செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

தீண்டாமைச்சுவர் அகற்றம் : அருந்ததிய மக்கள் நன்றி

21 ஆண்டுகாலமாக தங்களை மறித்து நின்ற தீண்டமைச்சுவரை அகற்றித்தர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி,ஆதித் தமிழர் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளுக்கு கோவை, சிங்காநல்லூர், 10-வது வட்டம் பெரியார் நகர்வாழ் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

சனிக்கிழமை காலையில் ஆனந்தக் கண்ணீர் மல்க தீண்டாமைச்சுவர் கீழே விழுந்ததைக் கண்ட மக்கள், அன்று மாலையே அதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க விழைந்தனர். இரவு எட்டு மணிக்கு பெரியார் நகர் மக்கள் அனைவரும் கலந்து கொண்ட கூட்டத்தில் அனைத்து அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

சுவர் அகற்றுவதை நோக்கிச் செல்லுகையில் எத்தகைய தடைகள் மற்றும் அத்தடைகளைக் களைய கிடைத்த ஆதரவுகள் ஆகியவை பற்றி ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் ரவிக்குமார் எடுத்துக் கூறினார். அவரைத் தொடர்ந்து அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் சி.பத்மநாபன், கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் யு.கே.சிவஞானம், மார்க்சிஸ்ட் கட்சியின் சிங்கை நகரச் செயலாளர் கே.மனோகரன் ஆகியோர் ஒட்டு மொத்த தீண்டாமை ஒழிப்பு நோக்கிய பாதையில் பயணிக்க வேண்டிய அவசியத்தையும், அதற்காக அனைத்துப்பகுதி உழைப்பாளி மக்களும் இணைய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினர்.

பேச்சுவார்த்தை
சுவர் மட்டும் அகற்றப்பட்டுள்ள நிலையில், முழு மையான பாதையாக அது உருவாகும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் விருப்பம். தங்கள் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் விநாயகர் சிலையை வைத்துக் கொள்ள அவர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, திங்களன்று மாலை ஐந்து மணியளவில் ஆர்.டி.ஓ. முன்னிலையில் மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.