திங்கள், 14 டிசம்பர், 2009

என்.வரதராஜனுக்கு ஆரத்தி எடுத்து அருந்ததிய பெண்கள் உற்சாக வரவேற்பு





ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் உள்ள ரெட்டியார்பட்டி காலனி, நீலமலைக்கோட்டை காலனி, ரெட்டியார்சத்திரம் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள அருந்ததியர் மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் திங்களன்று மாலை (7.12.09)சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது வரதராஜனுக்கு, அருந்ததியர் பெண்கள் ஆரத்தி எடுத்தும், வெடிமுழக்கங் களுடனும், கொட்டு மேளத்துடனும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருந்ததியர் மக்கள், தங்களது பகுதியில் நிலவும் அவலங்கள் குறித்து பேசினர். மனுக்கள் கொடுத்தனர்.

பெரும்பாலான மக்கள் தாங்கள் கழிப்பறையின்றி தவிப்பதாக கூறினர். வெளியூர்க்காரர்கள் இங்கு வந்தால், கழிப்பறை இன்றி இருப்பது கண்டு, இதெல்லாம் ஒரு ஊரா என்று திட்டுகிறார்கள் என்றும் தெரிவித்தார். இன்னொருவர் கூறும் போது, இந்த பகுதி மக்களில் இதுவரை யாருக்கும்ம் முதியோர் பென்சன் கிடைத்ததில்லை என்ற தகவலை வெளியிட்டார். எங்களது மக்கள் குறைந்தது 5 முறை யாவது மனு செய்திருப்பார்கள். ஆனாலும் யாருக்கும் முதியோர் பென்சன் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். மேலும் செருப்பு தைக்க வங்கியில் கடன் பெற்றோம். அந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டும், கடனைக் கட்டுமாறு வங்கியாளர்கள் மிரட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல ரெட்டியார்சத்திரம் காலனியைச் சேர்ந்த மாணவர்கள் ஒருவருக்கு கூட இதுவரை கல்விக் கடன் வழங்கப்படவில்லை. தொகுப்பு வீடுகளும் கட்டித்தரப்படவில்லை என்று பலரும் முறையிட்டனர்.

நீலமலைக்கோட்டை மற்றும் ரெட்டியார் சத்திரம் காலனி பகுதி மக்களும் இதேபோன்ற குறைகளைத் தெரிவித்தனர். நீலமலைக்கோட்டை காலனியில் ஒரு பி.காம் படித்த மாணவர் பல ஆண்டுகளாகியும் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்று என்.வரதராஜனிடம் மனுக் கொடுத்தார்.

ரேசன் கடைக்குச் சென்றால் அருந்ததியர் என்ற காரணத்திற்காக ரேசன் அரிசி போட மறுக்கிறார்கள். இந்த கடைகளில் உள்ள நல்ல ரேசன் அரிசியை மற்ற கடைகளுக்குக் கொடுத்து விடுகிறார்கள். அல்லது விற்றுவிடுகிறார்கள். எங்களுக்கு நாற்றம் பிடித்த அரிசியை போடுகிறார்கள். அந்த அரிசியை நாங்கள் சமைத்துச் சாப்பிட முடியவில்லை. இதனை சாப்பிட்டால் குழந்தைகள் வாந்தி எடுத்து விடுகின்றன. உடல் நிலை சரியில்லாமல் போய் விடுகிறது. அதனால் அந்த அரிசி எங்கள் வீடுகளில் அடுக்குப்பானைகளில்தான் கிடக்கிறது. காலனி வீடுகள் கட்டி 30 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவை இடிந்து விழும் நிலையில் உள்ளன. 100 நாள் வேலைத் திட்டத்தில் எங்களுக்கு ரூ. 60-தான் சம்பளம் தருகி றார்கள். எதிர்த்துக் கேட்டால் வேலை தர மறுத்துவிடுகிறார்கள்.

இந்த புகார் சம்பந்தமாக உரிய நடவடிக்கையை எடுப்போம் என்றும், இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் சட்டமன்றத்திலும் எதிரொலிக்கும் என்றும் என்.வரதராஜன் வாக்குறுதி அளித்தார்.