். இது தொடர்ந்து வெளிவரும் ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்படுகிறது.
உ.பி. மற்றும் பீகார் மாநிலங்களில் ஆண்டுதோறும் ஏற்பட்டு வரும் வெள்ளப்பெருக்குகள் தலித்துகளையே அதிகமாகப் பாதிக்கிறது என்பதும், நிவாரண நடவடிக்கைகளிலும் சமூக ரீதியான பாகுபாடுகள் உள்ளன என்பதும் பழைய செய்திகள். கடந்த ஆண்டு ஆந்திராவை உலுக்கி எடுத்த வெள்ளம் தலித்துகள் வாழும் பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 2009ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கர்நூல், மகபூப்நகர், குண்டூர் மற்றும் கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களைக் கடுமையாகத் தாக்கியது. பலநாட்கள் கடுமையான இருட்டில் ஆந்திர மக்கள் பொழுதைக் கழித்தனர். இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். எக்கச்சக்க
மான ஏக்கர்களில் இருந்த பயிர்கள் நாசமாகின. கடந்த நூறு ஆண்டுகளில் இவ்வளவு பயங்கரமான வெள்ளத்தை ஆந்திரா பார்த்ததில்லை. ஆந்திர மாநிலம் உருவானபிறகு இதுதான் பெரும் சேதத்தை ஏற்படுத்திய இயற்கைப் பேரழி
வாகும். பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் நிவாரணத்தைப் பெறவில்லை.
இந்தப் பிரச்சனைகள் பின்னுக்குப் போகும் வகையில் தனித் தெலுங்கானா கோரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தர வேண்டும் என்று கோரி மக்களைத் திரட்டும் வகையில் கர்நூல் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியுள்ளது. மற்ற மாவட்டங்களில் அத்தகைய இயக்கங்கள் நடைபெறவுள்ளன. மற்ற அனைத்து கட்சிகளுமே தெலுங்கானா விவகாரத்தில் மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடும் பணியை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலை குறித்த ஆய்வுகள், அதிர்ச்சிக்குரிய விபரங்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.
ஏழைகளை, குறிப்பாக தலித்துகளைத்தான் வெள்ளம் கடுமையாகப் பாதித்துள்ளது என்பதுதான் அந்த விபரங்கள். ஆந்திர வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 308 கிராமங்களில் 1,090 குடியிருப்புப் பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. பல்வேறு தலித் அமைப்புகள் உள்ளிட்ட 13 தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தின. தலித்துகளுக்கு ஏற்பட்ட இழப்பு, சமமான இழப்பீடு விநியோகம், நிவாரண நடவடிக்கைகளின்போது மரியாதை மற்றும் பாரபட்ச அணுகுமுறை ஆகிய அம்சங்களைக் கண்டறிய இந்த ஆய்வு முயன்றது. தலித்துகள் எந்தவகையிலாவது நிவாரணத்தைப் பெற்றுள்ளார்களா என்பதைத்தான் அந்த ஆய்வு கண்டறிய விரும்பியது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 38 விழுக்காடு குடும்பங்கள் தலித்துகளின் குடும்பங்கள்தான். வெள்ளத்தில் பலியானவர்கள் மற்றும் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாகக் கருதப்படுபவர்கள் ஆகியோரில் 55 விழுக்காட்டினர் தலித்துகளாவர். வெள்ளம் தாக்கும்முன்பே மோசமான வீடுகளில்தான் தலித்துகள் வாழ்ந்து வந்தார்கள். அந்த வீடுகளையும் வெள்ளம் விட்டுவைக்கவில்லை. வெள்ளத்தின் தாக்குதலால் வீடுகளை இழந்தவர்களில் பாதிப்பேர் தலித்துகள்தான் என்று ஆய்வு கூறுகிறது. நிலங்களில் பயிர்களை இழந்தவர்களில் குறைவான அளவில்தான் தலித்துகள் பாதிக்கப்பட்டார்கள். பயிர்ச் சேதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 28 விழுக்காடுதான் தலித்துகள். அவர்கள் கைகளில் நிலங்கள் இல்லை என்பதுதான் இவ்வளவு குறைவாக அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்குக் காரணமாகும்.
தாழ்வான பகுதிகளில்தான் பொதுவாக தலித்துகள் வாழ்கின்றனர் என்பதுதான் அதிகமான பாதிப்புகளுக்குக் காரணம் என்கிறார் தொண்டு நிறுவனமொன்றைச் சேர்ந்த ஜி.நரசிம்மா. நிவாரணப் பணிகளில் தலித்துகளுக்கு  முன்னு
ரிமை தர வேண்டும். இருப்பிடங்களுக்கான மனையிடங்களை அவர்களுக்கு முதலில் வழங்கிட வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம் என்கிறார் அவர். முன்னுரிமை பெற வேண்டிய இவர்கள், பல கிராமங்களில் கடைசியாகத்தான் நிவாரணம் பெறும் அவலம் உள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், பல தொண்டு நிறுவனங்களே இதர பகுதியினரைப் பார்த்து நிவாரணம் வழங்கிவிட்டுதான் தலித் பகுதிகளுக்கு சென்றிருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட தலித் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் இன்னும் பள்ளிக்கூடங்களுக்கு திரும்பவில்லை. பள்ளிக்கூடங்களுக்கு திரும்பிய குழந்தைகளுக்கும் படிப்பதற்கு போதிய வசதி இல்லை. அவர்களுக்கு இந்த ஆண்டு இறுதித்தேர்வில் கூடுதல் மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. அதோடு, இத்தகைய பேரழிவுகள் ஏற்படும்போது நிவாரண நடவடிக்கைகளில் சாதிப்பாகுபாடு பார்க்காமல் இருப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்றும் ஆய்வின் முடிவாக தெரிவித்துள்ளனர்.

வெண்மணி தியாகிகள் நினைவிட நிதி: ரூ.1 லட்சம் வழங்கிய சாலைப் பணியாளர்கள்

சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டு நிறைவுப் பொதுக்கூட்டம் திருப்பூர் டவுண் ஹாலில் நடை பெற்றது. மாநிலத் தலைவர் மா.சண்முகராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளரும்- அரூர் சட்டமன்ற உறுப்பினருமான டில்லிபாபு, சிஐடியு மாநிலச் செயலாளர் பா.விக்ரமன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அப்போது அவர்களிடம் வெண்மணி தியாகிகள் நினைவக கட்டட நிதியாக ரூ. 75 ஆயிரம் வழங்கப்பட்டது. ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ. 25 ஆயிரத்துடன் சேர்த்து, சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் இதுவரை ரூ. 1 லட்சம் நிதி வழங்கப்பட்டு உள்ளது.

ஆதிதிராவிட மாணவிகளுக்கு விடுதி: ஜி.லதா எம்எல்ஏ கோரிக்கை ஏற்பு

வேலூர் மாநகரத்தில் ஊரிஸ், முத்துரங்கம், டி.கே.எம், ஆக்சீலியம் மற்றும் கல்லூரிகளில் ரெகுலர், மாலை நேர கல்லூரிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பும், பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்பும் படித்து வருகின்றனர்.
இதில் ஆயிரக்கணக்கான ஆதிதிராவிட மாணவர்களுக்கு விடுதி வசதி கிடையாது. இவர்கள் தங்களுக்கு அரசு விடுதி துவங்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இதுபற்றி குடியாத்தம் எம்.எல்.ஏ., ஜி.லதா, சட்டமன்றத்திலும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சரிடமும் கோரிக்கை விடுத்து இருந்தார். இக்கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, வேலூர்  மாநகரில் கல்லூரி மாணவிகளுக்கு விடுதி அமைக்க இடம் தேர்வு செய்தது.
பல இடங்களில் பார்வையிட்டும் இடம் இல்லாததால் வேலூர் முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் இடம் உள்ளது எனவும் தஞ்சாவூர் அரசு கல்லூரியிலும், கரூர் அரசு கல்லூரியிலும் மற்றும் வாலாஜா அரசு கல்லூரியிலும் மாணவிகளுக்கான விடுதி உள்ளதைபோல் வேலூரிலும் விடுதி அமைக்க வேண்டுமென ஜி.லதா எம்எல்ஏ, மாவட்ட ஆதிதிராவிட அலுவலரிடம் எடுத்துக் கூறினார்.
இக்கோரிக்கையை ஏற்று முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கு விடுதி தேர்வு செய்ய மாவட்ட வருவாய் அலுவலர் சரவண வேல்ராஜ், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் சொர்ணலதா, வேலூர் தாசில்தார் அருண் ஆகியோர், ஜி.லதா எம்எல்ஏ-வுடன் சென்று, முத்துரங்கம் அரசு கல்லூரி வளாகத்தில் 1 ஏக்கர் 10 சென்ட் இடத்தை தேர்வு செய்தனர். இதில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் உடன் இருந்தார்.

மனிதனை மிருகமாக்கும் சாதிவெறி: பி.சம்பத்

அருந்ததிய மக்களுக்கு அரசு அறிவித்த உள்இடஒதுக்கீட்டை வேலைவாய்ப் பில் முழுமையாக அமலாக்கக் கோரி  தமிழகம் முழுவதும் திங்களன்று (15.2.10) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதனொரு பகுதியாக ஈரோட்டில்  தலைமை மின்வாரிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப் புக்குழு உறுப்பினர் கே.குப்புசாமி தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டைக் கல்வித் துறையில் மட்டுமல்லாமல்  வேலைவாய்ப்புகளிலும் அமலாக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் 30 இடங்களில் இன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.
அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 56 பேர் மருத்துவக் கல்லூரியிலும், 1165 பேர் பொறியியல் கல்லூரியிலும், சேர வாய்ப்புக் கிடைத்ததை மட்டுமே அடிக்கடி சுட்டிக்காட்டி முதல்வர் கலைஞர் பேசுகிறார். அதைநாம் மறுக்கவில்லை, ஆனால் மின்வாரியம், இடைநிலை ஆசிரியர், கல்லூரி ஆசி ரியர், பட்டதாரி ஆசிரியர் என பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைக்கக் கூடிய வேலைவாய்ப்புகளில் அருந்ததிய இளைஞர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. உள்ஒதுக்கீடு குறித்த அரசின் உத்தரவு வெளியாவதற்கு முன்பே வேலை நியமன தயாரிப்புகள் துவங்கி விட்டதாக கலைஞர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டம் வெளியான தேதியிலிருந்துதான் இது அமலாக வேண்டும். உயர்நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பு வழங்கிய பிறகும் தமிழக அரசுக்கு இதுவரை தீர்ப்பு உறைக்கவில்லை.
தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளை இங்கு பட்டியலிட்டார்கள். பல கிராமங்களில் அருந்ததியர் மக்களுக்கு மயானமோ அல்லது மயானப் பாதையோ இல்லை. திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா வாலசமுத்திரம் என்ற கிராமத்தில் அருந்ததியர் சடலத்தை வறட்டாறு நதி வெள்ளத்தில் இறக்கி கொண்டு செல்லும் கொடுமை வெளிவந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வேலாயுதபுரம் என்ற கிராமத்தில் தலித் மக்கள் ஆண் நாய் வளர்க்கக் கூடாதாம். வளர்த்தால் அந்த நாய் ஆதிக்க சாதித் தெருக்களில் பெண் நாயுடன் உறவு கொண்டு குட்டி போடுமாம். அந்தக் குட்டி பெண் நாயுடன் சுற்றித் திரிந்து தெருவே தீட்டாகிவிடுமாம். எனவே தலித் தெருவில் உள்ள ஆண் நாய்களை அடித்துக் கொன்றார்கள். சாதிவெறி மனிதருள் மிருக வெறியை ஏற்படுத்த, தற்போது மிருகங்களுக்கும் சாதி ஏற்படுத்தி ஒடுக்குகிறார்கள். தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியும்தான் இந்தக் கொடுமைக்கு அந்த கிராமத்தில் முடிவு கட்டியது.
இப்படி எண்ணற்ற கொடுமைகளைப் பட்டியலிட முடியும். ஈரோடு மாவட்டத்தில் புனிதா என்ற தலித் சிறுமி படுகொலை செய்யப்பட்டு பல ஆண்டுகளாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக வீதிகளில் உலா வருகிறார்கள். பல சாதனைகளைச் செய்ததாகப் பட்டியலிடும் தமிழக முதல்வர் இத்தகைய தீண்டாமைக் கொடுமை களுக்கு முடிவு கட்ட ஏன் முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை?
தொழிலாளி வர்க்கத்தின் பிரிக்க முடியாத அங்கம் தலித்துக்கள் ஆவர். குறிப்பாக அருந்ததியர் மக்கள். எனவே, தொழிலாளி வர்க்கத்தின் எந்த அங்கமும் செயல்படாமல் இருப்பதை செங்கொடி இயக்கம் ஏற்காது. அது போல உழைப்பாளிகளான தலித் மக்கள் சமூக ரீதியாக ஒடுக்கப்படுவதற்கு எதிராகவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும், உறுதியாகப் போராடுவோம். தீண்டாமை ஒழிப்பு தொழிலாளி வர்க்க ஒற்றுமைக்கு அவசியமானதாகும். இப்பார்வையோடு சமூக, பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம்.
இவ்வாறு பி.சம்பத் பேசினார்.

சுடுகாட்டை அடைய ஆற்றைக் கடக்கும் அருந்ததியர்கள்

1993 ஆம் ஆண்டு, திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரத்தைச் சேர்ந்த ஆர்.முருகேசன் என்பவர் மரணமடைகிறார். அவரது உடலை எடுத்துக் கொண்டு வழக்கம் போல வரட்டாற்றைத் தாண்டி செல்ல முற்படுகிறார்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள். அப்போது நீர்வரத்து அதிகமாக இருந்ததால் முருகேசனின் இறந்த உடல் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறது. அவரது உடலை சுமந்து சென்று கொண்டிருந்தவர்களோ தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டியிருந்தது.
தங்கள் பகுதியிலிருந்து சுடுகாட்டிற்கு வேறு பாதை இல்லாததால் சாலை வசதி அமைத்துத் தாருங்கள் என்ற அருந்ததியர்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதர சாதியினருக்கு அந்தக் கிராமத்தில் மயானம் உள்ளது. தனி மயானம் உள்ள தலித்துகளோ அதற்குப் போகும் பாதை இல்லாததால் ஆற்று நீரில் இறங்கி மயானத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர். பாலம் அமைத்துத் தருகிறோம் என்று நிர்வாகம் கொடுத்த உறுதிமொழி, உறுதிமொழியாக மட்டுமே இருக்கிறது.
பாலசமுத்திரம் பேரூராட்சியில் மொத்தம் 700 குடும்பங்கள் உள்ளன. அதில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 250 குடும்பங்கள். இந்தப்பிரச்சனை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த எம்.வேலுசாமி. மேலும் கூறிய அவர், இதற்கு முன்பாக பட்டா நிலமொன்றில் அருகிலிருந்த சாலையை நாங்கள் பயன்படுத்தி வந்தோம். ஆனால் அந்த நிலத்திற்குச் சொந்தமானவரோ, சாலையின் நடுவில் சாமிசிலை ஒன்றை வைத்துள்ளார். பிணங்கள் அந்த வழியாகப் போக முடியாது என்றும் கூறிவிட்டார். அப்போதிருந்து ஆற்றில் இறங்கிதான் செல்கிறோம் என்றார்.
2003 ஆம் ஆண்டில் வருவாய் அதிகாரி மற்றும் தாசில்தார் ஆகிய இருவரும் இந்த பகுதிக்கு வந்து சென்றுள்ளார்கள். ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுகிறோம் என்றார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. பலமுறை பிணங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மழை காரணமாக மயானத்திற்கே செல்லாமல் பல பிணங்கள் ஆற்றின் கரையிலேயே எரிக்கப்பட்டன. மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. வழக்கம் போலவே மாவட்ட நிர்வாகம், இந்தப் பிரச்சனை பற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
செய்தி ஆதாரம் - டைம்ஸ் ஆப் இந்தியா.

உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி எழுச்சி ஆர்ப்பாட்டம்

இடைநிலை ஆசிரியர், கல்லூரி ஆசிரியர், மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களில் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்காததை கண்டித்தும், அனைத்து அரசுத் துறைகளிலும் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீட்டை அமலாக்க வேண்டும்; பின்ன டைவு பணியிடங்களை நிரப்பவேண்டும்; அருந்ததியர்களுக்கு சாதிச் சான்றிதழை முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், 15.2.2010 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
விருதுநகர்
அதனொரு பகுதியாக விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமுஎகச மாவட்டத் தலைவர் தேனிவசந்தன் தலைமை வகித்தார். அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் மாநில அமைப்பாளர் கு.ஜக்கையன் துவக்கவுரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி சிறப்புரை ஆற்றினார்.
அருந்ததியர் ஜனநாயக விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் கௌதமன், எம்.ஊர்க்காவலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச்செயலா ளர் ஜே.ஜெ.சீனிவாசன், மா.பாண்டியன், பெருமாள்சாமி, விஜயபாண்டி, முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். முத்துக்குமார் நன்றி கூறினார்.
திருவில்லிபுத்தூர்
திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமுஎகச-வின் மாவட்டக்குழு உறுப்பினர் மரியடேவிட் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.முத்துவேலு துவக்கவுரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எம்.திருமலை கண்டன உரையாற்றினார். விநாயகமூர்த்தி, ரேணுகாதேவி, முனியப்பன், பி.முருகேசன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
காரியாபட்டி
காரியாபட்டியில் சிவபாக்கியம், ஆறுமுகம் ஆகியோர், ஆர்ப்பாட்டத்திற்கு தலை மை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சேகர் பேசினார். தாலுகா செயலாளர் வி.முருகன் கண்டன உரையாற்றினர். இதில், தமிழ்ப்புலிகள் மாவட்டத்தலைவர் கே.தமிழரசிகனி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கு.பாண்டியராசு, தமிழ்ப்புலிகள் சார்பில் பழனிமுருகன், வாலிபர் சங்கத் தின் நிர்வாகிகள் சுரேஷ், ரமேஷ், மாதர்சங்க செயலாளர் பஞ்சு ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
திருத்தங்கல்
திருத்தங்கல்லில் சிஐடியு கன்வீனர் எஸ்.மாடசாமி, ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ராமமூர்த்தி துவக்கவுரை ஆற்றினார். மாதர் சங்க மாவட்டத் தலைவர் சி.ஜோதிலட்சுமி கண்டன உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.பாண்டி, வாலிபர் சங்கம் சார்பில் கே.ஆர். பாண்டி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆலங்குளம்
ஆலங்குளத்தில் முனியசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்து, கரிசல் இயக்குநர் முனியாண்டி பேசினார். தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.சாமுவேல்ராஜ், ஒன்றியச் செயலாளர் எம்.சுந்தர பாண்டியன், அருந்ததியர் ஜனநாயக முன்னணியின் மாவட்டச் செயலாளர் பரமசிவம், எழுத்தாளர் பெருமாள்சாமி, சிஐடியு கன்வீனர் சேர்வை ஆகியோர் உட்பட பலர் பங் கேற்றனர்.
இராஜபாளையம்
இராஜபாளையத்தில் சிஐடியு கன்வீனர் சக்திவேல் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ஜி.கணேசன் துவக்கவுரை ஆற்றினார். மாதர் சங்கம் சார்பில் கனகமுத்து, ஆர்.முருகன், பொன்ராஜ், சுப்பிரமணியன், அம்மாசி, பால்ராஜ், பொன்னுச்சாமி, அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் பெருமாளம்மாள் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். இராஜபாளையம் மேற்கு ஒன்றியத்தில் ஏ.கருப்பையா தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் டி.நீராத்திலிங்கம் துவக்கவுரை ஆற்றினார். வாலிபர் சங்க மாநில துணைத் தலைவர் என்.முத்துராஜ் நிறைவுரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ.ராமர், கந்தசாமி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பில் ஜீவானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துவக்கி வைத்து என்.ஏ.சிங்கராஜ் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் சி.ஜெயக்குமார், சின்னத்தம்பி, அமலன், கன்னியம்மாள் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
சாத்தூர்
சாத்தூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.சுப்பாராஜ் தலைமை தாங்கினார். மாதர் சங்க மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் கண்டன உரையாற்றினார். மாதர் சங்க வட்டச் செயலாளர் சரோஜா, அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன், சீனிவாசன், விஸ்வநாத் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டையில் மாரி, சந்திரன், இளங்கோ ஆகியோர், ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தனர். ராஜாராம் துவக்கவுரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எம்.தாமஸ் கண்டன உரையாற்றினார். இதில் கணேசன், ளகாளிமுத்து, மகராசி, நாச்சியார் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
பந்தல்குடி
பந்தல்குடியில் எம்.ஞானப்பிரகாசம், ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ஆர்.அண்ணாத்துரை துவக்கவுரை ஆற்றினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் எஸ்.ஞானகுரு கண்டன உரையாற்றினார். மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பூங்கோதை, தமிழ்ப் புலிகள் ஒன்றியச் செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
எரிச்சநத்தம்
எரிச்சநத்தத்தில் விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் பி.நேரு, ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.முத்துக்குமார் துவக்கவுரை ஆற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சேகர் கண்டன உரையாற்றினார். கோவிந்தராஜ், மாரியப்பன், தமிழ்ப்புலிகள் சார்பில் முத்தையா, ஆதித் தமிழர் பேரவையின் சார்பில் வேல்முருகன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்.ஆர்.நகர்
ஆர்.ஆர்.நகரில் கே.குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.சி.பாண்டியன் துவக்கி வைத்துப் பேசினார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.விஜயமுருகன் சிறப்புரை ஆற்றினார். இதில் பாலமுருகன், ஆரோக்கியராஜ் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
வன்னியம்பட்டி
வன்னியம்பட்டி விலக்கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். துவக்கி வைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.பால்கண்ணன் பேசினார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.குருசாமி கண்டன உரையாற்றினார். புரட்சிப் புலிகள் சார்பில் கோவிந்தன், சந்திரன், இருளப்பன், இசக்கி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
சிவகாசி
சிவகாசியில் எஸ்.மாடசாமி, ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்தார். புரட்சி புலிகள் அமைப்பின் மாநில அமைப்பாளர் எஸ்.கே.பழனிச்சாமி துவக்கவுரை ஆற்றினார். நகரச் செயலாளர் பி.என்.தேவா கண்டன உரையாற்றினார். சிஐடியு சார்பில் ஜே.லாசர், வாலிபர் சங்க நகரத் தலைவர் கே.முருகன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
தேனி மாவட்டம்
தேனியில் ஸ்டேட் பேங்க் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் டி.வெங்கடேசன் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொறுப்பாளர் ஏ.லாசர் சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ராஜப்பன், அருந்ததியர் மக்கள் முன்னேற்ற இயக்க மாவட்ட அமைப்பாளர் எம்.ராஜேந்திரன், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் வி.வீரபாண்டியன், தமிழ்ப்புலிகள் மாவட்டச் செயலாளர் சி.ஆதிநாகராஜ், ஏஎச்ஆர்எப் ஒருங்கிணைப்பாளர் பி.முருகேசன், எஸ்.எம்.சுரேஷ்குமார், மாதர் சங்க தேனி மாவட்டச் செயலாளர் எம்.விஜயா, சி.மஞ்சுதா உட்பட நூற்றுக்கும் மேற்பட்ளடோர் பங்கேற்றனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
திருச்சி ஜங்ஷன் காதி கிராப்ட் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் மாநகரச் செயலாளர் கே.அண்ணாதுரை தலைமை வகித்தார். கிளைச் செயலாளர்கள் என்.நாகராஜ், சி.குமார், சி.சந்திரபிரகாஷ், எம்.வள்ளுவன், ஏ.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் எஸ்.ஸ்ரீதர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ்.இந்துராஜ், ஆர்.சம்பத், அன்வர் உசேன், பகுதிச் செயலாளர்கள் வீரமுத்து, குமார், ஜெயபால், ராஜேந்திரன், கார்த்தி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வன், மாவட்டத்தலைவர் சசிகுமார், மாதர் சங்க நிர்வாகிகள் சித்ரா, ரேணுகா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம்
நெல்லை- பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். அருந்ததியர் மகாசபை தலைவர் மரியதாஸ் முன்னிலை வகித்தார். எஸ்.சி. எஸ்.டி., நலச்சங்க மாவட்டச் செயலாளர் பூ.கோபாலன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வீ.பழனி, சிஐடியு மாவட்டத் தலைவர் ம.ராஜாங்கம், மாவட்டச் செயலாளர் ஆர்.கருமலையான், எஸ்.சி., எஸ்.டி. மத்திய - மாநில அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலா ளர் அம்பேத்கர், மாவட்டத் தலைவர் ஹரிராம், மக்கள் கண்காணிப்பகம் மாவட்ட நிர்வாகி கணேசன் ஆகியோர் பேசினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.நன்மாறன் எம்எல்ஏ நிறைவுரையாற்றினார்.

கீரிப்பட்டி ஊராட்சியை புறக்கணிப்பதா? ஊராட்சித் தலைவர் பால்ச்சாமி வேதனை

தமிழகத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், விருதுநகர் மாவட்டம் கொட்டக்காச்சியேந்தல் கிராம ஊராட்சிகளுக்கு இடதுசாரிகளின் தொடர் முயற்சி மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதியின் உரிய தலையீடுகள் காரணமாக வெற்றிகரமாக தேர்தல் நடைபெற்று தலித் தலைவர்கள் அங்கு பொறுப்பிலே உள்ளனர்.
குறிப்பாக இந்த ஊராட்சிகளில் தேர்தல் நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தினர்.
வெற்றிபெற்ற ஊராட்சித் தலைவர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் 13.11.2006 அன்று தமிழக முதல்வர் தலைமையில் சமத்துவப் பெருவிழா நடைபெற்றது.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், கொட்டக்காச்சியேந்தல் ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகளிலிருந்து அரசின் எந்த ஒரு நலத்திட்டப்பணியும் தொய்வின்றி நடைபெற வேண்டும் என தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் இன்றைக்கு கீரிப்பட்டி ஊராட்சியில் செயல்படுத்த வேண்டிய பல்வேறு பணிகளுக்கு நிர்வாக ஒத்துழைப்பு இல்லை என கவலை தெரிவிக்கிறார் ஊராட்சித் தலைவர் பாலுச்சாமி.
இதுகுறித்து பல்வேறு விஷயங்களை சுட்டிக் காட்டியுள்ள பாலுச்சாமி, 2008-2009ம் ஆண்டில் தாம் கையெழுத்திட்டு 80 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்திட்டத்திற்கு பரிந்துரை செய்ததாகவும், அதில் ஒருவருக்குக் கூட இன்று வரை உதவித்தொகை கிடைக்கவில்லை என்கிறார்.
மேலும் அவர் கூறியதாவது:
தலித்மக்கள் வசிக்கும் தெருவிற்கு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டித்தர வேண்டுமென மாவட்ட ஆட்சியராக இருந்த ஜவஹரிடம் வலியுறுத்தியும், அது இன்றும் நிறைவேறவில்லை; இங்கு அரசின் சார்பில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம் மணமகன், மணமகள் அறைகள் இல்லாமல் வெறுமனே விடப்பட்டுள்ளது; சமையல் அறை இல்லை; மழையின் போது நனைந்து கொண்டே சமைக்கும் அவலம் உள்ளது.
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் கழிப்பறை ஒன்று 2006-2007ம் ஆண்டு கட்டிக்கொடுக்கப்பட்டது. இன்று வரை அது பூட்டப்பட்டே உள்ளது. இதற்கு மின்வசதி செய்து தரவில்லை. ரேசன் கடைக்கு மின் வசதி செய்துதரவில்லை. புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகத்திற்கும் மின்வசதி செய்துதரவில்லை.
அண்ணா மறு மலர்ச்சி திட்டப்பணிகள் சம்பந்தமாக ஊராட்சித் தலைவர் என்ற முறையில் என்னிடம் கலந்தாலோசிப்பதில்லை. வேலை முடிந்த பிறகு, அந்த வேலை நடந்துள்ளது, இந்த வேலை நடந்துள்ளது என்கிறார்கள். இலவச கேஸ் அடுப்பு  எத்தனை பயனாளிகளுக்கு வழங்கவேண்டும் என்று, லெட்டர் பேடில் எழுதிக் கொடுங்கள் போதும் என்றார்கள். கிட்டத்தட்ட 700 பயனாளிகளுக்கு வழங்க வேண்டுமென எழுதிக் கொடுத்தேன்; இன்னும் கேஸ் அடுப்பு கிடைக்கவில்லை.
இவ்வாறு பாலுச்சாமி தனது குமுறலை அடுக்கிக் கொண்டே போனார்.

சாதிவெறியர்கள் அராஜகம்: சிபிஎம் ஊழியர் மீது தாக்குதல்

ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது கொசவபட்டி. இப்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக பி.செல்வராஜ் உள்ளார். இவர் தலித் ஆவார்.
காப்பிளியபட்டியில் தண்ணீர் வழங்குவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் இவரை, ஊராட்சித் தலைவர் இளங்கோவன் கடுமையாக தாக்கியுள்ளார். அதனால் செல்வராஜுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு- செல்வராஜ், 10 நாட்கள் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் காவல்துறையினர் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்ய மறுத்துள்ளனர்.
இதுசம்பந்தமாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதுடன், பிப்ரவரி 16-ம் தேதி ஒட்டன்சத்திரத்தில் மறியல் போராட்டத்தையும் அறிவித்துள்ளது. இப்போராட்டத்தில் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.ஆர். கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

வாலிபர் சங்கத்திற்கு அம்பேத்கர் பாசறை நன்றி

கடலூர் மாவட்டத்தில், அரசமைப்புச் சட்ட சிற்பி அம்பேத்கர் சிலையை மீண்டும் நிறுவப்போராடிய வாலிபர் சங்கத்திற்கு புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறை பாராட்டும் நன்றியும் தெரிவித்தது.
இதுதொடர்பாக இந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கோ.நீலமேகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகா பழையபட்டிணம் கிராமத்தில் பொது இடத்தில் வைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் சிலையை அகற்றியே தீருவோம் என திட்டம் போட்டு தீண்டாமைத் தீயை மூட்டும் செயலில் சில மத பழமைவாதிகள் இறங்கியபோது, சகோதரர்களாக இணைந்து வாழ வேண்டிய தலித்-முஸ்லிம் மக்களிடையே மோதல் நடக்க இருந்த நிலையில் ஒருசில தலைவர்களே சிலையை அகற்ற ஒப்புதல் அளித்து சாதிவெறிக்கு துணைபோனது வேதனைக்குரியது. துரோகத்தால் தலித் மக்கள் நிலை குலைந்தபோது, சாதி வெறியரோடு கூட்டு சேர்ந்து வருவாய் துறையும், காவல்துறையும், தலித் மக்களுக்கு எதிராக களம் இறங்கியபோது ஒடுக் கப்பட்ட மக்களின் உரிமை தோழன் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிவரும் வாலிபர் சங்கத் தோழர்கள் டி.அமிர்தலிங்கம் தலைமையில் அணிதிரண்டு, பல கட்ட போராட்டங்கள் நடத்தி தலித் மக்களின் சுயமரியாதை காக்கவும், அம்பேத்கர் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் ஈடுபட்டதைப் பாராட்டுகிறோம்.
தலைவர்களின் சிலையை அவமரியாதை செய்வோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என தமிழக அரசு அறிவித்த நிலையிலும் இத்தகைய செயல் தொடர்கிறது.
சமூக மாற்றத்திற்காக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி இளைஞர்களை எழுச்சி பெற செய்யும் வாலிபர் சங்கம் சரியான நேரத்தில் தலையீடு செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அம்பேத்கர் சிலைக்கு சட்ட பாதுகாப்பு ஏற்படுத்தியதோடு அவரின் புகழுக்கு பெருமை சேர்த்தது. தலித் மக்களுக்காக போராட்டங்கள் நடத்தி சுயமரியாதை ஏற்படுத்தி தந்த இடதுசாரி பாதையில் அணி வகுக்கும் வாலிபர் சங்கத் தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு நீலமேகம் கூறியுள்ளார்.

தீண்டாமை ஒழிப்பு விருந்தல்ல, மருந்து! - பி.சம்பத்

பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் ஆகிய 4 ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தலித் பிரதிநிதிகள் ஊராட்சித் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டமை, உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் உடைப்பு, கோவை பெரியார் நகர் தீண்டாமைச்சுவர் உடைப்பு, அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத உள்இடஒதுக்கீடு போன்றவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தலித் மற்றும் அருந்ததியர் அமைப்புகளின் வற்புறுத்தல் - போராட்டங்களால் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு ஏற்றுக்கொண்டு நிறைவேற்றப்பட்டவையாகும்.
இவ்வாறு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை சிபிஐ(எம்) மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்கவே செய்தன. இவ்வாறு வரவேற்றதை அவ்வப்போது ‘முரசொலி’ பத்திரிகையும் மேற்கோள் காட்டி பல கட்டுரைகளை வெளியிடவும் செய்தது.
ஆனால் 11-02-2010 தேதிய முரசொலியில் ‘மனிதநேயமும், மாசற்ற அரசியல் நாகரிகமும்’ என்ற தலைப்பிட்டு கலைஞர் அவர்கள் உடன் பிறப்புக்கு மடல் எழுத, அதனை பரவலாக பல பத்திரிகைகளும் வெளியிட்டுள்ளன. அதன் உள்ளடக்கத்திலும், வார்த்தை ஜாலத்திலும் நளினம் மட்டுமல்ல, இடதுசாரிகளுக்கு எதிரான வெறுப்பும் சேர்ந்தே வெளிப்படுவதை படிப்பவர்கள் உணர முடியும்.
சமீப காலமாக அருந்ததியர் மக்களும், அருந்ததியர் அமைப்புகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீடுகளை வரவேற்று நடத்திவரும் விழாக்கள் கலைஞருக்கு உறுத்தலை ஏற்படுத்தியுள்ளன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. கலைஞருக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்வோம்.  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கலைஞருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் “அருந்ததியர் உள்ஒதுக்கீடு கோரிக்கையை என்னிடம் யாரும் முன்வைக்கவில்லை, நானே என்னிடம் கோரிக்கை வைத்து நானே அதை நிறைவேற்றினேன்” என தன்னைத் தானே பாராட்டிக் கொண்டாரே அத்தகைய விழாக்கள் அல்ல இவை. 25 ஆண்டு கால அருந்ததிய மக்கள் மற்றும் அமைப்புகளின் போராட்டங்களை அங்கீகரித்து, அவர்களின் கோரிக்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கட்சி கடந்த 3 ஆண்டுகளாக நடத்திய போராட்டங்களை அம்மக்கள் வரவேற்று நடத்தப்படும் விழாக்கள் இவை. அருந்ததியர் மக்கள் - அமைப்புகள்- மார்க்சிஸ்ட் கட்சி - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இணைப்பை வலுப்படுத்தும் விழாக்கள் இவை. கலைஞர் சொல்வது போல இந்த விழாக்கள் தமிழக அரசின் செயலை இருட்டடிப்பு செய்யவுமில்லை. பிறகு ஏன் விருந்திட்டோருக்கு நன்றி கூறாமல் விருந்தை அருந்தியவர்களுக்கு நன்றியும் பாராட்டுமா என கலைஞர் சாடுகிறார்? இதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான்.
தலித் மற்றும் அருந்ததியர் மக்களின் சமீபகால வெற்றிகளில், சிபிஐ(எம்) தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட இடதுசாரிகளுக்கு எந்த பங்கும் இல்லை- எல்லாமே தன் சாதனைதான் - தானே அறிந்து புரிந்து தலையிட்டு தீர்வு கண்டவைதான் என மக்களிடம் தம்பட்டமடித்து அரசியல் ஆதாயம் தேடத்தான். எனவேதான் “பல ஆண்டு காலமாக நடைபெறாமல் இருந்த, நடைபெற்றாலும் உயிருடன் இருக்க முடியாத ஊராட்சிமன்ற தேர்தல்களை பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சி யேந்தல் ஆகிய ஊர்களில் நடத்த முன்வந்த ஆட்சி எது? இருபதாண்டு காலமாக  இருந்த தீண்டாமைச்சுவர் என திகழ்ந்த தீய சுவர்களை இடித்து எறிந்தது எந்த ஆட்சி - யார் துணையோடு? கோரிக்கை வைத்தவர்களின் துணையோடா? அல்லது இந்த ஆட்சியின் அதிகாரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட நிகழ்வா?” என கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார். இதன் மூலம் தீண்டாமைக் கொடுமைகளை ஆய்வுசெய்து கண்டறிந்து அம்பலப்படுத்தி, அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து, மக்களைத் திரட்டி இயக்கம் நடத்திய இடதுசாரி அமைப்புகளின் பங்கை உதாசீனப்படுத்துகிறார்.
கலைஞரிடம் நாம் சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறோம். 5 முறை முதல்வராக இருந்தீர்களே? -அதிகாரிகள், காவலர்கள் புடைசூழ ஆட்சி நடத்துகிறீர்களே - தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சியாக திமுக இருக்கிறதே? உங்களால் ஏன் தமிழ்நாட்டில் பல்லாயிரம் கிராமங்களில் இன்றளவும் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு காண முடியாமல் போயிற்று. உத்தபுரம், பெரியார் நகர் தீண்டாமைச்சுவர்களை 20 ஆண்டுகாலத்தில் நீங்களே கண்டறிய முடியாமலும், அல்லது தமிழக அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு சில ஆண்டுகள் முன்பே புகாராக வந்தும், தகர்த் தெறிய முடியாமலும் போயிற்று? அருந்ததியர் உள்ஒதுககீடு கோரிக்கையை உங்களது கடந்த கால ஆட்சியில் ஏன் நிறைவேற்ற முடியாமல் போயிற்று? தமிழகக் கிராமங்களில் பல நூறு கோவில்களில் தலித்துகள் இன்றளவும் நுழைய முடியவில்லை என்பது உண்மைதானே? இரட்டைக்குவளை முறை, பொதுப்பாதை மறுப்பு, மயான உரிமை இல்லாமை, மயான பாதை இல்லாமை என பல ஒடுக்கு முறைகள் உள்ளனவே, இவற்றை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? தலித் மக்களின் சமூக, பொருளாதார உரிமைகளை நிலை நாட்ட பெரியார் பாதையை உறுதியுடன், ஏன் கடைப்பிடிக்கவில்லை - காங்கியனூர்-உத்தபுரம் போன்ற கிராமங்களில் தலித் மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது? பலரையும்சிறையில் அடைத்தது ஏன்? இவை எல்லாம் வெறும் கேள்விகள் அல்ல. உண்மைகள்.
ஆக, கடந்த 42 ஆண்டுகால திராவிட இயக்கக் கட்சிகள் ஆட்சிக்காலத்தில் தமிழ் நாட்டில் தீண்டாமைக் கொடுமைகளை ஒழிக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல;
20 ஆண்டுகால உத்தபுரம், பெரியார்நகர் தீண்டாமைச் சுவர்கள் போல பல ஒடுக்கு முறைகள் வெளித்தெரியாமல்  மறைத்து வைக்கப்பட் டுள்ளன என்பதை கலைஞர் மறுக்க முடியாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற இடது சாரி இயக்கங்கள் பல்லாயிரம் கிராமங்களில் ஆய்வு செய்து, அமுக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளை வெளிக்கொணர்ந்து, தலித் மக்களின் சமூக - பொருளாதார உரிமைகளுக்காகப் போராடி வருகின்றன. பல தலித் மற்றும் அருந்ததியர் அமைப்புகளையும் இப்போராட்டத்தில் இணைத்துக் கொள்கின்றன. இப்போது நடை பெறும் இயக்கங்களும், விழாக்களும் இதன் ஒருபகுதிதான். பெரியார் பாதையில் நடைபோடுவதாகக் கூறும் திமுக அரசு இப்பிரச்சனைகளில் தலையிட்டு தலித் மக்களின் உரிமைகளை நிலை நாட்ட முன்வருவது அதன் சட்டபூர்வமான கடமையாகும்.
தீண்டாமை ஒழிப்பு என்பது கலைஞர் சொல்வது போல விருந்து அல்ல. சமூகப் பிணிபோக்கும் மருந்து. தமிழ்நாட்டின் இன்றைய நிலையில் தீண்டாமை ஒழிப்பு என்ற மருத்துவம் பெரிய அளவில் சமுதாயத்தை சீர்படுத்த தேவைப்படுகிறது. இடதுசாரி இயக்கங்கள் இதற்கான பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும். தமிழக அரசும் தனக்குரிய சட்டபூர்வமான கடமையை நிறைவேற்ற முன்வரவேண்டும். மாநில அளவில் முதல்வர் தலைமையில் அமைக்கப்பட்ட தீண்டாமை ஒழிப்புக்குழு ஒரு முறைகூட கூடவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி வெளிவந்த ஒரு தகவலாகும். மாவட்ட அளவில், தமிழக அர சால் சம்பிரதாயமாக அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை ஒழிப்புக்குழுக்கள் செயல்படவில்லை என்பதை உணர்ந்து, தீண்டாமை ஒழிப்பில் அக்கறையுள்ள அமைப்புகளையும், ஆர்வலர்களையும் உள்ளடக்கி ஆய்வுக்குழுக்களை அமைத்து தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் தீண்டாமைக் கொடுமைகளை வெளிக்கொணர வேண்டும். கலைஞர் கூறுவது போல இவை அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லை என்பதை உணர வேண்டும். இக்கொடுமைகளுக்கு முடிவு கட்ட உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழக அரசிடம் வலியுறுத்தியபடி சட்டபூர்வமான அந்தஸ்தும், அதிகாரமும் கொண்ட தேசிய ஆணையம் போல தமிழ்நாடு தலித்-பழங்குடி ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களை உறுதியாக அமல்படுத்த வேண்டும், அருந்ததியர் மக்கள் பிரச்சனைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியிடம் முதல்வர் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும்.
கட்டுரையாளர்: மாநில அமைப்பாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

தீண்டாமைச் சுவர் அகற்றம்: மார்க்சிஸ்ட் கட்சிக்கு திருமண அமைப்பாளர்கள் நன்றி

கோவையில், தீண்டாமைச் சுவரை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, அனைத்து இன திருமண அமைப்பாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு நன்றி தெரிவித்தது.
இதுகுறித்து அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்ததாவது:
கோவை வரதராஜபுரம் பெரியார் நகரில், 21 ஆண்டுகாலமாக இருந்த தீண்டாமைச் சுவரை அகற்ற துணை நின்ற மார்க்சிஸ்ட் கட்சிக்கும், தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கும் எங்கள் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தீண் டாமைக்கு எதிரான பணிகள் தொடரவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.