திங்கள், 15 பிப்ரவரி, 2010

ரெட்டிப்பட்டி தலித் மக்களுக்கு நீதி வேண்டும்: ஆட்சியர் அலுவலகத்தில் டில்லிபாபு எம்எல்ஏ தலைமையில் 2 மணி நேரம் போராட்டம்!

ஊத்தங்கரை தாலுகா ரெட்டிப்பட்டி கிராம தலித் மக்கள், மிட்டா மிராசுகளின் ஆக்கிரமிப்பில் உள்ள தங்களின் சுமார் 500 ஏக்கர் நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் போராடி வருகின்றனர்.

அதனொரு பகுதியாக, சுமார் நூறு பேர், இரண்டு நாள் நடைபயணம் மேற்கொண்டு, வியாழனன்று (28.01.2010) கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுக்கச் சென்றனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், பி.டில்லிபாபு எம்எல்ஏ, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.தருமன், செயலாளர் எக்ஸ்.இருதயராஜ், பொருளாளர் வி.கோவிந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ரவீந்திரன், வட்டச் செயலாளர்கள் கிருஷ்ணகிரி நஞ்சுண்டன், போச்சம்பள்ளி சின்னசாமி, சி.ஐ.டி.யு. கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.மகாலிங்கம், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.அண்ணாமலை, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் இல்லாததால் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.பிரபாகரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ரெட்டிப்பட்டி தலித் மக்களின் நிலம் குறித்து ஏற்கெனவே ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு மீது வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. விசாரணையும் நடத்துள்ளது. இது குறித்த விவரங்களை வருவாய் அலுவலரி டம் கேட்டனர். விவரம் கோட்டாட்சியரிடம் உள்ளதாக அவர் தகவல் தெரிவித்தார். விசாரணை நடத்திய கோட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியர் வந்து பதில் அளித்த பிறகுதான் இங்கிருந்து செல்வோம் என்று கூறி அனைவரும் கோட்டாட்சியரின் அறைமுன் அமர்ந்து கொண்டனர்.

இரவு சுமார் எட்டு மணி அளவில் வருவாய் கோட்டாட்சியர் அன்பரசு வந்தார். வருவாய் அலுவலர் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட தலைவர்களை அழைத்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

1984 யு.டி.ஆர். பட்டா மாறுதல் குறித்த ஆவணங்களை சென்னை ஆவணக் காப்பகத்திலிருந்து பெற வேண்டும்; அதன் பிறகு ஒரு குழு மூலம் ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை ஆட்சியரிடம் அளிக்க இருப்பதாக கோட்டாட்சியர் கூறினார். இதற்கு இரண்டு மாத காலம் ஆகும் எனவும் அவர் கூறினார். பிரச்சனைக்குரிய இந்நிலத்தை இதற்கிடையில் விற்கவும், பத்திரப் பதிவு செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும் கோட்டாட்சியர் தெரிவித் தார்.

போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு கிருஷ்ணகிரி அணையிலிருந்து உபரி நீரைக் கொண்டு செல்வதற்கான கால்வாய் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கக் கோரும் முன்மொழிவை உடனடியாக அரசுக்கு அனுப்பி வைப்பதாக வருவாய் அலுவலர் தொவித்தார். இதுபோல் இட்டிக்கல் அகரம் தலித் மக்களுக்கு அளிக்கப்பட்ட நிலத்திற்கு, வனத்துறையினர் அத்துமீறி உரிமை கோருவதை தடுப்பது, வசந்தப்பள்ளியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முனி வெங்கடப்பன் ஏழைகளிடமிருந்து ஆக்கிரமித்த தரிசு நிலத்தை, 2 ஏக்கர் இலவச நிலத்திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மீது விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.