செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

நெடி கிராம தலித் மக்கள் அய்யனார் கோவிலில் பொங்கலிடலாம்; வழிபட கூடாதாம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் நெடி கிராமத்தில் உள்ளது அய்யனார் ஆலயம். இந்த ஆலயத்தில் தலித் மக்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுச்சொத்துக்களில் தலித் மக்களால் உரிமை கொண்டாட முடியவில்லை. தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் போதுமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.

இப்பிரச்சனைகள் குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தமிழக முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று அய்யனார் ஆலயத்தில் பொங்கலிட்டு படைக்கும் போராட்டத்திற்கு வாலிபர் சங்கம் திட்ட மிட்டது.

இதனையடுத்து ஜனவரி 20ம் தேதி அதிகாரிகள் சமாதான கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் வாலிபர் சங்கத்தினர் தலித் மக்களின் உரிமைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஜனவரி 30 காந்தி நினைவு தினத்தன்று மீண்டும் போராட்டத்தை நடத்த வாலிபர் சங்கத்தினர் முடிவு செய்தனர்.

இதன்படி சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.ஆனந்தன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.முத்துக்குமரன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கண்ணப்பன், செயலாளர் செந்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் கே.முனியாண்டி, மாணவர் சங்க செயலாளர் கார்க்கி ஆகியோர் தலைமையில் நெடி கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று கோவிலுக்குள் வழிபட முயன்றனர். அப்போது காவல் துறையினரும், ஆதிக்கச் சக்திகளும் வழியை மறித்ததால் சிறிது நேரம் அங்கு பதட்டம் நிலவியது.

கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்தாமல் இங்கிருந்து செல்லமாட்டோம் என்று தலித்மக்கள் உறுதிபட அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதனையடுத்து கோட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பிறகு தலித் மக்கள் பொங்கலிட மட்டும் அனுமதிக்கப்பட்டது. அதே சமயம் சாமியை வழிபட அனுமதி மறுக்கப்பட்டது.

இரு சமூக மக்களையும் அழைத்து பிப்ரவரி 1 அன்று மீண்டும் சமாதானக் கூட்டம் நடத்தி, தலித் மக்களை ஆலயத்திற்குள் அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் வழக்கம் போல் உறுதியளித்தனர்.

கண்டனம்
நெடி கிராமத்தில் தலித் மக்கள் பொங்கல் வைத்து வழிபட முற்பட்டதோடு ஆதிக்க சாதி வெறியர்களால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். காவல்துறையும், வருவாய் துறையும் வேடிக்கை பார்த்துள்ளதோடு தலித் மக்களின் உரிமையை நிலைநாட்டாமல் மெத்தனமாக செயல்பட்டத்தை இந்திய ஜனநாயாக வாலிபர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.