செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

ஆக்கிரமிக்கப்பட்ட தலித் மக்களின் சுடுகாட்டு நிலம்

மண்ணச்சநல்லூர் தாலுகாவிலுள்ள சி.ஆர். பாளையத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சுமார் 500 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு சிறுகனூர் ஊராட்சித்தலைவர் மற்றும் வருவாய் கிராம அலுவலர் ஆகியோரால் உப்பாறு ஓடைப்புறம் போக்கில் சுடுகாட்டிற்காக இடம் ஒதுக்கித் தரப்பட்டது. இந்த இடத்தை சி.ஆர். பாளையத்தை சேர்ந்த சிலர் (ரங்கசாமிகவுண்டர், ராமதாஸ் உள்ளிட்டோர்)  பிளாட் போட்டு விற்க முயற்சிப்பதாக தெரியவந்தது.
இதையடுத்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மயான இடத்தை மீட்டுத்தரக் கோரி, திங்களன்று (1.02.2010) சிஆர். பாளையம் கிராம முக்கியஸ்தர்கள் பாலு, ரங்கநாதன், அகிலாண்டேஸ்வரி, செல்வராஜ், வார்டு ஊராட்சி உறுப்பினர் சின்னப்பொண்ணு ஆகியோர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் எம்.ஜெயசீலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் எஸ்.பாண்டியன், எஸ்.பிலால், டி.ரஜினிகாந்த் ஆகிய 500 பேர் கையெழுத்திட்ட மனுவை, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் தலித் மக்கள் அளித்தனர்.