வியாழன், 10 டிசம்பர், 2009

22 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்போம்: கே.பாலகிருஷ்ணன்


தமிழகத்தில் புறம்போக்கு நிலத்தை யார் ஆக்கிரமித்திருந்தாலும் அதை மீட்டு ஏழைகளுக்கு தரும்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் ஓயாது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சிறுதாவூர் நிலப்பிரச்சனையில் தமிழக முதல்வரின் திசைதிருப்பும் நடவடிக்கைகளை கண்டித்தும், உண்மை நிலையை விளக்கியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்போரூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் எம்.மனோகரன் தலைமை தாங்கினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஜி.மோகனன், மாவட்டக்குழு உறுப்பினர் இ.சங்கர், பகுதிச் செயலாளர் எம்.அழகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.நேரு, செயலாளர் சி. பாஸ்கரன், ஆர்.மணி மற்றும் பலர் பேசினர்.

இந்த பொதுக்கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு கிராமத்தில் 415 விவசாயிகளின் சாகுபடி நிலங்களை நில உரிமையாளர்களுக்கு தெரியாமலே விற்பனை செய்துள்ள கொடுமை நடந்துள் ளது. மாநிலம் முழுவதும் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. நிலமோசடியை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி போராடி வருகிறது. அந்த வகையில்தான் நீதிபதி தினகரன் ஆக்கிர மித்து வைத்துள்ள நிலத்தையும் மீட்பதற்கு போராட்டம் நடத்தினோம். ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு, போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சி மீது பாய்வதில் என்ன நியாயம்? என்பதை முதல்வர் கருணாநிதிதான் விளக்க வேண்டும் என்றார்.

காவேரிராஜபுரமாக இருந்தாலும், சிறுதாவூராக இருந்தாலும் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டெடுக்க மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும். ஏழைகள் மீது அக்கறை கொண்ட முதல்வர் என்றால் இந்த ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டெடுத்து இரண்டு ஏக்கர் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் கருணாநிதி ஏழைகளுக்கு கொடுத்திருக்க வேண்டாமா? சிறுதாவூர் நிலத்தை மீட்டுக் கொடுப்பதில் தயக்கம் இருப்பதால்தான் வழக்கை கிடப்பில் போட்டுள்ளார்...

அரசியல் ஆதாயத்திற்காக கொள்கைகளை விலைபேசும் பழக்கம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு கிடையாது. நிலத்தை யார் ஆக்கிரமித்திருந்தாலும் மீட்டெடுத்து அடித்தட்டு ஏழை மக்களுக்கு தரும்வரை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஓயாது; மாநிலம் முழுவதிலும் உள்ள 22 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்களையும் மீட்டெடுக்க தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம்.

இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார். (தீக்கதிர், 2.12.09)