செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

திண்டுக்கல் முனிசிபல் தொழிலாளர் சங்கம்- அருந்ததியர் விடுதலைக்கான முன்னோடி!: என்.வரதராஜன் பெருமிதம்

திண்டுக்கல் முனிசிபல் தொழிலாளர் சங்கம், அருந்ததியர் விடுதலை மற்றும் உரிமைகளை பெற்றுத்தந்த முன்னோடிச் சங்கம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் கூறினார்.

முன்னாள் கவுன்சிலரும், முனிசிபல் தொழிலாளர்களின் உரிமைக்கு பாடுபட்டவருமான தோழர் பி.முத்தனின் படத்திறப்பு விழா, ஞாயிறன்று (31.01.2010) முனிசிபல் காலனியில் நடைபெற்றது. இந்த விழாவில் தோழர் பி.முத்தன் படத்தைத் திறந்து வைத்து என்.வரதராஜன் பேசியதாவது:-

திண்டுக்கல் முனிசிபல் தொழிலாளர் சங்கத்திற்கு ஒரு பாரம்பரியம் உண்டு. இந்தப் பகுதியில் பல கட்சிகள் இருக்கலாம். ஆனால் முனிசிபல் தொழிலாளர்களுக்கு பல்வேறு உரிமைகளைப் பெற்றுத் தந்தது செங்கொடி இயக்கமான முனிசிபல் தொழிலாளர் சங்கம் தான். 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலுவலகத்தில் நான் ஒரு ஊழியராக பணியாற்றி உள்ளேன். இப்பகுதியில் அனைத்து குடும்பத்தினருடனும் எனக்கு நல்ல பரிச்சயம் உண்டு. அவர்களது வீடுகளில் உணவருந்தியுள்ளேன். இந்த அருந்ததிய மக்கள் தங்களுக்கு எத்தகைய பிரச்சனை ஏற்பட்டாலும் நமது கட்சி அலுவலகத்திற்குத்தான் வருவார்கள்.

இந்திய நாடாளுமன்றத்தில் 543 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் 303 பேர் கோடீஸ்வரர்கள். மத்திய மந்திரிகள் 64 பேர் ரூ. 500 கோடிக்கும் மேல் சொத்து வைத்துள்ளனர். 33 மத்திய அமைச்சர்கள் ரூ. 50 கோடிக்கும் மேல் சொத்து வைத்துள்ளனர். இவர்கள் எல்லாம் எந்த வர்க்கத்திற்கு சாதகமாக இருப்பார்கள் என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் கடந்த 50 ஆண்டுக்கு முன்பு இந்த முனிசிபல் காலனி எப்படி இருந்ததோ அதே போலத்தான் உள்ளது. எந்த முன்னேற்றமும், மாற்றமும் இல்லை. இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் மாற்றம் இல்லை. இந்த பகுதியிலுள்ள வீடுகளுக்கு பட்டா கூட இன்னும் கொடுக்கப்படவில்லை.

அருந்ததியர்களின் சமூக விடுதலைக்காக, மார்க்சிஸ்ட் கட்சி இயக்கங்கள் நடத்தி வருகிறது. 3 சதவீத இடஒதுக்கீட்டை நாம் போராடி பெற்றுள்ளோம். இன்றைக்கு நமது பிள்ளைகளும் டாக்டர்களாக , என்ஜினீயர்களாக கல்லூரிகளில் படிக்கிறார்கள். இது நமது போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. 6 சதவீத இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தையும் நாம் தொடர வேண்டியுள்ளது.

தோழர்கள் ஏ.பாலசுப்ரமணியம், எஸ்.ஏ.தங்கராஜன் ஆகியோர் இப்பகுதி மக்களுக்காக அரும்பாடுபட்டனர். அவர்களுடன் இணைந்து நமது செங்கொடி இயக்கத்தை இப்பகுதியில் கட்டுவதற்கு முத்தன் போன்றவர்களின் பணி அளப்பரியது.

இவ்வாறு என்.வரதராஜன் பேசினார்.

இக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.கணேசன் தலைமை வகித்தார். மாரியப்பன் வரவேற்றார். திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.பாண்டி, நகரச் செயலாளர் வ.கல்யாணசுந்தரம், சிஐடியு மாவட்டப் பொருளாளர் கே.முத்துராஜ் மற்றும் பி.ஆசாத், ஏ.பிச்சைமுத்து, தன்னாசி, டி.காமாட்சி, சுந்தரம், மரியதாஸ், திருப்பதி, முருகன் மற்றும் முத்தன் குடும்பத்தினர் பங்கேற்றனர்.