புதன், 3 மார்ச், 2010

கோவை தீண்டாமைச்சுவர் அகற்றப்பட்ட இடம் : பி.சம்பத் பார்வையிட்டார்

கோவையில் பொதுவழியில் அருந்ததியர் மக்கள் நுழைவதைத் தடுக்க ஆதிக்க சாதியினர் எழுப்பியிருந்த தீண்டாமைச்சுவர் அண்மையில் தகர்க்கப்பட்டது. அந்த இடத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் பார்வையிட்டார்.

கோவை 10 வது வட்டத்தில் உள்ள பெரியார் நகரில் கடந்த 1989-ம் ஆண்டு முதல் அருந்ததியர் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அங்கு குடியேறியவுடன் அருகில் உள்ள ஜீவா வீதியில் வசித்து வரும் ஆதிக்க சாதியினர் அப்பொதுவழியில் அருந்ததியர் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் சுவர் எழுப்பி, அருகே பிள்ளையார் சிலை வைத்து அடைத்தனர். இதற்கு அருந்ததியர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும் கடந்த 20 ஆண்டுகளாக அரசு நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியும் இப்பிரச்சனையைக் கையில் எடுத்தன. மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எழுந்த நெருக்கடி காரணமாக அரசு நிர்வாகம் உடனடியாக சுவரை அப்புறப்படுத்தியது. தற்போது அங்குள்ள பிள்ளையார் சிலையையும் அருந்ததியர் வாழும் பகுதியிலேயே தனியான மேடையில் வைத்து வழிபடும் வகையில் அம்மக்கள் சம்மதத்துடன் தேர்வு செய்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் சுவர் இருந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். அவரை அருந்ததிய மக்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பின்னர் பொதுமக்களிடம் விபரங்களைக் கேட்டறிந்த அவர், “ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ந்து உறுதியுடன் பணியாற்றும்,’’ என்று தெரிவித்தார்.

அவருடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், மதுரை புறநகர் மாவட்ட அமைப்பாளர் தங்கராஜ், கோவை மாவட்ட நிர்வாகிகள் வி.பெருமாள், கே.கணேஷ், வழக்கறிஞர் வெண்மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வி.தெய்வேந்திரன், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் கோவை இரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளும் திரளான ஊழியர்களும் வந்திருந்தனர்.