திங்கள், 18 ஜனவரி, 2010

வாலாஜாபேட்டை குறவன் மக்களின் 50 ஆண்டு கால போராட்டம் வெற்றி

வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை நகரில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் குறவன் இன மக்களின் குழந்தைகள் மேற்படிப்பிற்கு செல்லும் வகையில், சாதிச்சான்று வழங்காமல் நீண்ட காலம் புறக்கணிக்கப்பட்டு வந்தனர். பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், குறவன் இன மக்கள், குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் துவங்கி, கடந்த 2009- ஜூன் மாதம் அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு எம்எல்ஏ தலைமையில் கோரிக்கை மனுவை வட்டாட்சியரிடம் அளித்தனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் போராட்டம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, குறவன் இன மக்களுக்கு, குறவன் சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

பாராட்டு விழா
இந்நிலையில், குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் முதலாமாண்டு விழாவும், குறவன் இன மக்களின் வாழ்வுரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாராட்டு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

வாலாஜா கடப்பாரங்கையன் தெருவில் நடந்த விழாவிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.பெருமாள் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் எஸ்.ஜூட்டன் (தலைவர்), எம்.கணபதி (செயலர்), ஆர்.சுந்தரமூர்த்தி (பொருளாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், எம்எல்ஏக்கள் ஜி.லதா, பி.டில்லிபாபு, சங்கத்தின் மாநில அமைப்பாளர் ஏ.வி.சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.நாராயணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.காசிநாதன், எஸ்.ஆனந்தன் (காஞ்சிபுரம்), பி.வீரபத்ரன் (குறுமன்ஸ் சங்கம்), ஜி.ஆர்.பிரகாஷ் (கொண்டாரெட்டி மக்கள் சங்கம்), ஏ.பரமசிவம் (அக்காஸ்ட்), என்.ஜோதி (சிபிஎம்), நிலவு குப்புசாமி (வி.ச.), ஏ.ரேணு (வி.தொ.ச.), தா. வெங்கடேசன் (சிபிஎம்), பத்மாமணி (மாதர் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.

ஒன்றுபட்டு போராடினால்தான் ஆதிக்க சக்திகள் மற்றும் ஆட்சியாளர்க ளிடமிருந்து உரிமைகளை வென்றெடுக்க முடியும்; அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இறுதிவரை துணையாக இருக்கும் என்று விழாவில் பேசிய தலைவர்கள் குறிப்பிட்டனர்.