செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

கோவை தீண்டாமைச் சுவர் : பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

கோவை 10-வது வட்டம் பெரியார் நகரில் ஆதிதிராவிடர் நலத்துறையால் வழங்கப்பட்ட இடத்தில் அருந் ததியர் சமூகத்தினர் 58 வீடுகள் கட்டி வசித்து வந்தனர். 1989 முதல் தந்தை பெரியார் நகர் என்று அழைக்கப்பட்ட அந்த பகுதிக்கு செல்லும் ஜீவா வீதி என்ற 30 அடி அகல பொதுப்பாதை உள்ளது. ஆனால், தலித் மக்கள் இந்த வீதியில் நடப்பதா என்ற வன்மத்துடன், அந்த வீதியை மறித்து ஆதிக்க சாதியினர் சுவர் எழுப்பினர். இந்த சுவருக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக சுவருக்கு இந்தப் புறம் பெயரளவிற்கு பிள்ளையார் சிலையை நிறுவி கோயிலாக்கினர், ஆதிக்க சாதியினர். பல்லாண்டு காலமாக அருந்ததியர் மக்கள் முறையிட்டும் பொதுப்பாதை பயன்பாட்டுக்கு வரவில்லை. பிள்ளையார் சிலை உள்ள அந்த பகுதியை, ஆதிக்க சாதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் மாட்டுத் தொழுவமாக பயன்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் சுவரை அகற்றக் கோரியும் முழுமையான பாதை கிடைத்திட நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாநகராட்சி ஆணையரிடம் புகார் செய்யப்பட்டது.
இப்புகாரை அடுத்து, அரசு நிர்வாகம் கடந்த சனிக்கிழமையன்று தீண்டாமைச் சுவரைச் இடித்து அகற்றியது. ஆனால் அங்கிருந்த பிள்ளையார் சிலை அகற்றப் படவில்லை. இதனால் முழுமையான பாதை அருந்
ததியர்களுக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில் கோவை கோட்டாட்சியர் பாலச்சந்திரன் தலைமையில் பேச்சு வார்த்தை திங்களன்று (01.02.2010) மாலை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்றது. அரசுத் தரப்பில் வட்டாட்சியர் சுப்பிரமணியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், கோவை வடக்கு மண்டலத் தலைவர் சி.பத்மநாபன், வழக்கறிஞர் வெண்மணி, ஆதித்தமிழர் விடுதலை முன்னணி அமைப்பாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆதிக்க சாதியினர் தரப்பில் சம்பந்தபட்டவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.  ஆனால், நாங்கள்தான் கோயில் நிர்வாகிகள் எனக் கூறிக்கொண்டு இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சியை சேர்ந்த சிவப்பிரகாசம், எரியீட்டி வேலு மற்றும் சுரேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
30 அடி அகலப் பொதுப்பாதை முழுமையாக அருந்ததியர் மக்களின் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்று பெரியார் நகர் பகுதி மக்கள் சார்பில் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்த்தரப்பினர் முடி வெடுக்க கால அவகாசம் கேட்டதால் வரும் வியாழனன்று பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டது.