திங்கள், 15 பிப்ரவரி, 2010

திருப்பிவிடப்படும் தலித் நல நிதி

தலித் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்படும் நிதி எப்படியெல்லாம் திருப்பி விடப்படுகிறது அல்லது பயன்படுத்தப்படாமலேயே போகிறது என்பது பற்றியெல்லாம் ஏராளமான செய்திகள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் வாசிக்கும்போது மேசையைத் தட்டும் ஒலியில் பல விஷயங்கள் அமுங்கிப் போகின்றன. சமத்துவபுரங்கள் அமைப்பதற்கு தலித்துகளின் நல நிதியில் கணிசமான தொகைக்கு வெட்டு விழுகிறது. தாட்கோ நிதி இதற்கு திருப்பி விடப்படுகிறது.

துணை முதல்வரான பிறகு புதிய சமத்துவபுரங்களை உருவாக்குவதில் ஸ்டாலின் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் என்கிறார்கள். கூடுதல் சமத்துவபுரங்கள் என்றால் தலித் நலன்களுக்கான நிதி கூடுதலாகத் திருப்பி விடப்படுகிறது என்பதுதானே அர்த்தம். எந்த நோக்கத்திற்காக சமத்துவபுரங்கள் அமைக்கப்படுகின்றனவோ, அது நடக்கிறதா என்ற கேள்வி ஒருபுறம்.

அதைவிடக் கொடுமை என்னவென்றால், சமத்துவபுரம் என்றாலே ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்தான் அமைக்கப்படுகிறது. தலித்தோடு ஒரே குடியிருப்புப் பகுதியில் இருக்க வேண்டுமென்றால் ஊருக்கு வெளியேதான் மற்ற பிரிவினரும் செல்ல வேண்டும் என்பதுதான் அரசு தர விரும்பும் செய்தியாக இருக்கிறது. ஒருவேளை, சமத்துவபுரம் அமைக்கப்படும் பகுதியை ரியல் எஸ்டேட்காரர்கள் சேர்ந்து முன்னேற்றினால் அதற்கு விடிவுகாலம் கிடைக்கலாம்.

இப்படி தலித்துகளுக்கு ஒதுக்கப்படும் நிதியைத் திருப்பி விடுவதில் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கில்லாடிகள். தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் 44 வீடுகளுக்கு தலித்துகள் நலனுக்கான நிதியிலிருந்துதான் பணத்தை எடுத்துக் கொடுத்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது, 44 சட்டமன்றத் தொகுதிகள் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டதாம். எப்படியெல்லாம் யோசிக்குறாங்க... (தீக்கதிர் கட்டுரை)